திருக்குடும்ப விழா
29.12.2024 - ஞாயிற்றுக் கிழமை
இரண்டு வகை குடும்பங்களை நாம் இவ்வுலகில் பார்க்கலாம். 1. திருக்குடும்பம் 2. தெருக் குடும்பம்.
எந்த குடும்பத்தில் பிரச்சினை குடும்பத்திற்கு உள்ளேயே தீர்க்கப்படுகிறதோ அது திருகுடும்பத்தின் பிரதிபலிப்பு. எந்த குடும்பத்தின் பிரச்சினை தெருவரை வந்து, குடும்பங்கள் நடுத் தெருவில் நிற்கிறதோ அது தெருக் குடும்பம்.
எல்லா குடும்பத்திலும் பிரச்சினை உண்டு, எல்லா குடும்பங்களும் நிறை குறைகளோடு தான் பயணிக்கிறது. திருமணத்திற்கு முன்பும் திருமணத்தின் போதும் இனிக்கின்ற வாழ்க்கை, திருமணம் முடிந்த சில மாதங்களில் கசக்க ஆரம்பிக்கிறது. கணவனோ/மனைவியோ எதிரியாக பார்க்கப்படுகிறார்.
தொடக்கத்தில் இவரை(கணவனை/மனைவியை) பற்றி தெரிந்திருந்தால் திருமணமே செய்திருக்க மாட்டேன் என்று சொல்லும் அனைவருமே பொய் தான் சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லாம் தெரிந்தாலும் கூட கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பலர் தொடக்கத்தில் சிக்கல்களை தட்டிக் கழித்து விடுகின்றனர்.
ஒருவரை பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு தான் உறவு கசக்க ஆரம்பிக்கிறது. (ஒருவரை பற்றி தெரிந்துக் கொள்வது தவறல்ல; அடுத்தவரை பற்றி எல்லாம் தெரிந்துக் கொள்ள எண்ணுவது மிக மிக ஆபத்தானது. மற்றவர்களுடைய ரகசிய வாழ்க்கையை அறிய ஆரம்பிக்கும் போது அது நம் மனதின் நிம்மதியை கெடுத்து விடுகிறது).
இன்றைய நாளில் தாய்த் திருஅவை இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பத்தை கொண்டாடுகிறது. எளிய வாழ்வு தான் இக்குடும்பத்தில் காணப்பட்ட உயரிய பண்பு. சந்தேகம், கலக்கம், தடுமாற்றம், தயக்கம், இடர் என எல்லாம் இருந்தது. ஆனால் யாரும் யாரையும் குறை சொல்லவில்லை.
இக்குடும்பத்தில் இறை அச்சம் இருந்தது
இக்குடும்பத்தில் இறை நம்பிக்கை இருந்தது
இக்குடும்பத்தில் அன்பு இருந்தது
இக்குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் பண்பு இருந்தது
இக்குடும்பத்தில் இணைந்து பயணிக்கும் பண்பு இருந்தது
இக்குடும்பத்தில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் இருந்தது
ஆகவே தான் முன்மாதிரியான குடும்பமாக மாறியது...
இன்று குடும்பங்களில் பணம், செல்வம், ஆணவம், செருக்கு, அகங்காரம், தலைக்கணம் என எல்லாம் இருக்கிறது. இவை இருப்பதால் குடும்பங்கள் பிரிந்துக் கிடக்கிறது. (தங்கள் தலை மேலே மண்ணை வாரி போட்டுக் கொள்கிறார்கள்).
குடும்பங்கள் தற்பெருமையால் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
மனைவி கோபமாக இருக்கும் போது கணவன் அமைதி காக்க வேண்டும். கணவன் கோபமாக இருக்கும் போது மனைவி அமைதி காக்க வேண்டும்.
யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க தான் வேண்டும். நம் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட குடும்ப பிரச்சினையை பொது பிரச்சினையாக்கும் போது அது ஒருபோதும் தீராது.
இன்று குடும்ப பிரச்சினைகள் திரையில் காட்டப்பட்டு பணம் சம்பாதிக்கபடுகிறது. (உதாரணமாக, சொல்வதெல்லாம் உண்மை).
கணவன் மனைவி விதை மண்ணாக இருக்கும் போது அதிலிருந்து பிள்ளைகள் என்னும் செடி நன்கு முளைத்து வளரும்.
பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோர் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் அல்ல; பெற்றோரின் வாழ்க்கை முறையில் இருக்கிறது.
குடும்பங்கள் பிரிய நாம் ஒருபோதும் காரணமாய் இருக்க கூடாது.
நம் குடும்பங்கள் திருக்குடும்பத்தின் முன்மாதிரியை பின்பற்றப்படும். அன்பில் நம் குடும்பங்கள் மூழ்கி முத்தெடுக்கட்டும். யாருக்காகவும் எதற்காகவும் நம்மை நாடி வந்தவர்களை கைவிடாமல் இருப்போம்.
இது தான் திருக்குடும்ப விழா நமக்கு உணர்த்தும் செய்தி...
No comments:
Post a Comment