திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
08.12.2024 - ஞாயிற்றுக் கிழமை
திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் அமைதியின் ஞாயிறாக நினைவுக் கூறப்படுகிறது. அமைதி இல்லா மனது அலை பாய்ந்துக் கொண்டிருக்கும்.
இன்று அமைதியை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அமைதியை மற்ற மனிதர்களிடம் எதிர்பார்க்கிறோம்.
நம் அமைதியை வெளிப்புற நிகழ்வுகளோ/மனிதர்களோ தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டால் நம் அமைதி நிலையானதாக இருக்காது.
மனிதர்கள் தங்களுக்கு காரியம் நடைபெறும் வரை மட்டும் தான் அமைதியாக இருப்பார்கள்/அமைதியை கொடுப்பார்கள்.
காரியம் முடிந்தபின் கலவரம் தான் நடக்கும். ஆனாலும் இவ்வுலகில் இரண்டு இடங்களில் நிலையான அமைதி கிடைக்கிறது என்று நாம் நம்புகிறோம்.
1. தாயின் கருவறையில்
2. மண்ணாலான கல்லறையில்
இங்கு யாரும் நம் அமைதியை குலைக்க முடியாது.
உளவியலின் அடிப்படையில் பார்க்கும் போது, தாயின் உணர்வுகள்/அசைவுகள் ஒவ்வொன்றும் கருவறையில் இருக்கும் குழந்தையை நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ பாதிக்கும் என்கிறார்கள். இங்கும் அமைதிக்கு இடையூறு உள்ளது.
கல்லறையில் (உயிர்த்தெழும் வரை, அதற்கு பின்னும்) நிலையான/ நீடித்த அமைதி தான்.
ஆனால் இவ்வுலகில் நாம் அமைதியை பெற கிறிஸ்து பிறப்பு காலம் நமக்கு உதவுகிறது.
இலக்கு நோக்கி நடைபோட்டால் இலக்குகளற்ற மனிதர்களின் தந்திரங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.
இன்றைய நற்செய்தி பதிவு செய்வது போல, "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையை செம்மையாக்குங்கள்" என்ற வார்த்தையின் படி வாழ்ந்தால், "பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மாலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும்." அப்போது மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.
இங்கு சரி செய்யப்பட வேண்டியது நம் உள்ளம் தான். அடுத்தவரை நாம் மாற்ற இயலாது. ஆனால் நம்மை சரிசெய்துக் கொள்ள நம்மிடம் ஆற்றல் உள்ளது.
அமைதியை வெளியே தேடாமல், உள்ளத்தில் தேடுவோம். நம் அனுமதியின்றி நம் அமைதியை யாரும் குலைக்க முடியாது.
அமைதியின் அரசரை எதிர்கொள்ள நம்முடைய பாதை சரிசெய்யப்படட்டும்... உள்ளம் தூய்மையால் நிரம்பட்டும்...
நம்மை திருத்திக் கொள்வோம்... மற்றது எல்லாம் நம்மை தேடி வரும்.
இந்த உலகில் நம் அமைதியை சீர்குலைப்பது
1. இழந்ததை எண்ணி வருந்துவது
2. நடக்காததை நடக்கும் என்று எண்ணுவது
3. பொய்யான மனிதர்களில் நம்பிக்கை வைப்பது
4. தன்னம்பிக்கை இல்லாமல் பயணிப்பது
5. தவறுகளுக்கு மனம் வருந்தாதது.
No comments:
Post a Comment