திருவருகைக் காலம் 3ஆம் வாரம்
18.12.2024 - புதன் கிழமை
"ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே" - உரோமையர் 15:7
எது கடினம்?
ஒருவரை விலக்கி விடுவதா? ஏற்றுக் கொள்வதா?
இரண்டும் கடினம் தான்... விரும்பிய ஒருவரை விலக்கி விடுவதும் அதனால் வரும் மனவருத்தத்தை சந்திப்பதும் கடினம். தன்னுடைய செயல்பாடுகளோடு தொடர்பு இல்லாத ஒருவரை தன்னுடைய வாழ்வில் ஏற்றுக் கொள்வதும் கடினம்.
இந்த உலகில், தனக்கு தொடர்பில்லாத நபர்களோடு வாழ்வதை விட, தனித்து வாழ்வது எத்துனை சிறந்தது என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகிறார்கள்.
விருப்பமில்லாத இருவரை சேர்த்து வைக்க முயற்சி செய்யும் வீட்டார், அந்த இருவருக்கு எதிராக தீங்கு செய்கிறார்கள். மனம் ஒத்து சேர்ந்து வாழ எண்ணும் இருவரை பிரிக்க முயலும் குடும்பத்தார் இருவர் வாழ்வை கெடுக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 1: 18 - 24) மரியாவை மறைமுகமாக விலக்கி விட திட்டமிடுகிறார் யோசேப்பு. இந்த விலக்குதலில் வஞ்சகம் ஏதும் இல்லை. யூத முறைப்படி கணவரை அறியாமல் கருவுறும் பெண்கள் பொது இடங்களில் கொண்டு வரப்பட்டு கல்லால் எறியப்படுவர்.
(இணைச் சட்டம் 22:21 - அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று.)
இத்தகைய செயலை யோசேப்பு செய்ய விரும்பவில்லை. உண்மை தெரியாமல் தண்டிப்பது நேர்மையாளருக்குரிய செயல் அல்ல.
கடவுளின் தூதர் கனவில் மரியா கருவுற்று இருப்பது தூய ஆவியால் தான் என்பதை சொன்ன போது நம்பினார், மரியாவை ஏற்றுக் கொண்டார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன என்று மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார்.
தெளிவற்ற தருணங்களில் தெளிவை பெற முயற்சி செய்ய வேண்டும். நாம் குழப்பமுற்று இருக்கும் வேளையில் நம்மை இன்னும் பலர் குழப்புவார்கள்.
நம்மை விலக்கி வைத்து மகிழ்ச்சி காண எண்ணுவோர் மத்தியில் நாம் தெளிவான மனநிலை கொண்டிருக்க வேண்டும்.
கடவுள் இணைத்ததை ஒருபோதும் பிரிக்கவோ/ விலக்கி வைக்கவோ கூடாது.
ஒருவர் மீது தவறு இருப்பதாக அறிய வந்தால், தீர விசாரித்து முடிவு எடுப்போம்.
தெளிவற்ற சூழலில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க கூடாது.
பேசி தீர்க்க வேண்டியவற்றை பேசி தீர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment