24_12

விண்ணரசில் மிகப் பெரியவராக...

திருவருகைக் காலம் 2ஆம் வாரம்

12.12.2024 - வியாழக் கிழமை

"யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்" - லூக்கா 22:27

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயான போர் தான் வாழ்க்கை. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நன்மை தீமைக்கிடையேயான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நல்லவர்கள் இவ்வுலகில் வீழ்ந்து போவது போல் இருக்கிறது. தீமை செய்பவர்கள் வெற்றி பெறுவது போல இருக்கிறது. 

சபை உரையாளர் அதிகாரம் 8:14இல் இதை பற்றி சொல்கிறார், "வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்."

நல்லாரைக் கண்டு நல்லது செய்ய முன்வருவோரைவிட, தீமை செய்வோரை கண்டு தீமை செய்வோர் அதிகம்.

இவ்வுலகில் நலமோடு வாழும் வரை யாரும் விண்ணகக் கைம்மாறைக் குறித்து கவலைக் கொள்வதில்லை. எப்போது உடல் நலம் குன்றி போகுமோ? எப்போது முதுமை வருவோ? அப்போது தான் கடவுளும் தேடப்படுகிறார், கடவுளுக்குரிய காரியங்களும் தேடப்படுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு11:11-15) "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்கிறார் இயேசு.

பெரியன செய்வோர் எல்லோரும் பெரியவர் அல்ல. பெரியவற்றை செய்தும் தம்மை தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் பெரியவர் என கருதப்படுவார்.

உலகத்தால் பாராட்டு பெறுபவர் தம்மை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த உலகம் எதற்காக நம்மை தூக்கி கொண்டாடுகிறது. நம்மிடமிருந்து இந்த உலகம் பெறும் கைம்மாறு என்ன? என்பது நம் சிந்தையில் இருக்க வேண்டும்.

உலகம் சொல்வது எல்லாம் சரியென்று தலையாட்ட ஆரம்பித்தால், இந்த உலகில் நாம் தலை தூக்கி நிற்கலாம். ஆனால் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. ஏனென்றால் காரியம் முடிந்ததும் கழட்டி விடப்படுவோம்.

மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்று வாழ்வது முறையான வாழ்க்கை ஆகாது. மற்றவர் தூற்றினாலும் நேர்பட வாழ்தல் தான் நம்மையும் நம்மை சார்ந்தோரையும் தலை உயர்த்தும், விண்ணரசில் பெரியவராக்கும்.

தீமைக்கு அல்ல உண்மைக்கு சான்று பகர்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...