பொதுக் காலம் 3ஆம் வாரம்
28.01.2025 - செவ்வாய்க் கிழமை
"தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை; தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை" - சீராக்கின் ஞானம் 3:11
எந்த உயிரை எடுத்துக் கொண்டாலும் தாய்க்கு அங்கு முக்கியத்துவம் உண்டு. உண்மையான பாசம் தாயிடமும் தந்தையிடமும் இருந்து தான் தொடங்குகிறது. தந்தை கூட அதட்டி தான் அன்பை காட்டுவார். தாய் மட்டும் தான் அணைத்து (மடிக்குள் அணைத்து) அன்பை காட்டுவார்.
தனக்கு இல்லையென்றாலும் தன் பிள்ளைகளை ஒருபோதும் பட்டினி இருக்க விடமாட்டார். தனக்கு போக தான் மற்றவர்களுக்கு என்று வாழும் உலகில் தன் பிள்ளைகளுக்கு போக தான் தனக்கு என்று வாழ்வார்.
தாயை இழந்த உறவுகளுக்கு மட்டும் தான் தாய் இல்லாமல் வாழ்வது நரக வேதனை என்று.
ஆனால் இவ்வளவு செய்தும் நன்றிக் கெட்ட உள்ளங்கள் இருக்கத் தான் செய்கின்றன. தாய் ஒரு வீட்டிலும் தந்தை ஒரு வீட்டிலும், மாதத்திற்கு ஒருமுறை அண்ணன் தம்பி என்று பார்த்துக் கொள்வதும், இல்லையென்றால் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், பிச்சை எடுக்க அனுப்புவதும், அடித்து தூரத்துவதும் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அண்மையில் யூடியூப்-இல் பார்த்த நிகழ்வு, 6 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதை மடத்திலே வாழ்ந்து இறந்து விடுகிறார். தாயின் அடக்க சடங்கின் போது பிள்ளைகள் கதறி அழுகிறார்கள். இருக்கும் போது கண்டுக் கொள்ளாமல் இறந்த ஆயிரம் செய்தும் என்ன பயன்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:31-35) இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரோ, சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே" என்று பதில் கொடுக்கிறார்.
பலரின் பார்வை இப்படி அமைகிறது, இயேசுவே தனது தாயை அவமதித்து விட்டார்.
மத்தேயு நற்செய்தி 19:19இல், "தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறியவர் எப்படி தன் தாய் அவமதித்திருப்பார்.
மாற்கு நற்செய்தி 7:10இல், "உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! என்று மோசேயின் சட்டத்தை தூக்கிப் பிடித்தவர் எப்படி தாய் இழிவுப்படுத்தியிருப்பார்.
தன் தாயும் இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர் என்பதை உரக்க சொல்லியிருக்கிறார்.
கபிரியேல் தூதர் வார்த்தையை கேட்டது முதல் கல்வாரி மலை/கல்லறை வரை உடன் இருந்தது இறைவார்த்தைக்கு கீழ்படிந்ததனாலே!
நம் தாய்மாரை நாம் மதிக்கும் போதெல்லாம் நாம் இறைவனுக்கு கீழ்ப்படிகிறோம்.
தாய் தந்தையை மதிக்கும் பிள்ளைகள் செல்வம் தேடிக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment