பொதுக் காலம் 2ஆம் வாரம்
21.01.2025 - செவ்வாய்க் கிழமை
"அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை" - திருப்பாடல்கள் 107:38
குறை நிறை வாழ்வின் இரு பக்கங்கள். எல்லா நிறையுள்ள மனிதர்களிடமும் குறை இருக்கும். எல்லா குறையுள்ள மனிதர்களிடமும் நிறை இருக்கும். தவறுகளை சுட்டிக் காட்டுவது வேறு, தவறுகளை மட்டுமே காண்பது வேறு.
இரக்கமுள்ள மனிதர்கள் இறுதிவரை நேர்மறை மனதோடும் நேரிய உள்ளத்தோடும் வாழ்வார்கள். தன் கடமையை சரிவர செய்வார்கள், மற்றவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற துணை நிற்பார்கள்.
பொது இடங்களில் மற்றவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி மனிதர்கள் தங்களை சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 2:23-28) இயேசுவின் சீடர்களிடம் குறை காண்கிறது பரிசேயக் கூட்டம். ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்தது குற்றம் ஆனது. ஓய்வு நாள் தீட்டுப்பட்டதாக அவர்கள் கருதினார்கள். பிறரை எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை அவர்கள் மறந்துப் போனார்கள்.
இயேசுவின் பதில் ஓய்வு நாளைப் பற்றிய தெளிவைக் கொடுக்கிறது. "மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்ற பதிலை தருகிறார்.
சட்டங்கள் முக்கியம் தான், ஆனால் சட்டத்தால் மற்றவர்களை முடக்கக் கூடாது.
சில வேளைகளில் சட்டத்தை தூக்கி பிடித்து சாமானிய மக்களை நசுக்கிவிடுகிறார்கள். தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
சட்டம் ஓர் இருட்டறை அல்ல; சட்டத்தை நாம் தான் இருட்டறை ஆக்குகிறோம். சட்டம் எல்லோருக்கும் சமமானால் இங்கு சட்டம் சரியே. வலியவருக்கும் பணம் படைத்தவர்களுக்கும் இங்கு சட்டம் வளைந்து போகிறது. எளியவரிடம் சட்டம் (அதிகாரம் செலுத்துவோர்) கரடு முரடாக நிற்கிறது (நிற்கிறார்கள்).
குறை காண்பதற்கு முன் சட்டங்களை சரியாக பயன்படுத்த வேண்டும், சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தவர் மீது குற்றம் காண்பதற்கு முன் நம் பார்வை சரியாகட்டும். மற்றவர்கள் உணர்விற்கு மதிப்பளிப்போம்... மனித மாண்பை தூக்கிப் பிடிப்போம்.
No comments:
Post a Comment