25_01

நாம் சோதனைக்கு உட்பட தயாரா?

பொதுக் காலம் 3ஆம் வாரம்

27.01.2025 - திங்கட் கிழமை 

சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” - கலாத்தியர் 6:1

எதிர்பாராத நேரத்தில் பலத்த காற்று வீசுவது போல, சோதனை திடீரென்று நம்மை தாக்கும். எல்லாவகையான சோதனையும் தொடக்கத்தில் மகிழ்ச்சி கொடுப்பது போல தான் இருக்கும். இன்று நல்லவர்கள் போல உடன் இருந்து சோதிப்பவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். (நாமும் நிச்சயம் மற்றவர்களை சோதித்து இருப்போம்).

திருத்தூதர் பேதுரு தன்னுடைய முதல் திருமுகம் 5:8இல் சொல்வார், “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது”. 

சோதனைகள் பல வகைகளில் வருகிறது. சோதனைகளை எதிர்த்து நிற்பதற்கான ஆற்றல் இறைவனிடமிருந்து வருகிறது. நாம் ஆற்றலை தவிர்த்துவிட்டு சோதனைகளை தேக்கி வைத்துக் கொள்கிறோம். தேக்கநிலையில் இருக்கும் சோதனைகள் நம்மை அழுத்திக்கொண்டே இருக்கிறது. புனித தாமஸ் மூர் சொல்வார், ‘உங்களுடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள், இல்லையென்றால் அலகை உங்கள் மனதை தீயவற்றால் அல்லது சோதனைகளால் நிரப்புவான்’.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:22-30) எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். 

சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது என்று இயேசு சொல்வது அவர்களுக்குள் நுழையவில்லை. 

அவரோடு இராதவர்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்கள். காரணம், செவிசாய்க்கும் மனநிலை இல்லையென்பதால் இயேசு சொல்வது சரியாக இருந்தும் அது அவர்கள் காதுக்குள் செல்லவில்லை. நாம் இயேசுவின் வார்த்தைக்கு செவிசாய்த்தால், நாம் அவரோடு இருக்கிறோம். 

இன்று நம் பணிகளை அங்கீகரிக்காமல், நம்மை பற்றி அவதூறு பரப்பி நம்மை சோதனைக்கு உள்ளாக்க காத்திருக்கும் கூட்டத்தை நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவர்கள் விரித்த வலையில் விழாமல் இருப்பதே அவர்களை எதிர்த்து நிற்பதற்கு சமம். 

சில சோதனைகள் நம்மை திடப்படுத்தவும் அடுத்த கடினமான பணிகளை முன்னெடுத்து சிறப்பாக செய்யவும் ஆற்றல் தருகின்றது.

சோதனையை வேண்டாம் என்று சொல்லவோ/தவிர்க்கவோ முடியாது. ஆனால் அந்த சோதனையிலே மூழ்கி விடாமல் இருக்க முடியும். அது நம் கையில் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...