திருவருகைக் காலம் 3ஆம் வாரம்
20.12.2024 - வெள்ளிக் கிழமை
நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை" - 2 கொரிந்தியர் 4:8
தெளிவில்லாத பயணம் இலக்கை அடைய முடியாது. தெளிவற்ற வாழ்வு முன்னேற விடாமல் தடுக்கும்.
யாருடைய வாழ்வில் தான் குழப்பம் இல்லை என்று குழப்பத்தை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும்.
கன்னியாக இருக்க கூடிய அன்னை மரியா (தூய ஆவியால்) கருவுறுதல் ஒரு குழப்பம் என்றாலும், மண ஒப்பந்தம் செய்யப்பட்ட யோசப்போடு எப்படி சேர்ந்து வாழ்வது என்பது மற்றொரு குழப்பம்.
அந்த குழப்பம் தான் மீட்பரை இவ்வுலகிற்கு கொடுத்தது.
இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு கன்னிப் பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது வியப்புக்குரிய செயலே. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்கும் இடையே நடந்த உரையாடலில் சந்தேகங்களுக்கு தெளிவும், தெளிவு கிடைத்த பின் அன்னை மரியாவின் தாழ்ச்சியும் வெளிப்படுகின்றது. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா பதிலிறுப்பு செய்கிறார்.
இறைவனின் தாயாக மாற போகிறேன் என்ற அகங்காரம் இங்கில்லை, மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்ற போகிறேன் என்ற மனநிறைவு இங்கு புலப்படுகிறது. தனக்கு எல்லோரும் பணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கில்லை, மாறாக தன் உறவினருக்கு பணிவிடை செய்ய புறப்படுகிறார்.
இறைவனின் தாயாக இம்மண்ணில் உருவாகும் முன்னே அவர் இறைவனின் எண்ணத்தில் தாயாக உருவாகி விட்டார். தொடக்க நூல் 3:15 (“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்”) இதற்கு அடையாளம்.
குழப்பமுற்று இருக்கும் தருணத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது.
தெளிவு பெற்ற பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு அன்னை மரியா ஓர் உதாரணம்.
மற்றவரை குழப்பி அதில் ஆதாயம் தேடுவோரும் உண்டு, மற்றவர் வாழ்வை அழிப்பவரும் உண்டு.
எல்லா மனிதருடைய வாழ்விலும் குழப்பம் கண்டிப்பாக வரும். எதை தேர்ந்தெடுப்பது? யாரை நம்புவது? யாருக்கு செவிசாய்ப்பது? என்று பல கேள்விகள் உள்ளத்தில் எழும்.
எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதில் கிடைக்காது. எல்லா பதிலும் நமக்கு திருப்தி தராது. ஆனால் குழப்பம் தீர வழி உண்டு.
பொறுமையோடு காத்திருத்தல் சிறப்பு. காத்திருந்தால் காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
அன்னை மரியா தெளிவு பெற காத்திருந்தார், தெளிவு பெற்றதனால் முடிவு எடுத்தார்.
No comments:
Post a Comment