பொதுக் காலம் 3ஆம் வாரம்
26.01.2025 - ஞாயிற்றுக் கிழமை
தன்னுடைய பணிவாழ்வை தொடங்குவதற்கு முன் இயேசு பாலைநிலத்தில் தவம் (அ) தியானம் செய்கிறார். அந்த தியானத்தில் அவர் சாத்தானால் அதிகமாக சோதிக்கப்படுகிறார். இதே நிகழ்வு புனித மத்தேயு நற்செய்தியிலும்(4:1-11) புனித லூக்கா நற்செய்தியிலும்(4:1-13) விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் எல்லாம் அவருடைய தெய்வீகத் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் இடையேயான பரிசோதனை. சாத்தான் சொல்வதை செய்தால் சாத்தான் வெற்றி பெறுவான், இயேசு மனிதத் தன்மையில் பலவீனப்பட்டு போனார் என்றாகிவிடும். சாத்தான் சொல்கிற சவால்களில் பங்கெடுக்கவில்லையென்றால் இயேசுவின் தெய்வீகத் தன்மை நிரூபிக்கப்படாது.
இங்கு இயேசுவின் நோக்கம் சாத்தானுக்கு செவிமடுப்பதல்ல, சோதனைகளை முறியடிப்பது தான். அவர் சோதனைகளை முறியடிக்க பயன்படுத்திய கருவி இறைவார்த்தை. சாத்தானும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டியது. (“உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்” திபா 91:11). இயேசு நிலை தடுமாறவில்லை.
இயேசுவுக்கே சோதனை என்றால் நாம் எம்மாத்திரம். இங்கு சோதிக்கிறவர்களும் அதிகம்; சோதனைகளும் அதிகம்.
சோதனையோடு இயேசு நின்று விடவில்லை. தனது பணி வாழ்வை தொடங்குகிறார். "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்." என்ற வார்த்தைகள் இயேசு வழியாக நிறைவேற காத்திருக்கின்றன என்பதை இப்பகுதி விளக்குகிறது.
நல்லது செய்தால் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது இயேசுவின் காலத்திற்கு முன்பே இருந்து தொடர்கிற ஒரு காரியம். தீமை செய்தால் மதிப்பார்கள்/பயப்படுவார்கள். நல்லது செய்தால் எதிர்ப்பார்கள்/ ஏளனம் செய்வார்கள்.
இங்கு உலகிற்கு பயப்பட ஆரம்பித்தால் பயந்து முடங்கி தான் போக வேண்டும். இறை அச்சம் இருந்தால் நன்மை செய்ய தவற மாட்டோம்.
இயேசு சோதனைகளை கடந்து வந்து சாதனை படைத்து நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் (நெகேமியா 8:2-4, 5-6, 8-10) "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்" என்று ஆளுநர் நெகேமியா திருநூல் வல்லுநர் எஸ்ரா சூழ நின்ற மக்களுக்கு எடுத்துரைத்தனர். கடவுளின் திருச்சட்டத்தை வாசிக்க கேட்ட மக்கள் அழுது புலம்பினார்கள். இறைவார்த்தை உள்ளதை நொருக்குகிறது. பாவங்களுக்கு கழுவாய் தேடச் சொல்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1கொரிந்தியர் 12:12-30) உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார் என்பது தெளிவுப்படுத்துகிறது.
உடலில் பிரிவுகள் இருந்தாலும் அங்கு பிரிவினை இல்லை. நம்மில் வேற்றுமைகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே.
இறைவனின் படைப்பில் குறை இல்லை, மனிதரின் பார்வையில் தான் குறைப்பாடு உள்ளது. நல்லதை செய்யும் போது சோதனை வருவது எதார்த்தம். சோதனைக்கு பயந்தால் சாதனை தூரமாகி விடும்.
நாம் சோதனையை எதிர்த்து நிற்பது எப்போது?
இறைவார்த்தைக்கு செவிமடுப்பது எப்போது?
பிரிவினைகளை களைவது எப்போது?
கேள்விகள் நமக்கு முன் வைக்கப்படட்டும்...
No comments:
Post a Comment