பொதுக் காலம் 1ஆம் வாரம்
16.01.2025 - வியாழக் கிழமை
"நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர்" - எரேமியா 30:17
நோயின் கொடுமையினால், வேதனைப்படுவோர் இவ்வுலகில் அதிகம். மற்ற மனிதர்களை போல எனக்கும் நல்லது நடந்து/ நோயிலிருந்து விடுதலை கிடைத்து முழு மானுட வாழ்வு பெற மாட்டேனா என்று ஏங்குவோர் அதிகம். அதில் நாமும் ஒருத்தராக இருக்கலாம்.
நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இன்று மனித மாண்பை/உரிமையை இழந்து இருக்ககூடியவர்கள் ஏராளம். நோய் வந்தால், நம்மால் மற்றவர்களை போல இயல்பாக வேலை செய்ய முடியாது. வேலை செய்ய முடியாது என்றால் நம்மிடம் பணம் இருக்காது. பணம் இல்லையென்றால் நமக்கு மதிப்பு இருக்காது.
இன்று உறவுகளை தீர்மானிப்பது உணர்வு அல்ல பணம் தான்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:40-45) தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டுகிறார்.
விரும்புவதால், நம்புவதால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அந்த நபரிடம் இருந்தது. இயேசுவும் அவரது நம்பிக்கையை கண்டு அவருக்கு நலம் கொடுக்கிறார், குருவிடமும் காட்டச் சொல்கிறார்.
குருவிடம் காட்டச் சொல்வதற்கான காரணம், குரு பரிசோதனை செய்து இவருக்கு தொழுநோய் இல்லை என்று சொன்னால் மட்டுமே இவர் ஊருக்குள், தன்னுடைய வீட்டிற்குள் நுழைய முடியும். அதற்காகத்தான் அவர் குணமானதை குருவிடம் காட்டச் சொல்கிறார் (காண்க... லேவியர் நூல் 14ஆம் அதிகாரம்).
இயேசு தனக்கு குணமளிக்க வேண்டும் என்று அந்த தொழுநோயாளர் விரும்பினார், தொழுநோயாளருக்கு நலம் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இங்கு விரும்பினதால் நலம் பெற்றுக் கொண்டார் அந்த நபர்.
நம்முடைய வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமென்று நம்முடைய சிந்தனையில் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் நிச்சயம் நாம் விரும்பியபடி நல்லது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்.
இங்கு பலர் விரும்புகிறார்கள்; ஆனால் விரும்பியபடி நடக்கும் என்று நம்பிக்கை கொள்வதில்லை.
விரும்பினால் மட்டும் போதாது, அந்த தொழுநோயாளரை போல நம்பிக்கையும் நம்மிடம் இருக்க வேண்டும்.
விரும்புவோம்/நம்புவோம்... நல்லதை விரும்புவோம்...
No comments:
Post a Comment