ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா
05.01.2025 - ஞாயிற்றுக் கிழமை
இங்கு தவறு என்று சொல்ல பல நபர்கள் இருக்கிறார்கள். சரி என்று சொல்ல வெகு சிலரே இருக்கிறார்கள். நமக்கு பிடித்திருந்தால் சரி, இல்லையென்றால் தவறு இது தான் நமது வாழ்க்கை.
நபரை பொறுத்து/இடத்தை பொறுத்து சரியை தவறென்றும் தவறை சரி என்றும் நாம் சொல்லுகிறோம். சரி ஒருபோதும் தவறாகாது, தவறு ஒருபோதும் சரியாகாது.
ஞானிகள் யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று தேடிப் போனார்கள். விண்மீன் மறைந்ததால் ஏரோதுவை நாடி சென்றார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. விண்மீனை மீண்டும் கண்டார்கள், மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள், கனவில் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாக தங்கள் நாடு திரும்பினார்கள்.
அரசனை ஏமாற்றியது தவறு தான். ஆனால் மனிதருக்கு கீழ்ப்படிவதா? கடவுளுக்கு கீழ்ப்படிவதா? என்று வருகிற போது கடவுளுக்கு அஞ்சுவது தான் நல்லது என்பதன் அடிப்படையில் ஞானிகள் அவ்வாறு நடந்துக் கொண்டார்கள்.
ஞானிகள் வராமல் இருந்திருந்தால் அரசன் கலங்கியிருக்க மாட்டான், மாசற்ற குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அன்னை மரியாவும் யோசேப்பும் குழந்தையை தூக்கிக் கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடி சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.
எல்லாம் நிறைவேற இவை யாவும் நிகழ்ந்தன. குழந்தைகளின் இறப்பை நியாயப்படுத்த முடியாது. ஒரு குழந்தைக்காக இத்தனை உயிர்கள் பலியா? அல்லது பழைய ஏற்பாட்டு மோசே பிறப்போடு ஒப்பிட இவையாவும் நிகழ்ந்ததா? என்ற சிந்தனை ஓட்டம் நம்மில் தொடங்குகிறது.
ஒருவரது பிறப்பில் மகிழும் மனிதன் மற்றவரின் இறப்பில் அழுகிறான். இறப்பு எல்லோருக்கும் உண்டு ஆனாலும் காலம் முடியுமுன்னே வாழ்க்கை முடிவதை யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.
சாலமோனின் ஞானம் 4:10 இவ்வாறு சொல்கிறது, "நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்; பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார்."
நம்முடைய பார்வையில் தான் தொடக்கமும் முடிவும். கடவுளே அந்த தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறார். இவ்வுலக இறப்பை கடந்த வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை இவ்வுலக துயரத்தை மூடி மறைத்து விடும்.
ஞானிகள் இயேசுவை பார்க்க வந்தது, இயேசு சாதாரண குழந்தை அல்ல என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. அவர்கள் மூன்று ஞானிகளா? மூன்று அரசர்களா? என்ற சிந்தனை ஒருபுறம் இருந்தாலும் அவர்கள் கிழக்கிலிருந்து யூதர்களின் அரசரை பார்க்க வந்தார்கள் என்று நற்செய்திப் பதிவு செய்கிறது.
பொன்னும் சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக கொண்டு வந்தார்கள்.
பொன் - இயேசு அரசர் என்பதை சுட்டிக் காட்டுகிறது
சாம்பிராணி - இயேசுவின் தெய்வத் தன்மையை சுட்டுகிறது
வெள்ளைப்போளம் - இயேசுவின் அடக்கச் சடங்கை சுட்டுகிறது.
அடையாளம் இன்றி எதுவும் இல்லை. சில மனிதர்கள் வாழ்வே அடையாளமாக இருக்கிறது.
இறைவனை சார்ந்து தீமையை வெறுத்த ஞானிகள் செய்த செயல் சரியானதே! கனவிலும் கடவுளின் வார்த்தையை நம்பி செவிசாய்த்து நடந்த இவர்கள் வாழ்வு நமக்கு முன்மாதிரியே.
நாம் கடவுளுக்கு செவிசாய்ப்பது எப்போது?
No comments:
Post a Comment