24_10

வெண்மையான தொங்கலாடை அணிய தயாரா?


பொதுக் காலம் 30ஆம் வாரம்

01.11.2024 - வெள்ளிக் கிழமை 

"அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது. இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது" - திருவெளிப்பாடு 6:11

வெண்மை தூய்மையின் அடையாளம், மாசற்ற வாழ்க்கையின் அடையாளம், அமைதியின் அடையாளம்.

திருவெளிப்பாடு நூலின் அடிப்படையில் இந்த வெண்மை நிறத்தை அடைய சிவப்பு நிறம் தேவைப்படுகிறது. 

திருவெளிப்பாடு நூலின் ஒருசில இடங்களில் வெண்மையை/தூயவர்களை குறிக்கும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. "ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது (6:11), வெண்மையான தொங்கலாடை அனிந்தவர்களாய்க் கையில் குருத்தோலை பிடித்திருந்தார்கள் (7:9) தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள் (7:14, 22:14) , வெண்மையும் தூய்மையுயான விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த விண்ணக படைகள் (19:14)..."

தூயவர்களுக்கு, விண்ணகத்தில்/ஆட்டுக்குட்டிக்கு அருகில் இடம் உண்டு என்பதை இவ்வார்த்தைகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

இன்று அனைத்து புனிதர்களை தாய்த் திருஅவை நினைவுக் கூறுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் கொடுக்கப்பட்டாலும் இந்நாள் அனைவருக்குமான நாள். அனைவரும் தூய வாழ்வு வாழ அழைப்பு விடுக்கும் நாள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு5:1-12) இயேசுவின் மலைப் பொழிவை வாசிக்கிறோம். 8 (+1) பேறுபெற்றோரை நாம் காண்கிறோம். 6ஆவது பேறுபெற்றோர், "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்." 

எங்கு தூய்மை இருக்கிறதோ அங்கு கடவுளின் பிரசன்னம் இருக்கிறது. கடவுளை காணும் வாய்ப்பும் கிடைக்கிறது. 

இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக் காட்டுவது போல (1யோவான் 3:1-3) அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல தம்மையே தூயவராக்க வேண்டும்.

இந்த தூய்மை சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். தூய வாழ்வு இவ்வுலக பார்வையில் இழிவைக் கொணரலாம். இவ்வுலகை நாம் சாராதவர்கள் என்ற பிம்பத்தைக் கொடுக்கலாம். ஆனால் தூய வாழ்வுக்கு உரிய பரிசு நிச்சயம் உண்டு. 

(எ.கா) - மரணப் படுக்கையில் இருக்கின்ற போது, நாம் இவ்வுலகில் நலமாய் வாழ்ந்த காலத்தில் செய்த செயல்கள் நம் கண் முன்னால் வந்து போகும். நல்லது செய்திருந்தால் மனநிறைவும், தீங்கு செய்திருந்தால் பெருந்துயரமும் தான் ஏற்படும். இதுவே முதல் பரிசு.

அதனை தொடர்ந்து நடுவர் இருக்கை முன்னிலையில் நிற்கும் போது தலை நிமிர்ந்து நிற்க முடியும்... இது நாம் பெரும் இரண்டாம் பரிசு.

மூன்றாவது பரிசு விண்ணகத்தில் இடம் ஏற்பாடு செய்யப்படும்.

சீராக்கின் ஞானம் 38:10 இவ்வாறு சொல்கிறது, "குற்றங்களை அகற்று; நேர்மையானவற்றைச் செய்; எல்லாப் பாவங்களினின்றும் உன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்து."

தூய்மையான உள்ளம் பல வழிகளில் காயப்படும். அந்த காயத்திற்கு மருந்து மனிதரிடம் அல்ல கடவுளிடம் உண்டு.

("அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்." - 1பேதுரு 2:24)

தூய வாழ்வுக்கு கைம்மாறு உண்டு. அந்த கைம்மாறு இவ்வுலகிலும் அவ்வுலகிலும் நம்மை வந்து சேரும்.

இவ்வுலக கறைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து தூய்மைப்படுத்திக் கொள்வோம்.

இதயத்தில் ஈரம் கொண்டவர்களாக...


பொதுக் காலம் 30ஆம் வாரம்

31.10.2024 - வியாழக் கிழமை 

"நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்" - எசேக்கியேல் 36:26

பாறை இடுக்கில் கூட செடி முளைக்கும், துருப்பிடித்த பூட்டில் கூட செடி முளைக்கும். ஆனால் ஈரமுள்ள இதயத்தில் இரக்கம் இருப்பதில்லை. 

சிலருக்கு இரக்கக் குணம் இருக்கும், அதை செயல்படுத்துவதற்கான ஆற்றல் இருக்காது. ஆற்றல் இருப்போருக்கு இரக்கக் குணம் இருக்காது. இரக்கமும் ஆற்றலும் இணையும் இடத்தில் பெரிய மாற்றம் உண்டாகும்.

அடுத்தவரின் நிலை கண்டு இறங்கும் இதயம் இருந்தால் அது உணர்வுள்ள இதயம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:31-35) பரிசேயர் இயேசுவிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்" என்று கூறுகிறார்கள். 

இது பரிதாபத்தாலோ அல்லது இரக்கத்தாலோ அல்லது இயேசுவை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தவோ கூட சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் உயிரை காப்பாற்ற நினைக்கும் ஓர் இரக்கச் செயலாக/சொல்லாக இது இருக்கிறது. 

எது வந்தாலும் பரவாயில்லை, தனது கடமையை செய்து முடிப்பதில் இயேசு தெளிவாக இருந்தார். ஆகவே தான், 'இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவு பெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்' என்று சொல்கிறார் இயேசு.

இறைவாக்கினரை கொல்லும் எருசலேம் நகரை எச்சரிக்கிறார் இயேசு. அனுப்பட்டோரைக் கல்லால் எறிந்த நகரின் இறை இல்லம் கைவிடப்படும் என்கிறார்.

அனுப்பட்டவர்களை ஏற்றுக் கொள்வது அனுப்பியவரை ஏற்றுக் கொள்வதற்கு சமம்.

உடன் வாழ்வோருக்கு இரக்கம் காட்டுவது கடவுளுக்கே இரக்கம் காட்டுவதாகும்.

இதயத்தில் இருக்கும் ஈரத்தின் அளவுக்கு ஏற்ப கொஞ்சம் இரக்கமும் இருக்கட்டும்.

சீராக்கின் ஞானம் 40:17 இவ்வாறு சொல்கிறது, "இரக்கம் என்பது நலமிகு பூங்காபோன்றது; தருமம் என்றும் நிலைக்கும்."

இடுக்கமான வாயில் வழியே இறையாட்சிக்கு...


பொதுக் காலம் 30ஆம் வாரம்

30.10.2024 - புதன் கிழமை

"வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு" - திருப்பாடல்கள் 16:11

இரண்டு வழித்தடம் நமக்கு முன்னே உள்ளது. 1. இடுக்கமான பாதைக்கான வழித்தடம், 2. அகன்ற பாதைக்கான வழித்தடம்.

அகன்ற பாதை தொடக்கத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும் இறுதியில் விளைவதோ கவலை தான். ஆனால் வருந்தி நுழையும் இடுக்கமான பாதையோ தொடக்கத்தில் கஷ்டத்தை கொடுத்தாலும் நிறைவில் விளைவதோ பேரின்ப வாழ்வு.

அழிவுக்குரிய வழி அகன்றது. வாழ்வுக்குரிய வாழ்வு குறுகியது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:22-30) இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்கிறார் இயேசு. அவர்களோ, 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்கின்ற போது இயேசுவின் பதில் நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்குச் செய்வோரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்பதாக அமைகிறது. 

பலர் கடவுளின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்கிறார்கள். ஆனால் அது கடவுளுக்கு ஏற்புடையதா? என்பது அவரவர் மனசாட்சியின் பொருட்டு கேட்கப்பட வேண்டிய கேள்வி...

நாம் செய்கிற எல்லாவற்றையும் செய்து விட்டு கடவுள் விரும்புகிறார், கடவுள் பேசுகிறார், கடவுள் எண்ணுகிறார் என்று சொல்வது பொய் பித்தலாட்டம். அது முற்றிலும் தவறானது.

நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நாள் வரும். அப்போது இயேசுவின் பணியைச் செய்கிறோம், இயேசுவின் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் துணிந்து/நிமிர்ந்து நிற்க முடியுமா?

கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர் விண்ணரசுக்குள் செல்வர்.

இயேசுவின் பெயரைச் சொல்லி பலவற்றை செய்வது எளிது. ஆனால் இயேசு விரும்பும் வாழ்க்கை வாழ்வதுதான் இயேசுவுக்கு நாம் பகரும் சான்று.

இறையாட்சிக்கு உரியவராவது இறைவன் நமக்கு கொடுத்த அருளாக இருக்கிறது. இடுக்கமான வாயில் வழியே நுழைந்து, அந்த அருளை நம் செயல்களால் நிறைவு பெற செய்வோம்.

இறையாட்சியின் சிறிய துவக்கம்...

பொதுக் காலம் 30ஆம் வாரம்

29.10.2024 - செவ்வாய்க் கிழமை

"ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது; உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல்" - சபை உரையாளர் 7:8

தொடங்கி வைப்பது முக்கியமல்ல... முடித்து வைப்பதும் தான் முக்கியம். தொடங்குவதை யார் வேண்டுமானாலும் தொடங்கி விடலாம், ஆனால் நிறைவை அதற்கான ஆற்றல் உள்ளவர்களே செய்து முடிப்பார்கள்.

ஏதோ வாழ்கிறோம், ஏதோ இருக்கிறோம் என்பது இறையாட்சியின் விழுமியம் அல்ல. புதிய நகர்வு நோக்கி நம் பயணம் செல்ல வேண்டும்.

விதையை போல முளைத்தெழ வேண்டும். விதை வளர்ந்தாலும் பலன் (மரமாக) மக்கி போனாலும் பலன் (உரமாக).

விதைக்கப்படும் விதை மண்ணுக்குள் முடங்கியே கிடப்பதில்லை. விதைக்கேற்ற உரம், வெப்பம், நீர், காற்று எல்லாம் சரிவர கிடைக்கின்றபோது அந்த விதை வளர்ச்சி என்னும் நிறைவை நோக்கி பயணிக்கும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:18-21) கடுகு விதையையும் புளிப்பு மாவையும் விண்ணரசுக்கு இயேசு ஒப்பிடுகிறார். சிறிய விதை பெரிய மரமாக உருவெடுக்கிறது. சிறிது புளிப்பு மாவு முழுவதையும் புளிப்பேற செய்கிறது. 

சிறிய வாய்ப்பு தான் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது போல இந்த உவமை கொடுக்கப்பட்டுள்ளது. 

இயேசு ஏன் இதை விண்ணரசுக்கு ஒப்பிடுகிறார்? இயேசு விதைத்த இறையாட்சி இத்தகையது தான். தந்தை கடவுளின் விருப்பத்தை, இறைவார்த்தை வாயிலாகவும் நற்செயல்கள் வாயிலாகவும் எடுத்து சொன்னவர், செய்தவர் இறையாட்சியை (அன்று) இம்மண்ணில் பரப்பினார். அவர் அன்று விதைத்த விதை இன்று உலகம் முழுவதும் கிறித்தவமாக பரவி இருக்கிறது. சிறிய தொடக்கம் தான் ஆனால் அது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் வாழ்வின் தொடக்கம் பெற்றோரிடமிருந்து ஆரம்பித்தது, அது இல்லறம் என்னும் நிலையில் அல்லது துறவறம் என்னும் நிலையில் முடிவு பெறுகிறது. பல்வேறு மாற்றங்களை சந்தித்த நம்முடைய வாழ்க்கை நிறைவில் எத்தகைய மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்பதுதான் சிந்திக்கப்பட வேண்டியது?

தொடங்கியது போலவே நிறைவும் இருந்தது என்று சொன்னால் தொடங்கப்பட்டதனுடைய நோக்கம் அடிபட்டு போகிறது. 

ஒரு மரம் வளராமல் அப்படியே இருந்தது என்றால் அதனால் பயன் என்ன?

அதேபோலத்தான் நம்முடைய வாழ்க்கையும் இயேசுவில் வளர்ச்சியை காணவில்லை என்றால் அது முற்றிலும் வீண்.

இயேசுவுக்காக எப்படிப்பட்ட சாவையும் ஏற்க தயார்...


திருத்தூதர்கள் சீமோன், யூதா

பொதுக் காலம் 30ஆம் வாரம்

28.10.2024- திங்கட் கிழமை 

"ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது" - திருப்பாடல்கள் 116:15

இயேசு தன் பணி வாழ்வின் எல்லா நிலையின் தொடக்கத்திலும் தந்தையோடு உறவாடுவதில் செலவழித்தார். இறைவேண்டல் செய்து தன் சீடர்களை தேர்ந்தெடுத்தார். 

எல்லா விரல்களும் ஒன்றாய் இருக்காது என்பது போல ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு குண நலனை பெற்றிருந்தனர். தடைகள், தடுமாற்றங்கள் எல்லா சீடரிடமும் இருந்தது. தொடக்கம் கோணலாக இருந்தாலும் முடிவு நேர்க்கோட்டில் தான் இருந்தது. அந்த நேர்க்கொடு இயேசுவை நோக்கியதாக இருந்தது.

ஒவ்வொரு சீடருக்கும் ஒவ்வொரு இலக்கு இருந்தது. இயேசுவைப் பின்பற்றினாலும் தங்களுக்கு என்று ஒரு கொள்கையோடு பயணித்தார்கள். ஆனால் கடைசியில் எல்லாரும் இயேசுவுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

இன்று நாம் கொண்டாடும் புனிதர்கள் சீமோன், யூதா ஆகியோர் இயேசுவுக்காக கொடிய சாவையும் ஏற்றார்கள்.

வரலாறு

திருத்தூதர் சீமோன், கானான் ஊரைச் சேர்ந்தவர். இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த உரோமை அரசாங்கத்தை முறியடிக்க, அவர்களுக்கு எதிராக கலகக்காரரைப் போன்று செயல்பட்டதால் தீவிரவாதி என அறியப்பட்டவர். மேலும் கானாவூர் திருமணத்தில் இவரே மணமகனாக இருந்தார் என்றும் திருச்சபை மரபு சொல்கிறது.

நற்செய்தி நூல்களில் இவரைப் பற்றி அதிகமாகக் கேள்விப்படாவிட்டாலும் லூக்கா நற்செய்தி 22:36-38 பகுதியில் ஆண்டவர் இயேசு, "பணப்பை உள்ளவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்: வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும்" என்று சொல்கிறபோது சீடர்கள், "இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன" என்பார்கள். ஆனால் இதில் சீமோனின் குரலே அதிகமாக ஒலித்தது என்று விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.

ஆண்டவர் இயேசு உதிர்த்தெழுந்த பின்பு இவர் திருத்தூதர் யாக்கோபுவிற்குப் பிறகு எருசலேமில் ஆயராக இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. 

மேலும் இவர் எகிப்து, லிபியா போன்ற பகுதிகளில் நற்செய்தியை அறிவித்தார் எனவும், டிராஜன் என்பவனின் ஆட்சிகாலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்படுகிறது. "சீமோன் யூதாவின் பாடுகள்" என்ற புத்தகத்தில் சுவானீர் என்ற இடத்தில் நற்செய்தியை அறிவிக்கின்றபோது அங்கே கயவர்கள் இவரை இரம்பத்தால் அறுத்துக் கொன்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக, இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்தார் என்று இவருடைய வாழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகிறது.

திருத்தூதர் யூதா ததேயு, இயேசுவின் நெருங்கிய உறவினர். இவருடைய பெற்றோர்கள் அல்பேயு மற்றும் மரியா. இயேசுவின் முகமும், இவருடைய முகமும் ஒன்றுபோல இருந்ததால்தான் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக பணம் வாங்கினார் என்று சொல்லப்படுகின்றது.

இவரைப் பற்றியும் நற்செய்தி நூலில் அதிகமான செய்திகள் காணக் கிடைக்கவில்லை. யோவான் நற்செய்தி 14:21-23 பகுதியில் இவர் ஆண்டவர் இயேசுவிடம், “ஆண்டவரே! நீர் உலகிற்கு உம்மை வெளிப்படுத்தாமல், எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே?” என்று கேட்பதற்கு இயேசு, "என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார், என் தந்தையும் அவர்மீது அன்புகொள்வார். நாங்கள் அவரிடம் வந்து, அவருடன் குடிகொள்வோம்" என்பார். இந்த ஒருபகுதியில்தான் நாம் யூதாவை குறித்து வாசிக்கின்றோம்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் மெசபத்தோமியா, அர்மேனியா போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்தார் என்று சொல்லப்படுகின்றது. மேலும் திருத்தூதர் சீமோனோடு சுவானீர் என்ற பகுதியிலே நற்செய்தி அறிவிக்கின்றபோது கி.பி.68 ஆம் ஆண்டு அம்பு எய்து கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்படுகின்றது.

மீண்டும் பார்வை பெற்று அவர் வழி நடக்க...

பொதுக் காலம் 30 ஆம் ஞாயிறு

27.10.2024 - ஞாயிற்றுக் கிழமை

"பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்" - எசாயா 42:7

சிலர் கண்ணும் கருத்துமாக சிலரை வழிநடத்துகிறார்கள். சிலர் தவறாக வழிநடத்தி குழியில் தள்ளி விடுகிறார்கள்.

சிலர் கண்ணிருந்தும் குருடராக இருக்கின்றார்கள். ஒன்றை (நல்லதை) பார்ப்பதற்காக படைக்கப்பட்டது தான் கண். அந்தக் கண் இருந்தும் பார்க்க இயலாதவர்களாக, கண்டு கொள்ள முடியாதவர்களாக பலர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

கண் நன்றாய் இருக்கும் அனைவரும் பார்வை உள்ளவர் அல்ல; மாறாக அக ஒளி சரியாக இருந்து, உள்ளொளியின் பாதையில் நடப்பவர்களே பார்வையுடையவர்கள்.

கண்ணை இழந்தவருக்குத்தான் அந்த இழப்பின் வலி தெரியும். இருக்கின்ற வரை எதனுடைய அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். 

பொருளை இழந்தால் பெற்றுக் கொள்ளலாம், உடலின் உறுப்புகளை இழந்தால் கூட மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆன்மாவை இழந்தால் மீண்டும் பெற முடியாது. நம்முடைய ஆன்மா தன் ஒளியை இழந்து வருகிறது. 

இழந்ததை மீண்டும் பெற்றுக் கொள்கிற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:46-52) பார்வை இழந்தவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அவருடைய நம்பிக்கை என்பது மற்றவர்கள் அவரை அதட்டிய போதிலும் கூட தடைப்பட்டு போகவில்லை. 

'தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்துகிறார் பார்வை இழந்தவர். இழந்தது பார்வையை தான், பேசும் திறனை அல்ல என்பதனால், அவர் நம்பிக்கையை வார்த்தையின் வழியாக எடுத்துக் காட்டுகிறார்.

தன் நம்பிக்கையை வெளிக்காட்டும் தருணத்தில், பல தடைகள் வெளியே இருந்து வந்தாலும், அதில் துவண்டு போகாத மனம் தான் இந்த பார்வையற்றவர் நமக்கு சுட்டிக் காட்டக்கூடிய பாடம்.

இன்று நம்முடைய பார்வைகள் புது பிறப்பு அடைய வேண்டும். நம் ஆன்மா மீண்டும் முழு ஒளியை பெற வேண்டும். 

பார்வை பெற்றதும் அவர் தன் பாதையில் செல்லவில்லை. இயேசுவை பின்பற்றி அவரை பின்தொடர்ந்தார் என்கிறது நற்செய்தி.

இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 31:7-9) 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்' என்ற செய்தியை பறைசாற்ற சொல்கிறார் ஆண்டவர். அந்த எஞ்சியோர் என்பவர்கள் நல்வழியில் நடந்தோரை குறிக்கும். கடவுளின் கட்டளையை மீறி தண்டனை பெற்றவர்களுக்கு மத்தியில் இவர்கள் கடவுளுக்குரிய வாழ்வை வாழ்ந்தவர்கள். ஆன்மாவின் ஒளியை அணையாது காத்தவர்கள்.

இரண்டாம் வாசகம் (எபிரேயர் 5:1-6) என்றென்றும் குருவாய் விளங்கும் இயேசுவை பற்றி எடுத்துரைக்கிறது. கிறிஸ்து தன்னை தலைமைக் குருவாய் உயர்த்திக் கொள்ளவில்லை. அந்த அருளும் வாய்ப்பும் தந்தையிடம் இருந்து வந்தது.

கிறிஸ்துவில் ஒளியில்/தலைமைத்துவத்தில் பங்கெடுக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

பார்க்க வேண்டியவற்றை பார்க்க, கண்டுகொள்ள வேண்டியவற்றை கண்டுகொள்ள நமது கண்கள் திறக்கப்பட வேண்டும்.

பெற்றுக் கொண்ட பார்வைக்கு நம்பிக்கை உரியவராக இருக்க வேண்டும்.

மூடியே இருக்கும் கண்களால் உலகை (நலனை) காண முடியாது.

நம்பிக்கை மலர்ந்து நம் கண்களும் திறக்கப்படட்டும்...

ஆன்மாவின் ஒளியும் கண்களின் ஒளியும் பற்றி எரிந்துக் கொண்டே இருக்கட்டும்.

பலன் கொடுக்க வாய்ப்பு...

பொதுக் காலம் 29ஆம் வாரம்

26.10.2024 - சனிக் கிழமை 

"ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலன்களைத் தரும்; நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்" - லேவியர் 26:4

பயன்படாதவர்களை இந்த உலகம் தனிமைப்படுத்திவிடும். சிலரை பயன்படுத்தி தூக்கி எறிந்து விடும் (Use and Throw Culture). உன்னால் எனக்கு ஏதாவது கிடைக்க வேண்டும், அதுவும் இப்போதே கிடைக்க வேண்டும் இல்லையென்றால் உறவு துண்டிப்பு. (இன்றைய குடும்பங்கள் இதற்கு உதாரணம்).

எல்லாருடைய எல்லா தேவைகளையும் நாம் பூர்த்தி செய்துவிட முடியாது. சிலவற்றை நாமே நிறைவேற்றி விடலாம். சிலவற்றை தகுந்த நபர்கள் மூலம் செய்து முடித்து விடலாம். இல்லையென்றால் இயற்கையே அதன் செயலை உரிய காலத்தில் செய்யும். 

வேரோடு பிடுங்கப்பட்டு வேறொரு இடத்தில் நடப்பட்ட நபர்கள் (புதிதாக திருமணமாகி வந்தவர்கள்) புதிய இடத்தில் பலன் கொடுக்க சில காலம் எடுப்பார்கள். நான் விரும்புவதை உடனே செய்யவில்லை என்பதனால் அவர்கள் உதவாக்கரை அல்ல.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:1-9) திராட்சை தோட்டத்தில் நடப்பட்ட அத்திமரம் பலன் கொடுக்காத போது அதை வெட்டிவிட எண்ணுகிறார் தோட்ட உரிமையாளர். தொழிலாளரின் குறுக்கீட்டால் மரத்திற்கு ஓர் ஆண்டு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பலன் கொடுக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

பயன்படுத்தி தூக்கி எறிவதும்; பயன்படாமலே இருப்பதும் கிட்டத்தட்ட ஒரே குணச் செயலே.

எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நான் பயன்படுத்தவில்லை; மற்றவரை மனிதராக மதிக்கவில்லை என்றால் நான் வீழ்த்தப்படுவது உறுதி.

நான் மனம் மாறாவிட்டால் அழிவது உறுதி. பிறரின் தீய வாழ்விலிருந்து, எதை செய்யக் கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். 

நான் செய்த செயலுக்கு உடனே தண்டனை கிடைக்கவில்லை என்றால் நான் யோக்கியன் என்று அர்த்தமில்லை. எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது. 

திருந்துவதற்கும் பலன் கொடுப்பதற்கும் கொடுக்கப்படும் வாய்ப்பைப் பயன்படுத்துவோம். 

மற்றவரை பயன்படுத்த அல்ல; மற்றவர்களுக்கு பயன் உள்ளவர்களாக இருப்போம்.

எதிரே இருப்பவர்களை உணர்ந்து/புரிந்து செயல்படுவோம்...


பொதுக் காலம் 29ஆம் வாரம்

25.10.2024 - வெள்ளிக் கிழமை 

"அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்" - லூக்கா 9:45

புரிந்துக் கொள்ள கொஞ்சம் நிதானம் தேவை. அறிந்துக் கொள்ள ஆர்வம் தேவை. நிதானமும் ஆர்வமும் இருந்தால் எல்லாம் கைக்கூடும். 

இன்று நாம் உலகக் காரியங்கள் பலவற்றை அறிந்திருக்கிறோம். ஆனால் அருகில் இருப்பவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துக் கொள்வதில்லை. 

காலத்தின் வட்டத்தில் நாம் சுற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு முன் இருப்பவர்களும் நமக்கு தெரிவதில்லை; நமக்கு பின் இருப்பவர்களும் நமக்கு தெரிவதில்லை. நம் வாழ்க்கை பயணம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:54-59) நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து அறிந்திருக்கும் போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.

இயற்கையின் மாற்றங்களை தெரிந்திருக்கும் நாம், நம்மோடு இருப்பவர்களை அறிந்திருக்க வேண்டும் அல்லவா? 

தண்டனை வழங்க அழைத்து செல்பவரோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பலாம். ஆனால் கர்வம் அதை செய்ய விடாமல் தடுத்துவிடும். இறங்கி செல்வது நம் நடைமுறைக்கு ஒத்துவராது என்போரும் உண்டு. 

தன் நிலையிலிருந்து இறங்கி வர புரிந்துணர்வு தேவை. பிறர் இறங்கி வருகின்ற போது ஏற்றுக் கொள்வதற்கும் புரிதல் தேவை.

சீராக்கின் ஞானம் 23:20 இவ்வாறு சொல்கிறது, "அனைத்தும் படைக்கப்படுமுன்பே ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார்; அவற்றைப் படைத்து முடித்த பின்னும் அவற்றை அறிந்துள்ளார்".

கடவுளை போல, நாம் எல்லாவற்றையும்/எல்லாரையும் அறிய முடியாது. அறிய வேண்டியவற்றையும் புரிய வேண்டியவர்களையும் அறிந்து புரிந்துக் கொள்ள முற்படுவோம்.

நன்மை செய்வதால் பிளவு!!!


பொதுக்காலம் 15ஆம் வாரம்

24.10.2024 - வியாழக் கிழமை

"நன்மைக்கு முரணானது தீமை; வாழ்வுக்கு முரணானது சாவு; இறைப்பற்றுள்ளோருக்கு முரணானோர் பாவிகள்" - சீராக்கின் ஞானம் 33:14

பிளவு உண்டாக வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. அதே போல பிளவு வந்தபின் சரிசெய்ய வேண்டும் என்றும் யாரும் விரும்புவதில்லை. 

சரி செய்தாலும், பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான் வரும். எனவே, பிரச்சனைகளோடு இருந்து விடுவோம். ஏன் பிளவுகளை சரி செய்ய வேண்டும்? என்ற மனப்பான்மை நம்மில் பலருக்கு உண்டு.

சில வேளைகளில் குடும்பத்தில் பிளவுகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. சில பிளவுகள் எதிர்பாராமல் பேசிய ஒரு சில வார்த்தைகளால் உருவாகிறது.

யார் பிளவை உண்டாக்கியவர்? யார் பிரச்சனைக்கு காரணம்? என்பது தெரிந்தபின், அதை அவரும் சரி செய்ய முன் வந்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். 

இங்கு பிரச்சனையே பிளவை ஏற்படுத்தியவர் தொடர் பிளவை உண்டாக்குவது தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:49-53) இயேசு தீ மூட்ட வந்தேன், பிளவு உண்டாக்க வந்தேன் என்கிறார். (இந்த தீ/பிளவு வித்தியாசமானது) தந்தைக்கு எதிராக மகனும் தாய்க்கு எதிராக மகளும் மாமியாருக்கு எதிராக மருமகளும் பிளவுபட்டிருப்பர். நான் அமைதியை ஏற்படுத்த அல்ல, தீ மூட்டவே வந்தேன் என்கிறார் இயேசு.

இயேசுவை பின்பற்றுவோர் இயேசுவை பின்பற்றாதவருக்கு எதிராகத்தான் இருப்பர். அது குடும்பமாக இருந்தாலும் சரி! சமூகமாக இருந்தாலும் சரி! பிளவு ஏற்பட தான் செய்யும்.

தன் உறவினரிடம் அதிக அன்பு கொண்டு உள்ளோர், தன் சிலுவையை சுமக்காதோர் இயேசுவின் சீடரென அழைக்கப்பட தகுதியற்றோர். தன் உறவினரிடம் அதிக அன்பு கொண்டுள்ளோர், தன் உறவினருக்காக எதையும் இழக்கத் துணிவார், அது உண்மையானாலும் சரி, நீதியானாலும் சரி.

அப்படி உறவினருக்காக எதையும் செய்பவர் இயேசுவின் சார்பாக இருக்க முடியாது. ஒருவேளை இயேசுவின் சார்பாக இருந்தால் உறவினரின் உறவை இழக்க நேரிடும். இது தான் பிளவு.

இங்கு ஒன்றை இழப்பதன் வழியாக ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தான் இயேசுவின் பாடம். 

தீமையை எதிர்ப்பதன் வழியாக நன்மையை பற்றிக்கொள்ள முடியும். தீய உறவுகளை இழப்பதன் வழியாக நல்ல கைம்மாறை நாம் பெற முடியும்.

இயேசுவின் பார்வையில் பிளவு என்பது தீமைக்கும் நன்மைக்கும் இடையே உள்ள பிளவு, இழப்பிற்கும் கைம்மாறுக்கும் இடையேயான பிளவு.

நல்லது செய்தால், அதை எதிர்ப்பவருக்கும் நல்லது செய்வோருக்கும் இடையே பிளவு உண்டாகும்.

மனிதர்களால் ஏற்படும் பிளவு மன உளைச்சலை கொடுக்கும்; இயேசுவின் பொருட்டு உண்டாகும் பிளவு கைம்மாறை பெற்று கொடுக்கும். நல்லது செய்வதால் பிரிவும் பிளவும் வந்தால் அது நல்லது தான்.

காலம் தாழ்த்தும் தலைவர்... ஆயத்தமாய் இருக்கும் பணியாளர்...


பொதுக் காலம் 29ஆம் வாரம்

23.10.2024 - புதன் கிழமை

எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்? - திருப்பாடல்கள் 89:46

தலைவர் பணியாளர் உறவு எத்தகையதாக இருக்க வேண்டும்? அது உண்மையும் அன்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும். நம்பிக்கைக்குரிய  பணியாளரை பெற்ற தலைவர் பேறுபேற்றவர். 

நல்ல பணியாளர் தலைவருக்குரியதை கருத்தில் கொள்வார். தலைவர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தன் பணியை செய்வார். தலைவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் செய்ய வேண்டியதை சரிவர செய்ய வேண்டும்.

பிறர் பாராட்ட வேண்டும் என்று பணி செய்தால் அது தோல்வியில் முடியும். செய்யக் கூடிய பணியை ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். ஈடுபாட்டோடு செய்யப்படும் எந்த பணியும் நல்லதொரு பலனை கொடுக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:39-48) தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான விட்டுப் பொறுப்பாளர் யார்? என்பதை இயேசு தெளிவுப்படுத்துகிறார்.

தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துக் கொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர்தான் பாரட்டப்படுவார், அவருக்குதான் உயர் பதவியும் கொடுக்கப்படும். 

பொறுப்போடு இருக்க வேண்டிய பணியாளர் பொறுப்பை இழந்தார் என்றால் அவர் தண்டிக்கப்படுவார்.

இயேசு என்னும் தலைவரின் பணியாளர்கள் நாம், அவர் வருவதற்கு காலம் தாழ்த்துகிறார் என்பதற்காக நம் கடமையிலிருந்து நாம் தவற கூடாது.

மிகுதியாக கொடுத்தவரிடம் இருந்து மிகுதியாக எதிர்பார்க்கப்படும். தலைவரின் விருப்பத்தை தெரிந்திருந்தும் அதன்படி செயல்படாதவர் நன்றாக அடிபடுவார்.

எல்லாம் தெரிந்திருந்தும் எதுவும் தெரியாதவர் போல காட்டிக் கொள்ள முடியாது.

கடவுள் காலம் தாழ்த்துகிறார் என்றால் அவர் பொறுமையோடு இருக்கிறார் என்று அர்த்தம்.

(சீராக்கின் ஞானம் 5:4 ‘நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’ எனக்கூறாதே; ஆண்டவர் பொறுமை உள்ளவர்.)

பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை உணர்ந்து செயல்படுவோம். 

நமது கடமையை உணர்ந்து செயல்படுவோம். நம் செயலுக்கேற்ற கைம்மாறு நமக்கு கிடைக்கும். 

நம்மிடம் கொடுக்கப்பட்டது நம்மிடமிருந்து கேட்கப்படும் போது நாம் கணக்கு கொடுக்க வேண்டும்.

பேறுபெற்ற பனியாளராக...


பொதுக் காலம் 29ஆம் வாரம்

22.10.2024 - செவ்வாய்க் கிழமை 

"அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்" - லூக்கா நற்செய்தி 17:10

”ஒவ்வொரு பதவிக்கும் ஒரு தகுதி தேவைப்படும். மதிப்பு குறைவான பணி என்று கருதப்படுவதெல்லாம் அதிக மதிப்புமிக்கது தான், காரணம் அதில் தான் உழைப்பின் நேரம் அதிகம், வேலை பளு அதிகம். இந்த இடத்தில் வேலை செய்வது போல் நடிக்க முடியாது.

மதிப்புமிக்க பணியென்று அழைக்கப்படுவதெல்லாம் இருக்கும் இடத்தை பொறுத்து மதிப்பு பெறுகிறதே ஒழிய செய்யும் வேலையை வைத்து அல்ல. காரணம் இங்கு வேலை செய்யாவிட்டாலும் ஊதியம் உண்டு. இங்கு வேலை செய்வது போல் நடித்து பதவி உயர்வு பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு பணியாளர் பேறுபெற்றோர் ஆவதற்கு அடிப்படை தகுதி உண்மையுடன் இருப்பதே. தலைவர் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் தன் கடமையை செய்பவரே பேறுபெற்ற பணியாளர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12: 35-38) விழித்திருக்கும் பணியாளரை பேறுபெற்ற பணியாளராக இயேசு முன்மொழிகிறார். தலைவரின் வருகைக்காக காத்திருந்து பணிவிடை புரிபவர் பணிவிடை ஏற்கும் நிலைக்கு உயர்வார், அவர் பேறுபெற்றவராவார்.

கொடுக்கப்படும் பணி முக்கியமல்ல; அதை செய்து முடிக்கும் திறனே முக்கியம். எந்த பணியும் தரக்குறைவானது அல்ல. எல்லாம் மதிப்புமிக்கதே.

யாரோ செய்த செயலை தான் செய்ததாக சொல்லி பாராட்டு பெறும் மனிதர் சிறுமையுற்றவர். இது பணியாளருக்குரிய தகுதி அல்ல.

யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நாம் செய்ய வேண்டியதை செய்வோம். அப்போது நாம் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

இடையை வரிந்து கட்டிக்கொண்டு தலைவருக்காக காத்திருப்போம். நம் தகுதி நம் பணியில் வெளிப்படட்டும்... அப்போது நாம் பேறுபெற்ற பணியாளராக கருதப்படுவோம்.



கடவுள் முன்னிலையில் செல்வம் சேருங்கள்...


பொதுக் காலம் 29ஆம் வாரம்

21.10.2024 - திங்கட் கிழமை 

"ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே" - சபை உரையாளர் 2:21

செல்வம் இரண்டு வகையில் அறியப்படலாம் 1. பொருள் செல்வம் 2. அருள் செல்வம்.

செல்வம் இருப்பதை வைத்து தான் நம் மதிப்பு மண்ணகத்திலும் சரி விண்ணகத்திலும் சரி உயரும். மண்ணக செல்வம் மண்ணோடு கரைந்து விடும். மண்ணகத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் விண்ணகத்தில் நமக்கான செல்வமாக மாறும். பொருள் இல்லாதவருக்கு இவ்வுலம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

அவ்வுலகில் அருளை பெற இவ்வுலக வாழ்வு உதவுகிறது. 

பகிர்ந்து கொடுப்பதால் என்ன கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் - சேர்த்து வைத்தால் எதை பெற முடியாதோ அதை பகிர்ந்து கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்பது தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:13-21) சொத்தை பங்கிட்டு கொடுக்க உதவி வேண்டி இயேசுவிடம் வருகிறார் ஒருவர். பொருளாசையை விரும்பாதவரிடம் பொருளை பங்கிட்டு கொடுக்க கேட்கிறார். அறிவற்ற செல்வன் உவமை வாயிலாக எதார்த்தத்தை விளக்குகிறார் இயேசு. களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்ட எண்ணியவர் தனக்குள் சொல்லிக் கொண்டது, "என் நெஞ்சே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு, உண்டுக் குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு".

கடவுளின் குரல், அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை எல்லாம் யாருடையவையாகும்?

எல்லாவற்றையும் சேர்த்து வைத்து, விட்டு தான் செல்லப் போகிறோம். இது தான் உண்மை.

நாமும் அறிவற்ற செல்வன் போல தான் மண்ணக செல்வத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். இருப்பதை இழக்க மனம் ஒருபோதும் வருவதில்லை. மேன்மேலும் குவித்தும் பதுக்கியும் வைக்க எண்ணுகிறோம்.

இவ்வுலக செல்வம் அவசியமில்லை என்று சொல்லவில்லை. மாறாக இவ்வுலக செல்வம் மட்டும் போதும் என்று இருந்துவிடக் கூடாது.

மண்ணகத்தில் நாம் செய்யும் சிறு சிறு நன்மைகள் வழியாக/நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுப்பதன் வழியாக விண்ணகத்தில் கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்போம்...

பதவி வெறி கிறித்தவத்தின் எதிரி...

 


பொதுக் காலம் 29ஆம் வாரம்

20.10.2024 - ஞாயிற்றுக் கிழமை 

பதவி வெறி சிலரின் பசியாக இருக்கிறது. பதவி மோகம் பலரை அழித்திருக்கிறது, பலரை நடுத் தெருவில் நிறுத்தி இருக்கிறது. இருக்கைக்கு இங்கு சண்டை நடக்கிறது. இருக்கைக்கு இடம் பிடிக்க இயலாதவர்களுக்கு உதவுவது போல நாடகம் நடத்தப்படுகிறது. இருக்கையில் இடம் கிடைத்த பின் இயலாதவர் தேவையில்லாதவர் ஆகிறார்.

எல்லாம் நடிப்பு என்றாலும் எல்லோரும் ஏமாந்து தான் போகிறோம். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருக்கத் தான் செய்வார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:35-45), 'நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கும் அருளும்' என்று யாக்கோபுவும் யோவானும் இயேசுவை அணுகி கேட்கிறார்கள். 

இயேசுவின் சீடர்களிடமும் பதவி ஆசை இருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இவர்கள் விரும்பிய பதவியினால் மற்ற சீடர்கள் இவர்கள் மீது கோபம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். 

இயேசுவின் சீடராய் இருப்பதே உயர்ந்த பதவி/ஆசிர்வாதம் என்பதை அவர்கள் மறந்து போனார்கள்.

உங்களுள் பெரியவராய் இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்கிறார் இயேசு. தொண்டு ஏற்க அல்ல, தொண்டு ஆற்றவே வந்தேன் என்கிறார்.

வாழ்க்கையில் ஒரு தடவை பதவி ஆசை வந்துவிட்டால் அது கல்லறைக்கு செல்லும் வரை தொடரும்.

இவ்வுலகில் இனிமேல் எந்தவொரு (அரசியல்/சமயம் சார்ந்த)  பதவிக்கும் அதற்கு உண்டான அதிகாரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டால் பதவிக்கு போட்டிகள் இருக்காது, பிரச்சினைகளும் இருக்காது.

எல்லா இடத்திலும், பதவிவெறி தலை தூக்குகிறது. மேல் இருப்பவரை தகர்க்க, கீழ் இருப்பவர்கள் அதிகாரத்திற்கு வர எண்ணுகிறார்கள். யார் மேலே? யார் கீழே? என்ற தராசு மேலும் கீழுமாக இறங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு காரணம் அரியணை மீதான ஆசை தான்.

நாம் நிற்க வேண்டிய இருக்கை...

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:10இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. "ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்."

உயர்த்தப்பட்டோர் எந்நாளும் உயர்த்தப்பட்ட நிலையிலே இருக்க போவதில்லை. இருக்கை எப்போதும் இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

இயேசுவின் இருக்கை இழப்பை சுட்டிக் காட்டும் இருக்கை. இயேசு, பலருடைய மீட்புக்கும் ஈடாக தம் உயிரைக் கொடுக்கவும் வந்தார்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 53:10-11) துன்புறும் ஊழியர் பற்றி இறைவாக்கினர் எசாயா முன்னுரைக்கிறார். அந்த துன்புறும் ஊழியர் இயேசு என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து.

இரண்டாம் வாசகத்தில் (எபரேயர் 4:14-16) நம்மை போல சோதிக்கப்பட்ட இயேசுவை படம்பிடித்து காட்டுகிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். 

சோதனைகளின்/துன்பங்களின் வழி மீட்பை கொணர்ந்தவர் வழி நாம் நடக்க வேண்டும்.

அவரை அணுகி சென்றால்/அவரை போல் வாழ்ந்தால் நமக்கான அரியணை விண்ணகத்தில் தயாராய் இருக்கும்.

இவ்வுலக இருக்கை/ பதவி வெறி கிறித்தவத்திற்கு எதிரி.

ஏற்றுக் கொள்ளுதலும் பழித்துரைத்தலும்...


பொதுக் காலம் 28ஆம் வாரம்

19.10.2024 - சனிக் கிழமை 

"ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது" - யோவான் நற்செய்தி 3:19

பிடித்தவரை ஏற்றுக் கொள்வோம், பிடிக்காதவரை பழித்துரைப்போம். இது தான் உண்மை. ஒருவர் எப்போது பிடித்தவராக மாறுகிறார்? நாம் விரும்புகிறவற்றை ஒருவர் செய்யும் போதெல்லாம் நமக்கு பிடித்தவராகிறார். நம் தவறை சுட்டிக் காட்டுப்பவர் நமது பழிப்புரைக்கு உள்ளாகிறார்.

இந்த உலகில் நல்லவராக வாழ்வது கடினம் என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகிறார்கள். காரணம் அயோக்கியர்கள் அதிகாரம் செய்யும் இடத்தில் நல்லவருக்கும், நன்மைக்கும் இடம் இல்லாமல் போய்விடுகிறது.

தவறு செய்பவர்கள் தவறை துணிந்து செய்கிறார்கள். நல்லது செய்பவர்கள் நல்லது செய்ய தயங்குகிறார்கள்.

என்னதான் இருள் இவ்வுலகில் ஆட்சி செய்தாலும் இறுதியில் வெல்வதோ ஒளி தான்.

("தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு" - எசாயா 5:20).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 12:8-12) மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார் என்றும் தூய ஆவியாரை பழிப்பவர் மன்னிப்பு பெறமாட்டார் என்றும் தன் சீடர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இயேசு.

தூய ஆவியாரின் கனிகளுள் ஒன்று உண்மை. அந்த உண்மையை எதிர்ப்பவர்கள் தூய ஆவியாரை பழித்துரைக்கிறார்கள்.

ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முன் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்பதை தூய ஆவியார் கற்றுத் தருவார் என்கிறார் இயேசு.

இருளுக்கும் தீமைக்கும் நாம் அஞ்ச வேண்டிய தேவையில்லை. இருளை எதிர்த்தால் ஒளி பிறக்கும். 

தீமை செய்வோரை கண்டு தயங்கி செல்வதைவிட தீமைக்கு சவுக்கு அடி கொடுத்து உண்மையை உண்மை என்று உரக்கச் சொல்வோம்.

ஒளியை ஏற்றுக் கொள்வோம். கிறிஸ்து என்னும் ஒளி இருக்கும் இடத்தில் இருளுக்கு வேலை இல்லை. 

பற்று அற்ற வாழ்கை...


பொதுக் காலம் 28ஆம் வாரம்

18.10.2024 - வெள்ளிக் கிழமை 

"ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்; அவர் உனக்குத் துணை செய்வார். உன் வழிகளைச் சீர்படுத்து; அவரிடம் நம்பிக்கை கொள்" சீராக்கின் ஞானம் 2:6

நாம் விரும்பும் எதையும் சேர்த்து வைத்து கொள்ளலாம். ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. பிறருக்கு கொடுத்தால் நாம் பெற்றுக் கொள்ளலாம். 

ஒன்றை பெறுவதற்கு வரும் மனம் கொடுப்பதற்கு வருவதில்லை. பிறரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய எண்ணுவோர் இங்கு உண்டு. தனக்கு சொந்தமில்லாததையே அடைய வேண்டும் என்ற ஆவல் நம்மிடம் மேலோங்கி இருந்தால் நாம் எப்படி கொடுக்க முன் வருவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 10:1-9) இயேசு வேறு 72 பேரை நியமித்து, அவர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இயேசுவின் சீடர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணத்திற்கு சில பரிந்துரைகள் முன் வைக்கப்படுகிறது. உணவு, பை, இடைக் கச்சை, செப்பு காசு, கைத்தடி, மிதியடி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம். இதுதான் சீடர்களின் பயணத்திற்கான இயேசுவின் பரிந்துரைகள். 

பற்றற்ற வாழ்க்கை தான் இயேசு விரும்பும் சீடத்துவ வாழ்க்கை.  

ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவது போல இயேசு அவர்களை அனுப்புகிறார். மடியில் கணம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்பார்கள். எனவே தான் இயேசு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் சொல்லி இருக்கலாம்.

இறையாட்சி பற்றி அறிவிக்கப்பட வேண்டும் என்பது முதன்மை நோக்கம். அதற்கு தடையாய் இருப்பவை எல்லாம் அகற்றப்பட வேண்டும்.

பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும்.

புனித லூக்கா -  நற்செய்தியாளர் (விழா)

அன்னை மரியாவின் ஓவியத்தை வரைந்தவர்.

கிரேக்க மொழியை கற்றுத் தேர்ந்தவர்.

இயேசுவின் 72 சீடர்களில் ஒருவராக இருந்திருக்கலாம்.

மருத்துவர்.

திருத்தூதர் பவுலோடு இணைந்து பணியாற்றியவர்.

எல்லோருக்கும் பொதுவான நற்செய்தியை எழுதியவர்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

திருத்தூதர் பணிகள் நூலையும் எழுதியவர்.

இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை தத்ரூபமாக எழுத்து வடிவில் தந்தவர்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் புனித லூக்கா.

உலகக் காரியங்களை பற்றிக் கொள்ளாமல் கடவுளை பற்றிக் கொண்டார் புனித லூக்கா. அதனால் தான் இயேசுவின் வாழ்வு தரும் நற்செய்தியை தனது எழுத்துக்களால் பறைசாற்றினார்.

முரண்பாடுள்ள வாழ்க்கைமுறை...


பொதுக் காலம் 28ஆம் வாரம்

17.10.2024 - வியாழக் கிழமை 

"உன் மனச்சான்றை உறுதியோடு பின்பற்று; முன் பின் முரண்படாமல் பேசு" - சீராக்கின் ஞானம் 5:10

எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று செய்வோர் நம்மில் பலர் உண்டு. எதை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணுவோரும் நம்மில் உண்டு.

நமக்கும் நம் வாழ்க்கைக்கும் இடையே பல முரண்பாடுகள் இருக்கின்றன. நமக்கு நல்லதெனப்படுவதை அதிகம் பேசுகிறோம். ஆனால் நல்லதை செய்வதில்லை. 

நல்லவர்கள் இறந்த பின் அவர்களை பற்றி பெருமையாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் வாழ்ந்தபோது அவர்களை வாழ விட்டதில்லை.

மீக்கா 6:8 இவ்வாறு சொல்கிறது, "ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?"

நேர்மை, இரக்கம், தாழ்ச்சி ஆகியவை நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். (இவை அனைத்தும் தனக்கு ஏற்றார் போல இருக்க கூடாது)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11: 47-54) இயேசு பரிசேயரையும் திருச்சட்ட அறிஞரையும் சாடுகிறார். உங்கள் முன்னோர்கள் யாரைக் கொலை செய்தார்களோ அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். அவர்கள் செய்த தவறுக்கு நீங்களும் உடந்தை என்கிறார் இயேசு. 

இறைவாக்கினர் முதல் திருத்தூதர் வரையும், ஆபேல் முதல் சக்கரியா இரத்தம் வரையும் கணக்கு கேட்கப்படும் என்கிறார். 

இன்றும் மாசற்றவர்களின் இரத்தம் சிந்தப்படுகிறது. கடவுளை கைக் கூப்பி வணக்கும் கைகளே மாசற்றவர்களின் இரத்தத்தை சிந்துகிறது.

நம் வாழ்க்கை முரண்பாடுகளை கொண்டது. பிடித்தால் உறவு, இல்லையேல் கொலை. இது தான் ஆணவமிக்க மனிதர்களின் இன்றைய நிலைப்பாடு.

கொலை செய்வதும் பிறர் பெயரை கெடுப்பதும் ஒன்றே. கிறித்தவ போதனைக்கும் நம் வாழ்வுக்கும் தொடர்பு இல்லையேல் நாம் கிறித்தவர் அல்ல... கிறித்தவர் என்று அழைக்கப்படவும் தகுதி அற்றவர் தான்.

இன்று தாய்த் திருஅவை அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசியாரை நினைவுக் கூறுகிறது. உரோமையை ஆண்டு வந்த ட்ரேஜன் என்பவரின் ஆட்சிக் காலத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக வேதகலாபனை நடைபெற்றது. இதில் அந்தியோக்கு நகரில் ஆயராக இருந்த இஞ்ஞாசியார் கைது செய்யப்பட்டு உரோமை நகருக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இவர்மீது அக்கறை கொண்ட சிலர், கிறிஸ்துவை மறுதலித்து விடுங்கள்; உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்றனர். அதற்கு இஞ்ஞாசியாரோ, " நான் கிறிஸ்துவுக்காக என் வாழ்வைக் கோதுமை மணி எனத் தர இருக்கின்றேன். இதை யார் தடுத்தாலும் முடியாது என்றார். 

கொலைப் பசியில் இருந்த இரண்டு சிங்கங்களுக்கு உணவாக போடப்பட்டு கொல்லப்பட்டார். 

செய்ய வேண்டியதை செய்க...


பொதுக் காலம் 28ஆம் வாரம்

16.10.2024 - புதன் கிழமை

"நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது" - 2 கொரிந்தியர் 3:5

எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும், எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். மற்ற அனைத்தும் தேவை அற்றது. 

"ஆகவே நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது" - மத்தேயு 5:37

இங்கு அதிகம் பேசப்படுகிறது, ஆனால் செயல்திறன் குறைவு. ஒரு காரியத்தை தொடங்கு முன்பு அதை பற்றிய விவாதங்கள் பல மணி நேரம் நடைபெறுகிறது. ஆனால் முடிவில் பலன் ஒன்றுமில்லை. (எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்க முடிவதில்லை).

தேவையற்றவைகளை பேசி பேசி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தற்பெருமை கொள்ளுதல் நம்மில் அதிகம் இருக்கிறது. நான் செய்த செயல்களை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது வேறு, என்னை மட்டும் தான் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது வேறு/தவறு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:42-46) இயேசு பரிசேயரை கடிந்துக் கொள்கிறார். எதை செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்யவில்லை. காணிக்கை கொடுப்பதில் முனைப்பு காட்டினார்கள், ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்தவில்லை. முதன்மையான இருக்கையையும் பொது இடங்களில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்பினார்கள். ஆனால் மற்றவர்களின் சுமைகளை ஒருநாளும் உணர்ந்தது இல்லை.

முக்கியத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது தான் நம் பழக்கம்/வழக்கம்.

முதன்மையானதை தேடுவது தான் நம் வாழ்வின் இலக்கு.

தற்பெருமையும் தன்னலமும் நம்மை ஒருபோதும் உயர்த்தாது.

நம் உடலின் தேவையை பூர்த்தி செய்வது முக்கியமல்ல, மற்றவரின் உணர்வை புரிந்து செயல்படுவது தான் முக்கியம்.

கடவுளை சார்ந்திருந்தால் நாம் கடவுளுக்குரியதை நாட வேண்டும், கடவுள் விரும்புவதை செய்ய வேண்டும்.

உட்புறம் தூய்மையாக வேண்டும்...

பொதுக் காலம் 28ஆம் வாரம்

15.10.2024 - செவ்வாய்க் கிழமை 

மனிதனின் உள் இருந்து வெளியே வருவது தான் மனிதனையும் மனிதத்தையும் தீட்டுப்படுத்துகிறது...

குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). 

வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது? தீயது எது? என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம். 

புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'

நான் மாசுள்ளவன்(ள்) என்பதை கண்டுணராத வரை, நான் மற்றவர்களையும் அவர்கள் செய்வதையும் தீட்டாகத் தான் கருதுவேன். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:37-41) பரிசேயர் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறார். அவர் கை கழுவாமல் உண்பதை கண்டு வியப்படைகிறார். 

"பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன" என்ற இயேசுவின் பதில் அவருக்கு மேலும் வியப்பைக் கொடுத்திருக்கும்.

வயிற்றுக்கு விருந்து கொடுத்தவருக்கு இயேசு உள்ளத்திற்கான மருந்துக் கொடுக்கிறார்.

நம் உள்ளம் தூய்மையாகாமல் வெளிப்புறத்தில் தூய்மையாக இருப்பது போல காட்டிக் கொள்வது பயனற்றது. 

நம் குறைகள் களையப்பட வேண்டும். நம்மைவிட மற்றவரை குறைவாக மதிப்பிடும் பழக்கம் மறைய வேண்டும். உட்புறம் தூய்மையானால் வெளிப்புறம் புதுப்பொலிவு பெறும்.

மனம்மாறியதற்கான அடையாளம்...


பொதுக் காலம் 28ஆம் வாரம்

14.10.2024 - திங்கட் கிழமை 

அடையாளம் என்பது நம்முடைய வாழ்க்கையின் அவசியமாக உள்ளது. ஒருவர் யார் என்று தெரிந்து கொள்ள அவருடைய அடையாளம் தேவைப்படுகிறது. இவர் இன்னாருடைய மகன்/மகள், இவர் இந்த ஊரைச் சார்ந்தவர், இவர் இந்த தொழிலை புரிந்து வருகிறார் என்ற அடையாளம் தேவைப்படுகிறது. (அடையாளம் தான் நம்மை யாரென்று அடையாளப்படுத்துகிறது).

நாம் கிறித்தவர்கள் என்பதை அடையாளப்படுத்துவது திருச்சிலுவை. திருப்பலி பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒளி கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது. 

திருவழிபாட்டில் ஊதா நிறம் கிறிஸ்துவின் வருகையை முன்னிட்டு நாம் அடையும் மகிழ்ச்சியையும், தவக்காலத்தில் நாம் அடைய வேண்டிய மனமாற்றதையும் அடையாளப்படுத்துகிறது.

பச்சை நிறம் வாழ்வையும் வளர்ச்சியையும் அடையாளப்படுத்துகிறது.

வெள்ளை நிறம் தூய்மை, உயிர்ப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது.

சிவப்பு நிறம் தியாகம், மறைசாட்சியத்தை அடையாளப்படுத்துகிறது. 

இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் அடையாளம் முக்கிய இடம் பெறுகிறது. அடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டுகிறது, ஒன்றை பிரதிபலிக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:29-32) இயேசுவிடம் வந்த மக்கள் கூட்டம், இயேசு யார் என்று கண்டுக் கொள்ள அவரிடம் அடையாளம் கேட்டு சோதிக்கின்றனர். இந்த அடையாளம் கேட்டு சோதிப்பது அவரை யார் என்று கண்டு கொள்வதற்காக மட்டுமல்ல; உண்மையிலேயே, இவர் ஆற்றல் நிறைந்தவரா? என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தான்.

சாலமோனின் ஞானத்தை கேட்க கடைக்கோடியில் இருந்து வந்த தென்னாட்டு அரசி, யோனா அறிவித்த செய்தியை கேட்டு மனம் மாறிய நினிவே மக்கள், இந்த தலைமுறையினரோடு எழுந்து இவர்களை கண்டனம் செய்வார்கள் என்று இயேசு சொல்கிறார். 

இயேசு இந்த வார்த்தைகளை சொல்ல காரணம், எங்கோ இருந்தவர்கள்/கடவுளை அறியாதவர்கள் அறிவிக்கப்பட்டதை கேட்டு நம்பினார்கள். ஆனால் இயேசு செய்தவற்றை கண்கூடாக பார்த்தவர்கள், மீண்டும் அடையாளம் கேட்பதன் வழியாக தாங்கள் மனம் மாறவில்லை/தாங்கள் கடவுளுக்கு செவிசாய்க்கவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தார்கள்.

இங்கு இவர்கள் கேட்கும் அடையாளம் என்பது தெரிந்து கொள்வதற்காக அல்ல தொல்லை கொடுப்பதற்காக. 

இருந்தபோதிலும் இயேசு யோனாவின் அடையாளத்தை முன்வைக்கிறார். 

(மத்தேயு நற்செய்தி 12:40, "யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்").

இயேசுவிடம் இருந்து அவ்வளவு வார்த்தைகளை கேட்டும் கூட அவர்கள் தங்களுடைய மனமாற்றத்தை வெளிக்காட்டவில்லை. மனமாற்றம் அடையாளங்களில் வெளிப்படவில்லை.

இயேசுவை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, தெரிந்து கொள்ளவில்லை எனவே அவரை சோதித்தார்கள்.

சிலர் அடையாளம் கேட்பது சோதிப்பதற்கே...

நீங்கள் யார்? என்று கேட்கப்படும் கேள்வியில் இரண்டு பொருள் இருக்கிறது. ஒன்று நாம் யார்? என்பதை அறிந்து கொள்ள, மற்றொன்று நம்முடைய பின்புலம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள.

நாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் அடையாளமாக மாற வேண்டும். மற்றவரை சோதிக்கவும் மற்றொருடைய வாழ்வை அழிக்கவும் நாம் ஒருபோதும் முற்படக்கூடாது.

அடுத்தவரில் அடையாளம் தேடுவதை விட நாம் கிறிஸ்துவின் அடையாளமாக இருக்க வேண்டும். 

இரண்டு செல்வம்... இரண்டு பாதை...

பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு 

13.10.2024 - ஞாயிற்றுக் கிழமை

இந்த உலகம் வித்தியாசமானது. நேர்மையானவர்களை தீயவர்கள் என்றும், தீயவர்களை நேர்மையானவர்கள் என்றும் படம்பிடித்து காட்டக் கூடியது தான் இந்த உலகம் (உலகம் என்பது மனிதரை குறிக்கிறது). எங்கு செல்வம் இருக்கிறதோ அங்கு மரியாதை இருக்கிறது. 

இந்த உலகம் போதிக்கக்கூடிய பாடம் சற்று வித்தியாசமானது. உன்னுடைய வாழ்வு உயர வேண்டும் என்றால் எதையும் செய்; யாருக்காகவும் எதற்காகவும் உன்னை விட்டுக் கொடுக்காதே, மற்றவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை; நீ உனக்கான காரியத்தை செய். இதைப் போன்ற தன்னலம் பாராட்டக்கூடிய செயல்களை தான் இந்த உலகம் விரும்புகிறது, இந்த உலகம் போதிக்கிறது. 

நான் நன்றாக இருந்தால் போதும் என்ற குறுகிய மனநிலை நம்மில் பலருக்கு உண்டு.

இந்த உலகம் தரக்கூடிய செல்வம், மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. அந்த செல்வம் என்பது பணமாகவோ, பொருளாகவோ, புகழாகவோ, அதிகாரமாவோ, தற்பெருமையாகவோ இருக்கலாம்.

எல்லாம் மாயை! என்று நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் அந்த மாயைக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். 

("உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது" - கொரிந்தியர் 7:31)

இரண்டு வகை பாதை நமக்கு முன் இருக்கிறது. ஒன்று விண்ணகம் நோக்கிய பாதை மற்றொன்று மண்ணகம் நோக்கிய பாதை. 

விண்ணக நோக்கிய பாதை அழியா ஞானத்தை கொடுக்க கூடியது. மண்ணகத்தை நோக்கிய பாதை அழிவுறும் செல்வத்தைக் கொடுக்கக் கூடியது. 

இறைவார்த்தை நமக்கு தெளிவாக சொல்கிறது (நீதிமொழிகள் 11:4), "கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்".

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:17-30) ஒருவர் இயேசுவிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, நல்ல போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

இயேசு அவரிடம் கட்டளைகளை கடைப்பிடியும் என்று சொல்கிறார். அவரோ நான் இளமை முதல் அனைத்தையும் கடைபிடித்து வருகிறேன் என்று பதில் கூறுகிறார். 

இயேசுவோ அவரை அன்பொழுக கூர்ந்து நோக்கி, உமக்கு இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னை பின்பற்றும் என்று சொல்கிறார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம் வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். காரணம் இந்த உலக செல்வத்தின் மீது அவர் பற்றுக் கொண்டிருந்தார். இருப்பதை இழக்காமல் இயேசுவை பின்பற்ற முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. 

செல்வமும் வேண்டும் இயேசு என்னும் ஞானமும் வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாய் இருந்தார். ஆனால் இயேசுவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் உலக இன்பத்தைத் துறக்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே செல்வம் அவரிடம் இருந்தாலும் கூட அவர் இயேசு சொன்னதைக் கேட்டு முகவாட்டத்தோடு திரும்பி விடுகிறார்.

செல்வம் ஒருபோதும் முழுமையான இன்பம் தராது. (யாக்கோபு 5:1-6இல் செல்வர்களுக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

யாக்கோபு 5:2,3 இவ்வாறு சொல்கிறது, "உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.

உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!").

இன்றைய உலகில் அழிந்து போகும் செல்வத்திற்காக உறவுகளை அழித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். 

குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை/அன்பு கொள்ளாதவர்கள் எப்படி அடுத்தவர் மீது அக்கறை/அன்பு கொள்வார்கள்?

இன்று பணத்தின் மீதும் பொருளின் மீதும் இருக்கக்கூடிய மோகம் உறவுகளை சிதைத்து விடுகிறது. 

எல்லாம் இழந்தபின் தான் உறவின் மகத்துவம் தெரிய ஆரம்பிக்கிறது. 

இவ்வளவு செல்வம் ஞானத்தை அடைவதற்கான வழி அல்ல. இறைவன் தரும் ஞானமே இவ்வுலகை விட்டு அவ்வுலகை அடையும் வழி.

மண்ணுலகில் இழக்கும் ஒவ்வொன்றையும் நாம் விண்ணுலகில் கைம்மாறாக பெற்றுக் கொள்வோம்.

மண்ணுலகில் சுரண்டலும் பதுக்களும் அதிகமானால் விண்ணகத்தில் நமக்கான இடம் இல்லாமல் போய்விடும். அனைவரும் செல்வம் நம் வாழ்க்கைக்கு அழிவை கொண்டு வரும். அழியா ஞானம் அருள் வாழ்வை கொடுக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் (சாலமோனின் ஞானம் 7:7-11) தான் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஞானத்தை பற்றி பதிவு செய்கிறார் சாலமோன். கடவுளிடம் சாலமோன் கேட்டதோ ஞானம்; ஆனால் அவருக்கு ஞானத்தோடு சேர்த்து அனைத்தும் கொடுக்கப்பட்டது. ஞானத்தோடு ஒப்பிட செல்வம் தகுதியற்றது. ஆனாலும் ஞானத்தோடு எல்லா நலன்களும் அவரிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது என்று முதல் வாசகம் பதிவு செய்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபிரேயர் 4:12-13) செல்வத்தை விட ஆற்றல்மிக்க, உயிருள்ள, கூர்மையான, பலம் வாய்ந்த ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் இறைவார்த்தை. நம்முடைய உள்ளத்தின் சிந்தனைகளை, நோக்கங்களை சீர்தூக்கி பார்க்கக் கூடியது இது. இறைவார்த்தை நமக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது, இறைவார்த்தையின் படி வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

செல்வத்தின் மீது பற்றற்ற வாழ்க்கையை நாம் வாழ வேண்டும். நம் இறைவேண்டல் இவ்வாறு அமைய வேண்டும் - நீதிமொழிகள் 30:8, "வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்".

பேறுபெற்றோர்... இன்னும் அதிகம் பேறுபெற்றோர்...


பொதுக் காலம் 27ஆம் வாரம்

12.10.2024 - சனிக் கிழமை 

பேறுபெற்ற மக்களினமாக வாழ நாம் அழைக்கப்படுகின்றோம். மண்ணக பேறுபெற்றோராக அல்ல மாறாக விண்ணக பேறு பெற்றோராக வாழ அழைக்கப்படுகிறோம்.

மண்ணகத்தில் ஒருவரைப் பற்றிய ஒருவரின் பார்வை வித்தியாசமானது. தனக்கு ஆதாயம் தரக்கூடியவர்களை புகழ்ந்து பேசுவது மனிதர்களின் இயல்பு. ஒருவரால் தனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவரை கால் தூசியாக கூட மதிக்க மாட்டார்கள். இதுதான் உலகம் கற்றுத் தரும் பாடம். 

தனது வயிறு நிரம்ப வேண்டும் என்றால் மற்றவர்களுடைய மனம் குளிர வேண்டும், தனது வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் மற்றவர் பெயர் உயிரே பறக்க வேண்டும் என்பதற்காக புகழ்ந்து பேசுவோரும் உண்டு.

"உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்; உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்; உன்னிடம் நயந்து பேசி, “உனக்குத் தேவையானது என்ன?” எனக் கேட்பர்" - சீராக்கின் ஞானம் 13:6 

அதே வேளையில், உண்மையிலேயே உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனம் குளிர பாராட்டுவோரும் உண்டு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:27-28) இயேசுவின் தாய் அன்னை மரியாவை ஒரு பெண் கூட்டத்திலிருந்து பாராட்டுகிறார். 'உம்மைக் கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்' என்பதுதான் அந்த பாராட்டு.

இந்த பாராட்டு எதையும் எதிர்பார்த்து வரவில்லை. மாறாக, இயேசுவின் பணிகளைக் குறித்து வியந்த அந்த பெண், இயேசுவையும் அவருடைய தாயையும் பாராட்டுகிறார்.

அந்தப் பெண்ணுக்கு இயேசு கொடுக்கக்கூடிய மற்றொரு செய்தி, இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைபிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்.

அன்னை மரியா பேறுபெற்றவர் இன்னும் அதிகம் பேறுபெற்றவர். 

இயேசுவை பெற்றெடுத்ததால் அன்னை மரியா பேறுபெற்றவர், இறைவார்த்தைக்கு செவிமடுத்ததினால் அன்னை மரியா இன்னும் அதிகம் பேறுபெற்றவர்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் பேறுபெற்றவராக மாறுவது நாம் இறைவார்த்தைக்கு செவிமடுப்பதிலும் இறைவார்த்தையை செயல்படுத்துவதிலும் இருக்கிறது.

"இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்" - திருவெளிப்பாடு 22:7

மனிதர்களை புகழ்வது முக்கியமல்ல, கடவுளிடமிருந்து பாராட்டு பெறுவதே முக்கியம். 

கடவுளிடமிருந்து பாராட்டு பெற நாம் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். 

எதிரிக்கு வலிமை கிடையாது...


பொதுக் காலம் 27ஆம் வாரம்

11.10.2024 - வெள்ளிக் கிழமை 

"எதிரிகள் முன் சற்றும் மருளாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மருளாதிருப்பது அவர்களது அழிவுக்கும் உங்களது மீட்புக்கும் அறிகுறியாகும். இதுவும் கடவுளின் செயலே" - பிலிப்பியர் 1:28

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் யாரும் தனக்கு எதிராக இருக்கக் கூடாது என்று எண்ணுவார். ஆனால் நான் யாருக்கும் எதிரியாக மாறக்கூடாது என்று யாரும் எண்ண மாட்டார். சில வேளைகளில் நாம் நம்முடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நமக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

சிலர் எதிரியாக மாறி விடுகிறார்கள், சிலர் எதிரியாக மாற்றப்படுகிறார்கள். 

தன்னோடு இருந்தவரின் செயல் பிடிக்காத (அந்த செயல் நல்லதாகவோ/கெட்டதாகவோ இருக்கலாம்) காரணத்தால் எதிரியாக மாறி விடுகிறார்கள். வலிந்து திணித்து சில நபர்கள் வாழ்க்கையில் எதிரியாக மாற்றப்படுகிறார்கள் அல்லது சித்தரிக்கப்படுகிறார்கள்.

எதிரியாக மாற்றப்பட்டவர்கள் உண்மையில் எதிரி அல்ல கற்பனையில் சிந்தனையில் அவர்கள் எதிரி என்னும் நிழலே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:15-26) இயேசு பேய்களின் தலைவனை கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறார். 

தன்மீது குற்றம் சுமத்திய மக்களின் சிந்தனைகளை அறிந்த இயேசு, "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய் போகும் அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராக தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? பெயல்செபுலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபுலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களை சார்ந்தவர்கள் யாரைக் கொண்டு பய் ஓட்டுகிறார்கள்? என்று மறுகேள்வி கேட்கிறார். 

எதிரே நிற்பவர்கள் எல்லாம் எதிரியாக மாறிவிட முடியாது. நம்முடைய சிந்தனைகளையும் நம்முடைய செயல்களையும் முடக்க நினைக்கும் அனைவரும் எதிரிகள் தான். 

இயேசு கடவுளின் ஆற்றலால் பேய்களை ஒட்டிய போதிலும் கூட அவர் பேய்களின் தலைவனை கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று சொல்லி இயேசுவுக்கு எதிராக இருக்கும் பெயல்செபுலை இயேசுவோடு இணைத்து பார்த்தார்கள். இந்த மக்கள் கூட்டமும் இயேசுவின் எதிரியாகத்தான் இருந்தது. ஆனால் இயேசு யாருக்கும் எதிலும் எதிரியாக இருக்கவில்லை (தவறுகளை தட்டிக் கேட்டார்). 

இயேசுவின் வலிமை மக்கள் கூட்டத்திற்கு தெரியவில்லை. இயேசுவைவிட சாத்தான் வலிமை மிக்கது என்று அவர்கள் எண்ணினார்கள். 

மற்றவர்கள் நம்மை விட வலிமை மிக்கவர்கள் என்று நம்மில் பலர் எண்ணுகிறோம் அல்லது நாம் வலிமை குறைந்தவர்கள் என்று எண்ணுகிறோம். 

எப்போது நம் எதிரியை வலிமை குறைந்தவராக எண்ணுகிறோமோ அப்போது இரண்டு காரியங்கள் நினைவு கூறத்தக்கது. 

1. அவர்கள் (என் எதிரி) ஒன்றும் இல்லை 

2. எனக்குள் ஆற்றல் இருக்கிறது

(இந்த ஃபார்முலா எதிர்மறையிலும் செயலாற்றுகிறது - இன்று சமூகத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கிறவர்கள், மற்றவர்களை தங்களைவிட வலிமை குறைந்தவர்களாக மாற்றிவிட்டார்கள். மற்றவர்கள் தங்களுக்குள் ஆற்றல், திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடித்து மேலே வருகின்ற போதெல்லாம் மட்டம் தட்டி அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறார்கள்.)

இயேசு தன் ஆற்றலை கண்டு கொண்டார். எனவே வெளியிலிருந்து வரக்கூடிய எந்த அதிகாரத்தையும் மிரட்டலையும் கண்டு அவர் பயப்படவில்லை.

நம் எதிரியை நாம் கண்டு கொள்ள வேண்டும் நம் எதிரியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

(நம் எதிரியை வலிமை குறைந்தவராக மதிப்பிடுவது நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அல்ல; மாறாக, நமக்குள் இருக்கும் ஆற்றலை கண்டு உணர்வதற்காக)

நம் பலவீனம் தான் நம் எதிரிக்கான பலமாக மாறுகிறது. நம் எதிரிக்கென்று பலம்/வலிமை கிடையாது... (குனிய குனியதான் கொட்டுவார்கள்).

பெறுவது உறுதி...

பொதுக் காலம் 27ஆம் வாரம்

10.10.2024 - வியாழக் கிழமை 

கொடுத்து வாங்குதல் எல்லோருக்கும் பிடிக்கும். கொடுத்து கொண்டே இருப்பது ஒரு சிலருக்கு தான் பிடிக்கும். நாம் கொடுப்பதை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலே பலர் பலவற்றை (பணம், பொருள், அன்பு, நட்பு, இன்னும் பல) கொடுக்கிறார்கள். 

ஆனால் கொடுத்தது கிடைக்கவில்லை என்றதும் பலருக்கு கோபம் வருகிறது.  சிலர் அன்பை பிச்சை கேட்பது போல கெஞ்சி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் கிடைப்பதோ ஏமாற்றம் தான். 

இழப்பை எதிர்பாராதவர்கள், இழப்பை தாங்க முடியாமல் வாழ்வில் நொந்து போகிறார்கள். சிலர் அந்த அடியிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11: 5-13) ஒருவர் நள்ளிரவில் தன் நண்பனிடம் சென்று 3 அப்பங்களை கடனாக கேட்கிறார், தனக்காக அல்ல தன்னை தேடி வந்திருக்கிற தனது நன்பருக்காக. கதவு எல்லாம் பூட்டியாச்சு, என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்து தர முடியாது என்று சொல்லி விடுகிறார். 

மற்ற நண்பரோ தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தொல்லையின் பொருட்டு உதவியை பெற்றுக் கொள்கிறார். 

கேட்பவருக்கு கொடுக்கப்படும், தேடுபவர் கண்டடைவர், தட்டுபவருக்கு திறக்கப்படும்.

ஒன்றை பெற வேண்டும் என்றால் முயற்சி செய்ய வேண்டும். முயற்சியும் பயிற்சியும் இணைந்து செல்ல வேண்டும்.

அதே நேரத்தில் பெறுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இல்லாமல் கொடுப்பதிலும் நாம் அக்கறை காட்ட வேண்டும்.

நாம் ஒருவருக்கு அவருக்கு தேவையானதை கொடுக்கும் போது, ஒருவேளை பெற்றுக் கொண்டவர் திரும்ப கொடுக்காமல் போகலாம், ஆனால் நாம் கொடுத்ததற்கான கைம்மாறு நமக்கு கிடைக்கும்.

கேட்போர் எல்லோருமே தான் விரும்பியதை அல்லது தனக்கான பதிலை பெற்றுக் கொள்கின்றனர். 

நமக்கானது ஒருநாள் நமக்கு கிடைக்கும் என்பது மறுப்பதற்கில்லை...

இறைவனோடு இணையும் இறைவேண்டல்...

பொதுக் காலம் 27ஆம் வாரம்

08.10.2024 - புதன் கிழமை

செபிக்கும் உதடுகளை விட உதவும் கரங்கள் மேலானது என்பார் புனித அன்னை தெரசா.

ஆலயத்தில் இறைவேண்டல்(இறைவனோடு உரையாடி விட்டு) செய்துவிட்டு வெளியில் வந்து மற்றவரை அழிக்க கூட்டு சதி செய்யும் மனங்கள் இங்கு உண்டு. 

செபிக்கும் உதடுகள் தான், இங்கு யாரை? எங்கு? எப்படி? கவிழ்க்கலாம் என்று சதித்திட்டம் தீட்டுகிறது. கடவுள் நேரடியாக வந்து தவறை சுட்டிக் காட்டினால் கூட, கடவுளையே எதிர்க்க தவறாதவர்கள் நாம்.

(தந்தையாம் கடவுளை போற்றுவதும் அந்நாவே; கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதரை தூற்றுவதும் அந்நாவே)

மனித உள்ளம் இறைவனோடு ஒன்றித்து செல்வதில்லை. அதனால் தான் போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்து காணப்படுகிறது.

செபிக்கும் உதடுகள் செயல்பட ஆரம்பித்தால் இங்கு பிளவு ஏது? தாங்கள் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்பவர்களாலேயே கிறித்தவத்தில் அதிக பிரச்சினை உண்டாகிறது. நம் செபங்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாடுகளாகவே இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா (11:1-4) இயேசுவின் சீடர்கள், இறைவனிடம் வேண்ட கற்றுக் கொடுக்கும்படி இயேசுவிடம் கேட்கிறார்கள். இயேசு கற்றுக் கொடுத்த இறைவேண்டல் இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது. ஒன்று தந்தையாம் கடவுளுக்கு புகழ், மற்றொன்று நம் வாழ்க்கையின் தேவைகளுக்கான வேண்டல்.

இரண்டாம் படிநிலையில் வரக்கூடிய அந்த செபம் என்பது நம்முடைய உணர்வையும் (மன்னிப்பு, குற்றம், சோதனைக்கு உட்படுவோமோ என்ற பயம்) உணவையும் (உயிர்வாழ அடிப்படையான ஒன்று) குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது.

நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றால் நம்மோடு இருப்பவர்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

வழக்கமான செபங்களை செபித்துவிட்டால் போதும், அதோடு நம் கடமை முடிந்துவிடும் என்று எண்ணக்கூடாது. மாறாக செபங்கள் செயலாக மாற வேண்டும்.

என்னை மன்னியும் என்று இறைவனிடம் வேண்டுகிற போது நான் அந்த மன்னிப்பை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். 

என்னை சோதனைக்கு உட்படுத்தாதேயும் என்று வேண்டுகின்ற போது நான் மற்றவர்களுக்கு சோதனை கொடுக்காமல் இருக்க வேண்டும். 

அன்றாட உணவு எனக்குத் தாரும் என்று வேண்டக் கூடிய நாம் மற்றவர்களின் பசி ஆற்ற வேண்டும். 

செபம் வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்களிலும் (நன்றியாக) வெளிப்பட வேண்டும். அத்தகைய செபம்தான் நம்மை இறைவனோடு இணைக்கும்.

இறைவார்த்தை விருந்தோம்பல்...


பொதுக் காலம் 27ஆம் வாரம்
08.10.2024 - செவ்வாய்க் கிழமை 

"வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" - உரோமையர் 12:13

விருந்தோம்பல் என்பது ஓர் உன்னத பண்பு. ஒருவர் முன்பின் தெரியாத ஒருவரை வரவேற்று உபசரிக்கிறார் என்றால் அவர் இயல்பாக அடையாளம் தெரியாத ஒரு நபரால் உபசரிக்கப்படுவார் என்பது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த விருந்தோம்பல் பண்பு இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆபிரகாம் 3 மனிதர்களை உபசரித்தார் (தொடக்க நூல் 18), லோத்து ஆண்டவரின் தூதர்களை வரவேற்றார் (தொடக்க நூல் 19)...

நம்முடைய முன்னோர்கள் வசித்த போது அவர்களின் வீடுகளில் முன்பு திண்ணை வைக்கப்பட்டிருக்கும். காரணம் வழிப்போக்கராக வந்து செல்லக்கூடியவர்கள் இரவு வேளையில் அந்த திண்ணையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம். (ஆனால் இன்றைய காலக் கட்டங்களில் தன்னுடைய இடம் போக பொது இடத்தையும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம்மிடம் மேலோங்கி இருக்கிறது). 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 10: 38-42) பெத்தானியா என்னும் ஊருக்கு இயேசு செல்லக்கூடிய வேளையிலே மார்த்தா அவரை தன்னுடைய வீட்டிற்கு வரவேற்கிறார். மரியா என்னும் சகோதரியும் அவருக்கு உண்டு. மார்த்தாவோ இயேசுவுக்கு பணிவிடை புரிவதில் பரபரப்பாகி இருந்தார், ஆனால் மரியாவோ இறைவார்த்தையை உள்வாங்கிக் கொண்டிருந்தார். 

மார்த்தா இயேசுவுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடுகளை செய்தார், மரியா இறைவார்த்தையை விரும்பி ஏற்றார்.

மார்த்தா இயேசுவிடம், நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னை தனியே விட்டு விட்டாளே, எனக்கு உதவி செய்யும்படி என் சகோதரிக்கு சொல்லும் என்கிறார்.

ஆனால் இயேசு கொடுத்த பதில் உண்மையில் மார்த்தாவுக்கு வியப்பை கொடுத்திருக்கும். "மார்த்தா! மார்த்தா! நீ பலவற்றை பற்றி கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது".

மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார் என்று சொல்ல காரணம் அவர் தன்னை தேடி வந்த இறைவார்த்தையை தனக்குள் ஏற்றுக்கொண்டார். மார்த்தாவின் நோக்கம் சரிதான்; இயேசுவை உபசரிக்க வேண்டும் என்பது அவருடைய உன்னதமான எண்ணமாக இருந்தது. ஆனால் வந்திருக்கக்கூடிய விருந்தினரிடம் அமர்ந்து பேச அவர் தவறிவிட்டார். விருந்தளிக்க தயாராக இருந்த மார்த்தா இயேசு கொடுத்த இறைவார்த்தை என்னும் விருந்தை ஏற்றுக் கொள்ளவில்லை

மார்த்தாவிடம் இருந்த பரபரப்பு இன்று நம்மிடமும் உண்டு. திருவிழா நாட்களில் திருப்பலியில் பங்கெடுக்கும் போது பிரசன்னமாகும் ஆண்டவர் நமக்கு முக்கியப்படுவதில்லை; சுற்றி இருக்கும் நபர்கள் தான் முக்கியம், ஆலய வழிபாட்டில் கலந்து கொண்டாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுதான் நம்முடைய சிந்தனையாக இருக்கும். 

கடமைக்காக வழிபாட்டு கொண்டாட்டம், பழகிப் போனதால் கடைப்பிடிக்கப்படும் சடங்கு முறைகள், ஆலயத்தில் நடைபெறக்கூடிய திருப்பலிக்கு கூட நல்ல நேரம் பார்க்கக்கூடிய சூழல் இவையெல்லாம் கடவுளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது.

கடவுள் விரும்புகிறார் என்று சொல்லி கடவுள் எதிர்பார்க்காததை செய்வது தான் கிறித்தவர்களின் வாடிக்கையாகிவிட்டது. நிறுவன மயமாக்கப்பட்ட கிறித்தவ சமயத்தில் நாமும் இயங்கிக் கொண்டிருக்கிறோம், பங்கேற்பாளர்களாக அல்ல பார்வையாளர்களாக. 

மார்த்தா தள்ளி நின்று உபசரித்தார் மரியாவோ அருகில் அமர்ந்து உற்றுப் பார்த்தார். 

செபங்களை மட்டும் சொல்லிவிட்டு நாம் கடவுளை மகிமைப்படுத்த முடியாது, கடவுள் விரும்பும் செயல்முறைகளும் நம்மிலிருந்து வெளிப்பட வேண்டும்.

இறைவார்த்தை என்னும் விருந்தை விரும்பி ஏற்போம்...

வெற்றி தரும் செபமாலை அன்னை


செபமாலை அன்னை திருவிழா

07.10.2024 - திங்கட் கிழமை

படிப்பறியாத ஏழை பாமர மக்கள் தாவீது எழுதிய 150 பாடல்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னி மரியா கொடுத்த செபமாலை அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியே வாழ்க செபம் நிச்சயம் திருப்பாடல்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

செபமாலையின் மகிமையை பற்றி அன்னை மரியா பலருக்கு தோன்றி விளக்கியுள்ளார்கள். நீங்கள் அருள் நிறைந்த மரியே! என்ற செபத்தை சொல்லும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள் என்று அன்னை மரியா காட்சியில் வெளிப்படுத்தி உள்ளார். (செபமாலை என்பது ரோசாப் பூவை குறிக்கும்).

செபமாலையில் முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்து செபிக்கும் பொழுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களை கோர்த்த கிரீடத்தை கொடுக்கிறீர்கள் என்றும் அன்னை மரியா கூறியுள்ளார்.

ஜெபமாலை குறித்து புனிதர், திருத்தந்தையரின் கருத்து :

திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் - செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு தாருங்கள். இந்த உலகை வென்று காட்டுகிறேன்.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் - அற்புதமான செபம் எளிமையிலும் ஆழத்திலும் அற்புதமான செபம். ஆவே மரியா பின்னணியில் நம் ஆன்மாவின் கண்களின் முன்னே இயேசு கிறிஸ்துவின் வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் கடந்து செல்கின்றன.

புனித சார்லஸ் பொரோமேயு - திருப்பலிக்குப் பின் அடுத்த அதிக மாபெரும் தெய்வீகம் கொண்டது செபமாலை.

புனித பிரான்சிஸ் சலேசியார் - ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செபமாலையின் மறையுண்மைகளை தியானித்தால் புனிதராவோம்.

1571இல் துருக்கியருக்கு எதிரான போரில் கிறித்தவர்களை வெற்றி பெறச் செய்தது அன்னை மரியாவிடம் செபித்த தொடர் செபமாலையே.

செபமாலையை கையில் எடுக்கின்ற போது அலகை நம்மை விட்டு தூர ஓடிப் போகிறான். அன்னை மரியாவோடு இணைந்து செபமாலை செபிக்கின்ற போது நாம் விண்ணகத்திற்கான ஏணியை பற்றிக் கொள்கிறோம். 

ஏணியில் ஏறுகின்ற போது நம்முடைய கவனம் முன்னோக்கியதாக இருக்க வேண்டும். கால்கள் முன்னோக்கி செல்வது போல செபமாலை செபிக்கின்ற போது நம்முடைய கைகள் முன்னோக்கி செல்ல வேண்டும். நம் உள்ளமும் இறைத்திருவுளத்தை நிறைவேற்ற ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் தோல்வி இருக்கக்கூடாது என்பதல்ல. தோல்விகளை தாங்கிக் கொண்டு அதை கடந்து வருவது தான் வெற்றி.

அன்னை மரியா இதற்கு சிறந்த உதாரணம். உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிய போதிலும் கூட அந்த துன்பத்தை ஒரு தடையாக எண்ணாது அதை வெற்றி கொண்டார்.

தாயின் கரத்தைப் பற்றிக் கொள்வோம். அவர் நம்மை காப்பாற்றுவார்.

மன/மண விலக்கு

பொதுக் காலம் 27ஆம் வாரம்

06.10.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழிதேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது - 1கொரிந்தியர் 7:27

.ஒருவரை விலக்கி வைத்து மற்றொருவரை சேர்த்து இந்த உலகம் மகிழ்ச்சி காணுகிறது. பிடிக்கவில்லை என்று விலகி வாழ்வது வேறு, மற்றொருவரை பிடித்திருக்கிறது என்பதற்காக தனக்குரியவரை விலக்கி வைப்பது வேறு. 

சமூகத்தில் யார் இத்தகைய செயலை செய்கிறார்களோ அவர்கள் வீரமிக்கவர்களாக மதிப்பிற்குரியவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

வீரம், மதிப்பு என்பது நல்லவற்றை செய்ய துணிவதில் இருந்து பிறப்பெடுக்க வேண்டும், அடுத்தவருக்குரியதை எடுத்துக் கொண்டால் ஒருபோதும் நாம் மதிப்பிற்குரியவராக பார்க்கப்படுவதில்லை. அடுத்தவர்க்குரியது என்றால் அது பொருளாகவோ ஆளாகவோ இருக்கலாம்.

தகாத உறவு,  அடுத்தவரின் துணை மீது அன்பு, பற்று இவை எல்லாம் சொந்த குடும்ப வாழ்வை சிதைக்கும் காரணிகள். 

ஒருவருக்கு ஒருவர் என்பதுதான் கிறிஸ்து நமக்கு போதிக்கக் கூடிய படிப்பினை. மதிப்பையும் மாண்பையும் இழந்து விட்ட பின் அதை மீண்டும் பெற முடியாது.

எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குள் வாழ வேண்டும். ஒருவேளை எப்படி வாழலாம் என்று வாழ்ந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் நம்மை சூழ்ந்து இருக்கக்கூடியவர்கள் மகிழ்ச்சியை இழந்து விடுவார்கள். 

இங்கு மனிதர் ஒரு சமூக விலங்கு. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக்கூடியவர். சார்பு நிலை வாழ்க்கை வாழக்கூடிய நாம் மற்றவரை அழித்துவிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:2-16) பரிசேயர் இயேசுவை அணுகி கேட்ட கேள்வி, கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா? மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கி விடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.

இந்த கேள்விக்கு இயேசுவின் பதில், படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணும் பெண்ணும் அவர்களை படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்பதாகும். 

பரிசேயரின் இந்த கேள்வி மனவிலக்கை பற்றி தெரிந்து கொள்வதற்காக கேட்கப்பட்டது என்றாலும் கூட, முக்கியமாக இயேசுவை சோதிப்பதற்காக கேட்கப்பட்டது. ஏனென்றால் அவர்களின் மனங்கள் இயேசுவின் மனநிலையில் இருந்து விலகி இருந்தது.

கிறிஸ்து கொண்டிருந்த மனநிலையை அவர்களால் கொண்டிருக்க முடியவில்லை. எனவே தான் இயேசு செய்த எல்லாவற்றிலும், இயேசு பேசிய எல்லாவற்றிலும் குறை காணும் மனநிலையோடு அவரை சூழ்ந்து நின்றார்கள் பரிசேயர் கூட்டத்தினர்.

ஒரு பெண்ணை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபச்சாரம் செய்கிறான், தன் கணவரை விலைக்கு விட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபச்சாரம் செய்கிறாள் என்பதை இயேசு அழுத்தம் கொடுத்து சொல்கிறார். 

இன்று மனங்கள் விலகி இருக்கின்றன. அதனால் மணவிலக்கு உண்டாகிறது. உண்மையான அன்பினால் இங்கு மனங்கள் இணைவதில்லை. சில மனங்கள் கட்டாயத்தின் பெயரால், செல்வ செழிப்பினால், பகட்டான வாழ்க்கையினால், வெளி ஆடம்பரத்தால், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தால் இணைகின்றன. 

திருமணக் காரியம் முடிந்ததும்/பழிவாங்க வேண்டிய நேரம் வந்ததும் அடுத்தவர் மனம் புண்படும்படி சில நிகழ்வுகள்(அவமானப்படுத்துதல்) நடந்து விடுகிறது.

இன்று நடைபெறக்கூடிய ஒவ்வொரு திருமண நிகழ்வு முடிவிலும் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்த உடனேயே, ஆலயத்திலேயே (அது அருளடையாளம் என்பதை புரியாத சிலரால்) அது அவமானப்படுத்தப்படுகிறது.

அங்கு தொடங்கக்கூடிய பகை இறுதிவரை இரண்டு குடும்பங்களுக்கிடையே தொடர்கிறது. 

ஆசிரியளித்து அனுப்பி வைக்க வேண்டிய திருமணத் தம்பதியர், ஆலயத்தின் வெளியே மனமுறிவை தொடங்கி விடுகிறார்கள்.

தங்கள் பெற்றோருக்காக ஒருவர் மற்றவரிடம் முகம் காட்ட (எதிர்ப்பு, எரிச்சல், கோபம்) ஆரம்பிக்கிறார்கள்.

இதையும் கடந்து சிலரது வாழ்க்கை நகர்ந்தாலும் நாட்கள் சென்ற பின் மன வாழ்க்கையில் நிம்மதியற்ற மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகிறது.

இடையில் வந்த யாரோ ஒருவருக்காக தொடக்கத்தில் இருந்து உடன் வாழக்கூடியவரை எதிர்க்கக்கூடிய மனநிலை இன்று அதிகரித்துவிட்டது. பணம், புகழ், பகட்டான வாழ்க்கை, தற்பெருமை, அதிகாரம் இவையெல்லாம் மனமுறிவுக்கான/மனவிலக்குகான முக்கிய காரணங்கள்.

இறைவனில் தொடங்கப்பட்ட அந்த வாழ்வு நிறைவிலும் இறையாசீரோடு முடிவு பெற வேண்டும்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதினால் குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைகிறது. 

ஒருவர் பேசும்போது மற்றொரு மௌனம் காப்பதால் கலவரம் தடுத்து நிறுத்தப்படுகிறது.

காரணமே இல்லாமல் சத்தம் போடும் தன் துணையிடம், காரணத்தோடு அன்பு காட்டுவதால் குடும்பத்தில் பிளவு தடைச் செய்யப்படுகிறது. 

மற்றவர்கள் செய்த சதியினால் முறியடிக்கப்படக்கூடிய திருமணமாக திருமண வாழ்க்கை இருக்கக் கூடாது. 

நான் என்னுடைய துணையை நம்புகிறேன் என்ற ஆழமான உறுதிப்பாடு மனைவியிடம்/ கனவனிடம் இருக்க வேண்டும்.

எத்தனை இடர்கள் வந்தாலும் இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து, என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கும் வாக்களிக்கிறேன் என்று திருமணத்தின் போது சொல்லப்பட்ட வாக்குறுதி இறுதிவரை காப்பாற்றப்பட வேண்டும்.

மனம் விட்டு பேசுவதன் வழியாக மனதில் உள்ள காயங்கள் எல்லாம் ஆற்றப்படும். 

பேசுவதற்கு, பேசியதை கேட்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.

எதுவரை வாழப் போகிறோம் என்பது தெரியாது, இருக்கும் வரை இணைந்திருப்பவரோடு அன்பு உறவில் நிலைத்திருப்போம்.

நமக்குரியவர்களிடமிருந்து நம் மனம் ஒருபோதும் பிரிந்திருக்கலாகாது

கடவுள் இணைத்ததை மனிதர் (ஒருபோதும்) பிரிக்காதிருக்கட்டும் 

அவரன்பில் பணியாற்ற

மரியாளின் மாசற்ற இதயம்

பொதுக்காலம் 12ஆம் வாரம் 28.06.2024 - சனிக் கிழமை  பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக...