13.12.2024 - வெள்ளிக் கிழமை
"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" - மத்தேயு 5:8
பணத்திற்காக இங்கு பல காரியங்கள் விலைப் பேசப்படுகின்றன. அதில் கற்பும் அடங்கும். இங்கு சில மிருகங்கள் பண ஆசை காட்டி, ஏழ்மையை பயன்படுத்தி, மிரட்டி சிலரை தங்கள் வலைக்குள் சிக்க வைக்கின்றனர்.
சிலர் சூழ்நிலைக் காரணமாக மாட்டிக் கொள்கிறார்கள், சிலர் தப்பித்துக் கொள்கிறார்கள்.
மானம் மட்டுமே முக்கியம் என்பவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள், துணிவுக் கொண்டவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்.
இன்றைய நாளில் நாம் நினைவுக் கூறும் பிரகாசியம்மாள் என்றழைக்கப்படும் புனித லூசி சிறுவயது முதலே தனது கற்பை கடவுளுக்கு அர்ப்பணம் ஆக்கினார். தனது தாயிடம் ஆண்டவருக்காகவே கன்னியாக வாழ போகிறேன் என்பதையும் ஏழைகளுக்கு உதவி செய்தலையும் தனது உயரிய நோக்காக கொண்டிருந்தார்.
புனித லூசி தனது சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுத்து ஆண்டவருக்காகத் தன்னை முழுவதும் அர்ப்பணம் செய்தார்.
ஆளுநர் பஸ்காசியுஸ் என்பவர், புனிதையிடம் தன்னை மணந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். புனிதையோ தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். இதனால் கடும் கோபம் கொண்டான் அவன்.
அந்த காலத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக பல கொடுமைகள் கட்டவிழ்த்து போடப்பட்டன. பஸ்காசியுஸ் லூசி மீது கோபம் கொண்டு, தியோகிளசியன் என்ற உரோமை அரசனிடம் லூசி கிறிஸ்தவள் என்ற உண்மையை சொல்லி விட, லூசியை இழுத்து வர ஆணையிட்டான் அரசன். அவளை ஒரு அடி கூட படைவீரர்களால் நகர்த்த முடியவில்லை.
இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்த அரசன் தீயிட்டு கொளுத்த ஆணையிட்டான், தீயும் அவரை ஒன்றும் செய்யவில்லை. இறுதியாக தனது வாளால் வெட்டிக் கொன்று போட்டான்.
தனது 21வது வயதில் மறைசாட்சியாக புனித லூசி உயிர்நீத்தார்.
தன்னை கொடுத்திருந்தால் தன்னை காப்பாற்றி இருக்கலாம், கிறிஸ்துவை மறுதலித்து இருந்தால் உயிர் வாழ்ந்திருந்திருக்கலாம். யாருக்காகவும் தன் தூய வாழ்வை கறைப்படுத்திக் கொள்ளவில்லை. யாரோடும் சமரசம் செய்துக் கொள்ளவில்லை.
கற்பு எல்லோருக்கும் உண்டு. தூய வாழ்வில் அது வெளிப்படும்.
யாரும் தன்னை இழந்து அடிமை வாழ்வு வாழ வேண்டிய அவசியம் இல்லை.
அவர் கொடுத்த வாழ்வை நேரிய வழியில் வாழ்ந்து அவரிடமே திரும்ப கொடுப்போம்...
No comments:
Post a Comment