திருக்காட்சி விழாவுக்குப் பின் வரும் வியாழன்
09.01.2025 - வியாழக் கிழமை
"ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை" - திருப்பாடல்கள் 33:4
இருப்பதை மீண்டும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் சொல்லப்பட்டதை எடுத்துச் செய்ய வேண்டும் அது தான் முக்கியம். வார்த்தைகளில் வடை சுடுவது மிக மிக எளிது. ஆனால் சொன்னபடி வாழ்வது/வாழ முயற்சிப்பது மிக கடினம்.
யார் வேண்டுமானாலும் எதையும் பேசிவிட்டு கடந்து செல்லலாம். கடந்து செல்வது முக்கியமல்ல கடத்தி/நகர்த்தி செல்வது முக்கியம்.
சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம். இது அரசியல் தலைவர்களின் கூற்று. சொன்னதெல்லாம் செய்யப்பட்டதா? என்பது சொல்லியவரின் கைகளில் இருக்கிறது. இங்கு வாய் வழியாக மொழிதல் மட்டுமே இருக்கிறது, செயல் வழி வாழ்வு மிக மிக குறைவே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 4:14-22) தூய ஆவியின் வல்லமை உடையவராய் இயேசு திகழ்ந்தார் என்றும் ஓய்வுநாளில் தொழுகைக் கூடம் சென்று எசாயாவின் சுருளேட்டை வாசித்தார் என்றும் காண்கிறோம்.
ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" (லூக்கா 4:18-19) என்று அவர் வாசித்ததை/சொல்லியதை தனது பணிவாழ்வில் செய்து காட்டினார்.
சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்தார், நன்மையே செய்தார்.
இயேசுவின் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் அல்ல. மாறாக, செயல் வழி தாக்கத்தை ஏற்படுத்தும் கூர்மையான வார்த்தைகள்.
வார்த்தைக்கு ஆற்றல் உண்டு என்பது உண்மை என்றால் வார்த்தையை வாழ்வாக்கும் போது அதற்கு இன்னும் அதிக ஆற்றல் உண்டு தானே!
நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வாழ்வு தரும் வார்த்தைகளாக பிறரை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் வார்த்தைகளாக இருக்கட்டும்.
இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி நல்லதை சொல்வதோடு மட்டும் நின்று விடாமல் நல்லதையும் செய்வோம்.
வார்த்தைகளை வீணாக்காமல் வாழ்க்கையை சீராக்குவோம்! வாய்மொழி செயல்வழியில் சிறப்பு அடையட்டும்...
No comments:
Post a Comment