திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
09.12.2024 - திங்கட் கிழமை
தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையே. மாசுபடிந்த மனத்தோருக்கும் நம்பிக்கை கொண்டிராதோருக்கும் எதுவுமே தூய்மையாயிராது. அவர்கள் மனமும் மனச்சான்றும் கூட மாசுபடிந்தவை" - தீத்து 1:15
இந்த உலகில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பதை தீர்மானிப்பது நம் செயல்களே!
கெட்டவர்கள் கூட சிலரின் கண்களில் நல்லவர்களாக தெரிகிறார்கள். இதற்கு காரணம் தனக்குப் பிடித்தவர்கள் செய்வது எல்லாமே நமக்கு சரியாகத் தான் தெரியும். அதே போல நல்லவர்கள் பலரின் கண்களில் கெட்டவர்களாக படம் பிடித்துக் காட்டப்படுகிறார்கள். காரணம் நல்லவர்கள் கெட்டவர்களுக்கு வளைந்து கொடுத்து போவாத காரணத்தினால்...
மாசுள்ள வாழ்க்கை மற்றும் மாசற்ற வாழ்க்கை இவை இரண்டிற்கும் இடையே வாழ்வது போராட்டமானது. (கொஞ்சம் நல்லவர்/கொஞ்சம் கெட்டவர்). இது நேரிய வாழ்வு அல்ல...
எல்லோரும் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. கெட்டவராக மாற ஒரு நொடி போதும். நல்லவராக வாழ ஒவ்வொரு நொடியும் போராட வேண்டும்.
இன்றைய நாளில் புனித கன்னி மரியாவின் அமல உற்பவத்தை கொண்டாடுகிறோம். வழக்கமாக டிசம்பர் 08ஆம் தேதி தான் இவ்விழா கொண்டாடப்பட வேண்டும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (கடவுளுக்குரிய நாள்) ஆனதால் இவ்விழா இன்று கொண்டாடப்படுகிறது.
1854ஆம் ஆண்டு, டிசம்பர் 08ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவைக் கொண்டாட அதிகாரப் பூர்வமாக பணித்தார். அவர் தன்னுடைய திருத்தூது மடலில் (Ineffabilis Deus), 'மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு புனித கன்னி மரியா கருவான நொடிப் பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் பாவமாசு அணுகாதவராய் தோன்றினார்' என்று குறிப்பிட்டு அமல உற்பவியான கன்னி மரியா என்ற நம்பிக்கைப் பிரகடனத்தை அறிவித்தார்.
இதிலிருந்து 4 ஆண்டுகள் கழித்து, 1858ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற 14வயது சிறுமிக்கு அன்னை மரியா காட்சி கொடுத்து, "நாமே அமல உற்பவம்" என்று கூறினார்.
தொடக்க முதல் இறுதிவரை அன்னை மரியாவால் மாசு மறுவின்றி வாழ முடிந்தது என்றால் நம்மாலும் முடியும் என்பது தான் அன்னை நமக்கு கொடுக்கும் படிப்பினை.
எதிலெல்லாமோ நாம் வல்லவர்களாக முயற்சி செய்கிறோம். அந்த முயற்சியை நம்முடைய தூய வாழ்விலும் செலுத்துவோம்.
உள்ளமும் உடலும் தூய்மை பெற தூயவரின் உதவியை நாடுவோம்.
நம் வாழ்வு தூய்மை பெற...
1. கொடுக்கப்பட்ட அழைப்பிற்கேற்ப வாழ்வோம்/நம்மை கடவுளுக்கு கையளிப்போம்
2. வீண் ஆசைகளை துறப்போம்
3. ஆணவத்தை அழிப்போம்
4. பணிவிடை புரிவோம்
5. உதவிகள் செய்வோம்
6. இறுதிவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்போம்...
No comments:
Post a Comment