திருவருகைக் காலம் 3ஆம் வாரம்
16.12.2024 - செவ்வாய்க் கிழமை
"எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்" - திருப்பாடல்கள் 22:4
ஏன் மூதாதையர் பட்டியலில் 14 தலைமுறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
7 என்பது விவிலியத்தில் முழுமையை குறிக்கும் எண். 7+7 = 14 என்ற புரிதலும் உண்டு.
தாவீது (David) in Hebrew -
4+6+4 = 14 அவருடைய எபிரேய பெயரின் எண்ணிக்கையை கூட்டும் போது அதன் எண்ணிக்கை 14 ஆக வரும். ஆகவே 14 தலைமுறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்போரும் உண்டு.
தாவீது கடவுளுக்கு எதிராக தவறு செய்திருந்தாலும் கூட, அவருடைய ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக, வளமையோடு வாழ்ந்தார்கள். இந்த தாவீதின் குடும்பத்தில் மீட்பர் பிறப்பார் என்பது அனைவரின் ஆவல்.
தாவீதின் நம்பிக்கை, அன்பு, பணிவு, மன வருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கடவுளின் பார்வையில் உயர்த்தப்பட்டார்.
கடவுள் மீதான நம்பிக்கை, கடவுள் மீதும் மக்கள் மீதும் தனது எதிரியான சவுல் மீதான அன்பு, போரில் வெற்றி பெற்ற போதிலும் அவர் காட்டிய பணிவு, தன் தவறை உணர்ந்து மனம் வருந்தியது அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 1:1-17) இயேசுவின் மூதாதையர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாம் தொடங்கி இயேசு கிறிஸ்து வரையிலான பட்டியலை கொடுக்கிறார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் இயேசு தொடங்கி ஆதாம் வரையிலான பட்டியலை தருகிறார்.
யூத சமூகத்தில் பெண்கள் இரண்டாம் குடிமக்களாக பார்க்கப்பட்டாலும் மத்தேயு நற்செய்தியாளர் பெண்கள் பெயர்களை இப்பட்டியலில் தருகிறார். அவர்கள் முறையே, தாமார், இராகாபு, ரூத்து, உரியாவின் மனைவி (பத்சேபா), மரியா.
5 பெண்கள் இப்பட்டியலில் இடம் பெறுகிறார்.
அன்னை மரியாவை தவிர மற்ற பெண்கள் அனைவரும் பாவிகளாக (தாமார், இராகாபு, உரியாவின் மனைவி (பத்சேபா), புறவினத்தவராக (ரூத்து) கருதப்பட்டனர்.
இதன் வழியாக இயேசு கிறிஸ்து பாவிகளை மீட்க வந்தவர் என்றும் அவர் அனைவருக்குமான கடவுள் என்றும் விளங்குகிறார்.
புதிய தாவீதாக, புதிய அரசராக இயேசு காட்டப்படுகிறார்.
மூதாதையர் பட்டியல் வெறும் பெயர் பட்டியலல்ல, முன்னோர்களின் வரலாறு. எந்நிலையில் இருந்து இந்நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பதற்கான ஒரு கருவி.
இங்கு நாம் பெயர்களை வாசித்து விட்டு கடந்து செல்ல கூடாது. பெயர்களின் நபர்களை அடையாளப்படுத்த வேண்டும். மூதாதை பட்டியலின் நிறைவான இயேசுவில் இணைய வேண்டும்.
நமக்கும் முன்னோர்கள் இருக்கிறார்கள், நாமும் பேறுபெற்ற முன்னோர்களை பெற்றிருக்கிறோம்.
நம் தலைமுறையின் வரலாறை தூசி தட்டி எடுத்து, அதில் உள்ள கூறுகளை வாழ்ந்துக் காட்ட முயல்வோம்.
நம் மூதாதையர் கொண்டிருந்த நம்பிக்கை வாழ்வு நம்மிலும் வெளிப்படட்டும்.
No comments:
Post a Comment