பொதுக் காலம் 3ஆம் வாரம்
31.01.2025 - வெள்ளிக் கிழமை
மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது" - 1கொரிந்தியர் 15:43
இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு மறைபொருளை கொண்டுள்ளது. பொருள் எளிதாக புரிந்துக் கொள்ள முடியாததால் அது மறைபொருள்.
யாரும் வீணானவர்கள் அல்ல; எதுவும் வீணானது அல்ல. எல்லாம் பயன்பட கூடியதே. ஒரு மனிதரின் கதை/வாழ்வு மற்றொரு மனிதருக்கு வாழ்க்கை பாடமாகிறது.
ஒரு மனிதரின் வெற்றி மற்றொருவர் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வாய்ப்பாகிறது. மனிதரின் வாழ்வு ஒரு விதை தான். அந்த விதை தான் அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4: 26-34) இறையாட்சியானது தானாக வளர்ந்து கதிர் விடும் விதைக்கும் கடுகு விதைக்கும் ஒப்பிடப்படுகிறது.
மனிதனின் எந்த தொடர்பும் இல்லாமல் விதை இருந்தாலும், மண்ணோடும் காற்றோடும் சூரியனோடும் தொடர்பு கொண்டு தான் விதை வளர்கிறது. சிறிய விதை தான் ஆனால் வளர்ச்சியோ பெரிதாக இருக்கிறது.
இப்படிபட்ட நிகழ்வுகளோடு இறையாட்சியை ஒப்பிடுவது வியப்பு அளிக்கிறது.
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 14:17 இவ்வாறு சொல்கிறது, "இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது."
நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை இயேசுவால் இம்மண்ணில் விதைக்கப்பட்டன. இன்று கிறிஸ்தவம் பெருகி வளர்ந்து இருக்கிறது என்பது இத்தகைய இறையாட்சியின் மதிப்பீடுகளின் வழியாக வெளிப்படுகிறது.
இயேசு போதித்தவற்றை தூக்கி சுமப்பவர்கள் ஒருபுறம், இயேசுவை மட்டும் சுமப்பவர்கள் மறுபுறம்.
இயேசுவை நேசிப்பவர்கள் அவரை வழிபடும் பொருளாக பார்ப்பார்கள், இயேசுவோடு அவர் போதித்தவற்றையும் நேசிப்பவர்கள் அவரை பிரதிபலிப்பார்கள்.
இன்று இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது, "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்." (யோவான் 13:34)
அவர் செய்தது போல நாம் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் எதிர்பார்ப்பு. அப்போது தான் இறையாட்சி விரிந்து பரவும்.
இயேசு விதைத்த விதை வளர்வதும் வீணாவதும் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கையில் இருக்கிறது.
No comments:
Post a Comment