பொதுக் காலம் 2ஆம் வாரம்
19.01.2025 - ஞாயிற்றுக் கிழமை
ஆச்சரியங்கள் அதிசயங்கள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. எல்லாருடைய வாழ்க்கையிலும் அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆழமாக தேடுவோர் கண்டுக் கொள்கின்றனர். மேலோட்டமாக தேடுவோர் வாழ்க்கைக்கு வெளியே ஆச்சரியங்களை தேடுகின்றனர்.
இயற்கைக்குள் பல புதுமைகள் மறைந்தும் வெளிப்பட்டும் கொண்டிருக்கின்றன. மண்ணுக்குள் கடலுக்குள் என்று இயற்கையின் ஆச்சரியங்கள் நீண்டுக் கொண்டே போகின்றன.
யார் வெளியே ஆச்சரியங்களை தேடுவார்? கடவுளை நம்பாதவர், தன்னை அறியாதவர், தன் நிலை உணராதவர்.
குழந்தை கருவில் உருவாகி, உயிராய் வெளிவருவது ஆச்சரியமே. மனிதன் இரவில் கண்ணை மூடி தூங்கி, காலையில் கண்ணை திறந்து எழுவது ஓர் ஆச்சரியமே. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வது ஆச்சரியமே. எல்லாம் ஓய்ந்த பின் உயிர் நம் உடலில் இருந்து பிரிகிறது, ஆனால் அது எங்கிருந்து எங்கு செல்கிறது என்பது ஆச்சரியமே.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 2:1-12) இயேசு தனது பணி வாழ்வை தொடங்கும் முன் புதுமை செய்கிறார். தண்ணீர் திராட்சை இரசமாய் மாறுகிறது. அதுவும் நல்ல திராட்சை இரசம்.
விந்தையிலும் விந்தை இது. சாதாரண தண்ணீர் சுவையுள்ள ரசமாய் மாறுகிறது. இயேசு முன் கொண்டு வரப்படுபவை எல்லாமே (மனிதர்களும்) புதியதாய் மாறும், புதுமையாய் மாறும்.
புதுமை நடைபெற காரணம் ஒரு புதுமைப்பெண். அவர் பெயர் மரியா. எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க இவர் மட்டும் பிறர் தேவையை கண்டு உணர்கிறார், பரிந்துரைக்கிறார்.
நல்லது செய்பவர்கள் ஒருவகையினர், மற்றவர்களை நல்லது செய்ய வைப்பவர்கள் மற்றொரு வகையினர்.
பின்னாளில் இயேசு செய்த புதுமைகள் எல்லாம் நம்பிக்கை கொண்டதால் நடந்தது. இங்கு நடந்த புதுமையோ நம்பிக்கையோடு கூடிய பரிந்துரைத்தலினால் நடந்தது.
இன்றைய நற்செய்தி நமக்கு சுட்டிக் காட்டும் பாடம் இரண்டு, 1. நாம் இயேசுவின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும் 2. நாம் நல்லது செய்ய வேண்டும்/நல்லது நடக்க காரணமாய் இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 62:1-5) இறைவாக்கினர் எசாயா வழியாக புது வாழ்வு மொழியப்படுகிறது. புதியதொரு பெயரால் அழைக்கப்படுவாய், ஆண்டவரின் கையில் அழகிய மணிமுடியாய் திகழ்வாய், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் திகழ்வாய், உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துக் கொள்வார் என்று புதிய ஆறுதல் மொழிகள் கூறப்படுகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரிந்தியர் 12:4-11) தூய ஆவியார் வழியாக பொழியப்படும் அருள் கொடைகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல் தூய ஆவியார் வழியாக பொழியப்படுகின்றன.
நாம் பெற்றுக் கொண்ட வாழ்வில் கிடைக்கும் அதிசயங்களை கண்டு மகிழ்ச்சி அடைவோம். நம்மில் இறை சாயல் இருப்பதை கண்டு, அவர் நமக்குள் இருந்து செயலாற்றுவதை உணர்ந்து நாமே ஆச்சரியங்களின் வெளிப்பாடு ஆவோம்.
நாம் திராட்சை இரசமாய் மாற, நம்மை முழுவதும் கையளிப்போம்.
No comments:
Post a Comment