24_12

புதிய ஆண்டில் புதிய ஆசிரை நோக்கி...


அன்னை மரியா - இறைவனின் தாய் பெருவிழா

01.01.2025 - புதன் கிழமை 

2025 ஆம் ஆண்டிற்கான பட்டியல் தயார் நிலையில் இருக்கும். இது மத்திய மாநில பட்டியல் அல்ல, புதிய ஆண்டின் தீர்மானங்கள் அடங்கிய பட்டியல்.

இதை செய்ய வேண்டும் இதை செய்ய கூடாது என்று நாம் பலவற்றை நீக்கியும் சேர்த்தும் வைத்திருப்போம். இவை தேவைதானா? நல்லதை செய்ய ஏன் நாள்/நேரம் பார்க்க வேண்டும்.

செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும், செய்யக் கூடாததை உடனே நிறுத்த வேண்டும். காலம் நேரம் பார்த்து பார்த்து எதை நாம் சாதித்து விட்டோம்.

நிகழ்வு...

குடிகாரன் ஒருவன் குடியை விட தீர்மானித்தான். இன்று ஒருநாள் மட்டும் குடுத்து விடுகிறேன், நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மனைவி பிள்ளைகள் மீது சத்தியம் செய்தான். மறுநாளும் இதே வார்த்தைகளை தான் சொன்னான். திருந்தியபாடில்லை. 

கோபம் கொண்ட மனைவி  ஒருநாள் குடிப்பதற்காக வைத்திருந்த சாராய பாட்டிலை உடைத்து விட்டார். வீறு கொண்டு எழுந்து வந்த கணவனுக்கு ஒரே மிதி. அன்று குடியை மறந்தான் கணவன்.

சிலவற்றை நிறுத்த நாள் தேவையில்லை, நல்ல பாடம் போதும். 

எத்தனையோ தடைகளை தாண்டி கடந்து வந்திருக்கிறோம். இந்த ஆண்டு நல்ல ஆசிரை கொடுக்காதா என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு தான். இழந்ததை பெற்றுக் கொள்ள மனம் ஏங்கத்தான் செய்யும்.

எதிர்பார்ப்பு மட்டும் போதாது எழுந்து செயல்பட வேண்டும். 

கடந்த ஆண்டு கொடுத்த வாழ்க்கை பாடங்களை மறந்து விட கூடாது. நம்மைவிட மற்றவர்களை மதிப்பு குறைந்தவர்களாக எண்ண கூடாது. 

நமக்கு கடவுளின் ஆசீர் எப்போதும் உண்டு. ஆனால் அதற்கு தடையாய் இருப்பவற்றை நீக்க வேண்டும். கடவுளின் கட்டளைக்கு புறம்பாக நடக்கும் போது, நம்மை அறியாமலேயே ஆசீர்வாதங்களை தட்டிக் கழிக்கிறோம். 

ஆலயத்திற்கு தவறாது செல்லும் நபர், ஆனால் கடவுளின் கட்டளையை கடைப்பிடிக்காதவர் எப்படி கடவுளின் ஆசிரை பெற முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் (எண்ணிக்கை 6:22-27) ஆரோன் மற்றும் அவருடைய புதல்வர் வழியாக கொடுக்கப்பட்ட ஆசீர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை 6:24

“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

எண்ணிக்கை 6:25

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!

எண்ணிக்கை 6:26

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!”.

புதிய ஆசிரை பெற பழைய வாழ்வை துறக்க வேண்டும். 

இன்று தாயாம் திருஅவை அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவை கொண்டாடுகிறது.

அன்னை மரியா, "இறைவனின் தாய்" என்ற இவ்விழா கோட்பாடு, இறையியல் அடிப்படையில், ஆழமான கிறிஸ்தியல் சிந்தனைகளைக் கொண்டது. நெஸ்டோரிஸின் தப்பறைக் கோட்பாட்டின்படி, ஒரு சாதாரண நாசரேத் பெண்மணி, இயேசுவின் மனித இயல்புக்கு மட்டும்தான் தாயா? அல்லது இறைத்தன்மை இயேசு பிறந்த பின் ஒட்டிக்கொண்டதா? போன்ற வினாக்களுக்கு கி.பி 431இல் கூடிய எபேசு மாமன்றம், ஒரு தெளிவான விடையை தந்தது. இயேசு கடவுளும் மனிதனுமானவர். அவரில் இரு இயல்புகளும், மனுவுரு எடுத்த நொடிப்பொழுதில் இணைந்தன. 

இறை மனித இயல்புகளைக் கொண்ட, இறைமகன் இயேசுவை, தன் உதரத்தில் சுமந்து கருவறையில் வைத்து காத்ததினால், அன்னை மரியா "இறைவனின் தாய்" என்று அறுதியிட்டு கூறியது.

மரியாவை இறைவனின் தாயாக, முதன்முதலில் அறியக்கூடிய பாக்கியத்தை பெற்றவர் எலிசெபெத். "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசெபெத் கூறுகிறார்" (லூக்கா 1:43). "வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடி கொண்டார்" (யோ. 1:14) என்ற இறைத் திருவுளம், அன்னை மரியா வழியாக உருபெற்றது. ஆண்டவர் இயேசு, தன் தாயிடமிருந்து, மனிதச்சாயலை பெறுகிறார். 

அன்னை மரியா தந்தையாம் கடவுளிடமிருந்து ஆசிரை பெற்றார். அவ்வாசீரை இயேசுவை இவ்வுலகில் பெற்றெடுப்பதன் வழியாக இவ்வுலகிற்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.

நாமும் தாயை போல ஒருவர் மற்றவருக்கு ஆசிராக திகழ்வோம்...

எல்லாம் அவரால் உண்டானது...


கிறிஸ்து பிறப்புக் காலம் 

31.12.2024 - செவ்வாய்க் கிழமை 

"அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது" - திருப்பாடல்கள் 33:9

இந்த உலகம் உண்டானது என்கிறது அறிவியல். இந்த உலகம் உண்டாக்கப்பட்டது என்கிறது விவிலியம். ஒன்றுமில்லாமையிலிருந்து தானாக ஒன்றும் உண்டாக முடியாது. ஏதேனும் ஒன்று முதலில் உருவாக்கப்பட வேண்டும். அதை யார் உருவாக்கியது என்ற கேள்வி கேட்கப்பட வேண்டும். 

இந்த உலகத்தை படைத்தவர் கடவுள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு என்றாலும் நம்மை சுற்றி இருப்பவற்றை நாம் தான் உருவாக்கினோம் என்ற ஆணவம் நம்மில் இருக்கிறது. 

10லிட்டர் தண்ணீரை ஒரு மண்பானை தக்க வைத்துக் கொள்கிறது என்றால் அந்த பானைக்கு அதனால் பெருமை வந்து சேராது, பானையை வனைந்த குயவனுக்கே அந்த பெருமை சேரும்.

படைக்கப்பட்டது படைப்பின் பெருமையை தேடிக் கொள்ள இங்கு போராடுகிறது. படைத்தவரையே இங்கு போட்டிக்கு அழைக்கும் எண்ணம் வந்து விட்டது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:1-18) வாக்கு மனிதரான கடவுளை விவரிக்கிறார் நற்செய்தியாளர் யோவான். "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்" - யோவான் 1:14

நேரிடையாக அல்ல, மறைமுகமாக/அறியாமலேயே இன்று உலகம் கடவுளை எதிர்க்கிறது. கடவுளை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் உலகு சார்ந்த காரியங்களில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம். 

நம்மைக் குறித்து அளவுகடந்த பெருமிதம் கொள்கிறோம். அருளும் உண்மையும் இயேசு வழியாய் வெளிப்பட்டது, தந்தையை நமக்கு வெளிப்படுத்தியவரும் அவரே என்பதை மறந்து விடுகிறோம்.

நாம் மனதில் இருத்த வேண்டியது,

நாம் எதையும் ஒன்றும் இல்லா நிலையிலிருந்து உருவாக்கவில்லை, நாமும் உண்டாக்கப்பட்டவர்கள் தான். 

நாம் நம்மை படைத்தவருக்கே உரியவர்கள்.

நாம் அவருக்கே கணக்கு கொடுக்க வேண்டும்.

கடவுளை அறிந்து அவர் திருவுளப்படி நடக்க வேண்டும்.

அவரை நாம் ஏற்றுக் கொண்டால் அவருடைய பிள்ளைகள் ஆவோம்.

பெருமை பாரட்டுகிறவர் தன்னை உண்டாக்கினவரை குறித்து பெருமை பாராட்ட வேண்டும்.

நாம் இந்த உலகின் நிரந்தர குடிகள் அல்ல, இந்த உலகம் தற்காலிகமானது. நாம் படைத்தவரிடமே திரும்ப வேண்டும்...

கோவிலை விட்டு நீங்காத கைம்பெண்...


கிறிஸ்து பிறப்புக் காலம் 

30.12.2024 - திங்கட் கிழமை 

ஒரு போதும் உனை பிரியா நிலையான உறவொன்று வேண்டும்

என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும்... என்ற பாடல் வரிகள் வெற்று வார்த்தைகளாகவே போய் விட்டது. கடவுள் ஒருபுறம் நம் வாழ்க்கை மறுபுறம்.

கடவுள் பயம் இல்லாத காரணத்தால் இன்று பல அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன. கடவுளை விட்டு பிரிந்து செல்லுதல் என்பது கடவுள் வகுத்திருக்கும் வாழ்க்கை நெறி/உண்மை வாழ்வு ஆகியவற்றில் இருந்து விலகி செல்வது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 2:36-40) பானுவேலின் மகளாகிய அன்னா, எண்பத்தி நான்கு வயது ஆன நிலையிலும் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வருகிறார். கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட மீட்பரை கண்டு கடவுளை போற்றி புகழ்கிறார். அக்குழந்தையை குறித்து எல்லாரிடமும் பேசுகிறார். 

கோவிலை விட்டு நீங்காததற்கு காரணம், கடவுளை போற்றி புகழ்வதற்காக, கோவிலில் திருப்பணி செய்ய.

இன்று நம்மை போன்றோரும் திருப்பலி முடிந்த பிறகு, கோவிலை விட்டு நீங்காமல் இருக்கிறோம். அதற்கு காரணம் மற்றவர்களை குறித்து அவதூறு பேச, மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்க, கடவுளின் திருப்பெயரை இழிவுப்படுத்த...

கோவிலும் கோவில் இருக்கும் வளாகமும் புனிதம் நிறைந்தது. ஆனால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் இங்கு கூடி இருந்து தான் பலரின் குடும்பத்தை அழிக்கிறார்கள்.

கோவிலின் புனிதம் கெடும் போது, நாம் கடவுளை தான் இழிவுப்படுத்துகிறோம்.

நாம் தேடிச் செல்லும் கடவுளின் கோவிலும் நம் உள்ளமும் இறைவனின் வருகைக்காக ஆயத்தமாக இருக்க வேண்டும்...

அன்பின் பிரதிபலிப்பு திருக்குடும்பம்...


திருக்குடும்ப விழா

29.12.2024 - ஞாயிற்றுக் கிழமை 

இரண்டு வகை குடும்பங்களை நாம் இவ்வுலகில் பார்க்கலாம். 1. திருக்குடும்பம் 2. தெருக் குடும்பம்.

எந்த குடும்பத்தில் பிரச்சினை குடும்பத்திற்கு உள்ளேயே தீர்க்கப்படுகிறதோ அது திருகுடும்பத்தின் பிரதிபலிப்பு. எந்த குடும்பத்தின் பிரச்சினை தெருவரை வந்து, குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கிறதோ அது தெருக் குடும்பம்.

எல்லா குடும்பத்திலும் பிரச்சினை உண்டு, எல்லா குடும்பங்களும் நிறை குறைகளோடு தான் பயணிக்கிறது. திருமணத்திற்கு முன்பும் திருமணத்தின் போதும் இனிக்கின்ற வாழ்க்கை, திருமணம் முடிந்த சில மாதங்களில் கசக்க ஆரம்பிக்கிறது. கணவனோ/மனைவியோ எதிரியாக பார்க்கப்படுகிறார்.

தொடக்கத்தில் இவரை(கணவனை/மனைவியை) பற்றி தெரிந்திருந்தால் திருமணமே செய்திருக்க மாட்டேன் என்று சொல்லும் அனைவருமே பொய் தான் சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லாம் தெரிந்தாலும் கூட கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பலர் தொடக்கத்தில் சிக்கல்களை தட்டிக் கழித்து விடுகின்றனர்.

ஒருவரை பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு தான் உறவு கசக்க ஆரம்பிக்கிறது. (ஒருவரை பற்றி தெரிந்துக் கொள்வது தவறல்ல; அடுத்தவரை பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள எண்ணுவது மிக மிக ஆபத்தானது. மற்றவர்களுடைய ரகசிய வாழ்க்கையை அறிய ஆரம்பிக்கும் போது அது நம் மனதின் நிம்மதியை கெடுத்து விடுகிறது).

இன்றைய நாளில் தாய்த் திருஅவை இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பத்தை கொண்டாடுகிறது. எளிய வாழ்வு தான் இக்குடும்பத்தில் காணப்பட்ட உயரிய பண்பு. சந்தேகம், கலக்கம், தடுமாற்றம், தயக்கம், இடர் என எல்லாம் இருந்தது. ஆனால் யாரும் யாரையும் குறை சொல்லவில்லை. 

இக்குடும்பத்தில் இறை அச்சம் இருந்தது

இக்குடும்பத்தில் இறை நம்பிக்கை இருந்தது

இக்குடும்பத்தில் அன்பு இருந்தது

இக்குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் பண்பு இருந்தது

இக்குடும்பத்தில் இணைந்து பயணிக்கும் பண்பு இருந்தது 

இக்குடும்பத்தில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் இருந்தது

ஆகவே தான் முன்மாதிரியான குடும்பமாக மாறியது... 

இன்று குடும்பங்களில் பணம், செல்வம், ஆணவம், செருக்கு, அகங்காரம், தலைக்கணம் என எல்லாம் இருக்கிறது. இவை இருப்பதால் குடும்பங்கள் பிரிந்துக் கிடக்கிறது. (தங்கள் தலை மேலே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள்).

குடும்பங்கள் தற்பெருமையால் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

மனைவி கோபமாக இருக்கும் போது கணவன் அமைதி காக்க வேண்டும். கணவன் கோபமாக இருக்கும் போது மனைவி அமைதி காக்க வேண்டும்.

யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க தான் வேண்டும். நம் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட குடும்ப பிரச்சினையை பொது பிரச்சினையாக்கும் போது அது ஒருபோதும் தீராது. 

இன்று குடும்ப பிரச்சினைகள் திரையில் காட்டப்பட்டு பணம் சம்பாதிக்கபடுகிறது. (உதாரணமாக, சொல்வதெல்லாம் உண்மை).

கணவன் மனைவி விதை மண்ணாக இருக்கும் போது அதிலிருந்து பிள்ளைகள் என்னும் செடி நன்கு முளைத்து வளரும்.

பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் அல்ல; பெற்றோரின் வாழ்க்கை முறையில் இருக்கிறது.

குடும்பங்கள் பிரிய நாம் ஒருபோதும் காரணமாய் இருக்க கூடாது. 

நம் குடும்பங்கள் திருக்குடும்பத்தின் முன்மாதிரியை பின்பற்றப்படும். அன்பில் நம் குடும்பங்கள் மூழ்கி முத்தெடுக்கட்டும். யாருக்காகவும் எதற்காகவும் நம்மை நாடி வந்தவர்களை கைவிடாமல் இருப்போம்.

இது தான் திருக்குடும்ப விழா நமக்கு உணர்த்தும் செய்தி...

மாசில்லா குழந்தைகளின் மறைசாட்சியம்...


கிறிஸ்து பிறப்பு காலம்

28.12.2024 - சனிக் கிழமை 

இந்த குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்?

ஏரோதா? ஞானிகளா? படைவீரர்களா? பெற்றோர்களின் அச்சமா? கடவுளா? குழந்தை இயேசுவா? இறைவாக்கினர் எரேமியாவா? யாரை குறை சொல்வது?

தன் பதவி பறி போய் விடுமோ என்ற அச்சம் ஏரோதை கொடூரனாக மாற்றியது.

கனவில் எச்சரிக்கப்பட்டதால் மாற்று வழியாக சென்றார்கள் ஞானிகள்.

அரசன் சொன்னதை செய்தார்கள் படைவீரர்கள்.

இறைவாக்கு உரைப்பது இறைவாக்கினரின் பணி அல்லவா!

கடவுளை தான் பழிச் சொல்ல வேண்டுமோ!

தவறே செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? அநீதிக்கு பழிவாங்கும் கடவுள் அநியாயமாக செயல்படலாமா?

கேள்வி... கேள்வி... கேள்வி... மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை பழிச் சொல்வதும் நியாயமாகப்படுவதில்லை. நீதிமொழிகள் 14:2 இவ்வாறு சொல்கிறது, "நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.

முழுக்க முழுக்க இது பதவி ஆசையினால்/பேராசையினால் நடந்த விபரீதம் தான். இருப்பதற்கும் அதிகமாக தேடியதால் நடந்த கொலை. கடவுள் கொடுத்த சுதந்திரம் இங்கு தவறாக பயன்படுத்தப்பட்டது. (ஆதாம் ஏவாள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினார்கள், தன்னிலை மறந்தார்கள்).

இந்த ஏரோது தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி தன் சொந்த பிள்ளைகளைக் கூட கொன்று போட்டவன், தன்னுடைய சகோதரன், மருமகன், மனைவி மரியம்மை, மனைவியின் அன்னை அலெக்சாந்திரா ஆகியோரையும் கூட கொன்று போட்டவன். இப்படிபட்டவன் எப்படி குழந்தைகளை விட்டு வைப்பான்.

நமக்கு பிடித்தவர்களுக்கு தான், நாம் நம்மை தியாகம் செய்வோம். முன்பின் அறியாத நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு. அறியாத ஒருவருக்காக நாம் தியாகம் செய்வதால் என்ன இலாபம் என்ற கேள்வியும் நமக்குள் எழும்.

கிறிஸ்துவை அறியாமலேயே கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி, கிறிஸ்துவை அறிவித்தவர்கள் இந்த குழந்தைகள். 

புனித அகுஸ்தீன் சொல்வார், "மாசில்லாக் குழந்தைகளின் இறப்பில் விண்ணில் மொட்டுகள் மலருகின்றன" என்று. குழந்தைகளுக்கு வீரம் இல்லை என்று யார் சொன்னது? தங்கள் உயிரை பணயம் வைத்து ஒரு குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்கள் மாசில்லா படைவீரர்கள்...

அறியாத குழந்தைகளே கிறிஸ்துவை அறிவித்தார்கள் என்றால் நாம் அறிந்த நிலையில் அறிவிக்காமல் இருப்பது ஏன்? இரத்த சாட்சிகளாக வேண்டாம்; மற்றவர்களின் இரத்தத்தை சிந்தாத சாட்சிகளாக வாழ்வோம்.

வாழ்வு அவரால் கொடுக்கப்பட்டது; அவர் கொடுத்ததை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. 

அன்பு இறுதிவரை உடனிருக்கும்...


புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் 

27.12.2024 - வெள்ளிக் கிழமை 

"அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்"- 1யோவான் 4:8

இந்த உலகம் இரண்டு காரியங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒன்று பணத்திற்காக மற்றொன்று அன்பிற்காக...

இந்த இரண்டும் மதிப்பு இழக்கும் போது வாழ்க்கை வெறுத்து விடுகிறது.

நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவர்களை நன்கு கவனித்துக் கொள்ள (பணம் சம்பாதிக்க) ஓடுகிறோம். நம்மை நேசிப்பவர்கள் விலகி போனால் வாழ்க்கை வெறுமையாகிறது.

ஒருவரை பிடித்து விட்டால் அவருக்காக எதையும் துறப்போம்/ எதையும் இழப்போம். நாம் அன்பு செய்யும் நபருக்காக இறுதிவரை உடனிருப்போம். எத்தகைய நெருக்கடி வந்தாலும் ஓடி விட மாட்டோம்.

இன்றைய நாளில் தாய்த் திருஅவை திருத்தூதர் யோவானின் விழாவை கொண்டாடுகிறது. 

இயேசுவை அதிகமாக அன்பு செய்த நபர். இயேசுவின் அன்புச் சீடர் இவர்... மனம் மாறுங்கள் என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளால் கவரப்பட்டு அவரை பின்பற்றினார். இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி என்று திருமுழுக்கு யோவான் இயேசுவை சுட்டிக் காட்டிய போது இயேசுவை பின் தொடர்ந்து இயேசுவோடு தங்கினார். இயேசுவின் அன்புச் சீடராக மாறினார். 

இயேசுவின் முக்கிய பயணங்களில்/பணிகளில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த அளவுக்கு யோவான் இயேசுவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

யோவான் நற்செய்தி, 1,2,3 யோவான், திருவெளிப்பாடு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மற்ற சீடர்கள் இயேசுவின் சிலுவை பாடுகளில் பங்கேற்க தவறினார்கள், ஆனால் இவரோ இறுதிவரை இயேசுவோடு உடன் இருந்தார்.

இயேசுவின் தாயை தனது தாயாக ஏற்கும் வாய்ப்பை பெற்றார். இயேசுவை அன்பு செய்தவர், இயேசுவின் அன்புத் தாயையே பரிசாக பெற்றார்.

உரோமை பேரரசன் தொமிசியனின் காலத்தில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானார்; கொதிக்கும் எண்ணெய்த் தொட்டியில் இவர் வீசப்பட்டார், ஆனாலும் உயிர்த் தப்பினார். பத்மூ தீவில் சிறைவாசம் அனுபவித்தார். 

வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் போது தன்னைக் காண வருபவர்களிடம், "ஒருவர் மற்றவரிடம் அன்பாய் இருங்கள்" என்று சொல்வாராம்.

இயேசுவின் சீடர்களில் படுகொலை செய்யப்படாமல் நீண்டநாள்கள் வாழ்ந்து இறந்த ஒரே சீடர் இவர் தான்.

போராட்டம் நிறைந்த உலகில் உண்மை அன்பை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டி இருக்கிறது. சில அன்பானவர்களின் அன்பு காரியம் முடிந்ததும் போலியாகிவிடுகிறது. 

உண்மை அன்பைத் தேடுவதை சற்று நிறுத்தி விட்டு உண்மையுள்ளவர்களாய் இருக்க முயல்வோம். 

அன்பு ஒருபோதும் ஏமாற்றம் தராது. அன்பில் அச்சத்திற்கு இடம் இல்லை.

அன்பு ஆதாயம் காணாத அன்பாக இருந்தால் அன்பு நிலைத்திருக்கும், இறுதி வரை உடனிருக்கும்.

துணிச்சல் மிக்க திருத்தொண்டர் ஸ்தேவான்..


கிறிஸ்து பிறப்புக் காலம் 

26.12.2024 - வியாழக் கிழமை 

காற்றுக்கும் வீரம் உண்டு, ஓங்கி காற்று வீசும் போது அது தெரியும்.

தண்ணீர்க்கும் வீரம் உண்டு, தண்ணீரின் ஓட்டம் அதிகமாகும் போது அது தெரியும்.

பொறுமையுள்ள அனைவருக்கும் வீரம் உண்டு அது ஒரு நாள் வெளிப்படும்.

இந்த உலகம் எதை வீரம் என்று சொல்கிறது? அரிவாள், துப்பாக்கி, ஈட்டி, வெடி ஆகியவற்றை பயன்படுத்தும் நபர்கள் வீரம்/ துணிச்சல் உள்ளவர்கள் என்கிறது உலகம். உண்மையை சொல்லப் போனால் ஆயுதத்தை கையாளுவதில் வீரம் அடங்கி இருப்பதில்லை.

அறிவையும் நேர்வழியில் ஆற்றலை பயன்படுத்துவதில் தான் துணிச்சலும் வீரமும் அடங்கி இருக்கிறது.

இன்றைய நாளில் தாய்த் திருஅவை முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவானை கொண்டாடுகிறது.

திருத்தொண்டருக்கு கொடுக்கப்பட்ட பணியோ பந்தியில் உணவு பரிமாறுகிற பணி. ஆனால் அதையும் கடந்து தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவார்தையை அறிவிக்கிறார். அரும்அடையாளங்களையும் செய்தார்.

அதை ஏற்க மறுத்த மக்களுக்கு பழைய ஏற்பாட்டு நிகழ்வை தொகுத்து கொடுத்தார். யாரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள், நீங்களும் கிறிஸ்துவை கொன்று விட்டீர்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

திருத்தூதர் பணிகள் 7:51இல் பார்க்கிறோம். அம்மக்களை நோக்கி, திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள்.

இதனால் கோபம் கொண்டவர்கள் அவர்மேல் கல் எரிந்து கொன்று விட்டார்கள்.

நன்மையை எதிர்ப்பவர்களை எதிர்க்க துணிச்சல் தேவைப்படுகிறது. இங்கு ஸ்தேவான் கொண்டிருந்த வீரம்/துணிச்சல் தூய ஆவியால் கொடுக்கப்பட்டது.

இறைவார்த்தையை எதிர்ப்போரை நன்மையால் எதிர்க்க வேண்டும்.

தீமையோடு எப்போதும் சமரசம் செய்து விட கூடாது.

உடல் வீரமல்ல, உள்ள வீரமே முக்கியம்.

தன்னை அல்ல, தன்னை உண்டாக்கினவரை முன்னிலைப்படுத்த வேண்டும்.

கொடுக்கப்பட்ட துணிச்சல் என்னும் ஆற்றலை கொண்டு நல்லதை பேச/செய்ய வேண்டும்.

ஸ்தேவான் தனது ஆவியை இயேசுவிடம் ஒப்படைத்தார். தன்னை கல்லால் எறிந்தவர்களையும் மனமார மன்னித்தார்.

நாமும் உண்மையை உரக்கச் சொல்ல துணிச்சல் பெறுவோம். இருக்கும் துணிச்சலை சரியாக பயன்படுத்துவோம்.

அர்த்தம் இழந்து நிற்கும் கிறிஸ்துவின் பிறப்பு...


கிறிஸ்து பிறப்பு காலம் 

25.12.2024 - புதன் கிழமை 

ஏன் கிறிஸ்து பிறப்பை கொண்டாட வேண்டும்? கிறிஸ்து பிறப்பு நமக்கு சுட்டிக் காட்டும் விழுமியம் என்ன? கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன்று அர்த்தமுள்ள முறையில் கொண்டாடப்படுகிறதா? என்ற கேள்வியை கேட்டு பார்க்க வேண்டும்.

பகிர்வில்லாத கிறிஸ்துமஸ் எப்படி கிறிஸ்துமஸ் ஆக இருக்க முடியும்? அன்பை விதைக்காத மனிதன் எப்படி கிறித்தவராக இருக்க முடியும்?

இன்றைய காலக் கட்டங்களில் பணம் தூக்கி வீசப்படுகிறது. ஆடம்பரங்கள் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துவின் பண்பு நலன்கள் பகிரப்படவில்லை. 

நிகழ்வு -

வறுமையில் வாடிய குடும்பம். குடும்பத்தில் மொத்தம் 3 நபர்கள். தந்தை கூலி வேலை செய்பவர். தாய் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர்களுக்கு ஒரே ஒரு மகன்.

கடினப்பட்டு எப்படியோ மகனை நன்கு படிக்க வைத்து விட்டார்கள். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். அன்று சென்ற மகன் அதன்பின்னர் திரும்ப வரவே இல்லை.

தனக்கு கிடைத்த வாழ்க்கையை பெரிதாக எண்ணி தாய் தந்தையை மறந்து விட்டான். கல் மனம் கொண்டவன் மகனாக இருந்தாலும் இளகிய மனம் கொண்டவர்கள் தாய் தந்தை அல்லவா! மருத்துவ சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்து விடுகிறார். 

அதற்கும் மகன் வரவில்லை. நாட்கள் சென்று கொண்டிருக்கிறது. மகனுக்கு செய்த தொழிலில் பெரும் இழப்பு. கைவிடப்பட்ட நிலையில் உடன் இருந்த மனைவி பிள்ளைகள் துரத்தி விட்டார்கள். 

எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த மகனுக்கு தந்தை நினைவுக்கு வந்தார். செல்வதற்கு தயக்கம், வெட்கமாக இருந்தது. இருந்தபோதிலும் தந்தையை வீட்டிற்கு சென்றான் மகன். 

தந்தை எந்த வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டவில்லை. வா பா உட்காரு என்றார். மகனுக்கு ஆறுதல் கிடைத்தது. மகன் நடந்ததை சொல்வதற்கு வாய் திறப்பதற்கு முன் தன் மனைவியின் தாலி செயினை கையில் கொடுத்தார் தந்தை.

கண்ணீர் விட்டு அழுதான் மகன். தாய் தந்தைக்காக எதையும் கொடுக்க மனம் இல்லாத மகனுக்கு இழப்பிலும் இருப்பதை கொடுத்து விட்டார் தந்தை.

தியாகம் இழப்பிலும் தொடரும்.

இயேசுவின் பிறப்பு தியாகத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் அடையாளம், 

கடவுள் வடிவில் விளங்கிய அவர் மனிதனாக இவ்வுலகில் உதித்தார் - தியாகம் 

தீவனத் தொட்டி உணவு வழங்கும் இடம், கிறிஸ்து தன்னை பகிர்ந்து கொடுத்தார் - பகிர்வு

தாழ்த்தப்பட்டவர்கள், கீழானவர்கள் என்ற நிலையை ஒளித்து சமத்துவத்தை விதைத்தார் - சமத்துவம்

எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தி சொல்லப்பட்டது - மகிழ்ச்சி

இம்மானுவேல்  என்றால் கடவுள் நம்மோடு - உடனிருப்பு

இன்று இந்த பண்பு நலன்கள் நம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளிப்படுகின்றதா என்பது கேள்விக் குறியே!

தேவையானவை ஓரங்கட்டப்பட்டு இன்று ஆடம்பரங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன...

கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதோடு, புதிய ஆடை அணிவதோடு, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் இல் பதிவேற்றம் செய்வதோடு கிறிஸ்துமஸ் நிறைவு பெறுகிறது.

கிறிஸ்துமஸ் தனது அர்த்தத்தை இழந்து நிற்கிறது. கிறிஸ்து விதைத்த இறையாட்சி என்னும் கனவு முழுமை அடையவில்லை.

அன்பு, மகிழ்ச்சியை விலைக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். தற்காலிக/போலியான அன்பு நமக்கு பழகி போய் விட்டது.

கிறிஸ்துமஸை கொண்டாடுகிறோம் ஆனால் கிறிஸ்துவை கொண்டாட தவறி விட்டோம். 

திருப்பலி முடிந்து பொருத்தமற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆலயத்தின் முன்னே அரங்கேறுவது நம் ஆன்மிகத்தை தடுமாற செய்கிறது.

நாவில் நற்கருணை பெற்று விட்டு, திருப்பலி முடிந்த உடனே மதுவை தேடிச் செல்வது நாம் இன்னும் இறையன்பை சுவைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் கொண்டாட்டம் தான், ஆனாலும் அது அர்த்தமுள்ள கிறிஸ்துமஸாக இருக்க முயற்சி எடுப்போம்...

தூய்மையோடும் நேர்மையோடும் பணிசெய்ய...


திருவருகைக் காலம் 4ஆம் வாரம்

24.12.2024 - செவ்வாய்க் கிழமை 

"உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்" - எசாயா 1:16

நம்மை வெறுப்போரும் சபிப்போரும் உண்டு, நம்மை ஏற்றுக் கொள்வோரும் நமக்கு ஆசீர் கூறுவோரும் உண்டு.

நம்முடைய செயல்களை ஏற்றுக் கொள்வோர் நம்மை ஏற்றுக் கொள்வர்... நம் செயல்களை வெறுப்போர் நம்மையும் வெறுப்பர்...

பிறருக்காக வாழ ஆரம்பித்தால் ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பணியில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் யாருக்காகவும் எதற்காகவும் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

தூய்மையும் நேர்மையும் நம்மில் இருந்தால் மனதில் நிறைவும் அமைதியும் தோன்றும். அத்தகைய அமைதியை யாரும் சிதைக்க முடியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:67-79) செக்கரியா தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு இறைவாக்கு உரைக்கிறார்.

வரலாற்றில், இறைவன் கொடுத்த வாக்கையும் உடன்படிக்கையையும் நிறைவேற்ற வல்லவர் என்பது இவரது கூற்று வழியாக வெளிப்படுகிறது.

கடவுளை போற்றுவோம், ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார் என்று கடவுளை புகழ்கிறார்.

செக்கரியா மீட்பரின் வருகையை முன்னறிவிக்கிறார். கடவுள் தொடக்கத்தில் முன்னறிவித்த வாக்கு மெசியா வழியாக வெளிப்பட போகிறது என்பது இவரது வாக்கிலிருந்து வெளிப்படுகிறது.

மீட்பரின் வருகையை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியது, "தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்ய வேண்டும்.

நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்க செய்ய விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.

யாருக்காகவும் நம் தூய்மை, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமல் வாழ்வோம்... மற்றவர்களையும் வாழ வைப்போம்...

விண்ணிலிருந்து வரும் விடியலை போல நாமும் இவ்வுலகை பொய்மையிலிருந்து உண்மை நோக்கி விடிய வைப்போம்.

இருளிருந்து ஒளி நோக்கி பயணிக்க வைப்போம்

இழந்ததை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். நாமும் மற்றவர் வாழ்வில் விடியல் ஆவோம்.

கடவுள் தந்த பெயர்...


திருவருகைக் காலம் 4ஆம் வாரம்

23.12.2024 - திங்கட் கிழமை 

"என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்" - எசாயா 45:4

ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் இருக்கிறது. பேரும் புகழும் பெற்று வாழ ஒவ்வொருவரும் ஆசைப்படுவர். 

நல்ல பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும். ஆனால் கெட்ட பெயர் வாங்க ஒரு நொடி போதும். ஒரு ஆளுக்கு குடும்பத்தினர் வைக்கும் பெயர் ஒன்றாக இருக்கும், உலகம் வைக்கும் பெயர் மற்றொன்றாக இருக்கும். 

இதை புனை பெயர் என்று சொல்லலாம். இந்த உலகத்தினர் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்தால் நல்ல பெயரை எடுக்கலாம். ஆனால் இங்கு பிரச்சினை என்பது எல்லோரையும் நாம் சமரசம் செய்ய முடியாது. எல்லோருக்கும் நல்லவராகவும் இருக்க முடியாது.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை தந்திருக்கிறார். உதாரணமாக, 

எரேமியா 31:20இல், “எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா? 

எசாயா 44:21இல்

யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்; நீ என் ஊழியன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.

எரேமியா 51:20இல்,

நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்; நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன்.

இவ்வாறு நம்மை பல பெயர்களில் அழைக்கிறார் கடவுள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:57-66)  'இக்குழந்தையின் பெயர் யோவான்!' என்பதை வாய்பேச முடியாத தந்தை செக்கரியா எழுதுபலகை ஒன்றை வாங்கி எழுதுகிறார். அவரின் பெயரோ கடவுளின் தூதரால் கொடுக்கப்பட்டது.

திருமுழுக்கு யோவான் தாயின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் (லூக் 1: 41).

திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களான செக்கரியாவும் எலிசபெத்தும் நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்கள். இருந்தபோதிலும், அவர்கள் கடவுளுடைய பார்வையில் நேர்மையுள்ளவர்களாக இருந்தார்கள் (லூக் 1:6), அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.

பிறக்கும் முன்னரே திருமுழுக்கு யோவானுக்கு பெயர் சூட்டப்படுகிறது. கடவுள் தந்த பெயர் கடவுள் தந்த வாழ்வை சுட்டுகிறது.

கடவுள் தந்த பெயரை களங்கப்படுத்தாது வாழ நாம் அழைக்கப்படுகிறோம். அது நம் பெயராக/அடுத்தவர் பெயராக கூட இருக்கலாம்.

தாய் தந்தையின் பெயரை களங்கப்படுத்தும் பிள்ளை தன் மேலே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம்.

பெற்றுக்கொண்ட அழைப்புகேற்ப வாழ்வோம். கடவுள் தந்த பெயரை கறையின்றி பாதுகாப்போம்...

அன்பின் ஞாயிறு



திருவருகைக் காலம் 4ஆம் வாரம்

22.12.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது" 1கொரிந்தியர் 13:13

   அன்பு இல்லாத உலகில்

   அன்பை தேடி அலைந்தேன்

   அன்பு இல்லாத மனிதனிடம்

   அன்பை தேடி வந்தார்- இயேசு

    அன்பை தேடி வந்தார்

           அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு

            நம்பு நம்பு உன் வாழ்வில் நம்பு 

- என்ற பாடல் வரிகள் உலக அன்பையும் இறை அன்பையும் எடுத்துரைக்கிறது. 

இந்த உலகில், மனிதர்கள் போட்டி போட்டி அன்பு செய்கிறார்கள் பணத்தை. யாரிடம் செல்வம் அதிகம் இருக்கிறதோ அவர் நிறைவாக அன்பு செய்யப்படுகிறார். யார் ஏழையாக இருக்கிறாரோ அவர் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.

"பணம் செல்லாது" என்று அறிவிப்பு வந்தால் இங்கு உண்மையான அன்பை கண்டுக் கொள்ளலாம். அன்பும் இங்கு விலைபேசப் படுகிறது. தூரத்து சொந்தம் பணம் இல்லாததால் தூரமாகவே சென்று விடுகிறது. 

பணம், அதிகாரம், புகழ் இருந்தால் தான் எல்லாம் என்ற மனநிலைக்கு நாம் வந்து விட்டோம்.

அலைபேசி கூட ரிசார்ச் செய்யப்படவில்லை என்றால் ஓரமாக தான் கிடக்கிறது. 

பணம் இருந்தால் தான் இங்கு முதல் வரையில் இடம் கிடைக்கிறது.

பணம் இருந்தால் தான் கதவும் திறந்துவிடப்படுகிறது. 

பணம் இருந்தால் தான் உறவும் சேருகிறது.

இப்படி பணம் பேசும் பொருளாக மாறிவிட்டது. அன்பு அனாதையாக மாறிவிட்டது.

இப்படிப்பட்ட உலகில் தான் அன்பை தேடி வந்தார் இயேசு. 

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 8:9 இவ்வாறு சொல்கிறது, "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்". 

செல்வத்தை கொண்டு சேர்க்கமுடியாத அன்பை விதைத்தார் இயேசு. 

அன்பு ஓர் ஆயுதம். அன்பினால் அடிமையாக்கப்பட்டு வாழ்வை இழந்தவர்களும் அல்லது ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு, அன்பினால் வாழ்வை பெற்றவர்களும் உண்டு. அன்பு செலுத்தும் அல்லது அன்பை பெறும் நபரை பொறுத்து அது மாறுபடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-45) கடவுள் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தம் உறவினரான எலிசபெத் மீது கொண்ட அன்பினாலும் கிட்டத்தட்ட 80 லிருந்து 100 கிலோ மீட்டர் தூரம் கடந்து, உதவி செய்திருக்கிறார் அன்னை மரியா. 

அன்பை பரிமாற தூரமோ/நேரமோ தடையல்ல என்பதை அன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (மீக்கா 5:2-5) யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதான பெத்லகேம் கடவுளால் தெரிந்துக் கொள்ளப் பட்டது என்பது வெளிப்படையாகிறது. இஸ்ரயேலை ஆள்பவர் அங்கிருந்து தான் தோன்றுவார் என்பது வெளிப்படை.

அமைதியை அருள, மக்கள் அச்சமின்றி வாழ,  மந்தையை மேய்க்க தலைவர் கொடுக்கப்படுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபிரேயர் 10:5-10) இயேசு தம் உடலை பலியாகச் செலுத்தியதிலிருந்து நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம் என்பது விளக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளப்பெருக்கு காலத்தில் கைம்மாறு கருதாமல் செய்யப்பட்டது அன்பினாலே! 

புயல் காலத்தில் ஓடோடி சென்று உதவிய கால்கள் அன்பின் கால்களே!

தனக்கு எதுவும் தேவையில்லை என்று இருப்பதை இழக்கும் உள்ளங்கள் அன்பு உள்ளங்களே!

இந்த உலகிலும் எதையும் எதிர்பாரா அன்பு உள்ளங்கள் வாழத்தான் செய்கிறது.

வெறுமனே செபங்களை சொல்லிவிட்டு, ஆலயம் சென்று விட்டு கடந்து செல்வது கிறித்தவம் ஆகாது.

கடவுள் அன்பாய் இருக்கிறார் என்பது வாழ்ந்துக் காட்டப்பட வேண்டாம்.

இறைவனை அன்பு செய்ய ஒரே வழி அடுத்திருப்பவரை அன்பு செய்வது தான்.

கைம்மாறு கருதாமல் அன்பை விதைப்போம்; எல்லாம் அமுக்கி குலுக்கி சேர்த்துக் கொடுக்கப்படும்.

சந்திப்பில் விளையும் மகிழ்ச்சி

21.12.2024 - சனிக் கிழமை 

திருவருகைக் காலம் 3ஆம் வாரம்

"நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன" - திருப்பாடல்கள் 97:11

தூரத்தில் இருப்பவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர் அதிகம். பலர் அருகில் இருப்பவர்களிள்/உடன் இருப்பவர்களின் அன்பை கூட நிராகத்து விடுவர்.

ஒவ்வொரு மனிதருடைய சந்திப்பும் வித்தியாசமான மகிழ்ச்சியை கொடுக்க வல்லது. காத்திருந்து காத்திருந்து காணும் சந்திப்பு அளப்பரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஒருவரை இழந்த பின்னரும் இழந்தவரை நினைவுகளின் வாயிலாக இன்று பலர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அந்த சந்திப்பு அன்பின் வெளிப்பாடு. அந்த அன்பு மகிழ்வில் முழுமை பெறுகிறது. 

நாம் தேவையில் இருக்கின்ற போது நாம் எதிர்பாராத சமயத்தில், நமக்கு மிகவும் பிடித்த நபர் நம்மை சந்திக்கிறார், நம்மோடு உடன் இருக்கிறார் என்றால் அந்த மகிழ்ச்சியின் உணர்வை வரையறை செய்ய முடியாது. பொருள் கொடுத்து பெறப்படும் மகிழ்ச்சியை விட சந்திப்பின்/உடனிருப்பின் வழியாக பெறப்படும் மகிழ்ச்சி ஆச்சரியமானது.

தேவையில் செய்யப்படும் உதவி சிறிது என்றாலும் அது காலத்தின் தேவை அறிந்து செய்யப்பட்டதால் அது பெரிதாகவே பார்க்கப்படும்.

சந்திப்பு என்பது ஒரு சிறிய உதவி தான், ஆனால் உணர்வுகளைப் புரிந்த அந்த சந்திப்பு பெரும் உதவியாக பார்க்கப்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-45) அன்னை மரியா எலிசபெத்தம்மாளை சந்திக்கின்றார். இந்த சந்திப்பு கபிரியேல் தூதரின் காட்சிக்கு பின்பு நடைபெறுகிறது.

நாசரேத்திலிருந்து அயின் கரீம் என்னும் ஊருக்கு அன்னை மரியா பயணம் மேற்கொள்கிறார். கிட்டத்தட்ட 80 - 100 கிலோ மீட்டர் தொலை தூரப் பயணம். (மகிழ்ச்சியை பகிர தூரம், நேரம் ஒரு பொருட்டல்ல)

'உம் உறவினர் கருவுற்று இருக்கிறார்' என்று கடவுளின் தூதர் கூறியவை உண்மையா? இல்லையா? என்பதை பரிசோதிப்பதற்கான சந்திப்பு அல்ல, மாறாக உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் எலிசபெத்தமாளை தேற்றுவதற்கான சந்திப்பு.

அன்னை மரியாவின் வாழ்த்தை கேட்டதும் எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. இங்கு அன்னை மரியாவின் சந்திப்பு எலிசபெத்தம்மாளுக்கு மட்டுமல்ல அவருடைய குழந்தைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.

மகிழ்வின் தொடக்கம் சந்திப்பு தான். நம் உறவினரை நாம் சந்திக்கின்ற போது நாமும் அன்னை மரியாவை போல மகிழ்ச்சியை கொடுப்பவராக மாறி விடுகிறோம். 

உணர்வுகளைப் புரிந்த அன்னையைப் போல மற்றவர்களின் உள்ளங்களை புரிந்து செயல்படுவோம்.


தெளிவு பெற்ற அன்னை மரியா


திருவருகைக் காலம் 3ஆம் வாரம்

20.12.2024 - வெள்ளிக் கிழமை 

நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை" - 2 கொரிந்தியர் 4:8

தெளிவில்லாத பயணம் இலக்கை அடைய முடியாது. தெளிவற்ற வாழ்வு முன்னேற விடாமல் தடுக்கும்.

யாருடைய வாழ்வில் தான் குழப்பம் இல்லை என்று குழப்பத்தை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும்.

கன்னியாக இருக்க கூடிய அன்னை மரியா (தூய ஆவியால்) கருவுறுதல் ஒரு குழப்பம் என்றாலும், மண ஒப்பந்தம் செய்யப்பட்ட யோசப்போடு எப்படி சேர்ந்து வாழ்வது என்பது மற்றொரு குழப்பம்.

அந்த குழப்பம் தான் மீட்பரை இவ்வுலகிற்கு கொடுத்தது.

இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு கன்னிப் பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது வியப்புக்குரிய செயலே. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்கும் இடையே நடந்த உரையாடலில் சந்தேகங்களுக்கு தெளிவும், தெளிவு கிடைத்த பின் அன்னை மரியாவின் தாழ்ச்சியும் வெளிப்படுகின்றது. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா பதிலிறுப்பு செய்கிறார்.

இறைவனின் தாயாக மாற போகிறேன் என்ற அகங்காரம் இங்கில்லை, மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்ற போகிறேன் என்ற மனநிறைவு இங்கு புலப்படுகிறது. தனக்கு எல்லோரும் பணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கில்லை, மாறாக தன் உறவினருக்கு பணிவிடை செய்ய புறப்படுகிறார்.

இறைவனின் தாயாக இம்மண்ணில் உருவாகும் முன்னே அவர் இறைவனின் எண்ணத்தில் தாயாக உருவாகி விட்டார். தொடக்க நூல் 3:15 (“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்”) இதற்கு அடையாளம்.

குழப்பமுற்று இருக்கும் தருணத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது.

தெளிவு பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு அன்னை மரியா ஓர் உதாரணம்.

மற்றவரை குழப்பி அதில் ஆதாயம் தேடுவோரும் உண்டு, மற்றவர் வாழ்வை அழிப்பவரும் உண்டு.

எல்லா மனிதருடைய வாழ்விலும் குழப்பம் கண்டிப்பாக வரும். எதை தேர்ந்தெடுப்பது? யாரை நம்புவது? யாருக்கு செவிசாய்ப்பது? என்று பல கேள்விகள் உள்ளத்தில் எழும்.

எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதில் கிடைக்காது. எல்லா பதிலும் நமக்கு திருப்தி தராது. ஆனால் குழப்பம் தீர வழி உண்டு.

பொறுமையோடு காத்திருத்தல் சிறப்பு. காத்திருந்தால் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

அன்னை மரியா தெளிவு பெற காத்திருந்தார், தெளிவு பெற்றதனால் முடிவு எடுத்தார்.

பிறப்பே மகிழ்ச்சியாக...


திருவருகைக் காலம் 3ஆம் வாரம்

19.12.2024 - வியாழக் கிழமை 

இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக" - திருப்பாடல்கள் 149:2

மனிதனாக குழந்தை பிறக்கின்ற போது, குழந்தை பிறந்ததை எண்ணி பலர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமல் இருந்து, குழந்தை பேற்றை பெறும் வாய்ப்பு கிடைக்கின்ற போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குழந்தை வளர்ந்த பிறகு மகிழ்ச்சி தொடருமா என்பது கேள்விக் குறியே. நம்முடைய மகிழ்ச்சியை யார்? எது? தீர்மானிப்பது என்பது நம் கையில் தான்.

பிறக்கின்ற குழந்தையை குறித்து இறைவாக்கு சொல்லப்படும் போது, அது நேர்மறையாக இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும், அதுவே குழந்தையை குறித்து எதிர்மறையாக சொல்லப்பட்டால் ஆழ்ந்த துயரம் தான் ஏற்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1: 5-25) குழந்தையின்றி இருந்த செக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் முதிர் வயதில் குழந்தை பேற்றை பெறும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. குழந்தை பற்றி நேர்மறைக் கருத்துகள் சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை பெறுவதற்கு முன் செக்கரியா செய்து கொண்டிருந்தது என்ன?

யோவானின் தாயும் (ஆரோனின் வழிமரபு) தந்தையும் (அபியா வகுப்பு) குருத்துவ மரபை சார்ந்தவர்கள். கடவுளுக்கு பணி செய்யும் பொறுப்பை தாங்கள் சார்ந்திருக்கும் மரபு வழியாக பெற்றவர்கள்.

செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவ பணி ஆற்றி வந்தார் என்கிறது இன்றைய நற்செய்தி.

திருக்கோவிலுள் எல்லோரும் எளிதாக சென்று விட முடியாது. ஏராளமான குருக்கள் இருந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை தான் சீட்டுப் போட்டு குருக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே திருத்தூயகத்துக்குள் செல்ல குரு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த அளவுக்கு மிகவும் கடினமான சட்டங்கள் இருந்தன. இந்த முறை சீட்டு செக்கரியாவுக்கு விழவே அவர் உள்ளே சென்று பணி செய்தார்.

கடவுளின் தூதர் தோன்றி திருமுழுக்கு யோவானின் பிறப்பை அறிவிக்கிறார். தூதர் சொல்ல சொல்ல எல்லாவற்றையும் கேட்ட பிறகு, " இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்" என்று சந்தேகம் கொள்கிறார்.

ஆபிரகாம் சாரா வாழ்வை பற்றி செக்கரியா நிச்சயம் தெரிந்திருப்பார். வயதான நிலையிலும் கடவுளின் அருளை பெற்ற அத்தம்பதியினர் ஓர் எடுத்துக்காட்டு.

தெரிந்திருந்தும் கூட ஐயம் கொள்கிறார், அதற்காக தான் கடவுளின் தூதர் சொன்னவை நிறைவேறும் வரை வாய் பேச முடியாதவராய் நின்றார்.

திருமுழுக்கு யோவானை குறித்த பிறப்பு செய்தி, தூய ஆவியால் அவர் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார், கடவுளை நோக்கி மக்களை திரும்ப செய்யும் பணி அவரது பணி என்பதுமாக அமைந்தது.

தனக்காக வாழாதவர் தன்னை படைத்தவருக்காக, படைக்கப்பட்டவர்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார். 

திருமுழுக்கு யோவானின் பிற்கால செய்திகள் மக்களுக்கு பாவத்திலிருந்து மனம்மாற அழைப்பு விடுத்தது.

வழியை ஆயத்தம் செய்தார், கிறிஸ்துவை முன்னறிவித்தார், மகிழ்ச்சியை மனம் மாற்றத்தின் வழியாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்தார்.

நம் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், ஆனால் நம்முடைய தொடர் வாழ்வு மகிழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும்.

இறப்பு ஒருநாள் வரும், அதற்கு முன்னே செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்ய வேண்டும்.

இல்லாதவர்களுக்கு இருப்பதை பகிர்ந்து, இயலும் மட்டும் மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.

தனக்காக வாழாதவர் நிச்சயம் மற்றவரை வாழ வைப்பார். நாம் எப்படி?

விலக்கி விட அல்ல ஏற்றுக் கொள்ள...


திருவருகைக் காலம் 3ஆம் வாரம்

18.12.2024 - புதன் கிழமை 

"ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே" - உரோமையர் 15:7

எது கடினம்? 

ஒருவரை விலக்கி விடுவதா? ஏற்றுக் கொள்வதா? 

இரண்டும் கடினம் தான்... விரும்பிய ஒருவரை விலக்கி விடுவதும் அதனால் வரும் மனவருத்தத்தை சந்திப்பதும் கடினம். தன்னுடைய செயல்பாடுகளோடு தொடர்பு இல்லாத ஒருவரை தன்னுடைய வாழ்வில் ஏற்றுக் கொள்வதும் கடினம்.

இந்த உலகில், தனக்கு தொடர்பில்லாத நபர்களோடு வாழ்வதை விட, தனித்து வாழ்வது எத்துனை சிறந்தது என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகிறார்கள். 

விருப்பமில்லாத இருவரை சேர்த்து வைக்க முயற்சி செய்யும் வீட்டார், அந்த இருவருக்கு எதிராக தீங்கு செய்கிறார்கள். மனம் ஒத்து சேர்ந்து வாழ எண்ணும் இருவரை பிரிக்க முயலும் குடும்பத்தார் இருவர் வாழ்வை கெடுக்கிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 1: 18 - 24) மரியாவை மறைமுகமாக விலக்கி விட திட்டமிடுகிறார் யோசேப்பு. இந்த விலக்குதலில் வஞ்சகம் ஏதும் இல்லை. யூத முறைப்படி கணவரை அறியாமல் கருவுறும் பெண்கள் பொது இடங்களில் கொண்டு வரப்பட்டு கல்லால் எறியப்படுவர்.

(இணைச் சட்டம் 22:21 - அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று.)

இத்தகைய செயலை யோசேப்பு செய்ய விரும்பவில்லை. உண்மை தெரியாமல் தண்டிப்பது நேர்மையாளருக்குரிய செயல் அல்ல. 

கடவுளின் தூதர் கனவில் மரியா கருவுற்று இருப்பது தூய ஆவியால் தான் என்பதை சொன்ன போது நம்பினார், மரியாவை ஏற்றுக் கொண்டார்.

“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன என்று மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார்.

தெளிவற்ற தருணங்களில் தெளிவை பெற முயற்சி செய்ய வேண்டும். நாம் குழப்பமுற்று இருக்கும் வேளையில் நம்மை இன்னும் பலர் குழப்புவார்கள்.

நம்மை விலக்கி வைத்து மகிழ்ச்சி காண எண்ணுவோர் மத்தியில் நாம் தெளிவான மனநிலை கொண்டிருக்க வேண்டும்.

கடவுள் இணைத்ததை ஒருபோதும் பிரிக்கவோ/ விலக்கி வைக்கவோ கூடாது.

ஒருவர் மீது தவறு இருப்பதாக அறிய வந்தால், தீர விசாரித்து முடிவு எடுப்போம்.

தெளிவற்ற சூழலில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க கூடாது.

பேசி தீர்க்க வேண்டியவற்றை பேசி தீர்க்க வேண்டும்.

முக்கியத்துவம் பெறும் மூதாதையர் பட்டியல்


திருவருகைக் காலம் 3ஆம் வாரம்

16.12.2024 - செவ்வாய்க் கிழமை 

"எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்" - திருப்பாடல்கள் 22:4

ஏன் மூதாதையர் பட்டியலில் 14 தலைமுறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? 

7 என்பது விவிலியத்தில் முழுமையை குறிக்கும் எண். 7+7 = 14 என்ற புரிதலும் உண்டு.

தாவீது (David) in Hebrew - 


4+6+4 = 14 அவருடைய எபிரேய பெயரின் எண்ணிக்கையை கூட்டும் போது அதன் எண்ணிக்கை 14 ஆக வரும். ஆகவே 14 தலைமுறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்போரும் உண்டு.

தாவீது கடவுளுக்கு எதிராக தவறு செய்திருந்தாலும் கூட, அவருடைய ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக, வளமையோடு வாழ்ந்தார்கள். இந்த தாவீதின் குடும்பத்தில் மீட்பர் பிறப்பார் என்பது அனைவரின் ஆவல்.

தாவீதின் நம்பிக்கை, அன்பு, பணிவு, மன வருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கடவுளின் பார்வையில் உயர்த்தப்பட்டார்.

கடவுள் மீதான நம்பிக்கை, கடவுள் மீதும் மக்கள் மீதும் தனது எதிரியான சவுல் மீதான அன்பு, போரில் வெற்றி பெற்ற போதிலும் அவர் காட்டிய பணிவு, தன் தவறை உணர்ந்து மனம் வருந்தியது அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 1:1-17) இயேசுவின் மூதாதையர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாம் தொடங்கி இயேசு கிறிஸ்து வரையிலான பட்டியலை கொடுக்கிறார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் இயேசு தொடங்கி ஆதாம் வரையிலான பட்டியலை தருகிறார்.

யூத சமூகத்தில் பெண்கள் இரண்டாம் குடிமக்களாக பார்க்கப்பட்டாலும் மத்தேயு நற்செய்தியாளர் பெண்கள் பெயர்களை இப்பட்டியலில் தருகிறார். அவர்கள் முறையே, தாமார், இராகாபு, ரூத்து, உரியாவின் மனைவி (பத்சேபா), மரியா.

5 பெண்கள் இப்பட்டியலில் இடம் பெறுகிறார்.

அன்னை மரியாவை தவிர மற்ற பெண்கள் அனைவரும் பாவிகளாக (தாமார், இராகாபு, உரியாவின் மனைவி (பத்சேபா), புறவினத்தவராக (ரூத்து) கருதப்பட்டனர். 

இதன் வழியாக இயேசு கிறிஸ்து பாவிகளை மீட்க வந்தவர் என்றும் அவர் அனைவருக்குமான கடவுள் என்றும் விளங்குகிறார்.

புதிய தாவீதாக, புதிய அரசராக இயேசு காட்டப்படுகிறார். 

மூதாதையர் பட்டியல் வெறும் பெயர் பட்டியலல்ல, முன்னோர்களின் வரலாறு. எந்நிலையில் இருந்து இந்நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பதற்கான ஒரு கருவி.

இங்கு நாம் பெயர்களை வாசித்து விட்டு கடந்து செல்ல கூடாது. பெயர்களின் நபர்களை அடையாளப்படுத்த வேண்டும். மூதாதை பட்டியலின் நிறைவான இயேசுவில் இணைய வேண்டும்.

நமக்கும் முன்னோர்கள் இருக்கிறார்கள், நாமும் பேறுபெற்ற முன்னோர்களை பெற்றிருக்கிறோம். 

நம் தலைமுறையின் வரலாறை தூசி தட்டி எடுத்து, அதில் உள்ள கூறுகளை வாழ்ந்துக் காட்ட முயல்வோம்.

நம் மூதாதையர் கொண்டிருந்த நம்பிக்கை வாழ்வு நம்மிலும் வெளிப்படட்டும்.

அதிகாரம் எங்கிருந்து வருகிறது?


திருவருகைக் காலம் 3ஆம் வாரம் 

16.12.2024 - திங்கட் கிழமை 

"ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே" - சாலமோனின் ஞானம் 6:3

அதிகாரம் கொடுக்கப்பட்டதா? அல்லது எடுக்கப்பட்டதா? சில மனிதருக்கு அதிகாரம் கொடுக்கப்படுகிறது, சில மனிதர்கள் தாங்களாகவே அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். 

ஆணவமிக்க அதிகாரம் ஆபத்தில் போய் முடியும். அடக்கி ஆள நினைக்கும் அனைவரின் இறுதி கால வாழ்வு, கேள்விக் குறி தான். பிறருக்கு செய்ததை எண்ணி வருந்த வேண்டி இருக்கும்.

ஆணவம் மேலோங்கும் போது ஆபத்துக்கான பாதை  திறந்து வைக்கப்படுகிறது. குழி என்று தெரிந்து யாராவது பள்ளத்தில் விழுவார்களா? நிச்சயமில்லை. ஆனால் இன்று ஆணவத்தின் கதவுகளை திறந்து வைத்திருக்கின்றோம், அதன் கடைசி பகைவன் நாம் என்பதை அறியாமல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 21:23-27) இயேசுவின் அதிகாரத்தை தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை மடக்கி பிடிக்க இயேசு ஒரு கேள்வியை திருப்பி கேட்க அவர்கள் அடங்கி போகிறார்கள். கேள்வி இது தான், யோவானுக்கு திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மண்ணகத்திலிருந்தா?

பதில் சொல்ல தெரியாத காரணத்தால் வாயடைத்து நின்றார்கள்.

இன்று பலர் மனிதர்கள் தங்களுக்கு தான் எல்லாம் பேசத் தெரியும் என்று எண்ணுகிறார்கள். தேவையற்ற வார்த்தைகளை தங்களின் அதிகாரத்தினால் மக்கள் மீது தூவி விடுகிறார்கள்.

அதிகாரம் ஆட்டிபடைக்க அல்ல, பிறருக்கு நல்லது செய்ய தான். மக்களால் உயர் பதவியை அடைந்தவர்கள் மக்களையே ஆட்டி படைப்பது நியாமல்ல.

இயேசுவின் அதிகாரம் பணிவில் வெளிப்பட்டது. இயேசுவின் அதிகாரம் மனிதர்களிடமிருந்து அல்ல மேலிருந்து வந்தது. 

நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையும் மேலிருந்து அருளப்பட்டதே. திருமுழுக்கு பெற்றதன் வழியாக நாமும் கிறிஸ்துவின் அதிகாரத்தில் பங்கு பெறுகிறோம். 

நம் அதிகாரத்தினால் மற்றவர் ஒரு போதும் வீழ்ந்து போக கூடாது, வாழ்ந்து காட்ட வேண்டும். மேலிருந்து கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சரியான வழியில்/முறையில் பயன்படுத்துவோம்.

மீட்பரின் வருகையில்/அறுவடையில் மகிழ்ச்சி



திருவருகைக் காலம் 3ஆம் வாரம்

15.12.2024 - ஞாயிற்றுக் கிழமை 

திருவருகைக் காலம் 3ஆம் வாரம் மகிழ்ச்சியின் வாரமாக கொண்டாடப்படுகிறது. கடவுளை எதிர்நோக்கி இருக்கிற நாம் மகிழ்ச்சியில் திளைத்திட இந்நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இயேசுவின் பிறப்பு எதிர்நோக்கி காத்திருந்த இடையர்களுக்கு சொன்னப்பட்ட போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 

யூதர்களின் அரசராக பிறந்திருக்கக் கூடிய பாலன் இயேசுவை காண வழிகாட்டிய விண்மீனைக் கண்டதும் ஞானிகள் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தனர். 

இயேசுவின் பிறப்பு அவரை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இரண்டு வகைகளில் இந்த மகிழ்ச்சியை நாம் பெற்றுக் கொள்கிறோம்.

1. மீட்பர் வருவார், நம்மை மீட்பார் என்ற மகிழ்ச்சி

2. நாம் செய்த செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும் என்ற மகிழ்ச்சி

சபை உரையாளர் நூல் 3:1 இவ்வாறு சொல்கிறது, "ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு".

எல்லாம் மகிழ்ச்சியில் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றிலும் ஒரு சில வாழ்வியல் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 

இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கும், அது எல்லோருக்கும் கொடுக்கும் என்றாலும் அதை பெறக் கூடியவரை பொறுத்தே அது மகிழ்ச்சியா? என்பது வரையறை செய்யப்படும்.

சபை உரையாளர் நூல் 3:4 இவ்வாறு சொல்கிறது, "அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்".

நீதியோடு நேர்மையோடு செயல்படுபவர்க்கு அவரது வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். அநியாயமான வாழ்வு வாழ்பவருக்கு அவரது வருகை துயரத்தை தான் கொடுக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 3:10-18) திருமுழுக்கு யோவான், மீட்பரின் வருகைக்காக மக்களை தயாரிக்கிறார். இருப்பவரை இல்லாதவரோடு பகிர சொல்கிறார். அதிக வரி வசூலிப்போரை நிறுத்திக் கொள்ள சொல்கிறார். பணம் பறிப்போரின் எண்ணங்களை மாற்றிக் கொள்ள சொல்கிறார்.

இல்லாதவர் இருப்பவரிடமிருந்து பெறும் பொழுது மகிழ்ச்சி அடைகிறார், சுரண்டல்கள், மிரட்டல்கள் நின்று போகும் போது மகிழ்ச்சி கிடைக்கிறது.

மீட்பரின் வருகையின் போது என்ன நடக்கும் என்பதையும் திருமுழுக்கு யோவான் விவரிக்கிறார். கோதுமையும் பதரையும் பிரிதெடுப்பார், கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரை அணையா நெருப்பிலிட்டு எரிப்பார்.

கோதுமை - பதர் இரண்டும் பிரிக்கப்படுகிறது. நல்லோரிடமிருந்து தீயோர் பிரிக்கப்படுவர்.

கோதுமையை போன்ற மனிதருக்கு மகிழ்ச்சியான இடம் தயார் செய்யப்படும். பதரை போன்ற மனிதரோ நெருப்பால் எரிக்கப்படுவர்.

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

திருத்துவதற்கு ஒரு வாய்ப்பு, மீண்டும் இறையோடு இணைவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நாம் தேர்ந்துக் கொள்ளப்போவது என்ன?

கடவுளில் இணைந்தால் என்றும் மகிழ்ச்சி எப்போதும் மகிழ்ச்சி தான்.

அவரின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிற நாம் அவர் மேற்கொள்ள இருக்கும் அறுவடையில் பலன் கொடுக்கும் கோதுமைகளாக மாறுவோம்.

நாம் பெறும் மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்துக் கொள்வோம்...

சிலுவையை ஏந்தியவர் புனித சிலுவை ஜான்


திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

14.12.2024 - சனிக் கிழமை 

"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" - 1 கொரிந்தியர் 1:18

எதுவெல்லாம் நம் வாழ்வின் சிலுவையாக இருக்கும்?

ஏழ்மை, நம் பணியை மற்றவர்கள் அங்கீகாரம் செய்யாதது, நிராகரிப்பு/கண்டுக் கொள்ளாமை, வருந்தி உழைப்பது, தனிமை, இடையூறு இவை போன்ற பல காரியங்கள் நமக்கு சிலுவையாக தோன்றலாம்.

ஒவ்வொருவர் ஏற்றுக் கொண்ட சிலுவையும் ஒருவர் மற்றவரிடமிருந்து மாறுபடுகிறது. புனிதர்கள் வாழ்க்கையை பார்க்கின்ற போது அந்த சிலுவை கூட அவர்கள் வாழ்வில் சுகமாக இருந்துள்ளது.

1 பேதுரு 4:12,13இல் இவ்வாறு சொல்கிறது, "அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்".

நாம் அனுபவிக்க கூடிய துன்பம் நாம் "...கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாக இருக்கக் கூடாது" (1பேதுரு 4:15) என்கிறார் திருத்தூதர் பேதுரு.

இன்றைய நாளில் தாய்த் திருஅவை சிலுவையின் புனித ஜானை நினைவுக் கூறுகிறது. தான் சார்ந்து இருந்த கார்மல் துறவற சபையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். இணைந்து பணியாற்றியவர்களே எதிர்த்தார்கள், சிறையில் அடைத்தார்கள்.

இவர் தன்னுடைய சபைக் குருக்களிடம் இவர் வலியுறுத்திய செய்திகள் இரண்டு, 1. எல்லாவற்றையும் துறந்து வாழ்வது 2. அளவற்ற அன்பு.

இதை விரும்பாதவர்கள் இவரிடமிருந்து பிரிந்து சென்றார்கள். நாட்கள் செல்லச் செல்ல இவர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டார்.

காலில் ஏற்ப்பட்ட புற்று நோய் உடல் முழுவதும் பரவியது. தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களை அனுபவித்த இவர், கையில் சிலுவையை எந்தியவராய் "ஆண்டவரே! உம்முடைய கையில் என்னுடைய ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று கூறி உயிர் துறந்தார்.

துன்பம் வந்ததும் பலர் நேர்மைத்தனத்தில் இருந்து விலகி விடுவர். நன்மையை மறுத்து தீமை செய்ய ஆரம்பித்து விடுவர்.

அதற்கு காரணம், "நன்மைக்கு ஏற்ற கைம்மாறு உண்டு" என்பதை அவர்கள் அறியாத காரணத்தால் தான். 

தீமை வந்தாலும் சிலுவையை கையில் ஏந்தி நன்மைக்கு சான்று பகர முயல்வோம்...

இறப்பு எல்லோருக்கும் உண்டு. இறப்புக்கு முன் இழப்பும் உண்டு. வாழும் வாழ்க்கையை தகுதியுடன் வாழ்வோம்.

இறுதிவரை உண்மைக்கு சான்று பகர்ந்து தலை நிமிர்ந்து நிற்போம்...

கற்பில் சிறந்தவள் புனித லூசியா...


திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

13.12.2024 - வெள்ளிக் கிழமை 

"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" - மத்தேயு 5:8

பணத்திற்காக இங்கு பல காரியங்கள் விலைப் பேசப்படுகின்றன. அதில் கற்பும் அடங்கும். இங்கு சில மிருகங்கள் பண ஆசை காட்டி, ஏழ்மையை பயன்படுத்தி, மிரட்டி சிலரை தங்கள் வலைக்குள் சிக்க வைக்கின்றனர்.

சிலர் சூழ்நிலைக் காரணமாக மாட்டிக் கொள்கிறார்கள், சிலர் தப்பித்துக் கொள்கிறார்கள். 

மானம் மட்டுமே முக்கியம் என்பவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள், துணிவுக் கொண்டவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்.

இன்றைய நாளில் நாம் நினைவுக் கூறும் பிரகாசியம்மாள் என்றழைக்கப்படும் புனித லூசி சிறுவயது முதலே தனது கற்பை கடவுளுக்கு அர்ப்பணம் ஆக்கினார். தனது தாயிடம் ஆண்டவருக்காகவே கன்னியாக வாழ போகிறேன் என்பதையும் ஏழைகளுக்கு உதவி செய்தலையும் தனது உயரிய நோக்காக கொண்டிருந்தார்.

புனித லூசி தனது சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுத்து ஆண்டவருக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்தார்.

ஆளுநர் பஸ்காசியுஸ் என்பவர், புனிதையிடம் தன்னை மணந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். புனிதையோ தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். இதனால் கடும் கோபம் கொண்டான் அவன்.

அந்த காலத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக பல கொடுமைகள் கட்டவிழ்த்து போடப்பட்டன. பஸ்காசியுஸ் லூசி மீது கோபம் கொண்டு, தியோகிளசியன் என்ற உரோமை அரசனிடம் லூசி கிறிஸ்தவள் என்ற உண்மையை சொல்லி விட, லூசியை இழுத்து வர ஆணையிட்டான் அரசன். அவளை ஒரு அடி கூட படைவீரர்களால் நகர்த்த முடியவில்லை.

இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்த அரசன் தீயிட்டு கொளுத்த ஆணையிட்டான், தீயும் அவரை ஒன்றும் செய்யவில்லை. இறுதியாக தனது வாளால் வெட்டிக் கொன்று போட்டான்.

தனது 21வது வயதில் மறைசாட்சியாக புனித லூசி உயிர்நீத்தார்.

தன்னை கொடுத்திருந்தால் தன்னை காப்பாற்றி இருக்கலாம், கிறிஸ்துவை மறுதலித்து இருந்தால் உயிர் வாழ்ந்திருந்திருக்கலாம். யாருக்காகவும் தன் தூய வாழ்வை கறைப்படுத்திக் கொள்ளவில்லை. யாரோடும் சமரசம் செய்துக் கொள்ளவில்லை.

கற்பு எல்லோருக்கும் உண்டு. தூய வாழ்வில் அது வெளிப்படும்.

யாரும் தன்னை இழந்து அடிமை வாழ்வு வாழ வேண்டிய அவசியம் இல்லை.

அவர் கொடுத்த வாழ்வை நேரிய வழியில் வாழ்ந்து அவரிடமே திரும்ப கொடுப்போம்...

விண்ணரசில் மிகப் பெரியவராக...

திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

12.12.2024 - வியாழக் கிழமை

"யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்" - லூக்கா 22:27

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயான போர் தான் வாழ்க்கை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நன்மை தீமைக்கிடையேயான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நல்லவர்கள் இவ்வுலகில் வீழ்ந்து போவது போல் இருக்கிறது. தீமை செய்பவர்கள் வெற்றி பெறுவது போல இருக்கிறது. 

சபை உரையாளர் அதிகாரம் 8:14இல் இதை பற்றி சொல்கிறார், "வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்."

நல்லாரைக் கண்டு நல்லது செய்ய முன்வருவோரைவிட, தீமை செய்வோரை கண்டு தீமை செய்வோர் அதிகம்.

இவ்வுலகில் நலமோடு வாழும் வரை யாரும் விண்ணகக் கைம்மாறைக் குறித்து கவலைக் கொள்வதில்லை. எப்போது உடல் நலம் குன்றி போகுமோ? எப்போது முதுமை வருவோ? அப்போது தான் கடவுளும் தேடப்படுகிறார், கடவுளுக்குரிய காரியங்களும் தேடப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு11:11-15) "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார் இயேசு.

பெரியன செய்வோர் எல்லோரும் பெரியவர் அல்ல. பெரியவற்றை செய்தும் தம்மை தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என கருதப்படுவார்.

உலகத்தால் பாராட்டு பெறுபவர் தம்மை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த உலகம் எதற்காக நம்மை தூக்கி கொண்டாடுகிறது. நம்மிடமிருந்து இந்த உலகம் பெறும் கைம்மாறு என்ன? என்பது நம் சிந்தையில் இருக்க வேண்டும்.

உலகம் சொல்வது எல்லாம் சரியென்று தலையாட்ட ஆரம்பித்தால், இந்த உலகில் நாம் தலை தூக்கி நிற்கலாம். ஆனால் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. ஏனென்றால் காரியம் முடிந்ததும் கழட்டி விடப்படுவோம்.

மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்று வாழ்வது முறையான வாழ்க்கை ஆகாது. மற்றவர் தூற்றினாலும் நேர்பட வாழ்தல் தான் நம்மையும் நம்மை சார்ந்தோரையும் தலை உயர்த்தும், விண்ணரசில் பெரியவராக்கும்.

தீமைக்கு அல்ல உண்மைக்கு சான்று பகர்வோம்...

அழுத்தாத நுகம்...


திருவருகைக் காலம்  2ஆம் வாரம் 

11.12.2024 - புதன் கிழமை

"எல்லா மனிதரும் கடும் உழைப்புக்கே படைக்கப்பட்டிருக்கின்றனர்; தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நாள்முதல் நிலம் என்னும் தாயிடம் எல்லாரும் அடக்கமாகும் நாள்வரை ஆதாமின் மக்கள்மீது வலிய நுகம் சுமத்தப்பட்டிருக்கிறது" - சீராக்கின் ஞானம் 40:1

சுமைக்கு மேல் சுமை வைக்கப்பட்டால் பெருஞ்சுமை ஆகும். யாரும் சுமையை விரும்பி ஏற்பதில்லை. 

சிலர் சுமைகளற்ற வாழ்வு வாழ்கிறார்கள். சிலர் மேல் சுமைகள் திணிக்கப்படுகிறது. வெளிப்புறத்தில் எந்த கவலையும் இல்லாமல் வாழ்வோரும் உண்டு. உள்ளும் புறமும் கவலைகளோடு வாழ்வோரும் உண்டு. 

நமக்கு கனிவும் மனத்தாழ்மையும் தேவை. அந்த கனிவு தான் பிறரின் பாரத்தை குறைக்கும்.

பிறர் மீது சுமைகளால் அழுத்தம் கொடுத்து நாம் முன்னேற வேண்டிய அவசியம் இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 11:28-30) இயேசுவும் சுமையை பற்றி பேசுகிறார். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கிறார் இயேசு. இளைப்பாறுதல் தருவேன் என்றவர், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் சொல்கிறார். 

இந்த நுகம் என்பது அழுத்தத்தையோ பாரத்தையோ அதிகரிப்பது அல்ல, மாறாக இயேசுவின் பாதையை பின்பற்றுவதற்கான ஒரு கருவி. இயேசு நம்மீது வைக்கும் நுகத்தின் வழியாக நாம் அவரில் ஒப்படைக்கப்படுகிறோம், அவர் நம்மை வழி நடத்துகிறார். (அவரிடமிருந்து கற்றுக் கொள்ளும் போது உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்). 

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மாடுகளுக்கு மேல் அழுத்தும் நுகம் வைக்கப்பட்டிருக்கும். அது மாடுகள் நேர்கோட்டில் பயணிப்பதற்காக, வழிகாட்டியின் வழி நடத்துதலிலே பயணிப்பதற்காக தான். அந்த நுகம் இல்லை என்று சொன்னால் அந்த மாடுகள் அதன் இலக்கை அடைய முடியாது.

நம்முடைய வாழ்க்கையிலும் இறை பாதையில் பயணிக்க நம்மீது நுகம் வைக்கப்படுகிறது. அதை விரும்பி ஏற்றுக் கொள்கிற போது, நாம் நம்முடைய சுமையை எளிதாக்க முடியும்.

திருப்பாடல்கள் 81:6இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன".

கடவுளை நோக்கி நாம் திரும்பும்போது கடவுள் நம்மில் இருக்கும் சுமைகளை இறக்கி வைப்பார். திசை மாறி செல்கின்ற போது மற்றவர்களால் நம்மீது சுமைகள் சுமத்தப்படுகின்றன. வாழ்வில் பளு அதிகமாகிறது.

சுமைகளற்ற வாழ்வை நோக்கிய பயணம் அல்ல நம்முடைய பயணம்; சுமைகளை எளிதாக்கும் பயணம் தான் நம்முடைய பயணம். யாருடைய வாழ்க்கையிலும் சுமை இல்லாமல் இல்லை ஆனால் அந்த சுமைகள் சுகங்களாக மாற வேண்டும். சுமை எளிதாக வேண்டும். 

மற்றொருடைய வாழ்வில் நாம் ஏற்றி வைக்கும் பாரங்கள், சுமைகள் எப்போது குறைக்கப்படும்? 

வார்த்தைகளால், செயல்களால் மற்றவர்களை காயப்படுத்தி வாழ்க்கையின் வேதனைக்கு அழைத்துச் செல்லும் சூழ்நிலை எப்போது மாறும்? 

எதை செய்கிறோமோ அதை நாம் திரும்ப பெற்றுக் கொள்வோம். நல்லது செய்தால் நல்லது விளையும், பிறரின் சுமையை இறக்கி வைத்தால் நம் சுமையும் எளிதாகும்.

வழிதவறிய/தொலைந்து போன ஆட்டைத் தேடி...


திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

10.12.2024 - செவ்வாய்க் கிழமை 

யார் தேடப்படுவார்?

காணாமல் போனவர் தேடப்படுவார். (காணாமல் போனவர் பற்றிய விபரம், கண்டுப் பிடித்து தாருங்கள்). 

வீட்டில் இல்லாதவர் தேடப்படுவார். வீட்டுக்கு வருகின்ற நபர், வீட்டினுள் இருக்கும் நபரை தேடமாட்டார். யார் வீட்டினுள் இல்லையோ அவர்களை தான் தேடுவார்கள். (அவுங்க எங்க போனாங்க? எப்போ போனாங்க? எப்போ வருவாங்க? என்று தேடுவார்கள்). இருப்பவர்கள் தேவையில்லை என்பதல்ல, இல்லாதவர்களும் தேவை என்பதனால் தான்.

இன்று பல்வேறு நபர்கள் வீடுகளில் இருந்து, உறவுகளில் இருந்து, உணர்வுகளில் இருந்து பிரிந்து/தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இருப்பதை தொலைத்து இல்லாத ஒன்றை தேடி தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 

தொலைந்து போனவர்களை பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டு விடுகின்றனர், பலர் கைவிடப்பட்ட நிலையிலே இருந்து விடுகின்றனர்.

இன்று நாமும் ஏதோ ஒரு வகையில் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:12-14) காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்கிறார் ஆயன். தன்னிடம் இருக்கும் 99ஆடுகளை விட தொலைந்து போன 1 ஆட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

தேடப் போகிற தருணத்தில் மற்ற 99 ஆடுகள் தொலைந்து விடுமோ என்ற அச்சம் ஆயனுக்கு இல்லை. ஒருவேளை அவை தொலைந்து போக எண்ணியிருந்தால் என்றோ அவை தொலைந்து போயிருக்கும். எனவே 99 ஆடுகளை விட்டு விட்டு பாதுகாப்பற்ற சூழலில் தத்தளிக்கும் ஆட்டை தேடிச் செல்கிறார் ஆயன்.

இன்று நமக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. வழி தவறியோரை கரைசேர்க்க, தொலைந்து போனவர்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது.

மகிழ்ச்சி, இருப்பதில் கிடைப்பதை விட இழந்ததை திரும்ப பெறுவதில் இருக்கிறது. 

மற்றொரு வகையிலும் மகிழ்ச்சி உண்டு, வாழ்வு இழந்து போனவர்களுக்கு வாழ்வு அளிப்பதிலும்/கொடுப்பதிலும்.

நாம் ஒருவேளை இழந்து போகாமல் இருக்கலாம், ஆனால் இழந்து/தொலைந்து போனவர்கள் நம்மிடம் ஏராளம் இருக்கிறார்கள். 

தொலைந்து போனவர்களை தேடிச் செல்வோம். இழந்து போனதை திரும்ப பெற்றுக் கொடுப்போம். (இழந்தது உறவாக, உணர்வாக, வாழ்வாக, அன்பாக, மதிப்பாக, பணமாக என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்).

மாசற்ற வாழ்வுக்கு அழைக்கும் அமல உற்பவ அன்னை...


திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் 

09.12.2024 - திங்கட் கிழமை 

தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையே. மாசுபடிந்த மனத்தோருக்கும் நம்பிக்கை கொண்டிராதோருக்கும் எதுவுமே தூய்மையாயிராது. அவர்கள் மனமும் மனச்சான்றும் கூட மாசுபடிந்தவை" - தீத்து 1:15

இந்த உலகில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பதை தீர்மானிப்பது நம் செயல்களே!

கெட்டவர்கள் கூட சிலரின் கண்களில் நல்லவர்களாக தெரிகிறார்கள். இதற்கு காரணம் தனக்குப் பிடித்தவர்கள் செய்வது எல்லாமே நமக்கு சரியாகத் தான் தெரியும். அதே போல நல்லவர்கள் பலரின் கண்களில் கெட்டவர்களாக படம் பிடித்துக் காட்டப்படுகிறார்கள். காரணம் நல்லவர்கள் கெட்டவர்களுக்கு வளைந்து கொடுத்து போவாத காரணத்தினால்...

மாசுள்ள வாழ்க்கை மற்றும் மாசற்ற வாழ்க்கை இவை இரண்டிற்கும் இடையே வாழ்வது போராட்டமானது. (கொஞ்சம் நல்லவர்/கொஞ்சம் கெட்டவர்). இது நேரிய வாழ்வு அல்ல...

எல்லோரும் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. கெட்டவராக மாற ஒரு நொடி போதும். நல்லவராக வாழ ஒவ்வொரு நொடியும் போராட வேண்டும்.

இன்றைய நாளில் புனித கன்னி மரியாவின் அமல உற்பவத்தை கொண்டாடுகிறோம். வழக்கமாக டிசம்பர் 08ஆம் தேதி தான் இவ்விழா கொண்டாடப்பட வேண்டும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (கடவுளுக்குரிய நாள்) ஆனதால் இவ்விழா இன்று கொண்டாடப்படுகிறது.

1854ஆம் ஆண்டு, டிசம்பர் 08ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவைக் கொண்டாட அதிகாரப் பூர்வமாக பணித்தார். அவர் தன்னுடைய திருத்தூது மடலில் (Ineffabilis Deus), 'மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு புனித கன்னி மரியா கருவான நொடிப் பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் பாவமாசு அணுகாதவராய் தோன்றினார்' என்று குறிப்பிட்டு அமல உற்பவியான கன்னி மரியா என்ற நம்பிக்கைப் பிரகடனத்தை அறிவித்தார்.

இதிலிருந்து 4 ஆண்டுகள் கழித்து, 1858ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற 14வயது சிறுமிக்கு அன்னை மரியா காட்சி கொடுத்து, "நாமே அமல உற்பவம்" என்று கூறினார்.

தொடக்க முதல் இறுதிவரை அன்னை மரியாவால் மாசு மறுவின்றி வாழ முடிந்தது என்றால் நம்மாலும் முடியும் என்பது தான் அன்னை நமக்கு கொடுக்கும் படிப்பினை.

எதிலெல்லாமோ நாம் வல்லவர்களாக முயற்சி செய்கிறோம். அந்த முயற்சியை நம்முடைய தூய வாழ்விலும் செலுத்துவோம்.

உள்ளமும் உடலும் தூய்மை பெற தூயவரின் உதவியை நாடுவோம்.

நம் வாழ்வு தூய்மை பெற...

1. கொடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப வாழ்வோம்/நம்மை கடவுளுக்கு கையளிப்போம் 

2. வீண் ஆசைகளை துறப்போம்

3. ஆணவத்தை அழிப்போம் 

4. பணிவிடை புரிவோம்

5. உதவிகள் செய்வோம்

6. இறுதிவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்போம்...

அமைதியின் அரசரை எதிர்பார்த்து...


திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்

08.12.2024 - ஞாயிற்றுக் கிழமை 

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்  அமைதியின் ஞாயிறாக நினைவுக் கூறப்படுகிறது. அமைதி இல்லா மனது அலை பாய்ந்துக் கொண்டிருக்கும். 

இன்று அமைதியை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அமைதியை மற்ற மனிதர்களிடம் எதிர்பார்க்கிறோம். 

நம் அமைதியை வெளிப்புற நிகழ்வுகளோ/மனிதர்களோ தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டால் நம் அமைதி நிலையானதாக இருக்காது.

மனிதர்கள் தங்களுக்கு காரியம் நடைபெறும் வரை மட்டும் தான் அமைதியாக இருப்பார்கள்/அமைதியை கொடுப்பார்கள். 

காரியம் முடிந்தபின் கலவரம் தான் நடக்கும். ஆனாலும் இவ்வுலகில் இரண்டு இடங்களில் நிலையான அமைதி கிடைக்கிறது என்று நாம் நம்புகிறோம்.

1. தாயின் கருவறையில்

2. மண்ணாலான கல்லறையில்

இங்கு யாரும் நம் அமைதியை குலைக்க முடியாது.

உளவியலின் அடிப்படையில் பார்க்கும் போது, தாயின் உணர்வுகள்/அசைவுகள் ஒவ்வொன்றும் கருவறையில் இருக்கும் குழந்தையை நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ பாதிக்கும் என்கிறார்கள். இங்கும் அமைதிக்கு இடையூறு உள்ளது.

கல்லறையில் (உயிர்த்தெழும் வரை, அதற்கு பின்னும்) நிலையான/ நீடித்த அமைதி தான்.

ஆனால் இவ்வுலகில் நாம் அமைதியை பெற கிறிஸ்து பிறப்பு காலம் நமக்கு உதவுகிறது.

இலக்கு நோக்கி நடைபோட்டால் இலக்குகளற்ற மனிதர்களின் தந்திரங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

இன்றைய நற்செய்தி பதிவு செய்வது போல, "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையை செம்மையாக்குங்கள்" என்ற வார்த்தையின் படி வாழ்ந்தால், "பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மாலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும்." அப்போது மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

இங்கு சரி செய்யப்பட வேண்டியது நம் உள்ளம் தான். அடுத்தவரை நாம் மாற்ற இயலாது. ஆனால் நம்மை சரிசெய்துக் கொள்ள நம்மிடம் ஆற்றல் உள்ளது. 

அமைதியை வெளியே தேடாமல், உள்ளத்தில் தேடுவோம். நம் அனுமதியின்றி நம் அமைதியை யாரும் குலைக்க முடியாது. 

அமைதியின் அரசரை எதிர்கொள்ள நம்முடைய பாதை சரிசெய்யப்படட்டும்... உள்ளம் தூய்மையால் நிரம்பட்டும்...

நம்மை திருத்திக் கொள்வோம்... மற்றது எல்லாம் நம்மை தேடி வரும்.

இந்த உலகில் நம் அமைதியை சீர்குலைப்பது

1. இழந்ததை எண்ணி வருந்துவது

2. நடக்காததை நடக்கும் என்று எண்ணுவது

3. பொய்யான மனிதர்களில் நம்பிக்கை வைப்பது

4. தன்னம்பிக்கை இல்லாமல் பயணிப்பது

5. தவறுகளுக்கு மனம் வருந்தாதது.


கொடையாக கொடுக்க...


திருவருகைக் காலம் முதல் வாரம் 

07.12.2024 - சனிக் கிழமை 

"உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை" - சபை உரையாளர் 3:13

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9:35-10:1,6-8) இயேசு நகர்கள் ஊர்கள் தோறும் சுற்றி வந்து தொழுகைக் கூடங்களில் கற்பித்தார், நோய் நொடிகளைக் குணமாக்கினார். மக்கள் மீது பரிவுக் கொண்டார். 

பரிவுக் கொண்டதோடு நின்று விடவில்லை, தம் சீடர்களிடம் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தார், பணி செய்ய அழைப்பு விடுத்தார். 

நோயுற்றவருக்கு மருத்துவம் தேவை என்பது போல வழித் தவறிப் போன இஸ்ரயேல் மக்களிடம் அனுப்புகிறார். கொடையாகப் பெற்றதை கொடையாக வழங்க அழைக்கிறார்.

இந்த உலகில் எதுவும் நமக்கானது அல்ல; எல்லாம் நாம் பெற்றுக் கொண்டது. எதையும் கொண்டு செல்ல முடியாது. விட்டு விட்டு தான் செல்ல வேண்டும் (உயிரையும் சேர்த்து). அப்படி இருக்க பெற்றுக் கொண்ட அழைப்புகேற்ப வாழாதது தவறு தானே.

சீடர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட அதிகாரம் திருமுழுக்கின் வழியாக நம்மிடமும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் ஆட்டிப்படைக்க அல்ல... இல்லாமையை இவ்வுலகில் இல்லாமல் பண்ணுவதற்கே...

பெற்றதை பகிர்ந்து கொடுப்போம்... இருக்கும் வரை இயன்றதை செய்வோம் இயலாதவருக்கே...

அதிகாரம், பொருள், அன்பு, மகிழ்ச்சி, இரக்கம் ஆகியவை பகிரப்படும் போது இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை உணரலாம்.

இருப்பதை பகிராத போது, மேலும் எப்படி நாம் பெற்றுக் கொள்ள முடியும்? என்ற கேள்வி நம்மில் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...