25_01

துணிவோடு இருங்கள், அஞ்சாதீர்கள்

திருக்காட்சி பெருவிழாவுக்கு பின் வரும் புதன்

08.01.2025 - புதன் கிழமை 

"விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்" 1 கொரிந்தியர் 16:13

இன்று பலருக்கு தேவைப்படுவது அஞ்சாமை, துணிவோடு இருத்தல். எல்லோரும் தன்னிலே ஆற்றல் நிறைந்தவர்கள் என்றாலும் உடனிருப்போரின் நெருக்கடி, சமூகச் சூழல் ஆகியவற்றால் இன்று பலர் ஆற்றல் இழந்து காணப்படுகிறார்கள். 

ஆற்றல், துணிவு இழந்தவர்கள் அரை மனிதர்கள். சமூகத்தில் செல்லாக் காசாக பார்க்கப்படுவார்கள். துணிவிற்கும் ஆணவத்திற்கும் அதிக வேறுபாடு உண்டு. துணிவு என்னால் இந்த காரியத்தை செய்ய முடியும் என்பது, ஆணவம் இந்த காரியத்தை என்னை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பது.

எவ்வளவு துணிவுள்ள மனிதரும் ஏதாவது ஒரு நிலையில் ஆடி தான் போவார். வாழ்க்கையில் ஒரு நெருக்கடி வரும் போது வாழ்க்கை ஆட்டம் கண்டு விடும். தடுமாற்றம் நிறுத்தப்படவில்லை என்றால் நம்மால் நம்மோடு இருக்கும் பலர் ஆட்டம் காண ஆரம்பித்து விடுவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6: 45-52) இயேசு இறைவனிடம் தனியாக வேண்டி விட்டு தம் சீடர்களை நோக்கி கடலில் நடந்து செல்கிறார். இயேசு தான் தங்களை நோக்கி வருகிறார் என்பதை உணராத சீடர்கள் அஞ்சுகிறார்கள், துணிவை இழக்கிறார்கள். 

இயேசு அவர்களை பார்த்து கூறிய வார்த்தை,  "துணிவோடு இருங்கள்; நான்தான் அஞ்சாதீர்கள்".இயேசுவோடு உடன் இருந்தும் அவர் செய்தவற்றை அறிந்திருந்தும் கூட அவர்கள் அவரை இன்னாரென்று அறிந்துக் கொள்ளவில்லை. பயம் தான் அவர்களுக்குள் குடி கொண்டிருந்தது. 

இயேசு அவர்களின் கலக்கத்தை நீக்குகிறார். கலக்கத்தை நீக்க அச்சத்தை நீக்க மற்றவர்களின் ஊக்கமும் ஆற்றலும், மற்றவர்கள் தரும் திடமும் நமக்கு தேவைப்படுகிறது. ஒரு மனிதரால் நாம் இழந்து நிற்கும் தைரியம் மற்றொரு மனிதரால் கொடுக்கப்படும்.

யாரையும் அச்சுறுத்தி, மிரட்டி எந்த காரியத்தையும் சாதிக்க கூடாது.

அச்சத்தை நீக்கி தைரியத்தை கொடுத்த இயேசுவை போல பலம் இழந்தவரின் வாழ்வில் நம்பிக்கை தரும் வார்த்தைகளால் பலம் கூட்டுவோம்...

மற்றவர்களோடு உடன் இருந்து அவர்களின் அச்சத்தை நீக்குவோம்...

பலம் இழந்தவர்களுக்கு திடமூட்டி திடமுள்ள சமூகத்தை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...