கிறிஸ்து பிறப்பு காலம்
28.12.2024 - சனிக் கிழமை
இந்த குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்?
ஏரோதா? ஞானிகளா? படைவீரர்களா? பெற்றோர்களின் அச்சமா? கடவுளா? குழந்தை இயேசுவா? இறைவாக்கினர் எரேமியாவா? யாரை குறை சொல்வது?
தன் பதவி பறி போய் விடுமோ என்ற அச்சம் ஏரோதை கொடூரனாக மாற்றியது.
கனவில் எச்சரிக்கப்பட்டதால் மாற்று வழியாக சென்றார்கள் ஞானிகள்.
அரசன் சொன்னதை செய்தார்கள் படைவீரர்கள்.
இறைவாக்கு உரைப்பது இறைவாக்கினரின் பணி அல்லவா!
கடவுளை தான் பழிச் சொல்ல வேண்டுமோ!
தவறே செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? அநீதிக்கு பழிவாங்கும் கடவுள் அநியாயமாக செயல்படலாமா?
கேள்வி... கேள்வி... கேள்வி... மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை பழிச் சொல்வதும் நியாயமாகப்படுவதில்லை. நீதிமொழிகள் 14:2 இவ்வாறு சொல்கிறது, "நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.
முழுக்க முழுக்க இது பதவி ஆசையினால்/பேராசையினால் நடந்த விபரீதம் தான். இருப்பதற்கும் அதிகமாக தேடியதால் நடந்த கொலை. கடவுள் கொடுத்த சுதந்திரம் இங்கு தவறாக பயன்படுத்தப்பட்டது. (ஆதாம் ஏவாள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினார்கள், தன்னிலை மறந்தார்கள்).
இந்த ஏரோது தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று எண்ணி தன் சொந்த பிள்ளைகளைக் கூட கொன்று போட்டவன், தன்னுடைய சகோதரன், மருமகன், மனைவி மரியம்மை, மனைவியின் அன்னை அலெக்சாந்திரா ஆகியோரையும் கூட கொன்று போட்டவன். இப்படிபட்டவன் எப்படி குழந்தைகளை விட்டு வைப்பான்.
நமக்கு பிடித்தவர்களுக்கு தான், நாம் நம்மை தியாகம் செய்வோம். முன்பின் அறியாத நபருக்கும் நமக்கும் என்ன தொடர்பு. அறியாத ஒருவருக்காக நாம் தியாகம் செய்வதால் என்ன இலாபம் என்ற கேள்வியும் நமக்குள் எழும்.
கிறிஸ்துவை அறியாமலேயே கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி, கிறிஸ்துவை அறிவித்தவர்கள் இந்த குழந்தைகள்.
புனித அகுஸ்தீன் சொல்வார், "மாசில்லாக் குழந்தைகளின் இறப்பில் விண்ணில் மொட்டுகள் மலருகின்றன" என்று. குழந்தைகளுக்கு வீரம் இல்லை என்று யார் சொன்னது? தங்கள் உயிரை பணயம் வைத்து ஒரு குழந்தையை காப்பாற்றி இருக்கிறார்கள் மாசில்லா படைவீரர்கள்...
அறியாத குழந்தைகளே கிறிஸ்துவை அறிவித்தார்கள் என்றால் நாம் அறிந்த நிலையில் அறிவிக்காமல் இருப்பது ஏன்? இரத்த சாட்சிகளாக வேண்டாம்; மற்றவர்களின் இரத்தத்தை சிந்தாத சாட்சிகளாக வாழ்வோம்.
வாழ்வு அவரால் கொடுக்கப்பட்டது; அவர் கொடுத்ததை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
No comments:
Post a Comment