21.12.2024 - சனிக் கிழமை
திருவருகைக் காலம் 3ஆம் வாரம்
"நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன" - திருப்பாடல்கள் 97:11
தூரத்தில் இருப்பவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர் அதிகம். பலர் அருகில் இருப்பவர்களிள்/உடன் இருப்பவர்களின் அன்பை கூட நிராகத்து விடுவர்.
ஒவ்வொரு மனிதருடைய சந்திப்பும் வித்தியாசமான மகிழ்ச்சியை கொடுக்க வல்லது. காத்திருந்து காத்திருந்து காணும் சந்திப்பு அளப்பரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
ஒருவரை இழந்த பின்னரும் இழந்தவரை நினைவுகளின் வாயிலாக இன்று பலர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த சந்திப்பு அன்பின் வெளிப்பாடு. அந்த அன்பு மகிழ்வில் முழுமை பெறுகிறது.
நாம் தேவையில் இருக்கின்ற போது நாம் எதிர்பாராத சமயத்தில், நமக்கு மிகவும் பிடித்த நபர் நம்மை சந்திக்கிறார், நம்மோடு உடன் இருக்கிறார் என்றால் அந்த மகிழ்ச்சியின் உணர்வை வரையறை செய்ய முடியாது. பொருள் கொடுத்து பெறப்படும் மகிழ்ச்சியை விட சந்திப்பின்/உடனிருப்பின் வழியாக பெறப்படும் மகிழ்ச்சி ஆச்சரியமானது.
தேவையில் செய்யப்படும் உதவி சிறிது என்றாலும் அது காலத்தின் தேவை அறிந்து செய்யப்பட்டதால் அது பெரிதாகவே பார்க்கப்படும்.
சந்திப்பு என்பது ஒரு சிறிய உதவி தான், ஆனால் உணர்வுகளைப் புரிந்த அந்த சந்திப்பு பெரும் உதவியாக பார்க்கப்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-45) அன்னை மரியா எலிசபெத்தம்மாளை சந்திக்கின்றார். இந்த சந்திப்பு கபிரியேல் தூதரின் காட்சிக்கு பின்பு நடைபெறுகிறது.
நாசரேத்திலிருந்து அயின் கரீம் என்னும் ஊருக்கு அன்னை மரியா பயணம் மேற்கொள்கிறார். கிட்டத்தட்ட 80 - 100 கிலோ மீட்டர் தொலை தூரப் பயணம். (மகிழ்ச்சியை பகிர தூரம், நேரம் ஒரு பொருட்டல்ல)
'உம் உறவினர் கருவுற்று இருக்கிறார்' என்று கடவுளின் தூதர் கூறியவை உண்மையா? இல்லையா? என்பதை பரிசோதிப்பதற்கான சந்திப்பு அல்ல, மாறாக உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் எலிசபெத்தமாளை தேற்றுவதற்கான சந்திப்பு.
அன்னை மரியாவின் வாழ்த்தை கேட்டதும் எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. இங்கு அன்னை மரியாவின் சந்திப்பு எலிசபெத்தம்மாளுக்கு மட்டுமல்ல அவருடைய குழந்தைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
மகிழ்வின் தொடக்கம் சந்திப்பு தான். நம் உறவினரை நாம் சந்திக்கின்ற போது நாமும் அன்னை மரியாவை போல மகிழ்ச்சியை கொடுப்பவராக மாறி விடுகிறோம்.
உணர்வுகளைப் புரிந்த அன்னையைப் போல மற்றவர்களின் உள்ளங்களை புரிந்து செயல்படுவோம்.
No comments:
Post a Comment