01.01.2025 - புதன் கிழமை
2025 ஆம் ஆண்டிற்கான பட்டியல் தயார் நிலையில் இருக்கும். இது மத்திய மாநில பட்டியல் அல்ல, புதிய ஆண்டின் தீர்மானங்கள் அடங்கிய பட்டியல்.
இதை செய்ய வேண்டும் இதை செய்ய கூடாது என்று நாம் பலவற்றை நீக்கியும் சேர்த்தும் வைத்திருப்போம். இவை தேவைதானா? நல்லதை செய்ய ஏன் நாள்/நேரம் பார்க்க வேண்டும்.
செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும், செய்யக் கூடாததை உடனே நிறுத்த வேண்டும். காலம் நேரம் பார்த்து பார்த்து எதை நாம் சாதித்து விட்டோம்.
நிகழ்வு...
குடிகாரன் ஒருவன் குடியை விட தீர்மானித்தான். இன்று ஒருநாள் மட்டும் குடுத்து விடுகிறேன், நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மனைவி பிள்ளைகள் மீது சத்தியம் செய்தான். மறுநாளும் இதே வார்த்தைகளை தான் சொன்னான். திருந்தியபாடில்லை.
கோபம் கொண்ட மனைவி ஒருநாள் குடிப்பதற்காக வைத்திருந்த சாராய பாட்டிலை உடைத்து விட்டார். வீறு கொண்டு எழுந்து வந்த கணவனுக்கு ஒரே மிதி. அன்று குடியை மறந்தான் கணவன்.
சிலவற்றை நிறுத்த நாள் தேவையில்லை, நல்ல பாடம் போதும்.
எத்தனையோ தடைகளை தாண்டி கடந்து வந்திருக்கிறோம். இந்த ஆண்டு நல்ல ஆசிரை கொடுக்காதா என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு தான். இழந்ததை பெற்றுக் கொள்ள மனம் ஏங்கத்தான் செய்யும்.
எதிர்பார்ப்பு மட்டும் போதாது எழுந்து செயல்பட வேண்டும்.
கடந்த ஆண்டு கொடுத்த வாழ்க்கை பாடங்களை மறந்து விட கூடாது. நம்மைவிட மற்றவர்களை மதிப்பு குறைந்தவர்களாக எண்ண கூடாது.
நமக்கு கடவுளின் ஆசீர் எப்போதும் உண்டு. ஆனால் அதற்கு தடையாய் இருப்பவற்றை நீக்க வேண்டும். கடவுளின் கட்டளைக்கு புறம்பாக நடக்கும் போது, நம்மை அறியாமலேயே ஆசீர்வாதங்களை தட்டிக் கழிக்கிறோம்.
ஆலயத்திற்கு தவறாது செல்லும் நபர், ஆனால் கடவுளின் கட்டளையை கடைப்பிடிக்காதவர் எப்படி கடவுளின் ஆசிரை பெற முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் (எண்ணிக்கை 6:22-27) ஆரோன் மற்றும் அவருடைய புதல்வர் வழியாக கொடுக்கப்பட்ட ஆசீர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கை 6:24
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
எண்ணிக்கை 6:25
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
எண்ணிக்கை 6:26
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!”.
புதிய ஆசிரை பெற பழைய வாழ்வை துறக்க வேண்டும்.
இன்று தாயாம் திருஅவை அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவை கொண்டாடுகிறது.
அன்னை மரியா, "இறைவனின் தாய்" என்ற இவ்விழா கோட்பாடு, இறையியல் அடிப்படையில், ஆழமான கிறிஸ்தியல் சிந்தனைகளைக் கொண்டது. நெஸ்டோரிஸின் தப்பறைக் கோட்பாட்டின்படி, ஒரு சாதாரண நாசரேத் பெண்மணி, இயேசுவின் மனித இயல்புக்கு மட்டும்தான் தாயா? அல்லது இறைத்தன்மை இயேசு பிறந்த பின் ஒட்டிக்கொண்டதா? போன்ற வினாக்களுக்கு கி.பி 431இல் கூடிய எபேசு மாமன்றம், ஒரு தெளிவான விடையை தந்தது. இயேசு கடவுளும் மனிதனுமானவர். அவரில் இரு இயல்புகளும், மனுவுரு எடுத்த நொடிப்பொழுதில் இணைந்தன.
இறை மனித இயல்புகளைக் கொண்ட, இறைமகன் இயேசுவை, தன் உதரத்தில் சுமந்து கருவறையில் வைத்து காத்ததினால், அன்னை மரியா "இறைவனின் தாய்" என்று அறுதியிட்டு கூறியது.
மரியாவை இறைவனின் தாயாக, முதன்முதலில் அறியக்கூடிய பாக்கியத்தை பெற்றவர் எலிசெபெத். "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசெபெத் கூறுகிறார்" (லூக்கா 1:43). "வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடி கொண்டார்" (யோ. 1:14) என்ற இறைத் திருவுளம், அன்னை மரியா வழியாக உருபெற்றது. ஆண்டவர் இயேசு, தன் தாயிடமிருந்து, மனிதச்சாயலை பெறுகிறார்.
அன்னை மரியா தந்தையாம் கடவுளிடமிருந்து ஆசிரை பெற்றார். அவ்வாசீரை இயேசுவை இவ்வுலகில் பெற்றெடுப்பதன் வழியாக இவ்வுலகிற்கு பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
நாமும் தாயை போல ஒருவர் மற்றவருக்கு ஆசிராக திகழ்வோம்...
No comments:
Post a Comment