திருவருகைக் காலம் 3ஆம் வாரம்
15.12.2024 - ஞாயிற்றுக் கிழமை
திருவருகைக் காலம் 3ஆம் வாரம் மகிழ்ச்சியின் வாரமாக கொண்டாடப்படுகிறது. கடவுளை எதிர்நோக்கி இருக்கிற நாம் மகிழ்ச்சியில் திளைத்திட இந்நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இயேசுவின் பிறப்பு எதிர்நோக்கி காத்திருந்த இடையர்களுக்கு சொன்னப்பட்ட போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
யூதர்களின் அரசராக பிறந்திருக்கக் கூடிய பாலன் இயேசுவை காண வழிகாட்டிய விண்மீனைக் கண்டதும் ஞானிகள் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
இயேசுவின் பிறப்பு அவரை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இரண்டு வகைகளில் இந்த மகிழ்ச்சியை நாம் பெற்றுக் கொள்கிறோம்.
1. மீட்பர் வருவார், நம்மை மீட்பார் என்ற மகிழ்ச்சி
2. நாம் செய்த செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும் என்ற மகிழ்ச்சி
சபை உரையாளர் நூல் 3:1 இவ்வாறு சொல்கிறது, "ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு".
எல்லாம் மகிழ்ச்சியில் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றிலும் ஒரு சில வாழ்வியல் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியை கொடுக்கும், அது எல்லோருக்கும் கொடுக்கும் என்றாலும் அதை பெறக் கூடியவரை பொறுத்தே அது மகிழ்ச்சியா? என்பது வரையறை செய்யப்படும்.
சபை உரையாளர் நூல் 3:4 இவ்வாறு சொல்கிறது, "அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்".
நீதியோடு நேர்மையோடு செயல்படுபவர்க்கு அவரது வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். அநியாயமான வாழ்வு வாழ்பவருக்கு அவரது வருகை துயரத்தை தான் கொடுக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 3:10-18) திருமுழுக்கு யோவான், மீட்பரின் வருகைக்காக மக்களை தயாரிக்கிறார். இருப்பவரை இல்லாதவரோடு பகிர சொல்கிறார். அதிக வரி வசூலிப்போரை நிறுத்திக் கொள்ள சொல்கிறார். பணம் பறிப்போரின் எண்ணங்களை மாற்றிக் கொள்ள சொல்கிறார்.
இல்லாதவர் இருப்பவரிடமிருந்து பெறும் பொழுது மகிழ்ச்சி அடைகிறார், சுரண்டல்கள், மிரட்டல்கள் நின்று போகும் போது மகிழ்ச்சி கிடைக்கிறது.
மீட்பரின் வருகையின் போது என்ன நடக்கும் என்பதையும் திருமுழுக்கு யோவான் விவரிக்கிறார். கோதுமையும் பதரையும் பிரிதெடுப்பார், கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரை அணையா நெருப்பிலிட்டு எரிப்பார்.
கோதுமை - பதர் இரண்டும் பிரிக்கப்படுகிறது. நல்லோரிடமிருந்து தீயோர் பிரிக்கப்படுவர்.
கோதுமையை போன்ற மனிதருக்கு மகிழ்ச்சியான இடம் தயார் செய்யப்படும். பதரை போன்ற மனிதரோ நெருப்பால் எரிக்கப்படுவர்.
இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.
திருத்துவதற்கு ஒரு வாய்ப்பு, மீண்டும் இறையோடு இணைவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நாம் தேர்ந்துக் கொள்ளப்போவது என்ன?
கடவுளில் இணைந்தால் என்றும் மகிழ்ச்சி எப்போதும் மகிழ்ச்சி தான்.
அவரின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிற நாம் அவர் மேற்கொள்ள இருக்கும் அறுவடையில் பலன் கொடுக்கும் கோதுமைகளாக மாறுவோம்.
நாம் பெறும் மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்துக் கொள்வோம்...
No comments:
Post a Comment