கிறிஸ்து பிறப்பு காலம்
25.12.2024 - புதன் கிழமை
ஏன் கிறிஸ்து பிறப்பை கொண்டாட வேண்டும்? கிறிஸ்து பிறப்பு நமக்கு சுட்டிக் காட்டும் விழுமியம் என்ன? கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன்று அர்த்தமுள்ள முறையில் கொண்டாடப்படுகிறதா? என்ற கேள்வியை கேட்டு பார்க்க வேண்டும்.
பகிர்வில்லாத கிறிஸ்துமஸ் எப்படி கிறிஸ்துமஸ் ஆக இருக்க முடியும்? அன்பை விதைக்காத மனிதன் எப்படி கிறித்தவராக இருக்க முடியும்?
இன்றைய காலக் கட்டங்களில் பணம் தூக்கி வீசப்படுகிறது. ஆடம்பரங்கள் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துவின் பண்பு நலன்கள் பகிரப்படவில்லை.
நிகழ்வு -
வறுமையில் வாடிய குடும்பம். குடும்பத்தில் மொத்தம் 3 நபர்கள். தந்தை கூலி வேலை செய்பவர். தாய் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர்களுக்கு ஒரே ஒரு மகன்.
கடினப்பட்டு எப்படியோ மகனை நன்கு படிக்க வைத்து விட்டார்கள். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். அன்று சென்ற மகன் அதன்பின்னர் திரும்ப வரவே இல்லை.
தனக்கு கிடைத்த வாழ்க்கையை பெரிதாக எண்ணி தாய் தந்தையை மறந்து விட்டான். கல் மனம் கொண்டவன் மகனாக இருந்தாலும் இளகிய மனம் கொண்டவர்கள் தாய் தந்தை அல்லவா! மருத்துவ சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்து விடுகிறார்.
அதற்கும் மகன் வரவில்லை. நாட்கள் சென்று கொண்டிருக்கிறது. மகனுக்கு செய்த தொழிலில் பெரும் இழப்பு. கைவிடப்பட்ட நிலையில் உடன் இருந்த மனைவி பிள்ளைகள் துரத்தி விட்டார்கள்.
எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த மகனுக்கு தந்தை நினைவுக்கு வந்தார். செல்வதற்கு தயக்கம், வெட்கமாக இருந்தது. இருந்தபோதிலும் தந்தையை வீட்டிற்கு சென்றான் மகன்.
தந்தை எந்த வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டவில்லை. வா பா உட்காரு என்றார். மகனுக்கு ஆறுதல் கிடைத்தது. மகன் நடந்ததை சொல்வதற்கு வாய் திறப்பதற்கு முன் தன் மனைவியின் தாலி செயினை கையில் கொடுத்தார் தந்தை.
கண்ணீர் விட்டு அழுதான் மகன். தாய் தந்தைக்காக எதையும் கொடுக்க மனம் இல்லாத மகனுக்கு இழப்பிலும் இருப்பதை கொடுத்து விட்டார் தந்தை.
தியாகம் இழப்பிலும் தொடரும்.
இயேசுவின் பிறப்பு தியாகத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் அடையாளம்,
கடவுள் வடிவில் விளங்கிய அவர் மனிதனாக இவ்வுலகில் உதித்தார் - தியாகம்
தீவனத் தொட்டி உணவு வழங்கும் இடம், கிறிஸ்து தன்னை பகிர்ந்து கொடுத்தார் - பகிர்வு
தாழ்த்தப்பட்டவர்கள், கீழானவர்கள் என்ற நிலையை ஒளித்து சமத்துவத்தை விதைத்தார் - சமத்துவம்
எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி ஊட்டும் நற்செய்தி சொல்லப்பட்டது - மகிழ்ச்சி
இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு - உடனிருப்பு
இன்று இந்த பண்பு நலன்கள் நம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வெளிப்படுகின்றதா என்பது கேள்விக் குறியே!
தேவையானவை ஓரங்கட்டப்பட்டு இன்று ஆடம்பரங்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன...
கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வதோடு, புதிய ஆடை அணிவதோடு, செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் இல் பதிவேற்றம் செய்வதோடு கிறிஸ்துமஸ் நிறைவு பெறுகிறது.
கிறிஸ்துமஸ் தனது அர்த்தத்தை இழந்து நிற்கிறது. கிறிஸ்து விதைத்த இறையாட்சி என்னும் கனவு முழுமை அடையவில்லை.
அன்பு, மகிழ்ச்சியை விலைக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். தற்காலிக/போலியான அன்பு நமக்கு பழகி போய் விட்டது.
கிறிஸ்துமஸை கொண்டாடுகிறோம் ஆனால் கிறிஸ்துவை கொண்டாட தவறி விட்டோம்.
திருப்பலி முடிந்து பொருத்தமற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆலயத்தின் முன்னே அரங்கேறுவது நம் ஆன்மிகத்தை தடுமாற செய்கிறது.
நாவில் நற்கருணை பெற்று விட்டு, திருப்பலி முடிந்த உடனே மதுவை தேடிச் செல்வது நாம் இன்னும் இறையன்பை சுவைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் கொண்டாட்டம் தான், ஆனாலும் அது அர்த்தமுள்ள கிறிஸ்துமஸாக இருக்க முயற்சி எடுப்போம்...
No comments:
Post a Comment