இயேசுவின் தூய்மைமிகு பெயர்
03.01.2024 - வெள்ளிக் கிழமை
"சிறிது நேரத் துன்பம், முன்னர் துய்த்த இன்பத்தை மறக்கச் செய்கிறது. வாழ்வின் முடிவில் மனிதரின் செயல்கள் வெளிப்படுத்தப்படும்" - சீராக்கின் ஞானம் 11:27
வெளிப்படாதவாறு மறைந்திருப்பது ஒன்றுமில்லை. எல்லாம் ஒருநாள் வெளிப்படுத்தப்படும். காலம் கூடி வரும் போது நமக்குள் இருக்கிறவற்றை நாம் வெளிப்படுத்தியே தீர்வோம். அது கோபமாக/அழுகையாக/மகிழ்ச்சியாக/வெறுப்பாக/பாசமாக/உணர்வாக என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சோறு கொதித்து கொண்டிருக்கும் போது பானை மீது மூடி வைத்தாலும் மூடி மேலே எழும்புவது போல, பலர் காலம் வரும்வரை காத்திருந்து பொங்குகிறார்கள்.
உணர்வுகள் சரியான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். உணர்வு தேக்கி வைக்கப்பட்டாலும்/அதிகமாக வெளிப்படுத்தப்பட்டாலும் ஆபத்து நமக்கு தான்.
கவலையின் உச்சமும் மகிழ்ச்சியின் உச்சமும் நம்மை மறக்கடித்துவிடும். உணர்ச்சி வசப்படும் போது எதையும் வெளிப்படுத்த கூடாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:29-34) கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்துவதற்கு முன் கிறிஸ்துவை கண்டுக் கொள்கிறார், அதன்பின் அவரை சுட்டிக் காட்டுகிறார்.
திருமுழுக்கு கொடுத்த போது நடந்த அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்கிறார்/கண்டுக் கொள்கிறார் யோவான். அதை கூடி நின்ற மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். தூய ஆவி இறங்கி இயேசு மீது வந்ததை கண்டதால் சான்றும் பகிர்கிறார்.
திருமுழுக்கு யோவான் பரவச நிலையை அடையவில்லை. மாறாக பார்த்ததை அறிவிக்கிறார்.
இன்று நாமும் கண்டுக் கொள்ள, கண்டதை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம். மற்றவர்களின் தேவைகளை கண்டுக் கொண்டு நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
இருளிலிருந்து ஒளியை நோக்கி பாதையை மாற்ற வேண்டும். உணர்வற்ற கிடக்கும் மனிதர்களை கண்டுக் கொள்ள வேண்டும்.
சரியான அறிதல் சரியான புரிதல் சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். திருமுழுக்கு யோவான் வெளியில் கண்ட இயேசுவை வெளிப்படுத்தினார். நாம் நமக்குள் இருக்கும் இயேசுவை சரியான உணர்வுகளோடு வெளிப்படுத்துவோம்.
உணர்வுள்ள மனிதம் உறவை வெளிப்படுத்தும்...
இயேசுவின் தூய்மைமிகு பெயர் - ஒவ்வொரு பெயரும் அல்லது ஒவ்வொருவருக்கு கொடுக்கப்படும் பெயரும் அந்த நபரை வெளிப்படுத்தும். இயேசு மெசியா/மானிட மகன்/ கடவுள் நம்மோடு/ அரசர் என்பதை அவர் பெயர் வெளிப்படுத்தியது.
No comments:
Post a Comment