24_12

அன்பு இறுதிவரை உடனிருக்கும்...


புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் 

27.12.2024 - வெள்ளிக் கிழமை 

"அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்"- 1யோவான் 4:8

இந்த உலகம் இரண்டு காரியங்களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒன்று பணத்திற்காக மற்றொன்று அன்பிற்காக...

இந்த இரண்டும் மதிப்பு இழக்கும் போது வாழ்க்கை வெறுத்து விடுகிறது.

நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவர்களை நன்கு கவனித்துக் கொள்ள (பணம் சம்பாதிக்க) ஓடுகிறோம். நம்மை நேசிப்பவர்கள் விலகி போனால் வாழ்க்கை வெறுமையாகிறது.

ஒருவரை பிடித்து விட்டால் அவருக்காக எதையும் துறப்போம்/ எதையும் இழப்போம். நாம் அன்பு செய்யும் நபருக்காக இறுதிவரை உடனிருப்போம். எத்தகைய நெருக்கடி வந்தாலும் ஓடி விட மாட்டோம்.

இன்றைய நாளில் தாய்த் திருஅவை திருத்தூதர் யோவானின் விழாவை கொண்டாடுகிறது. 

இயேசுவை அதிகமாக அன்பு செய்த நபர். இயேசுவின் அன்புச் சீடர் இவர்... மனம் மாறுங்கள் என்ற திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளால் கவரப்பட்டு அவரை பின்பற்றினார். இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி என்று திருமுழுக்கு யோவான் இயேசுவை சுட்டிக் காட்டிய போது இயேசுவை பின் தொடர்ந்து இயேசுவோடு தங்கினார். இயேசுவின் அன்புச் சீடராக மாறினார். 

இயேசுவின் முக்கிய பயணங்களில்/பணிகளில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த அளவுக்கு யோவான் இயேசுவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

யோவான் நற்செய்தி, 1,2,3 யோவான், திருவெளிப்பாடு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மற்ற சீடர்கள் இயேசுவின் சிலுவை பாடுகளில் பங்கேற்க தவறினார்கள், ஆனால் இவரோ இறுதிவரை இயேசுவோடு உடன் இருந்தார்.

இயேசுவின் தாயை தனது தாயாக ஏற்கும் வாய்ப்பை பெற்றார். இயேசுவை அன்பு செய்தவர், இயேசுவின் அன்புத் தாயையே பரிசாக பெற்றார்.

உரோமை பேரரசன் தொமிசியனின் காலத்தில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானார்; கொதிக்கும் எண்ணெய்த் தொட்டியில் இவர் வீசப்பட்டார், ஆனாலும் உயிர்த் தப்பினார். பத்மூ தீவில் சிறைவாசம் அனுபவித்தார். 

வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் போது தன்னைக் காண வருபவர்களிடம், "ஒருவர் மற்றவரிடம் அன்பாய் இருங்கள்" என்று சொல்வாராம்.

இயேசுவின் சீடர்களில் படுகொலை செய்யப்படாமல் நீண்டநாள்கள் வாழ்ந்து இறந்த ஒரே சீடர் இவர் தான்.

போராட்டம் நிறைந்த உலகில் உண்மை அன்பை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டி இருக்கிறது. சில அன்பானவர்களின் அன்பு காரியம் முடிந்ததும் போலியாகிவிடுகிறது. 

உண்மை அன்பைத் தேடுவதை சற்று நிறுத்தி விட்டு உண்மையுள்ளவர்களாய் இருக்க முயல்வோம். 

அன்பு ஒருபோதும் ஏமாற்றம் தராது. அன்பில் அச்சத்திற்கு இடம் இல்லை.

அன்பு ஆதாயம் காணாத அன்பாக இருந்தால் அன்பு நிலைத்திருக்கும், இறுதி வரை உடனிருக்கும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...