திருவருகைக் காலம் முதல் வாரம்
05.12.2024 - வியாழக் கிழமை
"நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்"- 2 கொரிந்தியர் 2:17
சொல் வீரர்களும் செயல் வீரர்களும் இவ்வுலகில் உண்டு. செயல் வீரர்களைவிட சொல் வீரர்கள் பெரிதும் சாதித்ததாக எண்ணிக் கொள்கிறார்கள்.
வார்த்தையிலே வசியம் செய்யும் சில நபர்கள் வாழ்க்கையில் ஒன்றும் சாதிப்பதில்லை. 'வாய் மட்டும் இல்லைனா உன்னை ஒருத்தரும் மதிக்க மாட்டார்கள்' என்று சிலரை பார்த்து சொல்வதுண்டு.
ஒன்றும் (வீரம், ஆற்றல், நல்லெண்ணம், நன்னடத்தை, அறிவுத்திறன்...) இல்லாதவர்கள் தான் அதிகம் பேசுவார்கள். குறைவாக பேசுபவர்கள் அதிகம் செயல்படுவார்கள்.
சமூக வாழ்க்கையில் மட்டுமல்ல சமய வாழ்க்கையிலும் சொல்லும் செயலும் இணைந்து செல்ல வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7:21,24-27) 'என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே செல்வர்' என்கிறார் இயேசு.
இறைவார்த்தையை கேட்கிறவராக மட்டும் இருப்பவர் மணல் மீது வீட்டை கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். இறைவார்த்தையை கேட்டு அதன்படி நடப்பவர் பாறை மீது வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
சொல் மட்டும் முக்கியமல்ல. சொல்லிய சொல்லின்படி வாழ்தலும் முக்கியம்.
அந்த சொல் இறைவார்த்தையாக இருக்கலாம் அல்லது நல்லோரின் சொல்லாக இருக்கலாம். சொல்லப்பட்ட நல்லதை செயல்படுத்த வேண்டும்.
பலர் கடவுளை வாயார போற்றுகிறார்கள், ஆனால் நடைமுறையில் கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதரை தூற்றுகிறார்கள்.
ஒரே வாயிலிருந்து நல்ல வார்த்தையும் கெட்ட வார்த்தையும் வருகிறது.
அடுத்தவர் பேசும் வார்த்தையும் முக்கியம், நாம் பேசும் வார்த்தையும் முக்கியம்... ஏனெனில் நாம் சொல்லும் வார்த்தைகள் நம்மை தீர்ப்புக்கு உள்ளாக்கும்.
வார்த்தைக்கு உண்மையுள்ளதாய் இருப்பதும் முக்கியம்...
No comments:
Post a Comment