25_01

மனமாற்றமே புதிய வாழ்வின் தொடக்கம்...


பொதுக் காலம் 2ஆம் வாரம்

25.01.2025 - சனிக் கிழமை 

திருத்தூதரான புனித பவுலின் மனமாற்ற விழா

"பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்; வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்" - திருப்பாடல்கள் 7:12

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டு. எல்லாம் தொடங்கிய நிலையிலே முடிவடைவதில்லை. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மாற்றத்தை பெற்றுக் கொள்கிறோம். 

சிலருக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. சில அடிகள் தான் சிலரின் வாழ்வையே மாற்றுகிறது. 

சில மனிதருக்கு திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கை தரம் மாறுகிறது, சிலருக்கோ ஏன் திருமணம் முடித்தோம் என்பதே கேள்வியாக இருக்கிறது. 

சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்ததும் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது. திமிர், ஆணவம், அதிகார போக்கு, மற்றவர்களை இழிவாக பார்த்தல் போன்ற மனநிலை உருவாகிறது. 

சில நேரங்களில் மாற்றம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கிறது.

சிலர் சிலரை பார்த்து கேட்கும் கேள்வி. ஏன் இப்படி மாறிட்ட? நீ எப்போ மாறுவ?

இரண்டு கேள்வியிலும் வித்தியாசம் இல்லை. சிலரை எந்த சூழலும், மனிதர்களும் மாற்ற முடியாது. சிலரை சில மனிதர்களின் செயல்பாடு மாற்றிக் கொண்டே இருக்கும். எல்லோருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதும் தவறு, மாற்ற வேண்டிய இடங்களில் மாறாமல் இருப்பதும் தவறு.

இன்றைய நாளில் திருத்தூதரான புனித பவுலின் மனமாற்ற விழாவை தாய்த் திருஅவை நினைவுக் கூறுகிறது. 

செல்வமும் செல்வாக்கும் புகழும் பெற்ற குடும்பமாக சவுலின் குடும்பம் தர்சு நகரில் வாழ்ந்து வந்தது. உரோமைக் குடியுரிமையை பெற்றவர்கள். இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றுத் தேர்ந்தவர். கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றவர். பரிசேய சமய பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினர், யூத மதத்தின் மீதான ஆர்வத்தினால் கிறிஸ்தவர்களை துன்புறுத்த தொடங்கியவர். 

திருத்தொண்டர் ஸ்தேவானை கொல்வதற்கு உடன்பட்டிருந்தவர். திருத்தூதர் பணிகள் நூல் 7:58இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்".

இவ்வாறாக கிறிஸ்தவர்களை அழிக்க எண்ணியவர் கிறிஸ்துவை அறிவிக்க ஆரம்பித்தார். யூத இனம் என்ற வெறியோடு இருந்தவர், பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவித்தார். தலைவர்களோடு கைகோர்த்து மக்களை ஒடுக்கியவர், கிறிஸ்துவுக்காக தலைவர்களை எதிர்த்தார்.

மாற்றம் இயேசுவின் தொடுதலில், இயேசுவின் வார்த்தையினால் மாற்றம் ஏற்பட்டது. 

"சவுலே சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்ற கேள்வியும் "நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்ய வேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்ற வார்த்தைகளும் தான் அவரை திசை மாற்றியது.

இங்கு சவுல் பவுலாக மாறுகிறார், திருத்தூதர்களுள் கடையவனாக மாறுகிறார், கிறிஸ்துவை கொண்டு வர எல்லோருக்கும் எல்லாமுமாக மாறுகிறார். 

இன்று நம்மில் தொடங்கப்பட வேண்டிய மாற்றம் என்ன?

வார்த்தை வாழ்க்கை ஒன்றாக இருக்க வேண்டும் (வாய்ச் சொல் வீரர் தேவையில்லை).

வெளித்தோற்றம் ஏமாற்றும்; உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் (போலியான வாழ்க்கை தேவையில்லை).

நம் வாழ்வு ஏதாவது ஒரு மனிதருக்காவது புதிய வாழ்வு கொடுக்க வேண்டும் (மடிந்து பலன் கொடுக்க வேண்டும்).

நம் பெயரில் மாற்றம் ஏற்படட்டும்; நம் வாழ்வில் எழுச்சி உண்டாகட்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...