24_11

புனித அந்திரேயா - திருத்தூதர்


பொதுக் காலம் 34ஆம் வாரம்

30.11.2024 - சனிக் கிழமை 

வரலாறு

புனித அந்திரேயா அல்லது புனித பெலவேந்திரர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர் ஆவார். அந்திரேயா என்பதற்கு துணிச்சல் மிக்கவர் என்பது பொருள்

கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்த இவர், புனிதர் பேதுருவின் மூத்த சகோதரர் ஆவார். மீன்பிடி தொழில் செய்துவந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்த இவர், பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு, திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39).

அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே (யோவான் 6:8). கோவிலின் அழிவை முன்னறிவித்தபோது அழிவு எப்போது வரும்?" என கேட்டவரும் இவரே. 

ஆண்டவரின் இறுதி இராவுணவின்போது இவருமிருந்தார். இறுதிகால இயேசுவின் இரண்டாம் வருகையின் அறிகுறி என்னவென்று இயேசுவிடம் கேட்பதற்காக ஒலிவ மலைக்கு வந்த நான்கு சீடர்களுள் இவரும் ஒருவராவார்.

அந்திரேயா "அச்சேயா" (Achaea) எனுமிடத்திலுள்ள "பட்ராஸ்" (Patras) நகரில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அதேவிதமான சிலுவையில் தாமும் அறையப்பட தாம் தகுதியானவனில்லை என்ற காரணத்தால், அவரே "X" வடிவ சிலுவையில் தம்மை அறையுமாறு வேண்டினார் என்றும் கூறப்படுகிறது. அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார்.

நற்செய்தி அறிவிப்பதில் இறப்பை ஏற்பதில் துணிச்சல் மிக்கவராக புனித அந்திரேயா திகழ்ந்தார்.

அழியாத வார்த்தை...


பொதுக் காலம் 34ஆம் வாரம்

29.11.2024 - வெள்ளிக் கிழமை

"பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி" - நீதிமொழிகள் 4:20

பேசக்கூடிய வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தாக்கத்தை ஏற்படுத்தும். வார்த்தைகள் அடுத்தவருடைய மனதிலும், வாழ்விலும் அதிர்வலையை ஏற்படுத்தும். 

அதிர்வலைகள் சில வேளைகளில் நமக்கே ஆபத்தாய் அமையலாம். பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்.

சில வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன, சில வார்த்தைகள் வாழ்வு கொடுக்கின்றன, சில வார்த்தைகள் கண்ணீர்விட வைக்கின்றன, சில வார்த்தைகள் போலியாக உள்ளன, சில வார்த்தைகள் ஏமாற்றுகின்றன. 

நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் உருட்டும் புரட்டும் இருக்கின்றதா?

பேசப்பட்ட வார்த்தை ஏதாவது ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தான் செல்லும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 22:29-33) அழிவு நெருங்கும் போது இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்துக் கொள்ள இயேசு அழைப்பு விடுக்கிறார். கடந்த சில நாட்களாக வாசிக்க கேட்ட நற்செய்தி பகுதிகள் அழிவை, துன்பத்தை, மானிட மகனின் வருகையை, மீட்பை பற்றி விவரித்தன. இந்த வார்த்தைகள் நம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை சிந்திப்போம்.

இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு மனமாற தான் இவை நம்மை அழைக்கின்றன. சாதாரண மனிதர்கள் பேசும் வார்த்தைக்கே ஆற்றல் உண்டு என்றால் அனைத்தையும் உண்டாக்கியவரின் வார்த்தைக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும். 

விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் இயேசுவின் வார்த்தைகள் ஒருபோதும் ஒழியாது.

நல்லாருக்கும் பொல்லாருக்கும் இவ்வுலகில் அழிவு உண்டு, ஆனால் அவரில் நம்பிக்கை கொண்டு புது வாழ்வு வாழ்பவர்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

அவரின் வார்த்தையை பற்றிக் கொள்வோம்... வார்த்தையின் படி வாழ்வோம்... மீட்பை பெற்றுக் கொள்வோம்...

இடர் வரும் முன்னே எச்சரிக்கையாய் இருங்கள்...


பொதுக் காலம் 34ஆம் வாரம்

28.11.2024 - வியாழக் கிழமை 

"மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம்" - 2 கொரிந்தியர் 6:4

சமமான சாலையில் நடப்பதைவிட அசைந்தாடும் பாலத்தின் மீது நடக்கும் போது அதிக கவனம் தேவை. தடுமாறினால் இழப்பு நமக்கு தான்.

இடர் வரும் என்றாலும் கடக்க வேண்டிய பாதையை நிச்சயம் நாம் கடந்து தான் ஆக வேண்டும். 

இந்த உலகிலும் பல இடர்கள் நமக்கு முன்னே வைக்கப்பட்டுள்ளது. தடைகளை தாண்டினால் வெற்றி. தடைகளோடு நின்று விட்டால் தோல்வி தான். 

இந்த உலகத்தின் போக்கின் படி நடந்தால் இந்த உலகம் நம்மை தூக்கி வைத்து கொண்டாடும். ஆனால் நடுவர் இருக்கையின் முன் நிற்க வேண்டிய காலம் வரும்போது நம்மை தலைநிமிர்த்துவது இவ்வுலக போக்கின்படியான வாழ்க்கை அல்ல. 

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:2 சொல்கிறது, "இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்".

தவறு செய்தால் தலைமறைவாக இருக்க வேண்டும், குற்றம் செய்தால் ஓடி ஒளிய வேண்டியிருக்கும். 

நன்மை செய்வதால் இந்த உலகம் நம்மை விரட்டும், துரத்தும், இழிவுப்படுத்தும். ஆனால் நன்மை செய்தால் நாம் அவரின் இருக்கை முன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:20-28) அழிவு பற்றி இயேசு விவரிக்கிறார். பழிவாங்கும் நாட்கள் வரும், வாளால் வீழ்த்தப்படுவார்கள், சிறைப்பிடித்து செல்லப்படுவார்கள் என்று இடரின் எண்ணிக்கை நீளுகிறது.

இத்தகைய இடர் நம்மை நெருங்காமல் இருக்க உலகு சார்ந்த காரியங்களில் இருந்து சற்று விலகி இருக்க வேண்டும்.

இன்று மனிதர்கள் சக மனிதர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை அறிந்தும் அறியாமல் இருக்கிறோம்.

நம் நிலை பரிதாபத்திற்குரியதாய் மாறுவதும் பேறுபெற்றதாய் மாறுவதும் நம் செயல்பாடுகளில் இருக்கிறது.

மனிதர்களை முன்மாதிரியாய் கொண்டால் நம் வாழ்வு ஆட்டம் காணும். ஏனெனில் மனிதர் இடம் கண்டு/ஆள் கண்டு நடிப்பார்கள். 

இறைவனை முன்மாதிரியாய் கொண்டு இடரிலிருந்து தள்ளி நிற்போம்.

தூய உள்ளத்தோடு ஆட்டுக்குட்டியின் நாளை எதிர்பார்த்து அவரில் இணைவோம்... 

யாருக்கு சான்று பகர போகிறோம்?


பொதுக் காலம் 34ஆம் வாரம்

27.11.2024 - புதன் கிழமை 

"கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை" - 2 திமொத்தேயு  1:7,8

யாருக்கு செவிசாய்க்கிறோமோ அவருக்கு தான் நாம் சான்று பகர முடியும். செவிசாய்க்காத காதுகள் ஒருபோதும் செயல்படாது. 

யாரை நமக்கு அதிகம் பிடித்திருக்கிறதோ அவரை நாம் அதிகம் தேடுவோம். யாரை அதிகம் நம்புகிறோமோ அவர் சொல்வதையெல்லாம் கண் மூடித்தனமாக செய்வோம் (அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி).

நமக்கு பிடித்தவர்களை யாராவது எதிர்த்தால் அவர்களை நாம் எதிர்ப்போம். ஒருவரை பிடித்ததற்காக உயிரையும் இழக்க துணிந்து விடுகிறார்கள் சிலர். இவ்வாறாக நம்முடைய உடனிருப்பை/அன்பை வெளிப்படுத்தப்படுகிறது.

சாதாரண மனிதருக்கே இப்படி என்றால் நம்மை படைதவருக்கு இதைவிட பெரிதாய் செய்ய வேண்டாமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:12-19) இறுதிக் காலங்களில் நடைபெற இருக்கும் துன்பங்களை விவரிக்கிறார் இயேசு. அந்த துன்பங்களின் வழியாக நாம் இயேசுவுக்கு சான்று பகர அழைப்பு கொடுக்கப்படுகிறது. 

தொழுகைக் கூடத்திற்கு கொண்டு செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள், காட்டிக் கொடுப்பார்கள், கொலை செய்வார்கள் என்று துன்பத்தின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது. 

கிறிஸ்துவை அன்பு செய்தால் ஏற்படும் துன்பங்கள் தான் இவை. கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் விழுமியங்களையும் பின்பற்றாதவர்களுக்கு இவ்வுலகில் எத்தகைய இடரும் இல்லை. ஏனெனில் இடர்களை தருபவர்களே அவர்கள் தான். 

இவற்றை சந்திக்க/தாங்க இயேசுவின் மீது அன்பும் நம்பிக்கையும் கொள்ள வேண்டும். 

இயேசுவின் வார்த்தையை கேட்டு விட்டு கடந்து செல்பவர்கள் பலர், இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குபவர்கள் வெகு சிலரே. எதற்கு வீண் பிரச்சினை என்று நாம் பல தருணங்களில் தீமைகளோடு சமரசம் செய்து விடுகிறோம்.

நம்மில் மனஉறுதி இருந்தால் நம்மை எதிர்போருக்கு முன்னிலையில் இயேசுவுக்கு சான்று பகர்ந்து நம் அன்பை வெளிப்படுத்துவோம்.

நாம் சரியானதை செய்கிற போது, உலகு நம்மை வெறுக்கிறது என்றால் நாம் இயேசுவுக்கு சான்று பகர்கிறோம் என்று அர்த்தம்.

ஆபத்தான அழகும் ஆச்சரியமூட்டும் வாழ்வும் நமக்கு முன்...


பொதுக் காலம் 34ஆம் வாரம்

26.11.2024 - செவ்வாய்க் கிழமை 

"இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்; “நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை" - சாலமோனின் ஞானம் 2:1

அழகானதாக காட்சிளியக்கும் அனைத்தும் அழகானதல்ல, அசிங்கமாக தோன்றும் அனைத்தும் அசிங்கமானதும் அல்ல.

உண்மை, நேர்மை சிலருக்கு அருவருப்பாக தோன்றும். ஏமாற்றுதல், கொள்ளையிடுதல், கொலை செய்தல் இவையெல்லாம் சிலருக்கு அழகானதாக தோன்றும்.

நாம் பார்க்கும் கோணத்தை பொறுத்தது தான் அழகு நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவருக்கு அழகானதாக தோன்றுவது மற்றொருவருக்கு அருவருப்பாக தோன்றலாம்.

அழகு என்பது நாம் வாழும் வாழ்க்கை முறையில் உள்ளது. நேர்த்தியான/உண்மையான வாழ்க்கை முறை சிலருக்கு அருவருப்பாக தோன்றலாம், ஆனால் அது தான் நம்மை தலை நிமிர்த்தும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:5-11) கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருக்க, இயேசுவோ, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்று சொல்கிறார்.

சில உலக நிகழ்வுகள்/ மனிதர்களின் செயல்கள் நம்மை ஏமாற்றுகிறது. உண்மையில்லாதை உண்மையென உலகம் படம்பிடித்துக் காட்டுகிறது.

தவறான ஒன்றை சரியென்று ஒருவர் அதட்டி சொல்லும் போது அது எல்லோராலும் சரி என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

குழப்பம், தெளிவற்ற நிலை, தயக்கம், நம்பிக்கையின்மை இவற்றிற்கு இடையில் தான் நமது வாழ்க்கை பயணம் இயங்குகிறது.

யார் எதை சொன்னாலும் அது சரியானதா என்று ஆராயாமல் ஏற்றுக் கொள்ள கூடாது. ஏனெனில் யாரும் நம் நிலையில் இருந்து நமக்காக யோசிக்க மாட்டார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளின் வருகைக்கு முன் நடக்க இருப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் லூக்கா நற்செய்தியாளர். பல தடைகளை நாம் கடக்க வேண்டியிருக்கும், பல இடர்பாடுகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

எது நடந்தாலும் நாம் நேரிய வாழ்வு வாழ்ந்தால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இந்த உலக அழகு என்று எதை சொல்கிறதோ அது உண்மையில் அழகானதா, நம் வாழ்வுக்கு ஏற்றதா என்பதை ஆய்ந்து அறிந்து இறைத் திருவுளத்தை ஏற்று நடப்போம்.

ஆச்சரியமூட்டும் வாழ்வுக்காக நம்மை ஆயத்தப்படுத்துவோம். கடவுளின் கையில் அழகிய மணிமுடியாக திகழ்வோம்...

பகிர்ந்தால் பற்றாக் குறை இல்லை...


பொதுக் காலம் 34ஆம் வாரம்

25.11.2024 - திங்கட் கிழமை

நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன்" - 2 கொரிந்தியர் 11:9

இந்த உலகில் பற்றாக்குறையில் இருப்பவர்கள் அதிகம் தான். ஆனால் பற்றாக்குறையில் இருப்பவர்கள் பற்றாக்குறையில் நீடித்து இருப்பதற்கு முக்கிய காரணம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளாதது தான். (பற்றாக்குறைக்கு அதிக காரணம் பகிராக் குறை தான் காரணம்).

ஒருபுறம் உணவு வீணடிக்கப்படுகின்றன, தேவையற்ற வழிகளில் உணர்வுகள் (காதல், கூடா நட்பு) சிதறடிக்கப்படுகின்றன. மறுபுறம் உணவு தேவைப்படுவோரும் அன்பு இல்லாமல் அனாதையாக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

ஒருபுறம் பணம் மலிந்து கிடக்கிறது, மறுபுறம் வறுமை தலைவிரித்தாடுகிறது. பண வீக்கம் கல் மனதை உருவாக்குகிறது. ஏழ்மை இளகிய மனதை உருவாக்குகிறது.

செல்வம் அதிகம் கொண்டோர் அதிக செலவு செய்வர். அந்த செலவில் அவர்களுக்கான இலாபம் கிடைத்து விடும். ஏழைகள் தன்னிடம் இருப்பது குறைவாக இருந்தாலும் தன்னைவிட வறுமையில் வாடுவோருக்கு உதவ மறுக்க மாட்டார்கள். வலியை பெற்றவருக்கு தான் அந்த வலியின் வேதனை தெரியும்.

அதிகம் கொண்டவர்கள் இங்கு இழப்பதில்லை... இழந்தவர்கள் தான் இங்கு அதிகம் இழக்கிறார்கள்/கொடுக்கிறார்கள்.

உதாரணமாக, பெற்றோர் பிள்ளைகளுக்காக இழப்பது தியாகமாக இருக்கிறது. அந்த இழத்தல் என்னும் தியாகம் இறுதிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்கிறது. தங்களையே பெற்றோர் பகிர்ந்து கொடுத்து விடுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:1-4) எல்லாரையும் விட குறைவாக கானிக்கைப் போட்டவர், மிகுதியாக காணிக்கை போட்டதாக இயேசுவால் பாராட்டப்படுகிறார்.

இருப்பதை கொடுப்பதும் இருப்பதை பிறருக்காக இழப்பதும் சிலருக்கு மகிழ்வை கொடுக்கும். 

இந்த ஏழைக் கைம்பெண் இருப்பதை இழக்க துணிந்தார். தன்னிடம் இருப்பதை பகிர்ந்துக் கொடுத்து விட்டார். கொடுத்ததோ சிறிய தொகை, ஆனால் பாராட்டுதற்குரிய செயல்.

‘மற்றவர்களை வரவேற்பதிலும் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதிலும் மற்றவர்களை ஆதரிப்பதிலும் நாம் தாராளமாக இருந்தோம் என்றால், ஒருபோதும் நாம் ஏழையாவதில்லை, மாறாக நமது வாழ்வு வளம்பெறும்’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

பதுக்கல்கள் மறைய வேண்டும், பகிர்வுகள் பெறுக வேண்டும். அப்போது தான் நாம் இயேசுவோடு இணைந்து இறையாட்சியை கட்டியெழுப்ப கைக்கோர்க்க முடியும். 

துன்புறும் அரசர் இயேசு...


கிறிஸ்து அரசர் பெருவிழா

24.11.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்" திருப்பாடல்கள் 74:12

கடவுளை தவிர வேறு அரசர் இல்லை. 

பழைய ஏற்பாட்டில் எப்போது இந்த அரசர் முறை வந்தது? எதனால் வந்தது என்பதை சாமுவேல் முதல் நூல் அதிகாரம் 8 தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இஸ்ரயேல் பெரியவர்கள் சாமுவேலை அணுகி, "அனைத்து வேற்றினங்களில் இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்" என்று கேட்டுக் கொண்டனர்.

இதன் வழியாக தான் அரசர் முறை இஸ்ரயேல் இனத்தின் உள்ளே வர ஆரம்பித்தது. தங்களை வழிநடத்தி வந்த கடவுள் தங்களை ஆளாதபடி அவர்கள் அவரை புறக்கணித்து விட்டனர்.

சவுல் அரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பின்னர் தாவீது அரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்ட இந்த அரசர்கள் பாதை மாறினார்கள். தங்களை தேர்ந்தெடுத்த கடவுளை மறந்தார்கள்.

தலைவனும் சரியில்லை மக்களும் சரியில்லை என்ற நிலையில் தான் இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்படுவதையும், அடிமைத்தனத்தில் இருந்து கடவுளை நோக்கி மன்றாடுவதையும் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். 

இப்படிப்பட்ட மக்களை மீட்க மானிட மகன் வருவார் என்று முன்னறிவிக்கப்படுகிறது. (எசாயா 7:14 - "இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்").

அரசர் என்றாலே ஆடம்பரம், கம்பீரம், ஆள் பலம், அதிகாரம், பகட்டான வாழ்க்கை, அடிமைகள், பணியாளர்கள், செல்வாக்கு, செல்வம்,புகழ் என்று பலவற்றை சொல்லி போகலாம்.

ஒரு நாட்டு அரசனுக்கும் வேறொரு நாட்டு அரசனுக்கும் போர் நடந்தாலும் இழப்பு என்பதோ குடிமக்களுக்கு தான். 

நாட்டின் செல்வமும் அரசின் எல்கையும் விரிவடைந்தாலும் முன்னேற்றம் என்பது அரசருக்கும் அரசரை சார்ந்தோருக்கும் தான்.

இது தான் அரசாட்சியின் நிலவரம்.

ஆனால் இந்த அரசோடு இயேசுவின் அரசை ஒப்பிட முடியாது. இயேசுவின் அரசு இந்த அரசு முறைகளில் இருந்து மாறுபட்டது.

எசாயா 9:6இல் உள்ள வார்த்தைகள் இயேசுவுக்கு பொருந்தி செல்கிறது, "ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும்."

இயேசு துன்புறும் அரசர், ஊழியர். 

இவர் ஆடம்பரத்தை விரும்பாதவர் - எளிய மாட்டுக் கொட்டகையில் பிறந்தவர்.

இவர் அடக்கி ஆளும் அதிகாரத்தை கொண்டிராதவர் - அன்பின் அதிகாரத்தை கொண்டவர்.

பணிவிடை பெற வந்தவர் அல்ல - பணிவிடை புரிய வந்தவர்.

சிலுவைகளை மற்றவர் மேல் சுமத்த வந்தவர் அல்ல - மற்றவர்களின் சுமைகளை தன் தோளில் போட்டுக் கொண்டவர்.

இப்படிப்பட்ட அரசர் தான் மற்றவரின் உண்மை காவலர்.

மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டு பெறுதல் என்பது அதிகாரத்தினாலோ ஆணவத்தினாலோ வர கூடாது. மாறாக உண்மையான தொண்டு செய்யும் போது அது கொடுக்கப்பட வேண்டும்.

இயேசு என்னும் துன்புறும் அரசரை பற்றிக் கொள்வோம். நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்/ நம்மை பகிர்ந்துக் கொடுக்கும்  இளவரசராக/இளவரசியாக மாற முயற்சி செய்வோம், நம்மை கையளிப்போம்...

இறப்புக்கு பின் வானதூதராக...


பொதுக் காலம் 33ஆம் வாரம்

23.11.2024 - சனிக் கிழமை 

"இறப்பு யாருக்கும் காலம் தாழ்த்தாது என்பதையும் நீ சாகவேண்டிய நேரம் உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்" - சீராக்கின் ஞானம் 14:12

.இறப்பிற்கு பிறகு என்னவாகும்? என்ற கவலை, தனிப்பட்ட நபரின் வாழ்நாளை நரகம் ஆக்கிவிடுகிறது. அதே நேரத்தில் இறப்பிற்கு பிறகு என்ன நடந்தா எனக்கு என்ன? என்பது, மற்றவர்களின் வாழ்க்கையை நரகம் ஆக்கிவிடுகிறது.

வாழும் நாட்கள் சொர்க்கம் ஆக வேண்டும் என்றால் நல்லதை நினைக்கவும், செய்யவும், சொல்லவும் வேண்டும். ஒருவேளை நாம் நல்லதை நினைக்க, மற்றவர்கள் நமக்கு கெடுதல் செய்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் நம்மில் எழும்.

நம் காயங்களுக்கு நாம் மருந்திட்டிடலாம், ஆனால் மற்றவர்களின் தலைக்கணத்துக்கும் கர்வத்திற்கும் நாம் மருந்திட முடியாது. (கடவுள் மருந்திடுவார் என்பதை மறந்து விட கூடாது). அவரவர் விதைப்பது அவரவருக்கு. என் வீட்டுத் தோட்டத்தில் களை முளைத்தெழாமல் பார்ப்பது என் கையில் இருக்கிறது. அடுத்தவர் என் மீது எறியும் களையை நான் பெரிதுப்படுத்தாமல் அப்புறப்படுத்தினால் களை எறிந்தவர் ஒரு தருணத்தில் கலங்கி போவார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 20:27-40) உயிர்த்தெழுதலை மறுதலிக்கும் சதுசேயர் இயேசுவை அணுகி, 'ஒரு பெண் ஏழு நபர்களை மணந்து மகப்பேறின்றி இறந்து போனால் உயிர்த்தெழும் போது அவர் யாருக்கு மனைவியாக இருப்பார்?' என்ற கேள்வியை முன் வைத்தனர்.

இயேசு அவர்களுக்கு நேரிடையாக பதில் சொல்கிறார். "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் வருங்கால வாழ்வை பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும் போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது. அவர்கள் வானதூதரைப் போல இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே" என்று இயேசு பதில் சொல்கிறார்.

இறப்பிற்கு பிறகு நம் வாழ்வு வான தூதர்களை போல இருக்கும். அதற்கு முந்தைய வாழ்க்கை தான் நாம் வானதூதரா? விண்ணக வாழ்வுக்கு தகுதி உடையவரா? என்பதை உறுதி செய்யும்.

இக்கால வாழ்வில் பிறருக்கு இடறலாய் இருக்கும் மனிதர் எப்படி விண்ணக வாழ்வை உரிமை பேறாய் பெற முடியும்? 

வாழ்வோரின் கடவுள் பக்கம் நாம் நிற்கும் தகுதி பெற இறப்பதற்கு முன் நல்வாழ்க்கை வாழ வேண்டும்/ மற்றவரை வாழ விட வேண்டும்.

மானிட மகனின் மறு வருகையின் போது உயிர்த்தெழுதல் இருக்கும். 

தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 4:16,17 இவ்வாறு சொல்கிறது, "கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்".

அனைவரும் (கல்லறையில் இருப்போரும், உயிர் வாழ்வோரும்) எடுத்துக் கொள்ளப்படுவர். அவரவருக்கேற்ற அரியணை அவ்வுலகில் கொடுக்கப்படும்.

அனைத்தும் கடவுளுக்கே...


(புனித செசிலியா - நினைவு)

பொதுக் காலம் 33ஆம் வாரம்

22.11.2024 - வெள்ளிக் கிழமை 

சிறுவயது முதலே மாசற்ற வாழ்க்கை வாழ்ந்த செசிலியா தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்தார். இசையின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

வாழ்வு தருகின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச் சென்றார். தன்னை கிறிஸ்துவின் மணவாட்டி என்று அறிவித்தார். 

இவருடைய விருப்பம் இல்லாமல் வலேரியன் என்ற இளைஞனுக்கு இவரை மணம் முடித்துக் கொடுத்தார்கள். 

நான் என்னுடைய உடலை எனது மணவாளனாகிய இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்து விட்டேன். ஆகையால் நானாக எந்த விதத்திலும் என்னுடைய உடலை உனக்குத் தர மாட்டேன். என்னுடைய கற்பை வானதூதர் ஒருவர் பாதுகாத்து வருகிறார் என்று வலேரியானிடம் செசிலியா சொன்னார். இதை கேட்ட வலேரியான் திகைப்புற்று உன்னுடைய கற்பை வானதூதர் காத்து வருகிறாரா? என்னால் நம்பமுடியவில்லை என்றார்.

அதற்கு புனிதையோ, இதெல்லாம் திருமுழுக்கு பெற்றோரின் கண்களுக்கு தான் தெரியும் என்று சொல்ல, வலேரியான் திருமுழுக்கு பெற்றார். 

புனித செசிலியா இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்க, அவருடைய பக்கத்தில் வானதூதர் நிற்க கண்டு வலேரியான் வியந்து, இன்னும் இறைவனில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்.

இவரை தொடர்ந்து இவருடைய சகோதரர் திபெர்தியுஸ் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொள்ள தொடங்கினார். இச்செய்தி ஆளுநர் காதை எட்ட, அவன் வலேரியனையும் அவருடைய சகோதரையும் தலை வெட்டி கொல்ல செய்தான். 

இறுதியாக, இயேசுவை மறுதலிக்க செசிலியா வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட கட்டளையிட்டான் ஆளுநர். கழுத்து வெட்டப்பட்ட நிலையிலும் 3 நாட்கள் வரை கடவுளை போற்றி புகழ்ந்து கொண்டே இருந்தார் புனித செசிலியா.

தன்னை முழுவதும் கொடுத்தவர், தன் வாழ்நாள் முழுவதும் கடவுளை போற்றி புகழ்ந்தார் புனித செசிலியா.

நாமும் அவருக்கே சொந்தம். நாமும் நம்மை படைத்தவரிடம் நம்மை அர்ப்பணிப்போம்.

நம்மை கொடுப்போம்


பொதுக்காலம் 33ஆம் வாரம்

21.11.2024 – வியாழக் கிழமை

“தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை” என்றார். – விடுதலைப் பயணம் 13:2

யாருக்கு நம்மைக் கொடுக்கிறோம்? எதற்கு நம்மை கொடுக்க வேண்டும்? 

நமக்கு பிடித்தவர்களுக்கு நமது நேரத்தை கொடுப்போம், நமது அன்பை கொடுப்போம். நம் உணர்வுகளை புரிந்துக் கொண்டவர்களுக்கு நம்மிடம் உள்ளதையெல்லாம் கொடுப்போம். நம்மிடம் இருப்பவையெல்லாம் நமக்கானவர்களுக்கானது தான்.

தன்னை தருதல் என்பது இன்று சாதாரணமாகிவிட்டது. போலியான அன்புக்கும் பொழுதுபோக்கிற்கும் நம்மை தந்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஏமாறிக் கொண்டு இருக்கிறோம் என்பது அறியாமலேயே நம்மை இழந்துக் கொண்டு இருக்கிறோம்.

சிறிய வயதில் நாம் விளையாடுகின்ற போது இது உனக்கு! இது எனக்கு! என்று நம்மிடம் இருப்பதை கொடுத்தும் அடுத்தவரிடமிருந்ததை பெற்றுக் கொண்டும் இருந்தோம். இந்த கொடுத்தல் வாங்குதல் இன்றும் தொடர்கிறது. ஆனால் அதன் அர்த்தம் தான் மாறிவிட்டது. இன்று கொடுப்பது போல பல காரியங்கள் பிடுங்கப்படுகின்றன.

(எகா. எதையெடுத்தாலும் இலவசம்! இலவசம்! ஆனால் வீண் செலவு நமக்கு தான். இன்றைய திருமணக் காரியங்களில் மாப்பிள்ளையை கொடுத்து பெண்ணையும் நகையையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்.)

கொடுத்தலின் அர்த்தம் இன்று சீர்குலைந்து இருக்கிறது.

இன்றைக்கு அன்னை மரியா காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளை நினைவுக் கூறுகிறோம். இஸ்ரயேலில் பிறந்த ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம், அதை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதைப் போன்று, பெண்தலைப்பேறு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற எந்தவொரு விதிமுறையும் இல்லை. ஆனாலும் மரியாவின் பெற்றோரான சுவக்கினும் அன்னாவும் அவரை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றனர்.

கடவுளுக்கு காணிக்கையாதல் என்பது ஒருவர் தன்னை முழுவதும் கடவுளுக்கு கையளிப்பதை குறிக்கிறது. அன்னை மரியா குழந்தையாக இருந்தபோது அவரின் பெற்றோர் அவரை கடவுளுக்கு காணிக்கையாக்கினர். கடவுளின் தூதர் தனக்கு காட்சியளித்தபோது “நான் ஆண்டவரின் அடிமை” என்று சொல்லி, அன்னை மரியா தன்னை கடவுளுக்கு காணிக்கையாக்கினார்.

அன்னை மரியாவின் பெற்றோர் தங்களிடமிருப்பதை/தங்களது மகளை கடவுளுக்கு கொடுத்தார்கள், அன்னை மரியா தன்னை கடவுளுக்கு கொடுத்தார்.  

(543 ஆம் ஆண்டு ஜஸ்டினியன் என்ற மன்னன் மரியாவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததை நினைவு கூரும் வகையில், எருசலேமில் அன்னை மரியாவுக்கென்று ஒரு கோயிலைக் கட்டி எழுப்பினான். இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து மரியா கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது.

1585ஆம் ஆண்டு திருத்தந்தை 5ஆம் சிக்ஸ்துஸ் என்பவரால் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது.)

நல்லவற்றை செய்யும் போது நாம் கடவுள் விரும்புவதை செய்பவர் ஆகிறோம். அதன் வழியாக நம்மை படைத்தவருக்கு நம்மை முழுமையாக தருவோம். ஏமாற்று தந்திரங்களுக்கு நம்மை கையளிக்காமல், ஏமாற்றுவேரிடமிருந்து தள்ளியிருப்போம்.

அவரிடமிருந்து வந்தது அவரிடம் தான் திரும்பும். அதற்கு முன்னதாகவே அவருக்குரியதை எந்தவொரு சிதைவுமின்றி அவரிடம் கொடுப்போம்

கொடுத்தலும் எடுத்தலும்...

பொதுக் காலம் 33ஆம் வாரம்

20.11.2024 - புதன் கிழமை

"நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை; சிந்தனை செய்வதுமில்லை; அறிவு பெறுவதுமில்லை; அங்கே ஞானமுமில்லை" - சபை உரையாளர் 9:10

கைகள் இரண்டு காரியங்களுக்காக நீளும், ஒன்று கொடுப்பதற்காக மற்றொன்று எடுப்பதற்காக. தனக்குரியதை பகிர்ந்து கொடுப்போரும் உண்டு. தனக்கு சம்பந்தமில்லாத ஒன்றை மற்றவரிடமிருந்து எடுப்போரும் உண்டு.

கொடுத்து சிவந்த கைகளும், இருப்பதை கொடுத்து கொடுத்து இழந்து வாடிய உள்ளங்களும் நமக்கு முன் உதாரணங்களாய் இருக்க தான் செய்கிறார்கள்.

எடுக்க எடுக்க கேணி ஊரும் என்பார்கள். அதே போல கொடுக்க கொடுக்க பெற்றுக் கொண்டோரும் உண்டு. (நடைமுறை வாழ்க்கையில் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை)

கொடுக்கின்ற உள்ளம் தனக்குரியதை ஒருநாள் பெற்றுக் கொள்ளும். இதுவும் உண்மை. அது நேரமாக, உழைப்பாக, அன்பாக, பணமாக, பொருளாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:11-28) உயர் குடிமகன் ஒருவர் பத்து பேரை அழைத்து 10 மினாக்களை கொடுத்து வாணிபம் செய்ய சொல்கிறார். 

(பழைய ஏற்பாட்டு புரிதலில் மினா என்பது 60 அல்லது 50 செக்கெல் வெள்ளியைக் குறிக்கும்.

புதிய ஏற்பாட்டு புரிதலில் மினா என்பது 100 தெனாரியத்தைக் (திராக்மாவை) குறிக்கும். 1 தெனாரியம் (திராக்மா) என்பது ஒரு நாள் கூலி, அப்படியென்றால் 1 மினா என்பது 100 நாள் வேலை செய்தால் கிடைக்கும் கூலி.)

ஆட்சியுரிமை பெற்று வர தொலைத் தூர பயணம் மேற்கொள்கிறார். திரும்பி வந்ததும் தம்மிடம் பணம் வாங்கியிருந்த ஒவ்வொருவரையும் அழைக்கிறார். 

முதலாவது நபர் ஒரு மினாவை கொண்டு 10 மினாவை ஈட்டியுள்ளார். இரண்டாவது நபர் ஒரு மினாவை கொண்டு 5 மினாவை ஈட்டியுள்ளார். வேறொருவரோ கொடுக்கப்பட்ட மினாவை கைக் குட்டையில் முடிந்து வைத்து விடுகிறார். கொடுத்ததை திருப்பிக் கொடுத்து விடுகிறார்.

இந்த மினா என்பது நமக்கு கொடுக்கப்பட்ட ஆற்றல், திறமை, வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கிறது. 

கடவுள் வர காலம் தாழ்த்துவார் என்ற மனநிலையும் கடவுள் எப்படியும் மன்னித்து விடுவார் என்ற மனநிலையும் நம்மை தேக்க நிலையில் வைத்து விடுகிறது.

 எல்லாவற்றையும் கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை வாழ்வு பயனளிக்காது.

இன்றைய நற்செய்தி வாசகமானது,  "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்கிறது. இருப்பதை பயன்படுத்துகின்ற போது இன்னும் அதிகம் வந்து சேரும்.

நம்மிடம் இருக்கும் ஆற்றலை சரியான விதத்தில் பயன்படுத்துவோம். அது தான் நம் ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தும்.

எல்லோருக்கும் ஒரே திறமை/ஆற்றல் இருப்பதில்லை. அவரவர் தகுதிக்கேற்ப அது அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும். இருப்பதையாவது சரியாக பயன்படுத்த வேண்டும். இருப்பதை பயன்படுத்தவில்லை என்றால் இருப்பதும் எடுக்கப்படும்.

தேங்கி நிற்கும் தண்ணீர் நாளடைவில் துர்நாற்றம் வீசும். ஓடும் தண்ணி போல நமக்குள் இருக்கும் ஆற்றல்/திறமை இயங்கிக் கொண்டிருக்கட்டும். 

நிறைவுக் காண குறை ஒரு தடையல்ல...


பொதுக் காலம் 33ஆம் வாரம்

19.11.2024 - செவ்வாய்க் கிழமை 

"நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்; உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார்" - சீராக்கின் ஞானம் 18:25

குறை இருக்கும் இடத்தில் நிறைவுக்கு இடம் இல்லை. நிறைவுள்ள இடத்தில் குறைக்கு இடம் இல்லை.

குறையுள்ள மனிதர் தன் நிலையை ஏற்றுக் கொள்ளும் வரை அவருடைய குறை மறைய போவதில்லை.

சில மனிதர்கள் சிலரின் குறைகளை அன்பு செய்ய தொடங்குகிறார்கள். சில மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட சிலருக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது. சிலரின் குறும்புகள் சிலருக்கு பிடித்தம். அந்த அன்பு இறுதியில் குறையை மாற்றி விடும் என்பதும் உண்மை.

குறையில்லாத மனிதர் இவ்வுலகில் இல்லை, அதற்காக குறைகளிலே நிறைவு காணும் மனிதர் வாழ்வில் ஒருபோதும் நிறைவு காண போவதில்லை. 

இன்றைய முதல் வாசகத்தில் (திருவெளிப்பாடு 3:1-6,14-22) நம் வாழ்க்கை குறித்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாடு 3:17இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, ‘எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை’ என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை.

நம் நிலையை நாம் உணர்வதில்லை. நம் நிலையை அறிந்திருந்தாலும் அதை திருத்திக் கொள்ள முயல்வதில்லை. எல்லாம் கொடுக்கப்பட்டதுதான் என்ற எண்ணம் உள்ளத்தில் பதிந்தால் எல்லாம் சரி ஆகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:1-10) குறையுள்ள சக்கேயு நிறைவை காண அத்தி மரத்தில் ஏறுகிறார். (அத்தி மரம் ஞானத்தின் அடையாளம், வளமையின் அடையாளம், ஒளியூட்டப்படுதலின் அடையாளம்...)

 சக்கேயு குறையுள்ள/குட்டையான மனிதர் தான், ஆனால் தன் நிலை உணர்ந்த மனிதர். இயேசு என்னும் ஞானத்தை அறிய காட்டு அத்தி மரத்தில் ஏறுகிறார். இயேசுவை பார்க்க சென்றவர் இயேசுவால் கண்டுக் கொள்ளப்படுகிறார். இயேசு அவருடைய வீட்டில் உணவருந்துகிறார்.

பாவியிடம் தங்க போயிருக்கிறாரே என்று இயேசுவுக்கு எதிராக பலர் முணுமுணுத்தனர். இயேசு அதை பொருட்படுத்தவில்லை.

குறையை களைந்த சக்கேயு மகிழ்ச்சியுடன் இயேசுவை வரவேற்கிறார். தன் பாவத்தை அறிக்கையிட்டு பரிகாரத்தையும் அறிக்கையிடுகிறார். அவரின் பாவ அறிக்கை, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன், பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.

குறையை ஏற்றுக் கொண்டு, மனம் மாறியதால் சக்கேயுவின் வீட்டிற்கு மீட்பு கிடைத்தது.

பலர் அவரில் இருந்த குறையை மட்டும் கண்டார்கள், இயேசுவோ அவரில் இருந்த நிறைவை (தவறுக்கு வருந்துதல், தவறை திருத்துதல்) கண்டார்.

யார் தான் தவறு செய்யவில்லை என்ற வார்த்தை தவறை நியாயப்படுத்தி விடுகிறது. தவறும் மனிதரும் உண்டு, தவறு செய்ய தூண்டப்படுவோரும் உண்டு. காலம் சிலரை குற்றவாளியாக கடைசிவரை சிறைப்படுத்தி விடுகிறது.

தப்பு செய்ய தூண்டுவோரும் தப்புக்கு துணை போவோரும் ஒன்றே.

நான் யோக்கியன் என்று நடிப்பதை விட தவறை உணர்ந்து திருந்துவது நல்லது. 

நிறைவை காண குறை ஒருபோதும் தடையாக இருக்க கூடாது.

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருங்கோயில் நேர்ந்தளிப்பு


பொதுக் காலம் 33ஆம் வாரம்

18.11.2024 - திங்கட் கிழமை 

"என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்" - எசேக்கியேல் 37:13

வரலாற்றுப் பின்னணி 

புனிதர்கள் பேதுரு பவுல் ஆகிய இருவரும் இயேசுவின் திருத்தூதர்கள். திருத்தூதர்களின் தொடக்கமும் நிறைவுமாக இவர்கள் இருக்கிறார்கள். 

புனித பேதுரு - இயேசுவால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புனித பவுல் - இயேசுவால் தனிப்பட்ட பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவர்.

ஒருவரின் நேரிய வாழ்வு தான் இறந்த பின்னும் வெளிப்படும் என்பதற்கேற்ப இவர்கள் இறந்த பின்னும் இவர்களின் கல்லறை மேல் கட்டப்பட்ட பெருங்கோயில்கள் இவர்களது வரலாற்றை பேசுகிறது.

உரோமையை ஆண்டு வந்த நீரோ மன்னனுடைய காலத்தில் திருத்தூதர்களின் தலைவரும் முதல் திருத்தந்தையுமான பேதுரு கொல்லப்பட்டார் என்பது வரலாறு. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடக்ககாலக் கிறித்தவர்கள் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்தி வந்தனர்.

அதன் பின்னர் உரோமையை ஆண்ட கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் பேதுருவின் கல்லறை இருந்த இடத்தில் மிகப்பெரிய கோயிலை கட்டினார். ஆண்டுகள் பல செல்ல சிதிலமடைந்த கோயில் இருந்த இடத்தில், திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் 1506ஆம் ஆண்டு ஒரு புதிய கோயிலை கட்ட தொடங்கினார். இக்கோயில் கட்டி முடிக்க 120ஆண்டுகள் ஆனது. திருத்தந்தை 8ஆம் அர்பன் தான் 1626ஆம் ஆண்டு கட்டி முடித்தார்.

பிற இனத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பவுல் ஒஸ்டின் நகர் நோக்கிச் செல்கின்ற சாலையில் உள்ள அக்குவே சால்வியே என்ற இடத்தில் கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

கான்ஸ்டன்டைன் என்ற மன்னர் புனித பவுலுக்கென்று கோயில் கட்டத் தொடங்கினார். அப்பணி அவரால் முடியாமல் போகவே திருத்தந்தை பெரிய லியோவின் ஆசியோடு முதலாம் தியோடர் என்ற மன்னர் அதை நிறைவு செய்தார்.

இப்பெருங்கோயில் 1833ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் சேதமடைந்தது. எனவே திருத்தந்தை பதினொன்றாம் பயசின் காலத்தில் உலகெங்கும் பரவியிருந்த கிறித்தவர்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு புனித பவுல் பெருங்கோவிலானது புதுப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10ஆம் நாள் இக்கோயில் நேர்ந்தளிக்கபட்டாலும் பின்னாளில்  நவம்பர் 18ஆம் நாளுக்கு விழா மாற்றப்பட்டது.

கல்லறை கோயிலாக மாறுவது தொடக்க காலங்களில் நடைபெற்றது. சமீப காலங்களில் பீடத்தின் முன் பகுதியில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோயிலின் வெளிப்புறங்களில் கல்லறை அமைக்கப்பட்டது.

நம்பிக்கை கற்றுக் கொடுத்த முன்னோர்கள், மறைப்பணியாளர்கள், புனிதர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் என்று பல நபர்களின் கல்லறைகள் நமக்கு இன்றும் நம்பிக்கையை போதிக்கின்றன.

கல்லறைகள் இறந்தவர்களின் உடல்கள் புதைந்து கிடக்கும் இடம் மட்டுமல்ல... மாறாக நம்பிக்கை பிறப்பெடுக்கும் இடமும் கூட...

மானிட மகனின் வருகையும் நம் செயல்களும்...


பொதுக் காலம் 33ஆம் வாரம்

17.11.2024 - ஞாயிற்றுக் கிழமை 

இன்னும், ‘மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்தமாட்டார்" - எபிரேயர் 10:37

கடவுளின் வருகை எப்படி இருக்கும்? எப்போது இருக்கும்? எதற்காக இருக்கும்? என்ற பல கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. 

வீட்டிற்கு விருந்தினர் வந்தால் மகிழ்ச்சி. வெளிநாட்டில் வேலை செய்யும் தந்தை/தாய் வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி. படிக்க சென்ற குழந்தைகள் பத்திரமாக வீட்டிற்கு வந்தால் மகிழ்ச்சி. இவ்வாறாக ஒருவர்/பலருடைய வருகை மகிழ்ச்சி கொடுக்கிறது. இதற்கு முக்கிய காரணம், நமக்கும் அவர்களுக்கும் இடையேயான நெருக்கம்/அன்பு/புரிதல் என்று பலவற்றை சொல்லலாம்.

நம்மை அன்பு செய்பவர்கள் நம்மை தேடி வருகின்ற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. 

ஒரு நாளில் தோன்றி ஒரே நாளில் வாடும் மலரை போல சில உறவுகள் இருந்தாலும், பலர் உண்மை உணர்வோடு/உறவோடு பிரித்தவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில காத்திருப்பு ஏமாற்றத்தை தந்தாலும் கூட காத்திருப்பு நீண்டுக் கொண்டே போகிறது.

நாம் எதிர்பார்ப்பதை கொடுப்பவர் என்றும் நம் அன்புக்கு உரியவரே! அவர் மீதான அன்பு என்றும் மாறாது. நாம் எதிர்பார்க்காததை செய்பவர் ஏற்படுத்திய வடு ஒரு போதும் அழியாது.

மனிதர்களிடையே காணப்படும் இந்த அன்பும், அந்த அன்பிற்காக காத்திருப்பதும் சுகம் என்றால், கடவுளுக்காக காத்திருப்பது அதிலும் தனி சுகம் தானே.

நான் அவர் விரும்புவதை செய்து மனநிறைவோடு வாழும் போது, அவர் வருகை எனக்கு மகிழ்வை கொடுக்கும்.

அவரது வருகை அச்சத்தின் வருகையாக மாறுவதும் அல்லது ஆனந்தத்தின் வருகையாக மாறுவதும் நம் செயல்பாட்டை பொறுத்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 13:24-32) மானிட மகனின் வருகையை பற்றி வாசிக்கிறோம். 

"அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்" என்கிறது இன்றைய நற்செய்தி. 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட்டிச் சேர்க்கப்படும் போது தலைநிமிர்ந்து நிற்பர். மானிட மகன் கதவை தட்டுகிற போது மற்றவர்களின் கதி என்னவாகும் என்று சிந்திக்க வேண்டும்.

மானிட மகன் வருவார் என்பது உறுதி, ஆனால் அவர் எப்போது வருவார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் நாம் புரிந்துக் கொள்ளலாம். அவர் வருவதற்கு காலம் தாழ்த்துகிறார் அல்லது காலம் தாழ்த்துவது போல நமக்கு தோன்றுகிறது. 

2பேதுரு 3:8 இவ்வாறு சொல்கிறது, "அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன".

காலம் தாழ்த்துதல் என்றால் நாம் அனைவரும் மனம் மாறி மீட்கப்பட வேண்டும் என்பதற்காக என்று புரிந்துக் கொள்ளலாம்.

(யோனா நூலில் நினிவே நகரின் மனமாற்றத்தை இந்த பின்னணியில் புரிந்துக் கொள்ளலாம்.)

கடவுளின் வருகைக்காக எல்லா வேளையும் தயராக இருக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (தானியேல் 12:1-3) நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்க்கபடுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர் என்று வாசிக்கிறோம்.

நல் வாழ்க்கை வாழ்ந்தோருக்கு இறுதியிலும் நல்லதே நடக்கும். 

(வாசிக்க - ஆண்டவருடைய வருகை - 2பேதுரு 3:1-18)

கடவுளின் வருகைக்காக காத்திருக்கும் நாம் தலை நிமிர்ந்து நிற்க நற்காரியங்களை கையில் எடுப்போம். அழிவு தரும் நாளாக அல்லாமல் வாழ்வு தரும் நாளாக அவர் வருகை அமையட்டும்.

நம்பிக்கையினால் தொந்தரவு செய்யுங்கள்...


பொதுக் காலம் 32ஆம் வாரம்

16.11.2024 - சனிக் கிழமை 

"மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" - திருப்பாடல்கள் 9:18

நம்பிக்கைக்கும் தொந்தரவுக்கு என்ன தொடர்பு? நேரடி தொடர்பு இல்லை, ஆனால் நம்பிக்கை தொடர் நம்பிக்கையானால் எதிரே உள்ளவருக்கு தொந்தரவு. கிடைக்கும் என்பது நம்பிக்கை; கிடைக்கும் வரை போராடுவேன் என்பது தன்னம்பிக்கை.

அந்த தன்னம்பிக்கை தான் மற்றவர்களை தொந்தரவு செய்யும். நேர்மையாய் இருக்க வேண்டியவர் நேர்மை தவறும் போது கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஒருபுறம். நேர்மை தவறுபவர் தன் தவறை கண்டுக் கொள்ளும் வரை போராடுவது மறுபுறம்.

இவர் எங்க திருந்த போகிறார் என்ற கேள்வி பொய்மைக்கு உரம் போட்டுவிடும். இவர் மாறும்வரை விட மாட்டேன் என்பது மற்றொருவர் இன்னும் அதிக நம்பிக்கை பெற வழிவகுக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா  18: 1-8) மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொல்கிறார்.

கைம்பெண் ஒருவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

அந்த கைம்பெண் கணவனை இழந்தவர், வாழ்வை இழந்தவர், வலு இழந்தவர் ஆனால் நம்பிக்கையினால் உறுதியூட்டப்பட்டவர்.

அவரின் நம்பிக்கையும் தொடர் தொந்தரவும் அந்த நடுவரையே மாற்றிவிட்டது. 

என்னால் முடியாது என்று சுருண்டு படுத்தால் எறும்பு கூட ஏறி கடிக்கும். முடியாவிட்டாலும் முயற்சி செய்வேன் என்பது தன்னால் முடியாத காரியத்தை கூட மற்றொருவரால் நடத்தி முடிக்க வைக்கும்.

மதிக்காத நடுவரே மனம் மாறினார் என்றால், நம் மனமாற்றத்தை எதிர்பார்க்கும் கடவுள் நமக்கு இரக்கம் காட்டாமல் இருப்பாரா?

மாற்கு நற்செய்தி 5:35இல் "அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள்.

தொழுகைக்கூடத் தலைவர் கொடுத்த தொந்தரவு அவர் மகளுக்கு உயிர் கொடுத்தது.

செயல்பாட்டோடு கூடிய நம்பிக்கையினால் கடவுளை தொந்தரவு செய்வோம். நலமானதை பெற்றுக் கொள்வோம்.

தண்ணீராலும் நெருப்பாலும் வாழ்வு...


பொதுக் காலம் 32ஆம் வாரம்

15.11.2024 - வெள்ளிக் கிழமை  

"நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை ஆகியவை மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும்" - சீராக்கின் ஞானம் 39:26

நெருப்பும் தண்ணீரும் அதிகமானால் அழிவு அதிகம் தான். தண்ணீரும் நெருப்பும் எதிரெதிர் துருவங்கள். ஆனால் இரண்டும் அதிகமானால் துயரம் தான். இவ்வுலகில் பல துயரங்கள் உண்டு.

இருவர் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்க ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவது தான் துயரத்திலும் துயரம். 

மற்றொரு துயரம் என்னவென்றால் நிலையில்லாத உலகில் நிலையற்ற பொருளுக்காக, பெயருக்காக கலவரம் உண்டாகிறது.

இந்த உலகில் தண்ணீருக்காக சண்டை, அணு ஆயுதங்களை கொண்டு சண்டை, வாழ்வாதாரத்திற்காக சண்டை, தன்னிலையை உறுதிப்படுத்த சண்டை என்று சண்டையின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.

எவ்வளவு தான் சண்டை போட்டு ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் கடைசியில் எல்லோருக்கும் இவ்வுலகில் அழிவு உண்டு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 26-37) நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு எல்லோரையும் அழித்தது, லோத்து சோதோமை விட்டு வெளியேறிய பின்னர் நெருப்பும் கந்தகமும் நகரை அழித்தது என்று வாசிக்கிறோம். 

எதனால் இந்த அழிவுகள்? தவறான வாழ்க்கை, அடுத்தவரை அழிக்கும் நோக்கம் ஆகியவை தான் அழிவை பெற்றுக் கொடுத்தது. 

இதே அழிவு மானிட மகன் வெளிப்படும் நாளிலும் உண்டாகும் என்று எச்சரிக்கிறது இன்றைய நற்செய்தி. 

யாரெல்லாம் இவ்வுலக வாழ்வுக்காக தங்கள் அற்ப வாழ்வை கையளிக்கிறார்களோ அவர்கள் வாழ்வு இவ்வுலகிலே முடிந்து விடும். மாறாக யாரெல்லாம் விண்ணக கைம்மாறை பெற இவ்வுலக வாழ்வை தியாகம் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வு மேலும் நீடிக்கும். 

இவ்வுலக வாழ்வை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் ஆனந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த ஆனந்தத்தை பெற மற்றொருவர் தன் மகிழ்ச்சியை பறி கொடுக்க வேண்டி இருக்கிறது.

அடுத்தவர் வாழ்வை அழித்து அதன் வழியாக மகிழ்ச்சி காண்பது கிறித்தவ வாழ்வு ஆகாது. மாறாக நன்மைக்காக தீமையை இழப்பதும் ஒளியை ஏற்ற இருளை விரட்டுவதும் தான் கிறித்தவ வாழ்வு காட்டும் விழுமியம்.

கிறிஸ்துவின் இரத்தமும் தண்ணீரும் மற்றும் கிறிஸ்துவில் நாம் பெற்றுக் கொண்ட நெருப்பு வடிவிலான திருமுழுக்கும் நமக்கு நிலைவாழ்வை பெற்றுக் கொடுக்கும். 

பழைய ஏற்பாட்டு தண்ணீர் அழிவை கொணர்ந்தது, புதிய ஏற்பாட்டு தண்ணீர்/இரத்தம் நம்மை புதிய வாழ்வுக்கு அழைத்தது. 

பழைய ஏற்பாட்டு நெருப்பு நகரையே அழித்தது, புதிய ஏற்பாட்டு நெருப்பு புதிய பணி செய்ய உத்வேகம் கொடுத்தது.

இயேசுவின் சீடர்கள் நல்லவற்றிற்காக தேவையில்லாத ஒன்றை இழப்பது தவறல்ல...

இறையாட்சியும் இறைவனின் வருகையும்...


பொதுக் காலம் 32ஆம் வாரம் 

14.11.2024 - வியாழக் கிழமை

"இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது" - 1 கொரிந்தியர் 4:20

.இறைவனின் ஆட்சி ஏற்கனவே வந்துவிட்டது. ஆனால் எல்லோரும் இறைவனின் அரசுக்குள் வரவில்லை. எல்லோரும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார்கள், ஆனால் அவருடைய கொள்கைகளை தான் பின்பற்றுவதில்லை. 

கொள்கைப் பிடிப்புள்ள மனிதரை பலருக்கு பிடிக்கும். ஆனால் அதே கொள்கை நம்மை தாக்கினால் திருப்பி தாக்குவோம்.

இன்று கிறித்தவம் வளர்ந்து உலகெங்கும் பரந்து விரிந்து இருக்கிறது. கிறித்தவ ஆலயங்கள், பக்த சபைகள், மறைமாவட்டங்கள், துறவற இல்லங்கள், கிறித்தவ சங்கங்கள் என்று பல அமைப்புக்கள் கிறிஸ்துவின் பெயரால் இயங்குகிறது.

ஆனால் கிறிஸ்துவுக்கும் நமக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தான் கேள்வி. கடவுளின் பெயரால் எல்லாவற்றையும் அவர் விரும்புகிறார் என்று சொல்லி செய்கிறோம். உண்மையில் ஆய்ந்து பார்க்க வேண்டியது, கடவுள் நம் வழிபாடுகளை விரும்புகிறாரா? கடவுளை வழிபாட்டு பொருளாக மட்டும் பார்ப்பது சரியா? கிறிஸ்துவின் விழுமியங்கள் நம் வழிபாடுகளில் இடம் பெறுகின்றதா?

கடவுள் என்னிடம் வெளிப்படுத்தினார், கடவுள் என்னை மட்டும் தேர்ந்தெடுத்தார் என்ற கண்ணோட்டம் தவறு. 

கடவுள் தன்னை எல்லா வழிகளிலும் எல்லா மனிதரிலும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 20-25) இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.

இறைவனும் நம்மில் தான் இருக்கிறார், இறையாட்சியும் நம் நடுவில் தான் இருக்கிறது.

நாம் அதை வாழ முயற்சி செய்வதில் தான் சிரமப்படுகிறோம். இறைவனின் ஆட்சி இவ்வுலகில் நிலைபெற இறைமகன் பல துன்பங்களை ஏற்றார்.

இறைத் திருவுளம் நிறைவேற இயேசு தம் வாழ்வை கையளித்தார். அவர் திருவுளம் நம் வழியாக நிறைவு காண பொய்மைக்கும் போலிகளுக்கும் மயங்காமல் உண்மையை பற்றிக் கொள்வோம். 

மானிட மகனின் வருகையை காண ஆயத்தம் தான் இவ்வுலக வாழ்வு. 

இவ்வுலக வாழ்வை இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப வாழ முயற்சி செய்வோம். அப்போது இறைவனின் வருகையின் போது அவர் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.

நன்றியுணர்வு தேவை...


பொதுக் காலம் 32ஆம் வாரம்

13.11.2024 - புதன் கிழமை 

"அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்" - கொலோசையர் 2:7

நல்லது நடக்காதா என்று ஏங்குவோர் பலர்? நல்லது நடந்தபின் நன்றி உணர்வோடு வாழ்பவர்கள் சிலர் மட்டும் தான். 

செய்த நன்மைக்கு பிரதிபலன் ஒன்று உண்டு என்றால் அது நன்றிக் கடனே. யார் என்று தெரியாத நிலையிலும் விபத்துக்குள்ளாகி சாகும் தருவாயில் இருக்கும் நபரை சரியான நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்கும் நபர் நன்றிக்குரியவரே. 

படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கொடுத்து நல்வழிகாட்டும் அன்பர் நன்றிக்குரியவரே. இப்படி நன்மை செய்தோர் பலர் நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் நன்றியுணர்வு தான் இச்சமூகத்தில் இருப்பதில்லை. ஆபத்து காலத்தில் தேவைப்படும்/தேடப்படும் கடவுள் நல்லது நடந்தபின் தேடப்படுவதில்லை. கிடைக்கும் வரை தான் மரியாதை, எல்லாம் கிடைத்த பின் தலைக்கணம் தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 11-19) 10 பேரின் தொழுநோய் நீங்க ஒருவர் மட்டும் நன்றி செலுத்த திரும்பி வருகிறார். நலம் கேட்டு வந்தவர்கள் 9 பேர் புற நலம் பெற்றார்கள், அகநலம் பெறவில்லை. ஒருவர் மட்டும் அக, புற நலம் பெற்றார். உள்ளம் நலமானதால் நன்றி சொல்ல வாய் திறந்தது.

நலம் பெற்றவர் தன் வழியே செல்லவில்லை, திரும்பி வந்து நன்றி சொல்கிறார். இயேசு அவர்களை குருவிடம் காட்ட சொன்னார், காரணம், லேவியர் 13:17 இல் சொல்லப்பட்டுள்ளது போல குரு செய்வார். "குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்; அவர் தீட்டற்றவர்"). அதன் பின்னர் தான் அவர்கள் ஊருக்குள் நுழைய முடியும்.

ஆனால் அந்த சாமாரியரோ குருவை விட மேலான குரு இயேசு என்பதை கண்டுக் கொண்டார்.

சமாரியரின் நன்றி உணர்வு கடவுளைப் போற்றிப் புகழ்வதிலும், இயேசுவின் காலில் முகங்குப்புற விழுவதிலும் வெளிப்பட்டது.

நலன்களை பெறுகிற நாம் இன்று நன்றிக்குரியவர்களாய் இருப்பதில்லை. 

படைத்தவருக்கே நன்றி உள்ளவர்களாய் இல்லை என்றால் படைக்கப்பட்டவைகளுக்கும்/படைக்கப்பட்டவர்களுக்கும் நாம் எப்படி நன்றி உள்ளவர்களாய் இருப்போம்.

நன்றி உணர்வு இல்லாத மனிதர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள்.

நம் நன்றி உணர்வு நாம் பெற்றுக் கொண்ட நன்மையை மற்றவரோடு பகிர்வதிலும், மற்றவருக்கு நன்மை செய்வதிலும் வெளிப்பட வேண்டும்.

பலன் கொடுக்கும் பயனற்ற பணியாளர்...


பொதுக் காலம் 32ஆம் வாரம்

12.11.2024 - செவ்வாய்க் கிழமை 

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள்" - 2 கொரிந்தியர் 6:8

பணியாளரின் பணி என்ன? பணி செய்து கொண்டே இருப்பது. எந்தவொரு பணியாளர்களும் தலைவர் உணவு அருந்தும் முன்னே தான் உணவு அருந்துவதில்லை. ஒருவேளை தலைவருக்கு முன்னே அவர் தன் வயிறை நிரப்பினால் அவர் வேலை காலியாகும். 

இது அடிமைத்தனமாக இருந்தாலும் பணியாளரின் கடமையாக இருக்கிறது. இதே செயல்பாட்டை ஒவ்வொரு தாய்க்கும் பொருத்தி பார்க்கலாம். எவ்வளவு தான் அன்போடும் பரிவோடும் உணவை பரிமாறினாலும் பயன் என்னவோ தாயை சென்று சேர்வதில்லை. ஒரு பணிப்பெண்ணாகவே திருமணமான பெண்கள் பார்க்கப்படுகிறார். 

எல்லா பணிகளும் செய்து முடிக்கப்பட்ட பின்னர் எதிர்ப்புறம் இருந்து வரும் கேள்வி... நீ வீட்டுல என்ன செஞ்ச? செய்யுற? ஒருவேளையும் உருப்படி இல்லை. 

இப்படி எல்லா எதிர்மறை வார்த்தைகள் தூவப்பட்டாலும் எந்தவொரு தாயும் தனது கடமையை/பணியை செய்யாமல் இருப்பது இல்லை.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 7-10)   நாம் காணும், "நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.” என்ற இறைவார்த்தை கடமை உணர்வோடு பணி செய்யும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். 

பலன் எதிர்பார்த்து பணி செய்யும் பலருக்கு மத்தியில் எந்தவொரு பாராட்டுதலையும் விரும்பாது பணி செய்யும் மனது பாராட்டுதற்குறியது.

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பரவாயில்லை என் கடமை எனக்கு முக்கியம் என்று செயல்பட ஆரம்பித்தால் இங்கு பணி தேக்கங்கள் ஏது? 

சரியானவற்றை சரியான நேரத்தில் செய்து விட வேண்டும். சரியென்பதை சரி என்று சொல்லி விட வேண்டும்.

விளக்கு (வெளிச்சம்)  இல்லாத/ திசை காட்டும் கருவி இல்லாத இரவு பயணம் வழிமாறும். அதுபோல இலக்கு இல்லாத பணி வாழ்வு திசை மாறும்.

நாம் அனைவரும் பயனற்ற, அதே வேளையில் பலன் கொடுக்கும் பணியாளர்கள். மற்றவர்களின் இகழ்ச்சியும் சரி புகழ்ச்சியும் சரி நம் பணிக்கு தடையாக இருக்க கூடாது.

மன்னிப்பும் நம்பிக்கையும்


பொதுக் காலம் 32ஆம் வாரம்

11.11.2024 - திங்கட் கிழமை 

எல்லா மனிதரும் பலவீனமானவர். எல்லோருக்குள்ளும் ஊனியல்பின் போராட்டம் இருக்கிறது. (ஆனால் அந்த பலவீனத்திலே வீழ்ந்துக் கிடப்பதும் தவறு தான்).

சபை உரையாளர் 7:20 இவ்வாறு சொல்கிறது, " குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை". இதன் பொருளை இப்படியும் புரிந்துக் கொள்ளலாம், தன்னை நேர்மையானவர் என்று காட்டுபவர் நேர்மையானவராக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். மேடு பள்ளம் எல்லாருடைய வாழ்விலும் உண்டு. நேர்மையானவர் கூட சில தருணங்களில் தன் சார்பாய் உள்ளவருக்காக நேர்மை என்னும் ஆடையை கழற்றி விடுகிறார். விலைபேசப்பட்டு விடுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக (லூக்கா 17:1-6) தவறு செய்பவர்களை கண்டிக்கவும், அவர்கள் மனம் மாறினால் மன்னிக்கவும் அழைக்கப்படுகிறோம். அதே நேரத்தில் நம்முடைய நம்பிக்கை மிகுதிப்படுத்தபடவும் வேண்டும். 

பாவச் சோதனை எல்லோருக்கும் வரும். ஆனால் அந்த பாவச் சோதனையினால் மற்றவரை பாவத்தில் வீழ்த்தக் கூடாது. நல் வழியிலிருந்து தவறுவதும் மற்றவரை நல்வழியிலிருந்து தடம்புரள செய்வதும் தவறு.

என்னிடம் இருக்கும் நல்லதை நான் பகிர வேண்டும். ஒருபோதும் மற்றவர் வாழ்வை சீர்குலைக்கும் செயலை செய்ய கூடாது.

ஒருவரை நாம் மன்னிக்கின்ற போது இரண்டு வகையான நலமளிக்கும் காரியம் நடைபெறுகிறது. 

1. மன்னிக்கும் நாம் பூரண நலம் பெறுகிறோம். (பகை மறைகிறது, பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மறைகிறது)

2. மன்னிப்பு பெறுபவர் நம்பிக்கை என்னும் புது வாழ்வு பெறுகிறார். (வாழ்வில் புதிய திருப்பம்)

மன்னிப்பை பகிரும் நாம் மற்றொருவருக்கு நம்பிக்கை என்னும் வாழ்வுக்கான புது வழியை திறந்து வைக்கிறோம்.

மன்னிப்பவர் கடவுளாகிறார். மன்னிப்பு பெறுபவர் கடவுளை அணுகி செல்கிறார். 

கைவிடப்பட்ட கைம்பெண்களின் நம்பிக்கை



பொதுக் காலம் 32ஆம் வாரம்

10.11.2024 - ஞாயிற்றுக் கிழமை 

ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையும் மாறுபட்டது அல்லது ஒவ்வொருவரும் மற்றவரை நம்பும் விதம் மாறுபட்டது என்று சொல்லலாம். இடத்திற்கு ஏற்றார் போல, ஆளுக்கு ஏற்றார் போல, சூழலுக்கு ஏற்றவாறு நம்பிக்கை மாறுபடுகிறதே அன்றி அது ஒருபோதும் குறைவுபடுவதில்லை.

நம்பிக்கை நிறைந்த மனிதரின் வாழ்வு மற்றொரு மனிதருக்கு நம்பிக்கை கொடுக்கிறது. உதாரணமாக, கால்களை இழந்த மனிதர் கால்களை இழந்த போதிலும் சுய தொழில் செய்து குடும்பத்தை நடத்துவது கால்கள் உடையோருக்கு நம்பிக்கை கொடுப்பதிலையா? வாய் பேச முடியாத/கண் பார்வை இல்லாத மனிதர்கள் பல துறைகளில் சாதனை படைப்பது நமக்கு நம்பிக்கை ஊட்டவில்லையா?

எதையும் நாம் உருவாக்கவில்லை. உறவானாலும் சரி பொருளானாலும் சரி எல்லாம் கொடுக்கப்பட்டதே தான். 

யோபுவின் நம்பிக்கை நம் வாழ்வுக்கு உரம் சேர்ப்பது என்று சொல்லலாம். எல்லாம் இருக்கும் போது நம்பினால் அது நம்பிக்கை அல்ல. இழந்த போதும் கொண்டிருப்பதே நம்பிக்கை. 

"ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக" - யோபு 1:21 என்பது தான் நம்பிக்கையின் உச்சக் கட்டம். 

கணவன் சரியில்லை, குழந்தைகள் சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் எல்லாம் சரியாகி விடாது. (நம்மால் யாரையும் திருத்தவோ/ மாற்றவோ முடியாது. அவர்கள் மாறுவதற்கு உதவி செய்ய முடியும்). நாம் அடுத்த நிலைக்கு கடந்து வர வேண்டும். நம்மை விட கீழ் நிலையில் இருப்பவர்கள் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடத்தை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கைம்பெண்களின் வாழ்வை விட நம் வாழ்வு ஒன்றும் குறைவுபட்டு போகவில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் முதல் வாசகத்திலும் கைவிடப்பட்ட கைம்பெண்கள் இருப்பதை இழக்க முன்வந்தனர் என்பதை வாசிக்கிறோம். 

முதல் வாசகத்தில் (1அரசர்கள் 17:10-16), எலியா இறைவாக்கினரின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து, அப்பம் சுட்டுக் கொடுக்கிறார். அவர் கொண்டிருந்த நம்பிக்கையினால் பானையிலுள்ள மாவும் தீரவில்லை; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையவில்லை.

இந்த அம்மாவுக்கு எவ்வளவு தைரியம். இருப்பதை உண்ட பிறகு தானும் தன் மகனும் சாக வேண்டும் என்றவர், துணிந்தார்; துணிந்து மாவை இழந்தார். நம்பிக்கையினால் இழக்க இருந்த வாழ்வையும் மாவையும் பெற்றுக் கொண்டார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:38-44) இரண்டு வகையான மனிதர்களை சுட்டிக் காட்டுகிறார் இயேசு.

1. பெருமை ஏற்கும் மனிதர்கள்

2. இருப்பதை இழக்கும் மனிதர்கள்.

- மறைநூல் அறிஞர்களை போல பெருமை பாராட்டுதலை விரும்பும் அற்ப மனிதர்கள் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம்.

- முதன்மையான இருக்கை/ இடம் இவை தான் தலைமைத்துவத்தை இன்று முன்னிருத்துகிறது. சேவை செய்வோம் என்று சொல்பவரெல்லாம் ஒருபோதும் சேவை செய்வதில்லை. 

- சேவை செய்ய எந்தவொரு முதன்மை நாற்காலியும் தேவையில்லை. தொடக்கத்தில் கொடுப்பது போல கொடுத்து பின்னர் எல்லாம் பிடுங்கப்படும். 

- பெருமை தேடும் மனிதர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் படம் பிடித்துக் காட்டப்படும் ஏழைக் கைம்பெண்ணோ இழக்க துணிந்தார் இருப்பதையும்.

அவரிடம் இருந்ததோ ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகள்.

(ஒரு கொதிராந்ந்து என்பது ஒரு தெனாரியத்தை 64 பங்காக வைத்தால் அதில் ஒரு பகுதி. ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி) 

அந்த பெண்ணிடம் இருந்தது ஒரு நாள் கூலி கூட இல்லை. இருந்த இரண்டு காசுகளை அப்படியே போட்டு விட்டார். 

இருக்கும் அனைத்தையும் இழந்ததால் மிகுதியாக போட்டிருக்கிறார் என்று பாராட்டப்பட்டார்.

தன் பிழைப்புக்காக என்ன செய்வார் என்பது நம் கேள்வி?

சேர்த்து வைத்து சேர்த்து வைத்து என்ன செய்ய போகிறோம் என்பது அந்த கைம்பெண்ணின் பதில்.

கணவரை இழந்த அந்த கைம்பெண்கள் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

இன்று தம்மையே கடவுளாக பாவித்துக் கொள்ளும் கயவர்கள் உள்ள கூட்டத்தில் தான் நாம் நீந்திக் கொண்டிருக்கிறோம்.

காசை கடவுளாக பார்க்கும் பழக்கத்தால் இன்று பல கொடுமைகள் அரங்கேறுகிறது.

சுரண்டுபவர்கள் ஒருபக்கம், சிக்கவைப்பவர்கள் மறுபக்கம் இருக்க நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

தப்பிக்க முடியாது என்று எதுவும் இல்லை; துணிந்தால் யாரையும் வீழ்த்தி விடலாம். நம்பிக்கை கொண்டிருக்கும் மனம் எதையும் கடந்து வரும்.

முடியாது என்று சுருண்டு படுத்தால் சிலந்தி கூட சிறைப்பிடிக்கும்.

இருப்பதை இழக்கவும் இல்லாதவரோடு பகிர்ந்து வாழவும் முன் வருவோம்.

எல்லாம் பெற்றிருந்தும் நம்பிக்கை குறைவில் நிலைத்திருக்கும் நாம் எப்போது முழு நம்பிக்கை பெற போகிறோம்?

சிந்தனை தொடரட்டும்... நம்பிக்கை மலரட்டும்...

உள்ளத்தில் கோயில் கட்டுவோம்...


இலாத்தரன் பெருங்கோயில் நேர்ந்தளிப்பு

பொதுக் காலம் 31ஆம் வாரம்

09.11.2024 - சனிக் கிழமை 

"தொடக்கத்திலிருந்தே நீர் ஏற்பாடு செய்திருந்த தூய கூடாரத்ததை மாதிரியாகக் கொண்டு உம் தூய மலைமேல் கோவில் கட்டவும், உமது உறைவிடமான நகரில் பலிபீடம் எழுப்பவும் நீர் எனக்கு ஆணையிட்டீர்" - சாலமோனின் ஞானம் 9:8

'கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்வார்கள். 

இறைவாக்கினர் ஆகாய் நூலின் தொடக்கத்தில் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவர் கட்டளையிடுவதை நாம் காண்கிறோம். ("இந்த கோவில் பாழடைந்துக் கிடக்கும் இந்நேரத்தில் நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?" ஆகாய் 2:4)

இறைவன் எல்லா இடத்திலும் உறைபவர், எங்கும் நிறைந்திருப்பவர். ஆனாலும் கூட கடவுளின் பிரசன்னத்தை முழுமையாக வெளிக்காட்டும் இடமாக கோயில் இருக்கிறது.

கடவுளின் பிரசன்னத்தை வெளிக்காட்டுவதால் கோயிலுக்குள் நுழையும் போது தனிப்பட்ட அமைதியை/மனநிறைவை பெற முடிகிறது. 

எந்த அளவுக்கு இதை திருப்பாடல்கள் நூலின் ஆசிரியர் உணர்ந்திருந்தால் திருப்பாடல்கள் 84:10 இல் இவ்வாறு சொல்லியிருப்பார், "வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது."

ஆனால் சிலர் கோயிலுக்கு வருகின்ற போது கவலை, கண்ணீர், பிரச்சினை என்னும் மூட்டையை சுமந்து வருகிறார்கள். கோயில் வாயிலில் அவற்றை இறக்கி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்து அமைதியை பெறுகிறார்கள். அதன் பின்னர் தாங்கள் இறக்கி வைத்த மூட்டையை திரும்ப வீட்டிற்கே எடுத்துச் செல்கிறார்கள். 

இறைவன் தரும் அமைதி இல்லத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் அவரின் இல்லத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு செல்ல வேண்டும்.

இறைவன் கற்களால் கட்டப்பட்ட கோயிலில் மட்டுமல்ல சதையால் சூழப்பட்ட நம் உள்ளத்திலும் குடிக் கொண்டு இருக்கிறார். 

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 6:19 இவ்வாறு சொல்கிறது, "உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல."

இன்று இலாத்தரன் பெருங்கோயில் விழா 

மறைமாவட்டத்தின் உள்ள அனைத்து முதன்மைக் கோயிலுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக இருப்பது தான் இக்கோவில்.

தொடக்கக் கால திருஅவையில் கிறித்தவர்கள் இல்லங்களில் தான் கூடி செபித்தார்கள். கிறித்தவர்களுக்கு எதிராக அடிக்கடி சமயத்தின் பெயரால் துன்புறுத்தல் நடைபெற்றது. அதனால் கிறித்தவர்கள் தங்களுக்கென்று கோயில் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது.

4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரோமை அரசன் கான்ஸ்டான்டிநோப்பிள் தனது அரண்மனையை திருஅவைக்கு வழங்கினான். கிறித்தவ மதத்தை உரோமையின் அரச மதமாக அறிவித்தான். 

313ஆம் ஆண்டு கோயிலாக மாற்றி வழங்கப்பட்ட அரண்மனையானது 324ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தையாக இருந்த முதலாம் சில்வெஸ்டர் அவர்கள், கோயிலை நேர்ந்தளித்து உலக மீட்பரின் பாதுகாவலில் ஒப்படைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு புனித திருமுழுக்கு யோவானின் பாதுகாவலிலும் அதன் பின்னர் நற்செய்தியாளர் யோவானின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குத் திருத்தந்தை அங்கு தான் இருந்தார். அதன் பின்னர் இறுதியாக வத்திக்கானுக்கு மாற்றப்பட்டது திருத்தந்தையின் வசிப்பிடம்.

நேர்மையான செல்வத்திலே முன்மதியுடையோராய்...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

08.11.3024 - வெள்ளிக் கிழமை 

"என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்" - எரேமியா 3:15

.அறிவாற்றல் மிக்க மனிதர்கள் இவ்வுலகில் வெகுவாக பாராட்டப்படுகிறார்கள். புத்திசாலித்தனம் ஒரு செயலை விரைந்து முடிக்க உதவுகிறது. திட்டமிட்டு செயல்படும் ஆற்றல் எக்காலத்திலும் நலம் பயக்கும்.

முன்மதி உடையோர் இவ்வுலகில் உண்டு. முன்மதி என்னும் ஆற்றல் நேர்வழியிலும் தவறான வழியிலும் பயன்படுத்தபடுகிறது என்கிறது தான் உண்மை.

சரியானதை சரியாக செய்ய இந்த ஆற்றல் பயன்படுத்தப்படுவதில்லை. பிறருடைய சொத்துக்களை அபகரிக்க, ஏமாற்று வழியில் புகழை சம்பாதிக்க, பிறர் வாழ்வை அழிக்க தான் முன்மதியுடையோராய் பலர் சுற்றி வருகிறார்கள். 

"ஒளியின் மக்களை விட இவ்வுலகின் மக்கள் தங்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துக் கொள்ளுகிறார்கள்" - லூக்கா 16:8

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 16:1-8) செல்வந்தருக்கு வீட்டுப் பொறுப்பாளராய் இருந்த பணியாளர் முன்மதியோடு செயல்பட்டதாக பாராட்டப்படுகிறார். ஆனால் அவர் தலைவரை ஏமாற்றி இருக்கிறார் என்பதே உண்மை. 

நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரை பாராட்டினார் என்கிறது இன்றைய நற்செய்தி. இந்த பகுதி நமக்கு குழப்பத்தை கொடுக்கலாம். ஆனால் தெளிவுப்பெற வேண்டும் என்றால் இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியை முழுமையாக வாசிக்க வேண்டும். (காண்க லூக்கா 16:9-13)

இவ்வுலகம் எவ்வகையிலாவது செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கு நாமும் விதி விலக்கு அல்ல.

நற்செய்தியின் தொடர்ச்சியில்...

- "நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களை தேடிக் கொள்ளுங்கள்" (லூக்கா 16:9) என்பது நம்மிடம் இருக்கும் இவ்வுலக செல்வத்தை பிறருக்கு பகிர்ந்துக் கொடுக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

- மிகச் சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவராக இருப்பார்.

- பிறருக்கு உரியவற்றை கையாளுவதில் நம்பிக்கைக்கு உரியராக இருக்க வேண்டும்.

- கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. 

இவ்வுலக செல்வமே நேர்மையற்றது தான். காரணம் ஏதாவது ஒரு வகையில் மற்றவரை ஏமாற்றி தான் நம் பிழைப்பு நடக்கிறது அல்லது செல்வம் சேர்க்கிறோம்.

நிலையான செல்வம் என்பது நற்செயல் புரிவதன் வாயிலாக அவ்வுலகில் சேர்க்கப்படும். 

ஒளியின் மக்களாய், நேர்மையான செயல் புரிவதில் முன்மதியோடு இருப்போம். இவ்வுலக செல்வம் இவ்வுலகிலே தேங்கி விடும்.

விண்ணக இறைவனையும் விண்ணக செல்வத்தையும் பற்றிக் கொள்வோம்...

காணாமல் போனவற்றின் மீது அதிக அக்கறை...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

07.11.2024 - வியாழக் கிழமை 

"காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்" - எசேக்கியேல் 34:16

ஒரு வீட்டில் கீழ்ப்படிதலோடு வளரும் குழந்தையும், பொறுப்பற்றத் தன்மையோடு வளரும் குழந்தையும் இருக்கிறது என்றால் அக்கறையும் பாதுகாப்பும் பொறுப்பற்ற குழந்தைக்கு தான் அதிகம் கொடுக்கப்படும். சரியாக வளரும் குழந்தைக்கு தேவைப்படும் அக்கறையை விட வழிமாறிய குழந்தைக்கு தான் அதிக அக்கறை தேவைப்படும்.

வழி மாறியது மீண்டும் நல்வழிப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இதற்கு காரணம். எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான். அவர்கள் தீயவர்களாக மாறுவது பெற்றோர் வளர்ப்பில் மட்டுமல்ல; சமூகத்தின் கையிலும் இருக்கிறது. 

ஒரு குழந்தை அதிக பாதுகாப்போடு, நல்வழியில் ஒரு குடும்பத்தால் வளர்க்கப்படலாம். ஆனால் சமூகம் அந்த குழந்தையை மாற்றிவிடும்.

இன்று பல குழந்தைகள் பெற்றோரிடமிருந்து காணாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சமூகம் தீமையை நன்மையென்று போதிக்கிறது. மாய கவர்ச்சிக்குள் சிக்க வைக்கிறது (அலைபேசி, இணையம், தொலைக்காட்சி என்னும் வடிவில் பலர் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்). நாமும் விதி விலக்கு அல்ல.

இன்று குழந்தைகள் பெற்றோரிடமிருந்து திருடப்படுகிறார்கள். தொலைந்து போய் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே குழந்தைகள் வாழ்கிறார்கள். தனிமை, பிரச்சினை, கையாலாகாத தன்மை வருகின்ற போது தான் உண்மை நிலவரம் புரிகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் லூக்கா (15:1-10) காணாமல் போன ஆடு, காணாமல் போன திராக்மா ஆகியவற்றை பற்றி வாசிக்கிறோம். ஆயனுக்கு வழிதவறாத 99 ஆடுகளை விட, வழிதவறிய அந்த ஒரு ஆடு தான் மிக மிக முக்கியம். தொலைந்து போனது/வழிதவறியது மீண்டும் வர இயலாத நிலையில் இருந்தால் தேடிச் சென்று அதை மந்தையில் இணைப்பதே ஆயனின் பொறுப்பு.

இது இன்றைய நம் உறவுகளுக்கும் பொருந்தும்.

ஒன்று இருக்கும் வரை அதன் மதிப்பு புரியாது. அது மனித உறவுகளாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். 

இழந்தது இழந்ததாகவே இருந்தால் இறுதிவரை கவலை தான். தொலைந்ததை கண்டுப் பிடிக்கும் போது உச்சக் கட்ட மகிழ்ச்சி உண்டாகிறது.

ஒருவகையில் சொல்லப்போனால், நம்மவர்களை வழிதவற செய்தவர்கள் நாம் தான். நம் குழந்தைகள் விரும்புகிறவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்கிற போதும் நாம் குழந்தைகளை தொலைத்து விடுகிறோம். எது தேவை, எது சரி என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தாதவரை நாம் ஒவ்வொன்றாக இழக்கிறோம்.

இழந்துப் போனதை தேடி மீட்க மானிட மகன் வந்தது போல நாமும் தொலைந்து போன நம் உறவுகளை தேடிச் செல்வோம். அவர்கள் இழந்த வாழ்வை அவர்களுக்கு திரும்ப பெற்றுக் கொடுப்போம். சரியான பாதையை சுட்டிக் காட்டுவோம்.

விட்டுவிட வேண்டும்...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

06.11.2024 - புதன் கிழமை 

அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர்புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்" - 1 பேதுரு 2:11

வாழ்க்கையில் விட்டுவிட வேண்டியவற்றை விட்டுவிட வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

படகு மூழ்க ஆரம்பிக்கும் போது படகில் இருக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும். படகில் இருக்கும் பொருளை விட்டுவிடவில்லையென்றால் உடலில் இருக்கும் உயிரை விட வேண்டி இருக்கும்.

திட்டம், செயல், தீர்வு இவை தான் நமது இலக்காக இருக்க வேண்டும். திட்டமிடாத செயல்முறைகள் சரியான தீர்வைக் கொணராது.

தேவையற்றவைகளை விட்டுவிட்டால் தேவையானது வந்து சேரும். அது உறவுகளாக/பொருளாக இருக்கலாம்/மனக்கவலையாக இருக்கலாம்... நமக்குரியது ஒருநாள் நிச்சயம் நம்மை வந்து சேரும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் (லூக்கா 14:25-33) இயேசுவின் சீடராக சிலவற்றை விட்டுவிட வேண்டி இருக்கிறது, சிலவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. உறவுகள்/உயிரை கடவுளை விட மேலாகக் கருத கூடாது, அவரவர் சிலுவையை சுமக்க வேண்டும், ஒன்றை செய்வதற்கு முன் திட்டமிட வேண்டும், உடைமைகளை விட்டுவிட வேண்டும்.

இவ்வுலக வாழ்வுக்கு எதுவெல்லாம் முக்கியமாக தென்படுகிறதோ அவையெல்லாம் விண்ணக வாழ்வுக்கு முக்கியம் அல்ல. 

குப்பைகளை தூக்கி மேல போட்டுக் கொண்டால் துர்நாற்றம் நமக்கும் நம் அருகில் இருப்பவர்களுக்கும் தான். கழிவுகளை அகற்ற வேண்டும்/தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும்.

இயேசுவின் பணியில் இணைய தடைகள் இருப்பின் அதை உடைக்க வேண்டும். ஒன்றை இழப்பதன் வழியாக மற்றொன்றை பெற்றுக் கொள்ள முடியும். 

சிலர் இறக்கி வைக்க வேண்டிய சுமைகளை தோளில் ஏற்றி வைக்கிறார்கள். பழிவாங்குதல், ஆணவம், வீண் பெருமை, அதிகாரம் போன்றவை தூக்கி எறியப்பட வேண்டும். இவை நமக்குள் இருந்தால் இயேசுவின் சீடராகும் தகுதி நம்மைவிட்டு போய்விடும்.

தகுதியற்ற நம்மை தகுதிப்படுத்தியவரோடு இணைய தகுதியற்ற இவ்வுலக செல்வங்களை விட்டுவிடுவோம். 

சீராக்கின் ஞானம் 13:2 சொல்வது போல நாம் வாழ வேண்டும், "உன்னால் சுமக்க முடியாத சுமைகளைத் தூக்காதே; உன்னைவிட வலிமை வாய்ந்தோருடனும் செல்வம் படைத்தோருடனும் உறவு கொள்ளாதே. மண்பானைக்கும் இரும்புக் கொப்பரைக்கும் என்ன தொடர்பு? கொப்பரையுடன் பானை மோதிச் சுக்குநூறாகும்."

இவ்வுலக செல்வத்தின் மீதான பற்று அவ்வுலக வாழ்வை கெடுத்து விடும்.

தேவையற்றவைகளை விட்டுவிட்டு பற்று அற்ற வாழ்க்கை வாழ்வோம்.

விண்ணக விருந்துக்கு தயக்கம் வேண்டாம்...

பொதுக் காலம் 31ஆம் வாரம்

22.08.2024 - செவ்வாய்க் கிழமை 

"நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது" - 1 கொரிந்தியார் 10:21

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 14:15-24) விண்ணரசானது திருமண விருந்துக்கு ஒப்பிடப்படுகிறது. திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களோ தகுதியற்று போனார்கள். அழைக்கப்பட்டவர்கள் பலராக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலராக இருந்தனர் என்பதை நற்செய்தி வாசகம் தெளிவுப்படுத்துகிறது. 

விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வராமல் இருக்க பல காரணங்களை சொல்லிக் கொண்டே சென்றார்கள். ஒருவர் வயலுக்கு சென்றார், ஒருவர் ஏர் மாடுகளை ஓட்டிப் பார்க்க சென்றார், புதிதாக திருமணம் ஆகி இருந்ததால் ஒருவரால் வர முடியாது என்றார்.

மேலோட்டமாக, இன்றைய நற்செய்தி வாசகத்தை பார்க்கின்றபோது திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வரவில்லை. ஏன், தலைவர் சினமுற வேண்டும்? என்று தோன்றலாம். 

ஆனால், இங்கு இந்த திருமண விருந்து என்பது இறையாட்சியின் விருந்து. இயேசு தரும் விண்ணக விருந்துக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அழைப்பை நிராகரித்து, இவ்வுலக வாழ்விலே இன்பம் காண எண்ணுகிறார்கள் என்பதைத்தான் மேலே காரணங்களை சொல்லும் மனிதர்களை வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. (நாம் இந்த உலகின் நிரந்தர குடிகள் அல்ல. நமக்கு மேலொரு வாழ்வு உண்டு).

வாய்ப்பு ஒரு தடவை தான் கதவை தட்டும் என்பார்கள். தட்டும் போதே திறக்க வேண்டும், இல்லையென்றால் வாய்ப்பு நம்மை கடந்து சென்றுவிடும். 

வீதி, வழியோரங்களில் காணும் எல்லோரையும் திரும்ப விருந்துக்கு அழைத்து வரச் சொல்கிறார் தலைவர். அப்படி அழைக்கப்பட்டோரில் நல்லோர், தீயோரால் திருமண மண்டபம் நிரம்பியிருந்தது. அந்த அழைப்பின் வழியாக அவர்கள் மனமாற வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தகுதியற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், தகுதியுடையோர் ஆனார்கள், திருமண விருந்தில் கலந்து கொண்டார்கள்.

நாம் விண்ணரசில் நுழைய அழைப்பு (மனமாற்றத்திற்கான அழைப்பு) கொடுக்கப்படுகிறது.

தகுதியற்ற நிலையில் இருந்து நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது தான் விண்ணரசிற்கான நுழைவு சீட்டு.

சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்துவதை விட 'இதோ வருகிறேன்' என்று பதில் கொடுப்போம். 

வார்த்தையும் வாழ்வும் இணைந்து பயணிக்கட்டும்.

விண்ணக கைம்மாறு...


பொதுக் காலம் 31ஆம்  வாரம்

04.11.2024 - திங்கட் கிழமை

"இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்; உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார்” - சீராக் 12:2

எனக்குரியது நிச்சயம் என்னிடம் வரும். அது நான் செய்த நன்மைக்கான கைம்மாறாக இருக்கலாம் அல்லது நான் செய்த தீமைக்கான தண்டனையாக இருக்கலாம். 

(“நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்” - சபை உரையாளர் 12:14)

எந்த நன்மையை யாருக்கும் செய்யாமல் ஆதாயம் தேடுவோரும் உண்டு, மற்றவர்கள் செய்யக்கூடிய நன்மையில் குறுக்கிட்டு, சுரண்டல் செய்து அதன் வாயிலாக பலன்பெறுவோரும் உண்டு. 

இவையெல்லாம் சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே. (நிலையற்ற உலகில் நிலையில்லா மனித அன்புக்காக, பொருளுக்காக ஏங்குகிறது மனித உள்ளம்)

இந்த உலகம் யாருக்கும் நிரந்தரம் அல்ல, நாம் இந்த உலகத்தில் தற்காலிகமாக குடியிருக்கிறோம். நாம் வாழக்கூடிய வாழ்க்கை தான் நமக்கான கைம்மாறை பெற்றுக் கொடுக்கும். நாம் செய்யக் கூடிய நன்மைகளுக்கான பலனை இவ்வுலகிலே எதிர்பார்த்தால் நாம் மறுஉலக வாழ்வில் கைம்மாறை பெற முடியாது. 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு. திருக்குறள் - 211

மழை பொழியும் மேகம் எந்த கைம்மாறையும் எதிர்பார்ப்பதில்லை; மழை போன்று உதவுவோர் கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை.

கடமையை செய்து பலனை எதிர்பாராத வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாற வேண்டும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5: 12-14) தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் நீர் விருந்து அளிக்கும் போது உம் உறவினரை அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். திரும்ப விருந்துக்கு அழைக்க இயலாதவரை விருந்துக்கு அழையும் என்கிறார் இயேசு. 

தெரிந்தவர்களுக்கும் அன்புக்குரியோருக்குமே நாம் உதவிகள் அல்லது நன்மைகள் செய்கிறோம் என்றால் நமக்கான கைம்மாறு இந்த உலகிலே கிடைத்துவிடும். (“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” - மத்தேயு 6:20) நமக்கு திரும்ப உதவி செய்ய இயலாதவருக்கே நாம் உதவ முன்வர வேண்டும். 

திரும்ப கிடைக்கும் என்று எதிர்பாராமல் உதவினால், விண்ணகத்தில் நாம் நிறைவான கைம்மாறை பெறுவோம். எதிர்பாராமல் செய்யும் உதவிகள் ஒருபோதும் ஏமாற்றத்தை தராது. எதிர்பார்ப்போடு செய்யப்படும் உதவிகள் ஏமாற்றத்தை தரும்.

திரும்ப செய்ய இயலாதவருக்கே திரும்ப  திரும்ப உதவி செய்வோம்.

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...