31.12.2024 - செவ்வாய்க் கிழமை
"அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது" - திருப்பாடல்கள் 33:9
இந்த உலகம் உண்டானது என்கிறது அறிவியல். இந்த உலகம் உண்டாக்கப்பட்டது என்கிறது விவிலியம். ஒன்றுமில்லாமையிலிருந்து தானாக ஒன்றும் உண்டாக முடியாது. ஏதேனும் ஒன்று முதலில் உருவாக்கப்பட வேண்டும். அதை யார் உருவாக்கியது என்ற கேள்வி கேட்கப்பட வேண்டும்.
இந்த உலகத்தை படைத்தவர் கடவுள் என்ற நம்பிக்கை நமக்கு உண்டு என்றாலும் நம்மை சுற்றி இருப்பவற்றை நாம் தான் உருவாக்கினோம் என்ற ஆணவம் நம்மில் இருக்கிறது.
10லிட்டர் தண்ணீரை ஒரு மண்பானை தக்க வைத்துக் கொள்கிறது என்றால் அந்த பானைக்கு அதனால் பெருமை வந்து சேராது, பானையை வனைந்த குயவனுக்கே அந்த பெருமை சேரும்.
படைக்கப்பட்டது படைப்பின் பெருமையை தேடிக் கொள்ள இங்கு போராடுகிறது. படைத்தவரையே இங்கு போட்டிக்கு அழைக்கும் எண்ணம் வந்து விட்டது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:1-18) வாக்கு மனிதரான கடவுளை விவரிக்கிறார் நற்செய்தியாளர் யோவான். "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்" - யோவான் 1:14
நேரிடையாக அல்ல, மறைமுகமாக/அறியாமலேயே இன்று உலகம் கடவுளை எதிர்க்கிறது. கடவுளை ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் உலகு சார்ந்த காரியங்களில் நாம் அதிக ஆர்வம் காட்டுகிறோம்.
நம்மைக் குறித்து அளவுகடந்த பெருமிதம் கொள்கிறோம். அருளும் உண்மையும் இயேசு வழியாய் வெளிப்பட்டது, தந்தையை நமக்கு வெளிப்படுத்தியவரும் அவரே என்பதை மறந்து விடுகிறோம்.
நாம் மனதில் இருத்த வேண்டியது,
நாம் எதையும் ஒன்றும் இல்லா நிலையிலிருந்து உருவாக்கவில்லை, நாமும் உண்டாக்கப்பட்டவர்கள் தான்.
நாம் நம்மை படைத்தவருக்கே உரியவர்கள்.
நாம் அவருக்கே கணக்கு கொடுக்க வேண்டும்.
கடவுளை அறிந்து அவர் திருவுளப்படி நடக்க வேண்டும்.
அவரை நாம் ஏற்றுக் கொண்டால் அவருடைய பிள்ளைகள் ஆவோம்.
பெருமை பாரட்டுகிறவர் தன்னை உண்டாக்கினவரை குறித்து பெருமை பாராட்ட வேண்டும்.
நாம் இந்த உலகின் நிரந்தர குடிகள் அல்ல, இந்த உலகம் தற்காலிகமானது. நாம் படைத்தவரிடமே திரும்ப வேண்டும்...
No comments:
Post a Comment