பொதுக் காலம் 3ஆம் வாரம்
30.01.2025 - வியாழக் கிழமை
படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்" - எபிரேயர் 4:13
இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய சுயத்தை மறைக்க விரும்புகின்றார்கள். நான் யார் என்பதை மற்றவர்கள் அடையாளம் கண்டுவிட்டால் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற கவலை இன்று நம்மில் பலருக்கு உண்டு.
நான் நானாகவே இருப்பது எனக்கு திருப்தி அளிப்பதில்லை. நான் மற்றவரைப் போல என்னை காட்டிக் கொள்வது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறைவற்ற மனநிலை, நிலையில்லாத உலகம், தேவையற்ற முன்மாதிரிகள், சவால் நிறைந்த வாழ்க்கை முறை இவைகள் தான் நமக்குள்ளும் நமக்கு முன்னாலும் இருக்கின்றன.
எல்லோர் வாழ்க்கையிலும் குறை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது. அந்த குறை என்னும் இருளை நீக்க நிறை எனும் ஒளி ஏற்றப்பட வேண்டும்.
அந்த ஒளியை யார் ஏற்றுவார்?
நாம் ஒத்துழைப்பு நல்காத வரை அந்த ஒளியை யாராலும் ஏற்ற முடியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:21-25) வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை என்று இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்து சொல்கிறார்.
ஒளி ஏற்றப்பட்டது என்றால் அது மற்றொருவருக்கு பயன்படும் வகையில் வைக்கப்பட வேண்டும். (மறைவான பகுதியில் வைக்கப்பட்டாலும் கூட அந்த ஒளி அதன் இடத்தை காட்டிக் கொடுத்து விடும்). ஒளியை ஏற்றி மறைவான பகுதியில் வைத்தால் அந்த ஒளியின் முழு பயன் என்ன?
அதேபோலத்தான் நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படாத வரை (நாம் நம்மை ஏற்றுக் கொள்ளாத வரை) அதனால் ஒரு பயனும் இல்லை. எப்போது எனக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்?
எப்போது நான் எனக்குள் இருப்பதை/என்னை ஏற்றுக்கொள்கிறனோ அப்போதுதான் எனக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்.
சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், என்னைப் பற்றி நானே முழுவதும் அறியாத நிலையில், யார் என்னை பற்றி அறிந்து கொள்ள முடியும்? என்று...
நம்மைப் பற்றி ஒருவேளை நாம் முழுவதும் அறியாமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு செயலும் நம்மை யார் என்று காட்டிக் கொடுத்து விடும்.
நம்மிடம் இருக்கும் ஆற்றலை நாம் சரிவர பயன்படுத்தவில்லை என்றால் இருக்கும் ஆற்றலும் இல்லாமல் போய்விடும். (உள்ளவருக்கு கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும் - லூக்கா 8:18)
எதுவும் யாருக்கும் மறைவாய் இல்லை, எதையும் நாம் மறைக்கவும் முடியாது.
வெளிப்படுத்த வேண்டிய தளங்களில் நம்மை வெளிப்படுத்துவோம். நம் ஆற்றலின் வழியாக மற்றவர்கள் ஆற்றல் பெற உதவுவோம்...
No comments:
Post a Comment