கிறிஸ்து பிறப்புக் காலம்
26.12.2024 - வியாழக் கிழமை
காற்றுக்கும் வீரம் உண்டு, ஓங்கி காற்று வீசும் போது அது தெரியும்.
தண்ணீர்க்கும் வீரம் உண்டு, தண்ணீரின் ஓட்டம் அதிகமாகும் போது அது தெரியும்.
பொறுமையுள்ள அனைவருக்கும் வீரம் உண்டு அது ஒரு நாள் வெளிப்படும்.
இந்த உலகம் எதை வீரம் என்று சொல்கிறது? அரிவாள், துப்பாக்கி, ஈட்டி, வெடி ஆகியவற்றை பயன்படுத்தும் நபர்கள் வீரம்/ துணிச்சல் உள்ளவர்கள் என்கிறது உலகம். உண்மையை சொல்லப் போனால் ஆயுதத்தை கையாளுவதில் வீரம் அடங்கி இருப்பதில்லை.
அறிவையும் நேர்வழியில் ஆற்றலை பயன்படுத்துவதில் தான் துணிச்சலும் வீரமும் அடங்கி இருக்கிறது.
இன்றைய நாளில் தாய்த் திருஅவை முதல் மறைச்சாட்சியான புனித ஸ்தேவானை கொண்டாடுகிறது.
திருத்தொண்டருக்கு கொடுக்கப்பட்ட பணியோ பந்தியில் உணவு பரிமாறுகிற பணி. ஆனால் அதையும் கடந்து தூய ஆவியால் தூண்டப்பட்டு இறைவார்தையை அறிவிக்கிறார். அரும்அடையாளங்களையும் செய்தார்.
அதை ஏற்க மறுத்த மக்களுக்கு பழைய ஏற்பாட்டு நிகழ்வை தொகுத்து கொடுத்தார். யாரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள், நீங்களும் கிறிஸ்துவை கொன்று விட்டீர்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
திருத்தூதர் பணிகள் 7:51இல் பார்க்கிறோம். அம்மக்களை நோக்கி, திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள்.
இதனால் கோபம் கொண்டவர்கள் அவர்மேல் கல் எரிந்து கொன்று விட்டார்கள்.
நன்மையை எதிர்ப்பவர்களை எதிர்க்க துணிச்சல் தேவைப்படுகிறது. இங்கு ஸ்தேவான் கொண்டிருந்த வீரம்/துணிச்சல் தூய ஆவியால் கொடுக்கப்பட்டது.
இறைவார்த்தையை எதிர்ப்போரை நன்மையால் எதிர்க்க வேண்டும்.
தீமையோடு எப்போதும் சமரசம் செய்து விட கூடாது.
உடல் வீரமல்ல, உள்ள வீரமே முக்கியம்.
தன்னை அல்ல, தன்னை உண்டாக்கினவரை முன்னிலைப்படுத்த வேண்டும்.
கொடுக்கப்பட்ட துணிச்சல் என்னும் ஆற்றலை கொண்டு நல்லதை பேச/செய்ய வேண்டும்.
ஸ்தேவான் தனது ஆவியை இயேசுவிடம் ஒப்படைத்தார். தன்னை கல்லால் எறிந்தவர்களையும் மனமார மன்னித்தார்.
நாமும் உண்மையை உரக்கச் சொல்ல துணிச்சல் பெறுவோம். இருக்கும் துணிச்சலை சரியாக பயன்படுத்துவோம்.
No comments:
Post a Comment