பொதுக்காலம் 1ஆம் வாரம்
18.01.2025 - சனிக் கிழமை
அவரவருக்கு அவரவர் நேர்மையாளர். அவரவருக்கு அவரவர் நல்லவர். நல்லவர்கள் தங்களை நல்லவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. நல்லவர்களுக்கு தீயோர் தரும் முத்திரை தேவையில்லை.
யார் என்ன சொன்னாலும் யார் எதை செய்தாலும் நம் மனசான்றுக்கு விரோதமான செயலை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. நம் மனசான்றே நம்மை நல்வழிப்படுத்தக்கூடியது. ஒவ்வொரு மனிதரின் அசைவுக்கும் நாம் அசைந்து போனால் நாம் நாமாக இருக்க முடியாது.
யார் எதை சொன்னாலும் கேட்டு கொள்ளக்கூடாது என்பதல்ல இதன் கருத்து. மாறாக, செவிமடுத்து சிந்தித்து, சரியாக இருந்தால் அதன் வழி நடக்கலாம்.
இங்கு நல்லவர்கள் போல வேடம் போடும் மனிதர்கள் அதிகம். நல்லது செய்யாமல் நல்லவராக நடிப்பது பயனற்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 2:13-17) சமூகத்தில் பாவியாக கருதப்பட்ட லேவியை தேடிச் செல்கிறார். வரிதண்டும் பணி யூதச் சமூகத்தில் இழிவாக கருதப்பட்டது. உரோமையரை சார்ந்து அவர்களுக்கு பணி செய்து யூதர்களிடம் வரி வசூலிக்கும் நபர்கள் பாவிகளாக தான் கருதப்பட்டார்கள்.
இயேசு பாவிகளாக கருதப்பட்டவர்களை தேடிச் சென்றார். இயேசுவின் நோக்கம் அநியாயம் ஒருபோதும் ஆட்சி செய்யக்கூடாது என்பது தான். “தீமையை நன்மையால் வெல்லுங்கள்” என்பதற்கு ஏற்ப யூதச் சமூகத்தை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஆணவத்தை அதிகாரத்தை இயேசு எதிர்த்தார். விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை கல்லால் எறிந்துக் கொல்ல ஒரு கூட்டமே திரண்டு நின்றது. அவர்கள் பாவங்கள் மறைவாய் இருந்ததால் அவர்கள் வாய்க்கூசாமல் மற்றவர்களை பாவி என்று அழைத்தனர்.
இயேசுவின் பதிலோ, உங்களில் பாவம் செய்யாதவர்கள் இப்பெண்மேல் முதல் கல் எறியட்டும் என்பதே. பாவம் செய்யாமல் இருந்திருந்தால் அவர்கள் நின்றிருப்பார்கள், கல் எறிந்திரப்பார்கள். ஆனால் ஒருவரையும் காணோமே.
அதே போல தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயக் கூட்டம், இயேசுவை பார்த்து இவர் பாவிகளோடும் வரிதண்டுவோர்களோடும் சேர்ந்து உண்பதேன்? என்று கேட்டனர்.
இவர்கள் தங்களை நேர்மையாளர்களாக கருதினார்கள். ஆனால் உள்ளே இருந்ததோ குப்பை தான். தன்னை மதிக்கிறவன் அடுத்தவனையும் மதிக்க வேண்டும். நேர்மைத்தனம் என்பது உள்ளிருந்து வெளியே வர வேண்டும்.
நோயுற்றவருக்கு மருத்துவம் தேவை என்பது போல பாவிகளை நான் தேடி வந்தேன் என்று இயேசு திட்டவட்டமாக தெளிவுப்படுத்திவிட்டார்.
நாம் நேர்மையாளர்களா? நம் செயலிலும் சொல்லிலும் நேர்மை வெளிப்படுகிறதா? கேள்விகளை நமக்குள் கேட்டுப் பார்ப்போம்.
No comments:
Post a Comment