திருவருகைக் காலம் 4ஆம் வாரம்
24.12.2024 - செவ்வாய்க் கிழமை
"உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்" - எசாயா 1:16
நம்மை வெறுப்போரும் சபிப்போரும் உண்டு, நம்மை ஏற்றுக் கொள்வோரும் நமக்கு ஆசீர் கூறுவோரும் உண்டு.
நம்முடைய செயல்களை ஏற்றுக் கொள்வோர் நம்மை ஏற்றுக் கொள்வர்... நம் செயல்களை வெறுப்போர் நம்மையும் வெறுப்பர்...
பிறருக்காக வாழ ஆரம்பித்தால் ஒவ்வொன்றையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பணியில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் யாருக்காகவும் எதற்காகவும் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
தூய்மையும் நேர்மையும் நம்மில் இருந்தால் மனதில் நிறைவும் அமைதியும் தோன்றும். அத்தகைய அமைதியை யாரும் சிதைக்க முடியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:67-79) செக்கரியா தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு இறைவாக்கு உரைக்கிறார்.
வரலாற்றில், இறைவன் கொடுத்த வாக்கையும் உடன்படிக்கையையும் நிறைவேற்ற வல்லவர் என்பது இவரது கூற்று வழியாக வெளிப்படுகிறது.
கடவுளை போற்றுவோம், ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார் என்று கடவுளை புகழ்கிறார்.
செக்கரியா மீட்பரின் வருகையை முன்னறிவிக்கிறார். கடவுள் தொடக்கத்தில் முன்னறிவித்த வாக்கு மெசியா வழியாக வெளிப்பட போகிறது என்பது இவரது வாக்கிலிருந்து வெளிப்படுகிறது.
மீட்பரின் வருகையை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டியது, "தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்ய வேண்டும்.
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்க செய்ய விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
யாருக்காகவும் நம் தூய்மை, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமல் வாழ்வோம்... மற்றவர்களையும் வாழ வைப்போம்...
விண்ணிலிருந்து வரும் விடியலை போல நாமும் இவ்வுலகை பொய்மையிலிருந்து உண்மை நோக்கி விடிய வைப்போம்.
இருளிருந்து ஒளி நோக்கி பயணிக்க வைப்போம்
இழந்ததை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். நாமும் மற்றவர் வாழ்வில் விடியல் ஆவோம்.
No comments:
Post a Comment