திருவருகைக் காலம் 4ஆம் வாரம்
23.12.2024 - திங்கட் கிழமை
"என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்" - எசாயா 45:4
ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் இருக்கிறது. பேரும் புகழும் பெற்று வாழ ஒவ்வொருவரும் ஆசைப்படுவர்.
நல்ல பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும். ஆனால் கெட்ட பெயர் வாங்க ஒரு நொடி போதும். ஒரு ஆளுக்கு குடும்பத்தினர் வைக்கும் பெயர் ஒன்றாக இருக்கும், உலகம் வைக்கும் பெயர் மற்றொன்றாக இருக்கும்.
இதை புனை பெயர் என்று சொல்லலாம். இந்த உலகத்தினர் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்தால் நல்ல பெயரை எடுக்கலாம். ஆனால் இங்கு பிரச்சினை என்பது எல்லோரையும் நாம் சமரசம் செய்ய முடியாது. எல்லோருக்கும் நல்லவராகவும் இருக்க முடியாது.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை தந்திருக்கிறார். உதாரணமாக,
எரேமியா 31:20இல், “எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா?
எசாயா 44:21இல்
யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்; நீ என் ஊழியன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.
எரேமியா 51:20இல்,
நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்; நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன்.
இவ்வாறு நம்மை பல பெயர்களில் அழைக்கிறார் கடவுள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:57-66) 'இக்குழந்தையின் பெயர் யோவான்!' என்பதை வாய்பேச முடியாத தந்தை செக்கரியா எழுதுபலகை ஒன்றை வாங்கி எழுதுகிறார். அவரின் பெயரோ கடவுளின் தூதரால் கொடுக்கப்பட்டது.
திருமுழுக்கு யோவான் தாயின் கருவில் இருக்கும்போது தூய ஆவியினால் முற்றிலுமாக ஆட்கொள்ளப்பட்டவர் (லூக் 1: 41).
திருமுழுக்கு யோவானின் பெற்றோர்களான செக்கரியாவும் எலிசபெத்தும் நீண்ட நாட்களாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்கள். இருந்தபோதிலும், அவர்கள் கடவுளுடைய பார்வையில் நேர்மையுள்ளவர்களாக இருந்தார்கள் (லூக் 1:6), அதனால்தான் கடவுள் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு குழந்தைப் பேற்றினைத் தருகின்றார்.
பிறக்கும் முன்னரே திருமுழுக்கு யோவானுக்கு பெயர் சூட்டப்படுகிறது. கடவுள் தந்த பெயர் கடவுள் தந்த வாழ்வை சுட்டுகிறது.
கடவுள் தந்த பெயரை களங்கப்படுத்தாது வாழ நாம் அழைக்கப்படுகிறோம். அது நம் பெயராக/அடுத்தவர் பெயராக கூட இருக்கலாம்.
தாய் தந்தையின் பெயரை களங்கப்படுத்தும் பிள்ளை தன் மேலே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம்.
பெற்றுக்கொண்ட அழைப்புகேற்ப வாழ்வோம். கடவுள் தந்த பெயரை கறையின்றி பாதுகாப்போம்...
No comments:
Post a Comment