25_01

பெருமை பாராட்டும் நோன்பு தேவை இல்லை

பொதுக்காலம் 2ஆம் வாரம் 

20.01.2025 - திங்கட் கிழமை

மகிழ்ச்சியான நேரம் மகிழ்ச்சியாக இருப்பதற்கே. யாரும் மகிழ்ச்சியான தருணத்தில் அழுகையோடும் அங்கலாய்ப்போடும் இருப்பதில்லை. அதேபோல கவலையோடு கண்ணீரோடு இருக்கக்கூடிய வேளையிலே யாரும் சிரிப்பை வெளிக் காட்டுவதில்லை. 

இரண்டும் வெவ்வேறு துருவங்கள். ஆனால் இரண்டையும் இணைக்க கூடியது ஆனந்தக் கண்ணீர். இது எல்லா வேளையிலும் வந்து விடாது, இதுவும் ஒரு வகையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்.

நான் துக்கப்படும்போது மற்றவர்களும் துக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம். நான் செய்வதையெல்லாம் மற்றவரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயமற்றதே!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்று 2:18-22) யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களும் நோன்பு இருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்ற கேள்வியை சிலர் இயேசுவிடம் கேட்கிறார்கள்.

நோன்பு என்பது ஒருவகையான ஒறுத்தல். நோன்பு இருப்பதன் வழியாக கடவுளுக்கு நமக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகிறது. ஆனால் அந்த நோன்பு வீண் பெருமைக்காக செய்யப்பட்டது என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை.

இயேசு கொடுக்கக்கூடிய பதில், 'மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியாது' என்பது தான். 

மகிழ்ச்சியான தருணத்தில் அழ வேண்டிய அவசியம் இல்லை. காலம் வரும் அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அவர் தெளிவைக் கொடுக்கிறார். 

என்னைப்போல மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானது அல்ல, மாறாக இதை செய்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைப்பது சாலச் சிறந்தது. 

பழைய தோற்பை புதிய தோற்பையோடு இணையாது; ஒட்டு போட்ட தோற்பையோடு புதிய மது நிலைக்காது.

செய்ய வேண்டிய நேரங்களில் செய்ய வேண்டியதை செய்வதே சரியானது. அதை விட்டுவிட்டு ஓரக் கண்களால் மற்றவர்களையும் அவர்கள் செய்யும் காரியங்களையும் பார்த்து விட்டு விமர்சனம் செய்வது இழிவானது. 

நாம் செய்யக்கூடிய ஒறுத்தல்கள், நோன்பு, இறைவேண்டல்கள் தற்பெருமைக்காக செய்யப்பட்டது என்றால் அவை செய்யப்படாமலே இருந்திருக்கலாம்.

சில வேளைகளில் நாம் செய்யக்கூடிய வெளி அடையாளங்களால் பயன்படாத பழைய தோற்பைகளாகவே நாம் இருக்கின்றோம். புதிய மது என்னும் புதிய சிந்தனைகள் அதில் ஊற்றப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. 

அர்த்தம் இழந்து, பெருமைக்காக செய்யப்படும் அனைத்து செயல்களும் தவறானதே...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...