24_12

அன்பின் ஞாயிறு



திருவருகைக் காலம் 4ஆம் வாரம்

22.12.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது" 1கொரிந்தியர் 13:13

   அன்பு இல்லாத உலகில்

   அன்பை தேடி அலைந்தேன்

   அன்பு இல்லாத மனிதனிடம்

   அன்பை தேடி வந்தார்- இயேசு

    அன்பை தேடி வந்தார்

           அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு

            நம்பு நம்பு உன் வாழ்வில் நம்பு 

- என்ற பாடல் வரிகள் உலக அன்பையும் இறை அன்பையும் எடுத்துரைக்கிறது. 

இந்த உலகில், மனிதர்கள் போட்டி போட்டி அன்பு செய்கிறார்கள் பணத்தை. யாரிடம் செல்வம் அதிகம் இருக்கிறதோ அவர் நிறைவாக அன்பு செய்யப்படுகிறார். யார் ஏழையாக இருக்கிறாரோ அவர் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.

"பணம் செல்லாது" என்று அறிவிப்பு வந்தால் இங்கு உண்மையான அன்பை கண்டுக் கொள்ளலாம். அன்பும் இங்கு விலைபேசப் படுகிறது. தூரத்து சொந்தம் பணம் இல்லாததால் தூரமாகவே சென்று விடுகிறது. 

பணம், அதிகாரம், புகழ் இருந்தால் தான் எல்லாம் என்ற மனநிலைக்கு நாம் வந்து விட்டோம்.

அலைபேசி கூட ரிசார்ச் செய்யப்படவில்லை என்றால் ஓரமாக தான் கிடக்கிறது. 

பணம் இருந்தால் தான் இங்கு முதல் வரையில் இடம் கிடைக்கிறது.

பணம் இருந்தால் தான் கதவும் திறந்துவிடப்படுகிறது. 

பணம் இருந்தால் தான் உறவும் சேருகிறது.

இப்படி பணம் பேசும் பொருளாக மாறிவிட்டது. அன்பு அனாதையாக மாறிவிட்டது.

இப்படிப்பட்ட உலகில் தான் அன்பை தேடி வந்தார் இயேசு. 

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 8:9 இவ்வாறு சொல்கிறது, "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்". 

செல்வத்தை கொண்டு சேர்க்கமுடியாத அன்பை விதைத்தார் இயேசு. 

அன்பு ஓர் ஆயுதம். அன்பினால் அடிமையாக்கப்பட்டு வாழ்வை இழந்தவர்களும் அல்லது ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு, அன்பினால் வாழ்வை பெற்றவர்களும் உண்டு. அன்பு செலுத்தும் அல்லது அன்பை பெறும் நபரை பொறுத்து அது மாறுபடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-45) கடவுள் மீது கொண்ட நம்பிக்கையினாலும் தம் உறவினரான எலிசபெத் மீது கொண்ட அன்பினாலும் கிட்டத்தட்ட 80 லிருந்து 100 கிலோ மீட்டர் தூரம் கடந்து, உதவி செய்திருக்கிறார் அன்னை மரியா. 

அன்பை பரிமாற தூரமோ/நேரமோ தடையல்ல என்பதை அன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (மீக்கா 5:2-5) யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதான பெத்லகேம் கடவுளால் தெரிந்துக் கொள்ளப் பட்டது என்பது வெளிப்படையாகிறது. இஸ்ரயேலை ஆள்பவர் அங்கிருந்து தான் தோன்றுவார் என்பது வெளிப்படை.

அமைதியை அருள, மக்கள் அச்சமின்றி வாழ,  மந்தையை மேய்க்க தலைவர் கொடுக்கப்படுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபிரேயர் 10:5-10) இயேசு தம் உடலை பலியாகச் செலுத்தியதிலிருந்து நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம் என்பது விளக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளப்பெருக்கு காலத்தில் கைம்மாறு கருதாமல் செய்யப்பட்டது அன்பினாலே! 

புயல் காலத்தில் ஓடோடி சென்று உதவிய கால்கள் அன்பின் கால்களே!

தனக்கு எதுவும் தேவையில்லை என்று இருப்பதை இழக்கும் உள்ளங்கள் அன்பு உள்ளங்களே!

இந்த உலகிலும் எதையும் எதிர்பாரா அன்பு உள்ளங்கள் வாழத்தான் செய்கிறது.

வெறுமனே செபங்களை சொல்லிவிட்டு, ஆலயம் சென்று விட்டு கடந்து செல்வது கிறித்தவம் ஆகாது.

கடவுள் அன்பாய் இருக்கிறார் என்பது வாழ்ந்துக் காட்டப்பட வேண்டாம்.

இறைவனை அன்பு செய்ய ஒரே வழி அடுத்திருப்பவரை அன்பு செய்வது தான்.

கைம்மாறு கருதாமல் அன்பை விதைப்போம்; எல்லாம் அமுக்கி குலுக்கி சேர்த்துக் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...