24_08

வெளியே இருந்து வரும் சட்டமும் உள்ளே இருந்து வரும் தீட்டும்...


பொதுக் காலம் 22ஆம் வாரம்

01.09.2024 - ஞாயிற்றுக் கிழமை

சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டது மனிதனின் நல்வாழ்வுக்காக. ஒரு சட்டத்தை காப்பாற்றுவதற்காக மேலும் சட்டங்கள் இயற்றப்படுவது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒன்றாக இருந்தாலும் அதன் பரிணாமங்கள் பல வகையாக இருக்கின்றன. சட்டம் பொதுவாக இருந்தாலும் அந்த சட்டத்திலிருந்து சில கிளைகள் துளிர்விட்டு, மற்றவரை காப்பாற்ற வேறொரு சட்டமாக அது மாற்றப்படுகிறது. (சட்டத்தில் ஓட்டை விழுகிறது). 

கடவுள் கொடுத்தது தூய்மைச் சட்டம். அந்த தூய்மை என்பது உள்ளத்தின் தூய்மையை குறிக்கிறது. (நான் உங்கள் கடவுள் நீங்கள் என் மக்கள் என்று உள்ளங்களுக்கு இடையே தூய சட்டத்தைக் கொணர்ந்தார் கடவுள்).

 ஆனால் உள்ளத்தில் தூய்மை இல்லாத மனிதர்கள், வெளிப்புற தூய்மை மீது அக்கறை கொண்டவர்கள் போல தங்களை காட்டிக் கொள்வதனால் கடவுள் கொடுத்த சட்டத்தை மாற்றக்கூடிய மனநிலை கொண்டவர்களாக மாறிப் போனார்கள். தங்களை மேலானவர்களாக காட்டிக்கொள்ள விரும்பியவர்கள், வெளிப்புறத்தில் தூயவர்களாக தங்களை காட்டிக் கொண்டார் இதுதான் உண்மை. 

இன்றும் அதே போல பல நபர்கள் வலம் வருவதை நாம் பார்க்கிறோம். தொட்டால் தீட்டு, பேசினால் தீட்டு, பொது இடத்திற்கு வந்தால் தீட்டு, கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு, உண்மையின் சார்பாக இருந்தால் தீட்டு என்று தங்கள் உள்ள சிந்தனையில் தீட்டை வைத்துவிட்டு மற்றவர்களை தீட்டு உள்ளவர்களாக பார்க்கக் கூடியவர்கள் இத்தகைய மனிதர்கள்.

கடவுள் விரும்பாததை கடவுள் விரும்புவதாக சொல்லி இன்று பல சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. சடங்கை நிறைவேற்றவில்லை என்றால் நீங்கள் கடவுளின் கட்டளையை மீறுகிறீர்கள் என்று சொல்லி மிரட்டலும் விடுக்கப்படுகின்றன.

 (கடவுளே வந்து இது தவறு என்று சொன்னாலும் கடவுளையும் குற்றம் காணும் மனநிலை இங்கு நம்மில் பலருக்கு உண்டு). இதை தான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களும் சதுசேயர்களும் மறைநூல் அறிஞரும் செய்தார்கள்.

இயேசு நல்லதை செய்த போதிலும் அவர் மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். வெளிப்படையாக இயேசு செய்தது நல்லது என்று தெரிந்திருந்தாலும் ஏன் அவரை தடுத்தார்கள்? தங்களை மீறி அவர் செயல்படுகிறார், தங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற மனநிலை தான் இயேசு நல்லது செய்த போதிலும் இயேசுவுக்கு எதிராக அவர்களை செயல்பட வைத்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (மாற்கு 7:1-8) பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் வந்து உம்முடைய சீடர் சிலர் தீட்டான, அதாவது கழுவாத கைகளால் உண்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்வி அக்கறையினால் கேட்கப்பட்ட கேள்வி அல்ல. மாறாக தாங்கள் தூய்மையை கடைப்பிடிப்பவர்கள் என்பதை இயேசுவின் முன்னால் எண்பித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி. சட்டங்களை மட்டும் தூயதென கடைபிடிப்பது சரியல்ல, உள்ளத்தை தூயதாய் காப்பதே சிறந்தது.

இந்த உலகில் தங்களை தூயவர்களாக நல்லவர்களாக காட்டிக்கொள்ள மனிதர்கள் போராடிக் கொண்டிருக்கிறார். இன்று ஒருவரிடம் தன்னை நல்லவராக காட்ட எண்ணுபவர், நாளை மற்றவரிடம் தன்னை நல்லவராக காட்ட நடிக்க வேண்டி இருக்கிறது. உள்ளத்தில் தூய்மை இருந்தால் யாருக்கும் நாம் நம்மை நல்லவர் என்று காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

குறைகுடம் தான் கூத்தாடும். நிறையுள்ள உள்ளத்தில் மற்றவரின் குறை தெரியாது. (மற்றவர்கள் தவறு செய்கிறபோது இது தவறு என்று சுட்டிக் காட்டுவது வேறு, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்று குறை கூறுவது வேறு). இயேசு தெளிவாக சொல்கிறார், "மனிதருக்கு உள்ளே இருந்து வெளியே வருபவை தான் மனிதரை தீட்டுப்படுத்தும். ஏனென்றால் மனித உள்ளத்தில் இருந்து தான் பரத்தமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றை செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன".

தனக்குள்ளே தூய்மையற்ற தீட்டை வைத்துக் கொண்டு மற்றவர்களை தீட்டு உள்ளவர்கள் என்று தீர்ப்பிடுவதற்கு நாம் யார்?

மட்கி மண்ணுக்குள் செல்லும் மனிதனின் உடல் சக மனிதனை சாதியம் எனும் தீட்டால், சமயம் என்னும் தீட்டால், நிறம் மொழி இனம் என்னும் தீட்டால் பிரித்தாளுகிறது.

மாற்றங்கள் வெளியே உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நம் உள்ளத்தில் முதலில் உருவாக்கப்பட வேண்டும். 

கடவுளின் படைப்பு அனைத்தும் தூயது என்ற பார்வையும், கடவுள் அனைத்தையும் நல்லது என்று கண்டார் என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டு நாமும் அனைத்திலும் நல்லதை காண வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (இணைச் சட்டம் 4:1-2,6-8) ஒரு அருமையான இறைவார்த்தை கொடுக்கப்பட்டிருக்கிறது, "நாம் குரல் எழுப்பும்போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல் மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளை கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?". கடவுள் நம்மை தீட்டோடு படைக்கவில்லை. கடவுளின் படைப்பில் தீட்டு இல்லை. எனவே தான் கடவுள் மனிதரை தூய்மையற்ற வாழ்விற்கு அல்ல தூய வாழ்விற்கே அழைத்திருக்கிறார். (தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 4:7 இவ்வாறு சொல்கிறது, "கடவுள் நம்மை ஒழுக்கக்கேட்டிற்கு அல்ல, தூய வாழ்வுக்கே அழைத்தார்").

கடவுள் நியமங்களையும் முறைமைகளையும் சட்டங்களையும் எதற்காக கொடுத்திருக்கிறார்? அவற்றை மனிதன் கடைப்பிடித்து கடவுளுக்குரிய பாதையில் நடக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் இந்த சட்டங்கள் மனிதர்களை பிரிக்கிறது. உயர்த்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டங்கள் வேறுபட்டதாக இருக்கிறது. 

மதிப்பு மிக்கவர்களாக சமூகத்தில் தூக்கி நிறுத்தப்பட்டவர்களுக்கு சட்டம் வளைந்து வழிவிடுகிறது. 

இது கடவுள் வகுத்த சட்டமா? நிச்சயம் இல்லை. 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு (1:17-18,21-22,27) தன்னுடைய திருமுகத்தில் இவ்வாறு சொல்கிறார், நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகம் தந்தையிடமிருந்து வருகின்றன.

நம் கடவுள் தூயவராய் இருப்பது போல நாமும் தூய்மை நிறைந்தவர்களாய் இருக்க வேண்டும்.

இறைவார்த்தையை கேட்கிறவர்களாக மட்டும் இருந்து நாம் நம்மை ஏமாற்றி விடக்கூடாது என்பதை இரண்டு வாசகம் தெளிவுப்படுத்துகிறது.

- மனிதரில் பாகுபாட்டை ஏற்படுத்தி விட்டு கடவுளின் பந்தியில் அமர்வது நியாயமற்றது. 

- மனிதரில் ஏற்றத்தாழ்வுகளை கண்டு கடவுள் முன்னால் தாள் பணிவது ஏமாற்று வேலை

- சட்டங்களையும் கோட்பாடுகளையும் தூக்கிப் பிடித்துவிட்டு பணம், வசதி உள்ள பக்கம் சாய்வது இரட்டை வேடத்தின் அடையாளம். 

- ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல இறைவார்த்தைக்கு செவிமடுத்து உலக வாழ்க்கைக்கும் நம்மை கையளிப்பது தெளிவற்ற வாழ்வை உணர்த்துகிறது. 

- வெளிப்புறத்தில் தூயவரை போல இருந்துவிட்டு உட்புறத்தில் தீய எண்ணங்களுக்கு தீனி போடுவது போலி வாழ்க்கை. 

கடவுளின் சட்டம் நம்மை தூய்மைப்படுத்துவதற்கு அன்றி நம்மை பிளவுபடுத்துவதற்கு அல்ல. கடவுள் ஒவ்வொன்றிலும் நல்லதை கண்டார். நாமும் நிறைவின் வழியாக நிலை வாழ்வை காண்போம். தூய வாழ்வின் வழியாக தூயவரைக் கண்டு கொள்வோம்.

கொடுக்கப்பட்டதற்கு ஏற்ப கணக்கு கேட்கப்படும்...


பொதுக் காலம் 21ஆம் வாரம்

31.08.2024 - சனிக் கிழமை 

ஒவ்வொருவருக்கும் (திறமை/ஆற்றல்) கொடுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொருவரிடமிருந்தும் திரும்ப எதிர்பார்க்கப்படும். 

மனிதர்கள் ஒருவர் மற்றொருவரிடம் கொடுத்ததையே (அன்பு/பணம்) கணக்கு கேட்க தவறுவதில்லை. கொடுத்த பணத்திற்கும் அதிகமாக வட்டியோடு சேர்த்துக் கொள்வதுதான் மனிதருடைய நிலையாக இருக்கிறது. கடவுளிடமிருந்து கொடையாக பெற்றதையே, மற்றவர்களுக்கு  கடனாக கொடுத்து அதில் வருமான ஈட்டும் எண்ணம் உடைய மனிதர்கள் நாம்.

ஆனால் கடவுள் தாம் கொடுத்த ஆற்றலையும், சக்தியையும் மனிதன் சக மனிதனுடைய வளர்ச்சிக்காக பயன்படுத்த அழைப்பு விடுக்கிறார். பயன்படாமல், பலன் கொடுக்காமல் இருக்கும் மனிதரின் வாழ்வு தேவையற்ற ஒன்று.

இன்றைய நற்செய்தி வாசகமானது (மத்தேயு 25:14-30) நெடும் பயணம் மேற்கொள்ள இருந்த ஒருவர், தம் பணியாளர்களுக்கு அவரவர் திறமைக்கு ஏற்ப கொடுத்த தாலந்தை பற்றி விளக்குகிறது. இந்த தாலந்து உவமையோடு விண்ணரசு ஒப்பிடப்படுகிறது. 

ஒருவரிடம் ஐந்து தாலந்தும் வேறொருவரிடம் இரண்டு தாலந்தும் இன்னொருவரிடம் ஒரு தாலந்து கொடுக்கப்படுகிறது. ஐந்து, இரண்டு தாலந்தை பெற்றவர்கள் அதை மேலும் பெருக்கிக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு தாலந்து பெற்றவர் அதை புதைத்து வைக்கிறார். 

இந்த தாலந்து எதை குறிக்கிறது? கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்த திறமையை குறிக்கிறது. திறமையை பயன்படுத்தாதோர் நிலைமையும் ஒரு தாலந்தை பெற்றவர் நிலையும் ஒன்றே. (இது தனக்கும் பிறருக்கும் பயன்படா வாழ்வு).

வாய்ப்பை பயன்படுத்தியோருக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. வாய்ப்பை பயன்படுத்தாதோருக்கு இழப்பு தான். 

இல்லாதோரிடமிருந்து அவரிடம் உள்ளதும் எடுக்கப்படும் என்கிறது இன்றைய நற்செய்தி. இங்கு இல்லாதவரிடமிருந்து எப்படி உள்ளதும் எடுக்க முடியும்? இந்த கேள்வி எழலாம். ஒவ்வொருவருக்கும் தாலந்து (திறமை) கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திறமையை சரிவர பயன்படுத்தாத போது அவரிடம் உள்ள திறமையும் எடுக்கப்படும் என்பதுதான் இதன் அர்த்தமாக இருக்கிறது. 

இறைவன் தீர்வு நாளில் நடுவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது, நம்மிடம் எழுப்ப போகும் கேள்வி, உன்னிடம் நான் கொடுத்த தாலந்தை என்ன செய்தாய்? என்பதுதான். எனக்கு ஒன்றும் கொடுக்கப்படவில்லை என்று நாம் பதில் சொல்ல முடியாது. 

தாலந்து என்னும் திறமையை நான் பயன்படுத்தினேனா அல்லது எனக்குள்ளே முடக்கி வைத்தேனா என்பது நான் சிந்திக்க வேண்டிய ஒன்று. 

திறமையை பயன்படுத்தாத போது நாம் பயனற்ற மனிதர்களாய் மாறிவிடுகிறோம். பலன் கொடுக்கும் மனிதர்களாக, தாலந்தை பெருக்கும் மனிதர்களாக வாழ முயற்சி செய்வோம்.

முன்மதியுடைய பணியாளராக...


முன்மதியுடைய பணியாளராக
பொதுக்காலம் 21ஆம் வாரம் 
30.08.2024 - வெள்ளிக் கிழமை

“இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்கிறார் படைகளின் ஆண்டவர்" - மலாக்கி 3:1

எப்போது என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது! நாம் நினைக்கும் காரியங்கள் எப்போது நிறைவேறும் என்பதும் நமக்கு தெரியாது! ஆனால் நடக்க வேண்டிய அனைத்தும் நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக நடக்கும். அதற்காக நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கக்கூடாது. கடவுள் நமக்கு அறிவாற்றலை கொடுத்திருக்கிறார், கூர்வுணர்வோடு செயல்பட அழைத்திருக்கிறார். 

கடவுள் கொடுத்த மதிநுட்பத்தை சரிவர பயன்படுத்த வேண்டும்.

எல்லாம் கடவுள் கையில் இருக்கிறது, நாம் ஏன் உழைக்க வேண்டும்? ஆயத்தமாய் இருக்க வேண்டும்? என்ற கேள்விகள் நம்முடைய வாழ்வை குழப்புகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 25:1-13) முன்மதியோடு செயல்பட்ட ஐவரையும் அறிவிலிகள் ஐவரையும் பார்க்கிறோம். மணமகனை எதிர்கொள்ள சென்ற ஐந்து தோழியர் தங்களோடு விளக்கும் எண்ணெய்யையும் எடுத்துச் சென்றார்கள், மற்ற ஐவரோ வெறும் விளக்குகளை மட்டும் எடுத்துச் சென்றார்கள்.

முதல் ஐவர் தயாரிப்போடு இருந்தார்கள், முன்மதியோடு செயல்பட்டார்கள். இந்த தயாரிப்பு என்பது நம் வாழ்வோடு ஒப்பிடப்படுகிறது. இவ்வுலகில் வாழ்கின்ற போது நாம் நிரந்தர குடிமக்களாக இங்கு தங்கி விடப் போவதில்லை. மறு உலக வாழ்வை நோக்கிய பயணத்திற்கான ஆயத்தமே இவ்வுலக வாழ்வு. 

இந்த உலகத்தில் உண்டு, குடித்து, ஆடம்பரத்தோடு வாழ்ந்து முடிப்பதல்ல கிறித்தவ வாழ்வு, மாறாக இறையாட்சியின் விழுமியங்களை சொல்லாலும் செயலாலும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியது. 

எப்போது நாம் அழைத்துக் கொள்ளப்படுவோம்? (எப்போது இறப்பு வரும்?) என்பது தெரிந்து விட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்காது. எப்போது அழைப்பு வந்தாலும் தயாராய் இருக்கிறேன், ஆயத்தமா இருக்கிறேன் என்பதுதான் நம் பதிலாக இருக்க வேண்டும்.

இந்த ஆயத்தம் என்பது வாழ்க்கையின் சீர் நிலையை குறிக்கிறது. (எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கை ஆயத்த வாழ்வு அல்ல). அறிவிலிகள் ஐவரின் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது. மணமகன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். இந்த மனநிலையோடு இருந்த காரணத்தினால் தங்களோடு எண்ணெய் எடுத்துக் கொண்டு போகவில்லை. திருமண மண்டபத்திற்குள்ளும் நுழைய முடியவில்லை.

ஆயத்தமாய் இருந்தவர்கள் (நல்வாழ்வு வாழ்ந்தவர்கள்) மணமகனோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள் (விண்ணக வாழ்வை பெற்றார்கள்).

நாமும் முன்மதியோடு செயல்படுவோம். எல்லாம் அறிந்திருந்தும் எதையும் அறியாத வரை போல காட்டிக் கொள்வது முன்மதியுடையோரின் செயல் அல்ல.

கடவுள் வரும் நாளும் வேளையும் நமக்குத் தெரியாது. ஆனால் அவர் வருவார் என்பது நமக்கு தெரியுமே! விளக்குகளை கையில் ஏந்தியவர்களாய் ஆயத்தமாய் அவரை எதிர்கொள்வோம்.

நம்மால் முடிந்த நன்மைகளை செய்து விளக்கிற்கு தேவையான எண்ணெயை சேமிப்போம்...

புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்

 

பொதுக் காலம் 21ஆம் வாரம் 

29.08.2024 - வியாழக் கிழமை 

தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்த (பாலைவன வாழ்க்கை) யோவான், தலை வெட்டப்பட்டு உயிர்த் தியாகம் செய்கிறார். நல்லவர்கள் கொலை செய்யப்படுவதும், தீயவர்கள் தழைத்தோங்கி வாழ்வதும் அன்று தொடங்கி இன்று வரை நீடிக்கிறது. 

சிலர் நன்மை செய்ய தயங்குவது, உயிரை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால் தான். அஞ்சி அஞ்சி வாழ்பவனுக்கு அனுதினமும் சாவுதான். பயப்படாத வீரனுக்கு ஒரே ஒரு சாவு தான்.

யாரும் சாவை விரும்பி ஏற்பதில்லை. நல்லதை சொல்வதால், நன்மை செய்வதால் மரணம் உண்டு என்பதை புனிதர்களின் வாழ்வும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் வாழ்வும் படம்பிடித்து காட்டுகிறது. 

இறப்பு வந்து விடுமே என்று சொல்லி நல்லோர், நன்மை எனும் நேர்கோட்டில் இருந்து விலகுவதில்லை.

"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத்தேயு 5:10) என்ற இறைவார்த்தைக்கு சொந்தக்காரர்கள் தான் நல்லது செய்து உயிரை தியாகம் செய்தவர்கள்.

சபை உரையாளர் நூல் 8:12 இவ்வாறு சொல்கிறது, "பாவி நூறு முறை தீமை செய்து நெடுங்காலம் வாழ்ந்தாலும் கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள்". 

நலமுடன் வாழ ஒருவேளை இவ்வுலகில் சாத்தியம் இல்லை என்றாலும் நாம் எதிர்நோக்கி இருக்கக்கூடிய விண்ணக வாழ்வில் அது நிறைவாய் கொடுக்கப்படும்.

இன்று மனிதர்கள் தவறு செய்ய துணிவதனுடைய காரணம், நமக்கு மேல் யார் இருக்கிறார்? நமக்கு அடுத்து என்னவாகும்? என்ற சிந்தனை இல்லாதது தான்.

தவறு செய்வோர் இருக்க அதை தட்டிக்கேட்போர் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவர்களில் ஒருவர்தான் திருமுழுக்கு யோவான். தன்னை நாடி வரக்கூடியவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் (உயர்நிலையோ தாழ்நிலையோ) அவர்கள் செய்வது தவறு என்றால் அதை அதிகாரத்தோடு தட்டிக் கேட்கக் கூடியவர்தான் திருமுழுக்கு யோவான். 

தன்னைத் தேடி வந்த பரிசேயர், சதுசேயர் சிலரை பார்த்து, "விரியன் பாம்பு குட்டிகளே வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத்தேயு 3:7,8) என்றவர், அரசர் என்றாலும் கூட, நீ உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல (மத்தேயு 14:4) என்று சுட்டிக் காட்டியவர், மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று மக்கள் மத்தியில் பறைசாற்றியவர். 

அதே திருமுழுக்கு யோவான் தன்னை தாழ்த்தக் கூடியவராகவும் இருக்கிறார். 

எனக்குப் பின் ஒருவர் வருகிறார் அவருடைய மிதியடி வாரை தூக்கிச் செல்ல கூட எனக்கு தகுதி இல்லை (மத்தேயு 3:11) என்றும் இதோ கடவுளின் ஆட்டுக் குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தை போக்குபவர். எனக்குப் பின் வரும் இவர் என்னை விட முன்னிடம் பெற்றவர் (யோவான் 2:29,30) என்றும் தன் சீடர்களை இயேசுவின் சீடர்களாக மாற்றும் குணம் கொண்டவர்.

ஒட்டக முடியாலான ஆடை, வெட்டுக்கிளியும் காட்டு தேனும் உணவு உண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.

தன்னையும் தூய்மைப்படுத்திக் கொண்டு இறைவனின் வருகைக்காக மனிதர்களையும் தூய்மைப்படுத்தும் ஒரு மேலான பணியை செய்தவர். அந்தப் பணியின் காரணமாகத்தான் ஏரோது தவறு செய்தபோது அவரை தட்டிக் கேட்டார். ஏரோதியாளின் சூழ்ச்சியினால் சிறைத் தண்டனை, இறுதியாக தலை வெட்டப்பட்டு தன் உயிரை இழக்கக் கூடிய தருணம் எல்லாவற்றிலும் அவர் நேர்மையுடையவராகவே இருந்தார்.

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டு பாடம். உண்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் தீமையோடு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பெயரை இழக்க நேர்ந்தாலும், ஏன் உயிரையே இழக்க நேர்ந்தாலும் தீயவர்களோடு கைகோர்க்க கூடாது.

பகட்டான ஆடம்பர வாழ்க்கை அல்ல எளிய வாழ்க்கை தான் கடவுளுக்கு உகந்தது. 

இறைப்பற்றில்லாத உலக நாட்டமுள்ள மனிதராக வாழாது, கடவுளை சார்ந்து மனிதத்தை நேசிக்கும் மனம் கொண்டவர்களாக வாழ வேண்டும்.

சிறிது பணமும் அதிகாரம் வந்துவிட்டால் ஆணவத்தோடு செயல்படும் மனநிலை வந்துவிடுகிறது. சொந்த உறவுகளை மதிக்காத மனநிலை ஏற்பட்டு விடுகிறது. 

இருப்பதையும் இழக்க நேரிடும் எனவே இருக்கின்றபோதே இரக்கத்தோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

நன்மை செய்வதனால் நல்லோர் பக்கம் இருப்பதினால் தீமை உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

- 1பேதுரு 4:14 கிறிஸ்துவின் பொருட்டு பிறர் உங்கள் மீது வசை கூறும் போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில் கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும்.

- 1பேதுரு 4:19, கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக! அவர் நம்பத் தக்கவர்.

உள்ளொளி பெற எடுத்து வாசியுங்கள்...


பொதுக் காலம் 21ஆம் வாரம்

28.08.2024 - புதன் கிழமை 

புனித அகுஸ்தின் வாழ்வை மாற்றிய இறைவசனம் உரோமையர் 13:13-14, "பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டை, சச்சரவு ஆகியவற்றை தவிர்ப்போமாக! தீய இச்சைகளை தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்". 

இந்த வார்த்தையை கேட்பதற்கு முன் உலக இன்பங்களில் அதிக நாட்டம் கொண்டிருந்த அகுஸ்தின் கிறிஸ்துவின் ஒளியை உள்ளத்தில் ஏற்று புனித வாழ்க்கை வாழ தொடங்கினார். உலக இன்பங்களில் கவனம் செலுத்திய அகுஸ்தின் மணிக்கேயிச கொள்கையினால் மிகவும் பாதிக்கப்பட்டார். மிலன் நகர ஆயர் அம்புரோஸ் அவர்களின் மறையுரை அவருக்கு ஆறுதல் தர தொடங்கியது. தனக்குள் இருந்த பாவ வேட்கை குறைய ஆரம்பித்தது. உலக இன்பத்தை விட கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சிறந்தது என்று சொல்லி இறைவார்த்தையை படித்து தன்னுடைய பாவத்தை உணர ஆரம்பித்தார். மனம்மாறிய பிறகு பல்வேறு நூல்களை எழுத ஆரம்பித்தார். ஒரு ஆயரின் மறையுரையால் தொடப்பட்ட இவர் பின்னாளில் 32 ஆண்டுகள் ஹிப்போ நகரின் ஆயராக இருந்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23:27-32) வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பான மறைநூல் அறிஞரை பரிசேயரை இயேசு கண்டிக்கிறார்.

வெளிப்புறத்தில் நேர்மையாளர்களைப் போல காட்டிக் கொள்வோர் உட்புறத்திலோ மாசுபடிந்து இருக்கிறது. 

கல்லறையின் வெளிப்புறம் அழகுப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அதன் உட்புறமோ எலும்பும் எல்லா வகை அழுக்கும் நிறைந்திருக்கும் என்கிறார் இயேசு. 

புனித அகுஸ்தினாரின் உள்ளம் இதே போல தான் இருந்தது. கிறிஸ்துவின் ஒளியை காண்பதற்கு முன்பு வரை அவருடைய உள்ளம் மூடப்பட்ட கல்லறையாக இருந்தது. எடுத்து வாசி என்ற இறை வார்த்தையை கேட்டது முதல் அவருடைய உள்ளம் புதுப்பிக்கப்பட்ட மாளிகையாக மாறியது.

 வெளிப்புறத்தில் அறிவாளியாக திறமைசாலியாக இருக்கக்கூடியவர்கள் உட்புறத்தில் பலவீனமானவர்களாக இருக்கத்தான் செய்வார்கள். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு பலவீனம் இருக்கிறது. அந்த பலவீனங்களை கண்டு அவற்றிலிருந்து வெளிவருவது தான் கடவுளுக்குகந்த வாழ்க்கை வாழ்வதன் அடையாளம். பலவீனங்களிலே மூழ்கி நாம் முத்து எடுக்க முடியாது. 

நம்முடைய வாழ்வு வெளிப்புறத்தில் அழகுப்படுத்தப்பட்டிருக்கிறது. உட்புறத்தை மனிதனால் பார்க்க இயலாது என்பதால் அது மாசுபடிந்தே இருக்கிறது.

ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார். (1சாமுவேல் 16:7)

கடவுளே கண்களுக்கு எதுவும் மறைவாய் இருப்பதில்லை. நாம் மறைவாய் செய்யும் செயல்கள் கூட கடவுளுக்கு வெளிப்படையாய் உள்ளது. 

மனிதர் முன்னிலையில் நேர்மையாளரை போல நாம் நம்மை காட்டிக்கொள்ளலாம், ஆனால் உள்ளே இருக்கும் போலித்தனமும் நெறிகேடும் நிறைந்த வாழ்க்கை நம்மை ஒருநாள் காட்டிக் கொடுத்துவிடும்.


உட்புற தூய்மையும் மனமாற்றமும்...

 


பொதுக் காலம் 21ஆம் வாரம்

27.08.2024 - செவ்வாய்க் கிழமை

புனித மோனிக்கா - நினைவு

ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்" - திருப்பாடல்கள் 51:7

மோனிக்கா என்றால் கண்ணீரால் கடவுளை கரைப்பவர் என்பது பொருள். மோனிக்கா தன்னுடைய வாழ்வில் கணவராலும் மாமியாராலும் முதல் மகனான அகுஸ்தினாலும் அதிக துன்பங்களை அனுபவித்தார். 

இவர்கள் கடவுள் பயம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மோனிக்காவோ அதிக கடவுள் நம்பிக்கை உடையவராக வாழ்ந்து வந்தார். 

ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு இவர்களின் மனமாற்றத்திற்காக வேண்டுவார். 371ஆம் ஆண்டு அவருடைய கண்ணீருக்கு பதில் கிடைத்தது. அவருடைய கணவர் கிறிஸ்து மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். மாமியாரும் மனம் மாறினார்.

ஆனால் இவருடைய கவலை குறைந்தபாடில்லை. தன்னுடைய மகனின் தாறுமாறான வாழ்க்கை இவரை இன்னும் சோகத்திற்கு உட்படுத்தியது. 

ஒருமுறை மிலன் நகர் ஆயரான அம்புரோசிடம் தன்னுடைய மகனுக்காக கதறி அழுதார். இவருடைய அழுகையை பார்த்த ஆயர், உம்முடைய மகன் ஒருநாள் நிச்சயம் மனம்மாறி கடவுளுக்குகந்த வழியில் நடப்பான்" என்று உறுதி கூறினார். அதன்படி 387ஆம் ஆண்டு அகுஸ்தின் மனம்மாறி திருமுழுக்கு பெற்றார். 

தாயினுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் தன்னுடைய மகனின் உட்புற மனமாற்றம், அகுஸ்தினின் கடவுளை நோக்கிய பயணம் அவருக்கு மகிழ்வை கொடுத்தது. 

புனித மோனிக்கா தன் மகனிடம் வைத்த ஒரு கோரிக்கை, "நீ எனக்காக ஒரு நற்செயல் செய். அது வேறொன்றுமில்லை. நீ திருப்பலி நிறைவேற்றும் போது அதில் என்னை நினைத்துக் கொள்".

ஒரு தாயின் கண்ணீர் ஒரு குடும்பத்தையே மாற்றி இருக்கிறது. அழுது அழுது நொந்து போன மனிதருக்கு மத்தியில் பல ஆண்டுகள் கண்ணீரோடு இறைவன் முன் தன் குடும்பத்தை ஒப்படைத்த புனித மோனிக்கா பொறுமையின் முன்மாதிரி.

தன் மகனின், கணவனின், மாமியாரின் உள்ளம் தூய்மை பெற வேண்டும் கடவுளை நாடி தேட வேண்டும் என்பதுதான் புனித மோனிக்காவின் ஒரே இறைவேண்டலாக இருந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23:23-26) வெளிவேடத்தனத்தோடு செயல்பட்ட மறைநூல் அறிஞர், பரிசேயரை இயேசு சாடுகிறார். புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் உள்ள பங்கை படைக்கிறீர்கள். ஆனால் திருச்சட்டத்தின் முக்கிய போதனையாகிய நீதி, இரக்கம் , நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறீர்கள் என்று அவர்களின் தவறை சுட்டிக்காட்டுகிறார். 

வெளிப்புற தூய்மையை நாடக்கூடிய அவர்களோ தங்களுடைய உள்ளத்தை தீட்டு படுத்தியிருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறார்.

தேவையற்ற ஆடம்பர கொண்டாட்டங்கள்,, வழிபாட்டு முறைகள் இவற்றில் இன்பம் காணக்கூடிய மனநிலை நம்மில் இருந்தது என்றால் நாமும் வெளிவேடக்கார பரிசேய, மறைநூல் அறிஞரை போல தான் இருக்கிறோம். 

எது முக்கியம்? வெளிப்புற பகட்டான அடையாளங்களை காட்டிலும் உட்புறமாற்றம், உட்புற தூய்மை தான் முக்கியம். 

உள்ளம் தூய்மையாக இருந்தால் வெளிப்புறமும் தூய்மையாக இருக்கும். 

உள்ளம் மாசு படிந்து குப்பை கிடங்காக இருந்தால், வெளிப்புற வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். கைகளை கழுவுவதை காட்டிலும் உள்ளம் கறைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தனக்கு ஏற்றார் போல் சட்டதிட்டம்...


பொதுக் காலம் 21ஆம் வாரம்

26.08.2024 - திங்கட் கிழமை 

இந்த உலகில் போடப்பட்டிருக்கும் அனைத்து சட்டதிட்டங்களையும் கணக்கில் எடுத்தால், எதற்கு இத்தனை சட்டங்கள் என்று தோணும்... காலத்திற்கு ஏற்ப ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டங்களை காப்பாற்றுவதற்காக மீண்டும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. 

சட்டங்கள் யாருக்கும் வளைந்து கொடுப்பதில்லை என்பார்கள், ஆனால் சில சட்டங்கள் சிலர் வளைந்து (செய்த தவற்றிலிருந்து நழுவி) செல்வதற்காகவே  போடப்படுகின்றன. 

தனக்கு பிடித்தவர்கள், தன்னை ஆதரிப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுவாழ்வை பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றும் தலைவர்களும் இங்கு உண்டு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23:13-22) வெளிவேடக்கார மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோருக்கு ஐயோ! கேடு என்கிறார் இயேசு. எதற்காக இயேசு அவர்களைப் பார்த்து இப்படி சொல்கிறார். தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யும் வஞ்சக நெஞ்சத்தினர் இவர்கள். 

தாங்களும் விண்ணகத்தினுள் நுழைவதில்லை. மற்றவர்கள் நுழையாதவாறு வாயிலை அடைத்து நிற்கின்றனர். சமயத்திற்கு ஆள் எடுக்க அங்குமிங்கும் அலைந்து திரிகிறார்கள். ஆனால் சமயத்தில் சேர்த்த பின் அவர்களை நரக தண்டனைக்கு ஆளாக்குகிறார்கள். 

வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் வழி தவறி நடக்கின்றார்கள். ஆகையால், தான் இயேசு அவர்களை கண்டிக்கிறார்.

காணிக்கையை விட பலிபீடம் உயர்ந்தது, பொன்னை விட திருக்கோவில் உயர்ந்தது.

ஆனால் குருட்டு வழிகாட்டிகளின் பார்வையில் பொன்னும் காணிக்கையும் உயர்ந்ததாக இருக்கிறது. 

தங்களுக்கு ஏற்றார் போல் காய் நகர்த்தும் காரியக்காரர்கள் இங்கு அதிகம். இந்த உலகிலே எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும். இந்த நிலையில் இருந்தும் கூட இப்படி நடக்கிறார்கள் என்றால் ஒருவேளை நாம் சேர்த்து வைத்தவற்றை எடுத்துச் செல்ல முடியும் என்ற சூழல் வந்தால் இன்னும் எதையெல்லாம் செய்வார்கள். 

இங்கு பாவப்பட்டவர்கள் யார் என்றால், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் பாமர மக்கள் தான். 

யார் ஆண்டால் எனக்கு என்ன? யார் சொன்னால் எனக்கு என்ன? என்று நடப்பவர்கள் ஒருபோதும் சட்டத்தினால் முடக்கப்படுவதில்லை.

கோயில் பூனை கடவுளுக்கு பயப்படாது என்பார்கள். அது உண்மையிலும் உண்மைதான். கடவுள் சார்பாக தங்களை காட்டிக் கொள்ளும் மனிதர்கள் தாங்கள் செய்வதெல்லாம் சரி என்று மனநிலையில் செய்கிறார். 

மற்றவர்களால் சுமக்க இயலாத சுமைகளை கட்டி அவர்கள் தோளில் வைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் சமயத் தலைவர்கள். அதைத்தான் இயேசு வன்மையாக கண்டிக்கிறார். 

சரியான போதனை, சரியான வழி நடத்துதல் இல்லாத தலைமைத்துவம் இருந்தும் பயனில்லை.

நமக்கு ஏற்றார் போல அல்ல பொது நன்மைக்கு ஏற்றார் போல் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

நமக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றை பேசுவதை விட, பலருக்கும் ஆதாயம் கிடைக்கும் படியாக நல்லவற்றை பேச வேண்டும்.

இறைவனோடு உடன்படிக்கையை புதுப்பிக்க...


பொதுக் காலம் 21ஆம் ஞாயிறு 

25.08.2024 - ஞாயிற்றுக் கிழமை

பழைய ஏற்பாட்டில் இறைவன் உடன்படிக்கை வாயிலாக உறவை புதுப்பித்தார். உடன்படிக்கை என்பது என்ன? கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவின் ஒப்பந்தம்.

பழைய ஏற்பாட்டில் ஆதாமோடு, நோவாவோடு, ஆபிரகாமோடு, மோசேயோடு, தாவீதோடு கடவுள் உடன்படிக்கை செய்தார், உறவின் ஒப்பந்தம் செய்தார்.

கடவுள் ஆதாமோடு செய்த ஒப்பந்தம், தொடக்க நூல் 2:16-17இல், "ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்". கட்டளையை மீறியதால் உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஆண்டவராகிய கடவுள் நோவாவிடம், (தொடக்க நூல் 9:11-13) "உங்களோடு என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப்பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு வரவே வராது... உடன்படிக்கையின் அடையாளமாக என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்" என்றார். 

விடுதலைப் பயணம் 6:7இல், மோசே வழியாக செய்த உடன்படிக்கை. "உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்பது தான். 

அதேபோல இறைவாக்கினார் நாத்தான் வழியாக தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கை 2 சாமுவேல் 2:12-16 இல் கொடுக்கப்பட்டுள்ளது. "...எனது முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாக இருக்கும். உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்" - 2 சாமுவேல் 7:16.

இவ்வாறாக தொடக்க முதல் இறுதி வரை உடன்படிக்கையின் வழியாக உறவை வலுப்படுத்துபவராக கடவுள் விளங்குகிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:60-69) வாழ்வு தரும் வார்த்தை வாயிலாக,, தன்னையே உணவாக தருவதன் வாயிலாக நம்மோடு உடன்படிக்கை செய்துள்ளார் இறைவன். கடந்த வாரத்தினுடைய தொடர்ச்சியாக இந்தவார நற்செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. 

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று சொல்கிற போது பலர் இயேசுவின் பேச்சை ஏற்றுக்கொள்வது கடினம் என்று சொல்லி அவரை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். 

இயேசு பன்னிரு சீடரிடம் நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு திருத்தூதர் பேதுரு, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்று சொல்லி தனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவை (உடன்படிக்கையை) அவர் வலுப்படுத்துவதை பார்க்கிறோம்.

இயேசுவின் வார்த்தையும் இயேசுவின் உடலும் நம்மில் உறவை வளர்த்தெடுக்கின்றன. 

ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம் நன்றாக பேச ஆரம்பிக்கின்ற போது, உறவு உருபெற ஆரம்பிக்கிறது. ஒருவருடைய வார்த்தை, சொல்வன்மை, பேச்சுத்திறன் இவைதான் உறவு வாழ்வுக்கு அடித்தளம். 

பழைய ஏற்பாட்டில் கடவுள் அடையாளங்கள் வழியாக அதிலும் குறிப்பாக தன் வார்த்தையின் வாயிலாக இஸ்ரயேல் மக்களோடு உடன் இருந்தார்.

அந்த வார்த்தை மனிதராக நம்மிடையே குடிகொண்டார் என்று யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேலின் எல்லா குலங்களையும் யோசுவா செக்கேமில் ஒன்று கூட்டி, "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று சொல்கிறார். ஏனென்றால் மக்கள் தங்கள் மனதிற்கு சரியெனப்பட்டதை செய்தார்கள். கடவுளின் அன்பு உறவிலிருந்து விலகி சென்றார்கள். ஆனால் யோசுவாவின் இந்த வார்த்தைகளை கேட்டபோது, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தில் அறவே நிகழாதிருப்பதாக! என்று சொல்லி கடவுளுக்கும் தங்களுக்குமிடையே இருந்த உறவை புதுப்பித்துக் கொண்டார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், (எபேசியர் 5:21-32) கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் இடையே உள்ள உறவை போல, கணவன் மனைவி இடையே உள்ள உறவு நிலை சரியாக இருக்க வேண்டும் என்பதை திருத்தூதர் பவுல் தெளிவுபடுத்துகிறார். யாரும் தம்முடைய உடலை வெறுப்பதில்லை, அதை பேணி வளர்க்கிறார். கிறிஸ்து திருஅவையை பேணி வளர்த்து வருகிறார். நாம் அவரது உடலின் உறுப்புகள். இதன் வழியாக நாம் ஒருவர் மற்றவரோடு உள்ள உறவு நிலையில் உடன்படிக்கையில் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம். 

இறைவனோடு உறவு நிலையில் ஒன்றித்திருக்க வேண்டும் என்றால் நம்மோடு வாழும் மனிதரில் அந்த உறவு நிலை சரியாக வேண்டும்.

மனிதரை மதிக்காத மனிதத்தை நேசிக்காத எந்த மனிதரும் கடவுளை நெருங்கி செல்ல முடியாது. இன்று மனிதர்கள் பணத்தோடும் புகழோடும் பெருமையோடும் ஆணவத்தோடும் உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள். 

மனிதரின் உறவு நிலை வேண்டாம், உலக இன்பங்கள் போதும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். 

இவ்வுலகம் அழிவுக்குரியது இவ்வுலகில் செல்வங்களும் அழிவுக்குரியது. நாம் விண்ணக செல்வத்தை உரிமையாக்கி கொள்ள வேண்டும் என்றால் உடன் வாழும் சகோதர சகோதரிகளில் உறவுநிலை சரிப்படுத்தப்பட வேண்டும். 

பிறரின் வாழ்வு நிலை உயர உழைக்க முன்வந்தால் நமக்கும் இறைவனுக்குமான உறவுநிலை சீராகும்.

நம் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் இறைவனோடு உள்ள உடன்படிக்கை புதுப்பிக்கப்படட்டும்.


அறியாமையிலிருந்து அறிவிப்பு வரை...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

24.08.2024 - சனிக் கிழமை 

திருத்தூதர் புனித பர்த்தலமேயு (விழா)

திருத்தூதர் பர்த்தலமேயு கலிலேயாவிலுள்ள கானாவை சார்ந்தவர். விவிலியத்தில் நத்தனியேல் என்ற பெயரால் இவர் அழைக்கப்படுகிறார். பிலிப்பு மூலம் ஆண்டவர் இயேசுவை குறித்து அறிந்து கொள்கிறார். 

பிலிப்பு பார்த்தலமேயுவாகிய நத்தனியேலிடம் வந்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம்; நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்' என்று சொல்கிற போது பர்த்தலமேயு அவரை பார்த்து, நாசரேத்திலிருந்து நல்லது ஏதும் வர முடியுமோ என்று கேட்கிறார். காரணம் இவர் இறைவாக்குகளையும் திருச்சட்ட நூலையும் அறிந்தவராக இருந்தார். இவர் மெசியா எங்கு பிறப்பார் என்பதை குறித்தும் அறிந்து வைத்திருந்தார். 

இப்படி இருக்கும் பொழுது திருவிவிலியத்தில் பெரிதும் பேசப்படாத யாராலும் அவ்வளவாக அறியப்படாத பிற இனத்தார் மிகுதியாக வாழும் நாசரேத்தில் இருந்து மெசியா வந்திருக்கிறார் என்று பிலிப்பு சொன்னதால் தான் அவர் இப்படி கேட்கிறார்.

நத்தனியேலைப் பார்க்கின்ற இயேசு, "இவர் உண்மையான இஸ்ரயேலர் கபடற்றவர்" என்கிறார். அதற்கு இவர், "ரபி, நீரே இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

பர்த்தலமேயு அர்மேனியாவில் நற்செய்தி பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவருடைய போதனையால் தொடப்பட்டு அந்நாட்டு அரசன், அரசி, பணியாளர்கள் உட்பட ஏராளமான பேர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள். அரசன் கிறித்தவ மதத்தை தழுவிய செய்தி காட்டுத்தீ போல எங்கும் பரவியது. 

இச்செய்தி நாட்டில் இருந்த போலி தெய்வங்களை வழிபட்டு வந்த குருக்களின் காதுகளை எட்டியது. இதனால் அவர்கள் கோபமடைந்தார்கள். அது மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஒரு செயலை செய்து வரும் பர்த்தலமேயுவை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று சூழ்ச்சி செய்து அரசனுடைய சகோதரர் அஸ்தியேஜசை அணுகி தந்திரத்தால் பர்த்தலமேயுவின் தோலை உரித்து உயிரோடு கொழுத்திக் கொன்று போட்டார்கள். 

தன்னுடைய போதனையாலும் வாழ்வாலும் இயேசுவுக்கு சான்று பகர்ந்து தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார் நம் புனிதர்.

(நூல் - மகத்தானவர்கள்)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:45-51) நாசரேத்தில் இருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று நத்தனியேல் இயேசுவை பற்றி அறியா நிலையில் பேசுகிறார்.

அதிகம் படித்தவர்கள் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணுவார்கள் என்பது திருத்தூதர் பர்த்தலமேயு வாழ்விலும் உண்மைதான். திருச்சட்ட நூல்களை கற்றுத் தேர்ந்த இவர் நாசரேத்தை குறித்து தவறான கண்ணோட்டம் கொண்டிருக்கிறார்.

தன்னையும் தன்னுடைய பின்புலத்தையும் உயர்வாக எண்ணுபவர்கள் மற்றவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. 

கடவுளின் பார்வையில் தாழ்வு உயர்வு இல்லை. அறியாமை தான் தாழ்வு மனப்பான்மையையும் உயர்வு மனப்பான்மையையும் மனிதனிடம் ஏற்படுத்திவிடுகிறது.

எல்லாம் எனக்கு தெரியும் என்ற மமதை மற்றவர்களிடம் இருக்கும் நல்லதை அறிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

பிலிப்புவின் "வந்து பாரும்* என்ற வார்த்தை தான் பர்த்தலமேயுவிற்கு இயேசுவைப் பற்றிய ஒளியை கொடுத்தது. 

அறியாத நிலையில் இருந்த அவர் இயேசுவை அறிந்து கொள்கிறார். தன்னைக் குறித்து இயேசு அறிந்ததை கேட்டதும் (இவர் உண்மையான இஸ்ரவேலர் கபடற்றவர்) இயேசுவை இறைமகனாக இஸ்ரயேல் மக்களின் அரசராக ஏற்றுக் கொள்கிறார் அங்கு தன்னுடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறார்.

அறிந்த நிலையில் அறியப்பட்ட இயேசுவுக்காக தனது உயிரையும் தியாகம் செய்கிறார். 

ஒருவர் மற்றவரை அறியா நிலையில் இருந்தால் உறவு வலுபெறாது. நம்மோடு இருப்பவரை அறிந்துக் கொள்ள முற்படுவோம். 

மற்றவரை பற்றிய அறிதலும் புரிதலுமே வாழ்வின் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்.

அன்பின்றி உலகு இயங்காது...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

23.08.2024 - வெள்ளிக் கிழமை 

"அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்" - இணைச் சட்டம் 10:19

அன்பு இல்லாத மனிதர் அரை மனிதர். யாரிடம் தான் அன்பு இல்லை! இயற்கை அனைத்திலும் அன்பு நிறைந்திருக்கிறது. ஆனால் மனிதனிடத்தில் மட்டும் தான் அன்பு குறைவுபட்டு காணப்படுகிறது. 

எது தனக்குரியதோ அதனிடம் முழுமையான அன்பு காட்டாத மனிதன் தன்னை சாராத ஒன்றை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். 

நிறைவு தராத ஒன்றின் மீது நிலையான காதல்/அன்பு கொண்டு மனிதன் இந்த உலகை சுற்றி வருகிறான். பக்கத்தில் இருப்பவரிடம் இரக்கம் காட்டாதவர்கள்/அன்பு செய்யாதவர்கள் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அலைபேசி மூலம் அன்புச் செய்திகள் அனுப்புகிறார்கள்.

அன்பிற்காக சில நபர்கள் ஏங்கி ஏங்கி வாழ்க்கையில் வீழ்ந்தே போய்விட்டார். உடன்பிறப்புகளிடம், கணவன் மனைவியிடம், பிள்ளைகளிடம் அன்பை எதிர்பார்க்கும் போது சிலருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 22:34-40) பரிசேயர் கேட்ட கேள்வி, போதகரே! திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? என்பதுதான்.

தெரியாமல் பரிசேயர் அந்த கேள்வியை கேட்கவில்லை. எல்லாம் அறிந்த நிலையில் இயேசுவை சோதிப்பதற்காக இந்த கேள்வி கேட்கப்படுகிறது. 

இன்று நம்மை சோதிப்பவர்கள் ஏராளம். நல்லவர்கள் போல தங்களை காட்டிக்கொண்டு நம்மிடம் இருந்து பொருட்களை, பதவியை, பணத்தை பெறுவதற்காக போலி அன்பு காட்டுபவர்கள் அதிகம்.

ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல போட்டி போட்டு இன்று போலியான அன்புகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. 

ஆனால் சோதனைகளை கூட சாதனையாக மாற்றக்கூடிய இயேசு, முதன்மையான கட்டளை, கடவுளிடம் அன்பு செலுத்துவது என்றும் அதற்கு இணையான கட்டளை அடுத்திருப்பவர் மீதும் அன்பு செலுத்துவதும் தான் என்கிறார்.

கண்ணுக்கு தெரியாத கடவுளை அன்பு செய்வது மிக எளிது. காரணம், கடவுள் விரும்பாத கடவுளுக்கு தேவைப்படாத பலிகளையும் படையல்களையும் காணிக்கைகளையும் கொடுத்து கடவுளை அன்பு செய்துவிடலாம் என்று நம்புவோர் பலர். பலியை அல்ல இரக்கத்தை விரும்புகிறேன் என்றவர் இறைவன்.

திருச்சட்டம் இறைவாக்கு இரண்டிலும் அடிப்படையாக இருப்பது அன்பு தான். 

அன்பை அளந்து விட முடியாது. அன்பை பணம் கொடுத்து பெற்றுவிட முடியாது. 

உள்ளத்திலிருந்து புறப்படக்கூடியது தான் அன்பு. மனிதரை அன்பு செய்யாமல் கடவுளை அன்பு செய்துவிடலாம் என்று சொல்வோர் பொய்யர். அயலானில் இறைவனை காணாத அடுத்திருப்பவரில் இறைவனின் சாயலை உணராத மனிதர் எப்படி கடவுளை அன்பு செய்ய முடியும்? 

நாம் இறைவனின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்டிருக்கிறோம். அடுத்தவரிலும் இறைவனின் சாயல் உரு இருக்கிறது என்பதை உணர்ந்தோம் என்றால் இயல்பாக நம்மிலிருந்து எதையும் எதிர்பாராத அன்பு ஊற்றெடுக்கும்.

உலகு அன்பு இன்றி ஒருபோதும் இயங்காது...

அரசரின் விருந்தும் பணியாளரின் பங்கேற்பும்


பொதுக் காலம் 20ஆம் வாரம்

22.08.2024 - வியாழக் கிழமை 

"அந்த வானதூதர் என்னிடம், 'ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்" - திருவெளிப்பாடு 19:9 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 22:1-14) விண்ணரசானது திருமண விருந்துக்கு ஒப்பிடப்படுகிறது. திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களோ தகுதியற்று போனார்கள் அழைக்கப்பட்டவர்கள் பலராக இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சிலராக இருந்தனர் என்பதை நற்செய்தி வாசகம் தெளிவுப்படுத்துகிறது. 

விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வராமல் இருக்க பல காரணங்களை சொல்லிக் கொண்டே சென்றார்கள். ஒருவர் தம் வயலுக்கு சென்றார், ஒருவர் கடைக்கு சென்றார், மற்றவர்களோ தலைவருடைய பணியாளர்களை பிடித்து இழிவுப்படுத்தி கொலை செய்தார்கள். 

மேலோட்டமாக, இன்றைய நற்செய்தி வாசகத்தை பார்க்கின்றபோது திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வரவில்லை. ஏன், தலைவர் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும்? என்று தோன்றலாம். 

ஆனால், இங்கு இந்த திருமண விருந்து என்பது இறையாட்சியின் விருந்து. இயேசு தரும் விண்ணக விருந்துக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அழைப்பை நிராகரித்து, இவ்வுலக வாழ்விலே இன்பம் காண எண்ணுகிறார்கள் என்பதைத்தான் மேலே காரணங்களை சொல்லும் மனிதர்களை வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

வாய்ப்பு ஒரு தடவை தான் கதவை தட்டும் என்பார்கள். ஆனால் இந்த தலைவரோ இரண்டு முறை வாய்ப்பை கொடுக்கிறார். இறுதியில் அழைப்பை ஏற்காத, தன் அழைப்பை இழிவு படுத்திய கொலையாளிகளை கொன்று நகரத்தை தீக்கிரையாக்குகிறார். 

அதோடு நின்று விடவில்லை தலைவர், சாலையோரங்களில் காணும் எல்லோரையும் திரும்ப விருந்துக்கு அழைத்து வரச் சொல்கிறார். அப்படி அழைக்கப்பட்டோரில் நல்லோர், தீயோரால் திருமண மண்டபம் நிரம்பியிருந்தது. அரசர் பார்வையிட வருகின்ற போது ஒருவர் திருமண ஆடை அணியாத நிலையில் இருப்பதைக் கண்டு அவர் மீது கோபம் கொள்கிறார். அவரை புறம்பே உள்ள இருளில் தள்ளச் சொல்கிறார். 

(சாலையோரங்களில் இருக்கக்கூடிய இவரிடம் எப்படி திருமண ஆடை இருக்கும்? என்ற கேள்வி எழலாம். யூதர்களுடைய திருமண நிகழ்வுகளில் திருமண மண்டபத்திற்கு வெளியே திருமண ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும். அதைக் கூட அணியாத சோம்பேறியாக இருந்த காரணத்தினால் தலைவர் கோபப்படுகிறார்)

அழைக்கப்பட்டோரில் நல்லோர் தீயோர் இருந்தனர். அந்த அழைப்பின் வழியாக அவர்கள் மனமாற வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தகுதி உடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், திருமண விருந்தில் கலந்து கொண்டார்கள்.

நாம் விண்ணரசில் நுழைய அழைப்பு (மனமாற்றத்திற்கான அழைப்பு) கொடுக்கப்படுகிறது.

தகுதியற்ற நிலையில் இருந்து நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது தான் விண்ணரசிற்கான நுழைவு சீட்டு.

சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்துவதை விட 'இதோ வருகிறேன்' என்று பதில் கொடுப்போம். 

வார்த்தையும் வாழ்வும் இணைந்து பயணிக்கட்டும்.

அரசியான புனித கன்னி மரியா


புனித கன்னி மரியாவை விண்ணக மண்ணக அரசியாக பாவித்து முறைப்படி விழா கொண்டாடுகின்ற வழக்கம் 1954ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயசால் ஏற்படுத்தப்பட்டது.

‘குயின் ஆப் ஹவென்’ (Queen of Heaven) என்னும் மடலில், மரியா ஆண்டவரின் தாயாக இருப்பதாலும் மீட்புத் திட்டத்தில் இறைவனோடு பங்கு எடுத்ததாலும், கருவில் உதிக்கும் போது பாவக்கறை இல்லாமல் பிறந்ததாலும், விண்ணகத்தில் இயேசுவுக்கு மிக அருகில் நமக்காக பரிந்து பேசுவதாலும் இப்பேற்றினை பெறுகின்றார் என்று கூறி இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் நாள் கொண்டாட திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ் பணித்தார்.

அன்னை மரியாவை விண்ணக மண்ணக அரசியாக ஏற்று விழாவாக கொண்டாடும் வழக்கம் 1954ஆம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது என்றாலும் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே அன்னை மரியாவை அரசியாக பாவிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கிருபை தயாபத்துக்கு மாதாவாக இருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க... என்ற இறைவேண்டல் இதற்கு சான்று.

இயேசு அரசருக்கெல்லாம் அரசர் அப்படியானால் இயேசுவை பெற்றெடுத்த மரியா, அரசரின் தாய் என்ற முறையில் அரசி என்று அழைக்கப்படுவது தகுதியானது. 

(நூல் - மகத்தானவர்கள்)

சமமாக நடத்தப்பட...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

21.08.2024 - புதன் கிழமை

"நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்" - திருத்தூதர் பணிகள் 2:44

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைதான் நாட்டின் கண்கள். இவை இல்லை என்றால் நாம் வெறும் இயந்திரம்தான். நம்மை இயக்க வைப்பது தான் சுதந்திர மனப்பான்மை, சகோதரத்துவ அன்பு, சமத்துவ மனநிலை. கோட்பாட்டு அறிக்கை அளவில் மட்டும் இந்த மூன்றும் இருந்தது என்றால் அது பயன் அற்றது. நடைமுறைப்படுத்தப்படாத சட்டங்கள் தேவை அற்றது. 

(சமமாக நடத்தப்படுவதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். மூன்று வகையான உயரத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு ஒரே வகையான நாற்காலியை கொடுத்து நிற்கச் சொல்லி மறைவாய் உள்ள நிகழ்ச்சியை பார்க்கச் சொல்வது சமத்துவம் அல்ல. மறைவையும் தாண்டி பார்க்கக் கூடிய அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ற நாற்காலியை கொடுத்து நிற்க சொல்வது தான் சமத்துவம்).


எனக்குரியதை நான் பெற்றுக் கொள்ளும்போது அடுத்தவர் அவருக்குரியதை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பெறாத உரிமை, எனக்கு இல்லாத பெருமை மற்றவருக்கு இருக்கக் கூடாது என்பது உயர்ந்த எண்ணம் அல்ல. என்னைப் போல மற்றவர்களும் சமூகத்தில் தலை தூக்கி/ தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் உயர்ந்த மனப்பான்மை. 

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டுமே தவிர சாத்தானின் சூழ்ச்சியை அல்ல. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 20:1-16) இயேசு விண்ணரசை திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமைக்கு ஒப்பிடுகிறார். காலையிலே வேலைக்கு வந்த மனிதர்கள், காலை 9 மணி, நண்பர்கள் 12 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி என்று பல்வேறு காலச் சூழலில் மனிதர்கள் திராட்சை தோட்ட வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். (முதலில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியம் கூலி என ஏற்கனவே கூறப்பட்டது). கடைசியில் வந்தவர்களுக்கு நிலக்கிழார் ஒரு தெனாரியம் கொடுக்கிறார். முதலில் வந்தவர்கள் நினைக்கிறார்கள் நமக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப்படும் என்று. 

ஆனால் அவர்களுக்கும் அதே ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்ட போது அவர்கள் அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுக்கின்றார்கள். தலைவரோ தன் விருப்பப்படி கடைசியில் வந்தவருக்கும் முதலில் வந்தவருக்கும் ஒரே அளவு கூலியை கொடுக்கிறார். இங்கு நிலக்கிழார் சமத்துவத்தை முன்மொழிகிறார். அதே வேளையில் வேலைக்காக இறுதிவரை காத்திருந்த அந்த மனிதர்களுடைய மாண்பை மதிக்கிறார்.

தோட்ட உரிமையாளர் சொல்லக்கூடிய ஒரு அருமையான கேள்வியும் பதிலும், "எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்க கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்கு பொறாமையா?". 

விண்ணரசின் பந்தியில் எல்லோருக்கும் இடம் உண்டு. கடைசியில் வந்தவர்களுக்கும் முதலில் வந்தவர்களுக்கும் ஒரே உரிமை தான்.

நான் என்னுடைய வாழ்நாளின் தொடக்க முதல் தவறாமல் திருப்பலி பார்க்கிறேன், வழிபாடுகளில் பங்கெடுக்கிறேன், நற்கருணையை சந்திக்கிறேன், ஜெபமாலை சொல்கிறேன். ஆனால் இவை எவற்றையும் கடைப்பிடிக்காத 'பாவிகளாய் வாழ்ந்தவர்களோடு எங்களையும் சேர்த்து விட்டீரே' என்று ஒருபோதும் கடவுளுக்கு எதிராக நாம் முணுமுணுக்க முடியாது. 

கடவுள் பார்வையில் வெளிப்புற ஆடம்பரம் கொண்டாட்டங்களை விட உட்புற மனமாற்றம் பெரிது.

கடவுள் ஒருபோதும் பாவத்தையும் தூய்மையையும் சமத்துவப்படுத்துவதில்லை. மாறாக பாவம் செய்தவர்களையும் நேர்மையாளர்களையும் இணைக்கவே அவர் முற்படுகிறார். இவ்வாறு செய்வதன் வழியாக பாவிகள் மனமாற வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம். 

இறைவனின் அரசுக்கு நாம் தயாராக சமத்துவம் என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம். 

ஒதுக்குவதும் ஓரம் கட்டுவதும் கிறித்தவத்தின் அடையாளம் அல்ல.

எங்களுக்கு என்ன கிடைக்கும்?


பொதுக் காலம் 20ஆம் வாரம்

20.08.2024 - செவ்வாய்க் கிழமை

"அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை; தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை; மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை" - சாலமோனின் ஞானம் 2:22

நான் இதை உனக்கு செய்தால் எனக்கு என்ன இலாபம்? நான் என்னுடைய நேரத்தையும் உழைப்பையும் விட்டுவிட்டு உனக்காக செய்யக்கூடிய இந்த காரியத்திற்கு நீ எனக்கு தரக்கூடிய வெகுமதி என்ன? இந்த காரியத்தை நான் முடித்து தர நீ எனக்கு என்ன தருவாய்? 

இந்தக் கேள்விகள் நாம் சந்திக்கும் மனிதர்களின் அல்லது நமக்கு உதவும் மனிதர்களின் வெளிப்படையான அல்லது மனதில் எழும் கேள்வியாக இருக்கலாம். யாரும் பலனை எதிர்பாராமல் யாருக்கும் உதவி செய்வதில்லை. ஒருவேளை வெளிப்படையாக எதையும் கேட்காவிட்டாலும் மறைமுகமாக கைம்மாறு எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் பணத்தாலே மக்களுக்கு செய்யப்படும் திட்டங்களுக்கு பணம் லஞ்சமாக, கல்வி கற்பதற்கு பணம் நன்கொடையாக, கடவுளை விரைந்து தரிசிக்க (அ) அருளடையாளங்களைப் பெற நன்கொடை/உபயம் எனும் பெயரில் பணமாக என்று சிலருக்கு சில சில்லறைகள் கிடைத்தால் தான் சில காரியங்கள் நகர்கிறது. 

ஒன்றை செய்வதற்காக ஒன்று இவ்வுலகில் பெறப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:23-30) நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்கள் ஆயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பேதுரு இயேசுவை பார்த்து கேட்கிறார். இந்த பகுதிக்கு முன்னதாக செல்வர் விண்ணரசில் புகுவது கடினம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்று இயேசு சொல்லி இருக்க, எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது.

(ஊசியின் காது என்பது ஒரு நகரத்தின் நுழைவாயிலை குறிக்கிறது. யூதர்கள் தங்களுடைய நகரப் பகுதியில் இரண்டு வாயில்களை பயன்படுத்துவார்கள். ஒன்று, வாணிபத்திற்காக மற்றொன்று, மக்களின் பயன்பாட்டிற்காக (நடமாட்டத்திற்காக). இரவு வேளை ஆகின்றபோது வாணிபத்திற்கான வாயில் அடைக்கப்படும். (மக்கள் பயன்பாட்டிற்காக இருக்கக்கூடிய நுழைவாயில் என்பது ஊசியின் காது என்று அழைக்கப்படுகிறது).

பொதிகளோடு பொருட்களோடு வரக்கூடிய வணிகர்கள் ஒட்டகத்தோடு அந்த குறுகலான 'ஊசியின் காது' என்று அழைக்கப்படும் வாயிலை கடந்து செல்ல முடியாது. எல்லாவற்றையும் கீழே இறக்கி வைத்து ஒன்றன்பின் ஒன்றாக தான் உள்ளே எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் இயேசு சொல்கிறார், ஊசியின் காதின் வழியே ஒட்டகம் கூட நுழைந்து விடலாம். ஆனால் செல்வர் (செல்வத்தோடு, ஆணவத்தோடு, புகழோடு, கர்வத்தோடு) இறையாட்சிக்கு உட்பட முடியாது. எதையெல்லாம் இறக்கி வைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் இறக்கி வைக்க வேண்டும்.

அன்று பேதுரு எழுப்பி கேள்வியைப் போல கிறித்தவர்களாக, கிறிஸ்துவை பின்பற்றுவர்களாக இருக்க கூடிய நமக்கு என்ன கிடைக்கும்? (விண்ணக வாழ்வு/நிலை வாழ்வு) என்பது நம் கேள்விதான்.

ஊசியின் காது என்ற நுழைவாயிலின் முன் இறக்கி வைக்கப்பட வேண்டியவை எல்லாம் இறக்கி வைக்கப்பட வேண்டும் என்பது போல நம் உள்ளத்திலும் நம் வாழ்விலும் சிலவற்றை நீக்க, இறக்கி வைக்க, ஒதுக்கி வைக்க வேண்டி உள்ளது. 

உறவுகளை எதிர்க்க அல்ல இழக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் பதில். நன்மை செய்வதற்கு தடையாய் உள்ள அனைத்து உறவுகளையும் இழக்க வேண்டும். 

என் குடும்பம் என் சொந்தம் என்று சொல்லி ஊரின் வளர்ச்சியை சிதைப்பதற்க்காக நன்மையான காரியங்கள் தடைப்படுவதற்காக நாம் முன் வரக்கூடாது.

நிலை வாழ்வின் அடிப்படை இவ்வுலக வாழ்வில் நன்மை செய்வதுதான். நல்லோரையும் நன்மையையும் எதிர்ப்பது பாவம்...

நன்மை செய்வோருக்கு/ கிறிஸ்துவின் கொள்கைக்காக இழப்பை கண்டவருக்கு, எல்லாம் அமுக்கி குலுக்கி சேர்த்து கொடுக்கப்படும். நிலைவாழ்வும் உண்டு...

இழப்பதற்கு (தயக்கம்) எதுவும் இல்லை...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

19.08.2024 - திங்கட் கிழமை

"திருச்சட்டத்தை நம்புவோர் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பர்; ஆண்டவரை நம்புவோர்க்கு இழப்பு என்பதே இல்லை" - சீராக் 32:24

எல்லாம் இருந்தும் எல்லாவற்றையும் அனுபவிக்க முடியாதவராய் இருப்பவர்கள் பலர். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர் போல இருப்பவர்கள் சிலர். எல்லாம் இருந்தும் எல்லாவற்றை பிறருக்காக இழந்து வாழ்பவர்கள் ஒரு சிலர்.

எதை நாம் கொண்டு வந்தோம் கொண்டு செல்வதற்கு? என்ற அடிப்படை கேள்வி நம் உள்ளத்தில் அடிக்கடி எழ வேண்டும்.

சபை உரையாளர் நூல் 5:15 இவ்வாறு சொல்கிறது, "மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை". 

இதுதான் மனிதனின் நிலையாமை. எவ்வளவுதான் சேர்த்து வைத்தாலும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் சேர்த்து வைத்தவற்றிலிருந்து சிலவற்றை பிறருக்காக இழக்கின்ற போது நமக்கான செல்வம் விண்ணகத்தில் சேர்த்து வைக்கப்படும். 

தேவைப்படுபவருக்கு உதவி செய்யக்கூடிய மனநிலை, குறிப்பறிந்து உதவி செய்யும் மனப்பாங்கு நம்மிடம் மேலோங்க வேண்டும். 

(தேவை என்று வரும் எல்லோரையும் நம்பி விட முடியாது, சிலர் உழைக்க மனமில்லாமல், பிறரிடம் பொருளை பெறுவதிலேயே  தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கவனமாய் இருக்க வேண்டும்).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:16-22) செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். இயேசுவோ, 'கட்டளைகளை கடைப்பிடி' என்கிறார். அவரோ, எவற்றை? என்று கேட்கிறார். இயேசு அதற்கும் பதில் கொடுத்து கட்டளைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார். அந்த இளைஞரோ நான் எல்லாவற்றையும் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன? என்று கேட்கிறார். 

இயேசு அவரைப் பார்த்து, உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் என்று சொல்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு இளைஞர் வருத்தத்தோடு சென்று விடுகிறார். (அவரிடம் ஏராளமான சொத்து இருந்தது)

இதுதான் இயேசுவை பின்பற்றுவதற்கான முதல் தடை. இருப்பதை இழக்க மனம் வருவதில்லை, இருப்பதை பகிர மனம் இடம் கொடுப்பதில்லை.

ஒருவேளை நாம் நம்மிடம் இருப்பதை மற்றொருவருக்கு கொடுக்க முன்வராமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்குரிய உரிமை, கடமை, ஆற்றல், திறமை, பிறருக்கு செல்ல வேண்டிய பணம் இவற்றையெல்லாம் நாம் தட்டிப் பறிக்கின்ற போது இயல்பாக அவரின் வாழ்வை நாம் அழிக்கிறோம். 

பிறருக்கு நடக்கும் நல்லதை தடை செய்யாமல் இருப்பது நற்காரியமாகும்.

எல்லாம் கொடையாக பெறப்பட்டது. எல்லாவற்றையும் கொடையாக கொடுக்க வேண்டாம், பெற்றதிலிருந்து சிலவற்றை கொடையாக கொடுக்கலாமே!

எல்லாம் இருந்தும் இழப்பதற்கு நாம் எப்போது தயாராகிறோமோ அப்போது நாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறோம். விண்ணகத்தில் செல்வராகிறோம். 

ஞானம் + உணவு = இயேசு


பொதுக் காலம் 19ஆம் வாரம்

18.08.2024 - ஞாயிற்றுக் கிழமை

"இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" - லூக்கா 2:52

தாய்க்கு/தந்தைக்கு தன் குழந்தை எப்படி இருந்தாலும் பிடிக்கும். ஒருபோதும் தாயானவள்/தந்தையானவர் தன் குழந்தையை விட்டுக் கொடுக்க முன்வர மாட்டார். தனக்கு எதிராக பழிச்சொல் பேசி, தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டாலும் கூட தன் மகன்/மகள் மீது தாய்க்கான/தந்தைக்கான பாசம் ஒருபோதும் குறையாது.

குழந்தை பலவீனத்தோடு பிறந்தாலும், குறைபாடோடு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் தாய்/ தந்தை.

தன் இரத்தத்தை பாலாக்கி, தன் வியர்வையை உணவாக்கி தன் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய தாய் தந்தை உறவே இத்துனை மகத்துவம் மிக்கது என்றால், நம்மை படைத்து, உருக்கொடுத்து உருவாக்கிய கடவுளின் அன்பு எத்துணை மிகுதியானது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:51-58) இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்கிறார். 

உணவு எதற்காக கொடுக்கப்படுகிறது? உடலுக்கு ஆற்றல் தருவதற்காக, உடலை திடப்படுத்துவதற்காக. தன்னிடம் இருக்கக்கூடிய உணவை ஒருவர் மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்க முன் வரலாம், ஆனால் இயேசு தன்னையே உணவாகத் தருகிறார். இங்கு இயேசு தன்னை உணவாக தருதல் என்பது தன் வாழ்வை தற்கையளிப்பு செய்வதை குறிக்கிறது. தன் வாழ்வையே நாம் வாழ்வு பெறும் பொருட்டு கொடுக்கிறார்.

விடுதலைப் பயண நூலில் (12:3-11) நாம் காணும் பாஸ்கா நிகழ்வின் தொடக்கமே உணவு தான். குடும்பத்துக்கு ஒரு ஆடு, வீட்டிற்கு ஒரு ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள் இல்லையெனில், எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரை சேர்த்துக் கொள்ளட்டும் என்று தொடங்கி, ஒரே குடும்பமாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்பு அவர்கள் உண்ட உணவு அவர்களுக்கு ஆற்றலை கொடுத்தது. அந்த ஆட்டின் இரத்தம் கதவு நிலைகளில் பூசப்பட்டது. கடவுள் அந்த இரவில் எகிப்தினை கடந்து சென்றார்.

விடுதலைப் பயண நூலில் கடவுள் மக்களிடையே கடந்து சென்றார். யோவான் நற்செய்தியில் இயேசு உணவாக கடந்து வந்தார். 

பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உண்ண மன்னாவும் காடையும் கொடுக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் உணவாக தந்தார். 

இயேசுவே ஞானமாய் இருக்கிறார். அவரில் நம்பிக்கை வைப்போர், அவருக்கு அஞ்சுவோர் அவரிடமிருந்து ஞானத்தை பருக முடியும். 

ஞானத்தை எவ்வாறு வரையறை செய்யலாம்? ஒருவர் தன்னுடைய அறிவை பயன்படுத்தி காலத்தின் சூழலுக்கு ஏற்ப முடிவுகளும், மதிப்பீடுகளும் செய்யும் ஆற்றல் ஞானமாக கருதப்படுகிறது (இது ஒருவகை விளக்கம்). 

யோபு நூலின் அடிப்படையில் ஞானம் என்பது, ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு" (யோபு 28:28)

1 கொரிந்தியர் 1:30 "கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார்". 

1 கொரிந்தியர் 1:25, "மனிதன் ஞானத்தை விட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட அவருடைய வலுவின்மை வலிமைமிக்கது".

மனிதன் இன்று தன்னை அறிவாளியாக ஞானமிக்கவனாக கருதி கொள்கிறான். ஆனால் அவனுடைய ஞானத்தால் மற்றவருக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் போவதால் அது ஞானம் அல்ல, வெறும் குப்பைதான்.

இன்றைய முதல் வாசகமானது (நீதிமொழிகள் 9:1-6) ஞானம் தனக்கென்று ஒரு வீட்டை கட்டி இருப்பதாகவும் அது பலி விலங்குகளை கொண்டு திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்று ஏற்பாடு செய்ததாகவும் மதிகேடராய் இருப்போருக்கு உணவருந்த அழைப்பு விடுத்ததாகவும் எடுத்துச் சொல்கிறது.

அறியா நிலையில் இருந்து அறியும் நிலைக்கு கடந்து வருவது தான் ஞானத்தின் முதல் படி. 

இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 5:15-20) திருத்தூதர் பவுல் இந்த காலத்தை பொல்லாத காலமாக, தாறுமாறான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் காலமாக அறிக்கையிடுகிறார். இந்த வாழ்க்கையில் இருந்து கடவுளின் ஆவியால் நிரப்பப்பட கிறிஸ்து வழியாக தந்தை கடவுளுக்கு நன்றி செலுத்த அழைக்கிறார் திருத்தூதர் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:51-58) நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படி கொடுக்க இயலும் என்று வாக்குவாதம் அவர்களிடையே எழுந்ததாக வாசிக்க கேட்கிறோம். 

எது உண்மையோ அது தாமதமாகத்தான் உண்மை என்று உணரப்படும். எது பொய்யோ அது விரைவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். 

அதேபோலத்தான் இயேசு தன்னையே உணவாக தருகிறார் என்பதன் பொருள் அன்று பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த உணவு என்பது இழப்பை குறிக்கிறது, தியாகத்தை சுட்டிக் காட்டுகிறது. "இதை என் நினைவாக செய்யுங்கள்" என்று இயேசு சொன்னாரே அதுதான் இயேசு என்னும் ஞானத்தை பற்றி கொள்வதற்கான வழிவகை. 

இயேசு கிறிஸ்து தன்னை உணவாக கொடுத்து அவரை நாம் உண்பதன் வழியாக ஞானத்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறார். 

இந்த சமூகத்தில் அதிகம் படித்தவர்கள் மற்றவர்களை மதிக்காதவர்களாக இருக்கிறார்கள். பெற்ற தாய், தந்தையை மதிக்காத பிள்ளைகளும் இவ்வுலகில் வாழத்தான் செய்கிறார்கள். 

உண்டு குடித்து களிப்போடு இருந்து மற்றவர் வாழ்வு எப்படி போனாலும் பரவாயில்லை என்று சுயநல போக்கில் வாழக்கூடிய மனித மிருகங்களும் இவ்வுலகில் வாழத்தான் செய்கிறார்கள். 

இருப்பவருக்கு இருப்பவற்றை பகிர தெரியவில்லை. இல்லாதவரோடு இருப்பவற்றை பகிரும்போது இல்லாதவரும் இருப்பவராகிறார் என்று உண்மையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 

இயேசு தன்னை கொடுத்தார் இத்தரணி உயர. இயேசு தன்னை இழந்தார் நாம் வாழ்வு பெற. 

இயேசு எனும் ஞானத்தை நம் வாழ்வில் கண்டுணர அவரின் விழுமியங்களை வாழ்வாக்குவோம்...

கடவுளின் ஆசிரை பெற...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

17.08.2024 - சனிக் கிழமை 

"தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்" - 1பேதுரு 3:9

கடவுளின் ஆசிரை பெற நம் உள்ளங்கள் இலகுவாக வேண்டும். கடினமான பாறையின் மீது செடி முளைப்பதற்கான வாய்ப்பு இல்லாது இருப்பது போல, கடினமான இதயத்தின் மீது இறைவனின் ஆசிரும் தங்குவதில்லை. (மனம் கடினப்பட்டிருந்தால், இறை ஆசிர் இருப்பதை உணர முடியாது).

இன்றைய முதல் வாசகத்தில் ஒரு அருமையான வசனம் இடம் பெறுகிறது. "ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன்" (எசேக்கியேல் 18:30).

தந்தை நீதியை, நேர்மையை கடைப்பிடித்து, பசித்தவனுக்கு உணவளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை கொடுத்து, வட்டிக்கு கொடாமல், அநீதி செய்யாது, உண்மை உள்ளனவராய் நடந்து, நீதிமானாக வாழ்கிறார். ஆனால் தந்தை வழியில் மகன் செல்லவில்லை. தந்தை கடைபிடித்து வந்த நேர்மையான காரியங்களை மகன் கடைபிடிக்காமல் அநீதியோடு வாழ்கிறான்.

தந்தை செய்த நன்மைக்கேற்ற கைம்மாறு தந்தைக்கும், மகன் செய்த தீமைக்கு ஏற்ற கைம்மாறு மகனுக்கும் கிடைக்கும். ஏனென்றால் ஒருவரின் செயலின் பொருட்டே அவருக்கு தண்டனை உண்டு என்பதை கடவுள் இங்கு உறுதிப்படுத்துகிறார்.

நீதியை கடைப்பிடிப்பவருக்கு ஆசி, அநீதியோடு நடப்பவருக்கு தண்டனை.

மனிதர்கள் நன்மைக்கு பதிலாக தீமையை செய்யலாம். ஆனால், நன்மை செய்பவருக்கு கடவுளிடமிருந்து என்றும் ஆசீர் உண்டு. 

மாசற்ற உள்ளதோடு வாழ்வோருக்கும் கடவுளின் ஆசிர் உண்டு. 

மற்றவர்களுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும், நாம் தீங்கு செய்யாமல் இருந்தோம் என்றால் அதுவே ஒரு வகையில் நன்மைதான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:13-15) சிறு பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு, பிள்ளைகளை சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். ஆனால் சீடர்களோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசுவோ அவர்களை தடுக்காதீர்கள். விண்ணரசு அவர்களுக்கு உரியது என்று சொல்லி அவர்களை தொட்டு ஆசி வழங்கினார்.

கள்ளம் கபடு இல்லாத குழந்தை மனம் நமக்கு இறையாசிரை பெற்று தரும்.

குழந்தைகளுக்குரிய புன்முறுவல் நம்மிடம் இருக்கட்டும். இறைஆசிர் நம்மில் தங்கட்டும்.


பெற்றுக் கொண்ட அருள்கொடையில் நிலைத்து வாழ...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

16.08.2024 - வெள்ளிக் கிழமை

"நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது" - உரோமையர் 5:2

கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நிலையும் (திருமணம்/துறவறம்/சமூக வாழ்வு) அருள் நிலை தான். இயேசுவின் அருளை பெற்றவர்களில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கிடையாது. பிரிவினை, உயர்நிலை, தாழ்நிலை ஆகியவற்றை உருவாக்கியவர்கள் நாம் தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:3-12) இயேசுவை சோதிக்கும் நோக்குடன் 'ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தை யாவது முன்னிட்டு விலகி விடுவது முறையா?' என்று பரிசேயர் கேட்கின்றனர். இயேசு தொடக்க நூலை சுட்டிக் காட்டுகிறார், கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களை படைத்ததையும், இனி அவர்கள் இருவரல்ல, ஒரே உடல் என்ற நோக்கத்தோடு அவர்களின் வாழ்வை புனிதப்படுத்தியதையும் இங்கு எடுத்துச் சொல்கிறார்.

மறுபடியும் பரிசேயர் எழுப்பக்கூடிய கேள்வி, அப்படியானால் மணவிலக்கு சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்? (இணைச் சட்டம்  24: 1-4) என்பது தான்.

இயேசு அதற்கும் தெளிவாக பதில் சொல்கிறார், பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தை முன்னிட்டும் தம் மனைவியை விலக்கிவிட்டு, வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அப்பெண்ணோடு விபசாரம் செய்கிறான் என்று. (பரிசேயர்களின் பார்வையில் விபசாரம் செய்வது ஆணும் பெண்ணுமாக இருந்தாலும் குற்றவாளி பெண் மட்டும் தான்)

திருமணம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட அருள் நிலை. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று சொல்லி இரு மனங்கள் இணையக்கூடிய அருளடையாளம் தான் திருமணம். 

எல்லோரும் இந்த அருள்நிலையை தம் வாழ்வில் பெற்றுக் கொள்வதில்லை. இந்த அருள் நிலையை பெற்றுக் கொண்டவர்களும் அந்த அருள் நிலைக்கு ஏற்ப வாழ்வதில்லை.

தனக்கு கொடுக்கப்பட்ட அருளோடு (கணவனோடு/மனைவியோடு) நல்வாழ்வு வாழ பலர் தவறி விடுகின்றனர். திருமணம் செய்து பல ஆண்டுகள் கழித்து ஏன் திருமணம் செய்தோம்? என்ற கசப்பு உணர்வோடு வாழக்கூடிய குடும்பங்கள் இன்று ஏராளம். 

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல திருமணம் முடித்தவர்கள் திருமணம் முடிக்காதவர்களை பார்த்து பெருமூச்சு விடுவதும், திருமணம் முடிக்காதவர்கள் திருமணம் முடித்தவர்களை பார்த்து பெருமூச்சு விடுவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. 

பரிசேயர் இயேசுவை சோதித்தது போல இன்று பல குடும்பங்களை சந்தேகம் என்ற நோய் சோதித்துக் கொண்டிருக்கிறது. 

திருமணத்தில் இணைக்கப்பட்ட இருமணங்கள் இறுதிவரை இரு மணங்களாகவே இருந்து விடுகின்றன. 

கடின உள்ளம், ஏற்றுக்கொள்ளாமை, புரிந்து கொள்ளாமை, அவசர புத்தி, பழையதை நினைவூட்டி கொண்டே இருத்தல் ஆகியவைத்தான் பெற்றுக்கொண்ட அருள்நிலையில் நீடித்திருக்க நமக்கு தடையாய் இருப்பவை. இறைவன் இணைத்த திருமணத்தில் யாரும் குறுக்கிடாதவாறு இருமணங்கள் ஒருமணமாக வேண்டும்.

ஒருவர் மற்றவரோடு கரம் கோர்க்கும் போது நான்கு கைகள் மூன்று கைகளாக மாறுவது போல, இரண்டு இதயங்கள் ஒரு இதயமாக மாறி அன்பு நீடிப்பது போல, திருமண வாழ்வில் இறைவன் தந்த அருள்நிலை நீடித்து நிலைத்து நிரந்தரமாகட்டும்.

தூய்மை நிறைந்த அன்னை மரியா!


பொதுக் காலம் 19ஆம் வாரம்

15.08.2024 - வியாழக் கிழமை 

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பைக் குறித்து பாரம்பரியமாகச் சொல்லப்படும் சொல்லப்படும் நிகழ்வு ஒன்று உள்ளது. மரியா தன்னுடைய கடைசிக் காலத்தைச் சீயோன் மலையருகில் இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அப்போது வானதூதர் அவருக்கு தோன்றி அன்னை மரியாவின் இறப்பு எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

வானதூதர் சொன்னவாறே, குறிப்பிட்ட நாளில் அன்னை மரியா இறந்தார். இவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு தோமாவை தவிர எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள். பின்பு அன்னை மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். அடக்க நிகழ்வுகள் முடிந்த பிறகு இந்த செய்தி தோமாவின் காதை எட்டியது.

தோமா சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய நம்பமாட்டேன்” என்று சொல்ல, அவர்களும் தோமாவை கல்லறைக்கு கூட்டிக் கொண்டு சென்றார்கள். கல்லறையை திறந்து பார்த்த போது மரியன்னையின் உடல் அங்கு இல்லை. மரியன்னை ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை எல்லோரும் நம்பத் தொடங்கினர்.

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததினால் அவருக்கு கிடைத்த மாபெரும் பெரும்கொடை.

3ஆம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி மன்றாட தொடங்கினர். 5ஆம் நூற்றாண்டில் இவ்விழா ‘மரியாவின் துயில்’ என்று கொண்டாடப்பட்டது. 1950ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்கள் ‘மரியன்னையின் விண்ணேற்பை’ நம்பிக்கை கோட்பாக அறிவித்ததில் இருந்து மரியன்னையின் விண்ணேற்பு விழா ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-56) பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசபெத் அன்னை மரியாளை வாழ்த்துகிறார். எலிசபெத் அன்னை மரியாவை வாழ்த்தியது தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் தான். 

அன்னை மரியாவும் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்; எலிசபெத்தும் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி, கடவுள் படைத்த இந்த உடல் தூயது, அதை தூய்மையோடு பேணி காக்க வேண்டியது நமது கடமை.

கடவுளின் அருள் எல்லா மனிதரிலும் தங்கி இருக்கிறது, அந்த அருளை இழக்காமல் மற்றொருவருக்கு அந்த அருளை கொடுக்க வேண்டியது மனிதனின் பொறுப்பு.

சீராக் 34:4இல் சொல்லப்பட்டுள்ளது, "தூய்மையின்மையிலிருந்து தூய்மை வரக்கூடுமோ? பொய்மையிலிருந்து உண்மை வரக்கூடுமோ?". நிச்சயமாக தூய்மையற்றதிலிருந்து தூய்மையானது வர முடியாது. 

இயேசு தூய்மையானவர் என்று சொன்னால் அவரைப் பெற்றெடுத்த அன்னை மரியாவும் நிச்சயம் தூய்மையானவர் தான். நல்ல மரம் நல்ல கனியை தானே கொடுக்க முடியும். 

அன்னை மரியா தூய ஆவியால் நிரப்பப்பட்ட கனி கொடுக்கும் நல்ல மரமாக திகழ்ந்தார்.

1 அரசர்கள் 8:10,11இல் "குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று". என்று வாசிக்கிறோம். 

அன்னை மரியாவும் தூய ஆவி என்னும் மேகத்தால் மூடப்பட்ட கடவுள் உறையும் ஒரு ஆலயம் தான்.

இறைவன் கொடுத்த தூய்மையை அருளை இறுதிவரை காத்த அன்னையை இறைவன் தனக்கென்று விண்ணகத்திற்கு எடுத்துக் கொண்டார்.

அன்னை மரியாவின் ஆன்மாவும் உடலும் அழியாமல் கடவுள் அவரைக் காத்தார்.

அன்னை மரியாவை போல கடவுள் தந்த உடலை தூயதாக பேணுவோம். 

இறைவன் உறையும் ஆலயமாக நம் உள்ளம் மாறட்டும்.


கண்டிப்பு தேவை...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

14.08.2024 - புதன் கிழமை 

ஒருவர் தவறும் போது கண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் கண்டிக்க வேண்டும். தொடக்கத்திலே கண்டிக்கவில்லை என்றால் பிரச்சினை பெரிதான பின்பு ஒன்றும் செய்ய இயலாது.

துடுப்பு இல்லாத படகு சரியான பாதையை அடைந்திட முடியாது என்பது போல, கண்டிப்பும் கட்டுப்பாடும் இல்லா வாழ்வு நன்மை அடைந்திடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:15-20) ஒருவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்தால் அவர் தனித்திருக்கும் போது, அவரது குற்றத்தை எடுத்துக் காட்டுங்கள்.

செவிசாய்த்தால் நல்லது,  இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் மூலம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருஅவையிடம் கூறுங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் பிற இனத்தவரை போல இருக்கட்டும் என்கிறார் இயேசு.

யார் தான் தவறு செய்யாதவர்கள்? என்ற கேள்வி தான் எல்லோரையும் தவறிலேயே நிலைத்திருக்க வைக்கிறது. 

நல்லதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் வருவதில்லை. 

ஏன் குற்றம் பெருகிறது இந்த கேள்விக்கு சபை உரையாளர் 8:11 இவ்வாறு சொல்கிறது, மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்". 

நம் குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்வு சிறப்பானதாக அமையும்.

நொறுங்கிய உள்ளம் கொண்ட ஆடு நாம்...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

13.08.2024 - செவ்வாய்க் கிழமை

"ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக" - தானியேல் (இ) 1:16

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:1-5,10-14) இரண்டு கருத்துக்கள் பற்றி பேசப்படுகிறது 1. விண்ணரசில் யார் பெரியவர்? 2. யாரைக் குறித்து விண்ணரசில் மகிழ்ச்சி உண்டாகும்?

சிறு பிள்ளைகளைப் போல் நம்மை நாம் தாழ்த்திக் கொள்ள வேண்டும். கள்ளம் கபடற்ற குழந்தை உள்ளம் நமக்கு வேண்டும். பகை எதையும் மனதில் பதிய வைக்காத, சண்டை போட்டாலும் சிறிது நேரத்திலே பேசி விடக்கூடிய, தனக்கென்று எதையும் பதுக்கி வைக்காத, தற்பெருமை கொள்ளாத உள்ளமாக நம் உள்ளம் மாற வேண்டும். 

கடவுள் விரும்புவது தாழ்வுற்ற நொறுங்கிய உள்ளத்தை தான். தற்பெருமையும் ஆணவமும் குடியிருக்கும் உள்ளத்தில் இறைவன் ஒரு போதும் வசிப்பதில்லை. 

இறைவனே குழந்தையாக தான் இவ்வுலகில் உருவெடுத்தார். "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியில் மிகுந்து கடவுளுக்கு மனிதருக்கு உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" என்று லூக்கா நற்செய்தி 2:52 பதிவு செய்கிறது.

குழந்தைப் பருவத்தை கடந்த பிறகு தான் தெரிய வருகிறது குழந்தை பருவம் எத்துணை அழகானது என்று. 

இயேசு வழி தவறிய ஆட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். வழி தவறிய ஒரு ஆட்டை தேடி செல்வதன் வழியாக 99 ஆடுகள் முக்கியம் இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, எது பாதை மாறியதோ எது தடம் புரண்டதோ அதற்குத்தான் பாதுகாப்பு தேவை. 

தன்னைப் புறக்கணித்து செல்பவர்களை இயேசு ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. தன்னை விட்டு விட்டு வேறு உலகைத் தேடிச் செல்பவர்களை இயேசு விட்டு விடுவதில்லை. 

வழிதவறியவர்களை, தடுமாறி வாழ்வை இழந்தவர்களை இயேசு மீண்டும் நல்வாழ்வுக்கு கொண்டு வருவதன் வழியாக மகிழ்ச்சி அடைகிறார். ("அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்” - லூக்கா 15:10) 

இவ்வுலகில் நம் பங்களிப்பு என்பது வழி தவறி போன வாழ்வு இழந்த மனிதர்களை நல்வழிப்படுத்துவது. 

பிறருடைய நல்வாழ்வுக்கு உதவ முன் வரவில்லை என்றால் நாம் கிறிஸ்தவர் என்று அழைக்கப்படுவது முறையல்ல.

கிறிஸ்தவர் தன்னலம் பாராட்ட கூடாது, தற்பெருமை கொள்ளக் கூடாது, தன்னை முன்னிலைப்படுத்த கூடாது. 

ஆனால் இன்றைய எதார்த்த உலகில் கிறித்தவர்கள் கிறித்தவர்களுக்கு எதிரியாக இருக்கிறார்.

தனக்கு கிடைக்காத புகழ், பதவி மற்றவர்களுக்கு கிடைத்துவிட்டது என்றால் அவர்கள் பெயரை கெடுக்கவும், அவர்களை அழிக்கவும் துணிந்துவிடுகிறார்கள். 

ஒருவேளை நாம் வழிதவறியவர்களை கண்டுகொள்ளவில்லை என்றால், யார் எப்படி போனாலும் பரவாயில்லை என்று நினைத்தால் நாம் கிறிஸ்துவின் பணியாளர்கள் அல்ல. 

குழந்தை உள்ளத்தோடு நொறுங்கிய தாழ்வுற்ற நெஞ்சத்தோடு இயேசுவை தேடுவோம். 

நாமும் நெறி தவறிப் போகாமல் இருப்போம். மற்றவர்களும் நெறி தவறிப் போகாமல் இருக்க நம்மாலான உதவிகளை செய்வோம்.

யாருக்கும் தடையாய் இருக்க கூடாது...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

12.08.2024 - திங்கட் கிழமை 

"ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்" - உரோமையர் 14:13

நாம் இவ்வுலகில் இருந்து விடைபெறும் வரை யாருடைய வாழ்க்கைக்கும் தடையாய் இருக்கக் கூடாது. உழைப்பதை உண்டு வாழவும், முடிந்தால் இருப்பதை பகிர்ந்து வாழவும் வேண்டும். 

பிறரின் முன்னேற்றத்திற்கு நாம் முட்டுக்கட்டை போடும் போது, நம்மை அறியாமலே நாம் நமக்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.

சில நபர்கள் தங்களுக்கு என்று எதையும் செய்ய வேண்டிய கடமை இல்லை என்றாலும் கூட அது நல்லது என்றால் துணிந்து முன்வந்து செய்கிறார்கள். ஆனால் சில மனிதர்கள் செய்ய வேண்டிய கட்டாயம், உரிமை இருந்தும் கூட அதை செய்ய தவறி விடுகிறார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 17:22-27) இயேசு தான் வரி செலுத்த வேண்டிய இடத்தில் இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களுக்கு தடையாய் அமைந்து விடக்கூடாது என்பதற்காக பேதுருவை அனுப்பி வரி செலுத்த சொல்கிறார். நீ போய் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து என்கிறார் இயேசு. 

(விவிலிய அடிக்குறிப்பு - ஸ்தாத்தேர் என்பது வெள்ளி நாணயத்தை குறிக்கிறது. 4 திராக்மா பணத்தின் மதிப்பினுடையது. 1 திராக்மா என்பது 1 நாள் கூலி)

கோவில் வரியாக இரண்டு திராக்மா செலுத்த வரிதண்டுவோர் பேதுருவிடம் கேட்க, இயேசு அதை உணர்ந்துக் கொண்டு வரி செலுத்த சொல்கிறார். 

தீயவர்/தீமை தவிர வேறு யாருக்கும் எதிலும் தடையாய் இராதவர் இயேசு. 

நம் வாழ்வில் நாம் பணி செய்யும் இடத்தில், பங்கு பெறும் பணித் தளங்களில் நடைபெறும் நல்ல காரியங்களை/கருத்துக்களை வரவேற்க வேண்டும். 

நம்மால் செய்ய முடியாத ஒன்றை, மற்றவர்கள் செய்யும் போது தடையாய் இருப்பதை விட துணை நிற்பது மிக நல்லது.

கிறிஸ்தவர்கள் என்று சொல்வதில் மட்டும் பெருமை காணாது, கிறிஸ்துவை பின்பற்றுவதிலும் பெருமை கொள்வோம்.

தங்குத் தடையேதுமின்றி நன்மை செய்வோம்... இயேசுவின் சார்பாய் செயல்படுவோம் ...

உணவில் வாழ்வும் உறவும்...


பொதுக்காலம் 19ஆம் வாரம்

11.08.2024 - ஞாயிற்றுக் கிழமை

உணவு வாழ்வும் கொடுக்கிறது, உறவையும் வளர்க்கிறது. உயிர்கள் வாழ உணவு அவசியமாக இருக்கிறது. இந்த உலகில் ஒருவேளை உணவு கூட இல்லாமல் உறங்கச் செல்லக்கூடிய மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த உலகிலும் உணவு பற்றாக் குறை இருக்கிறது.

பகிர்வு வந்தால் உணவு பற்றாக் குறை நீங்கும்...

பாலை நிலத்தில் மன்னா கொடுக்கப்பட்டது பசியாற்ற. இயேசு தன்னையே உணவாக தந்தது பாவம் போக்கி இறை உறவை வளர்க்க. 

மன்னாவை உண்ட மக்கள் தங்களின் முணுமுணுப்பை நிறுத்தினர். 

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததாக நற்செய்தி நூல்களில் நாம் வாசிக்கிறோம். தன்னை தேடி வந்த மக்களின் ஆன்ம பசியை போக்கியவர், வயிற்று பசியையும் போக்கினார்.

மனிதன் உண்பதற்காக தான் வாழ்கிறான். அந்த உணவுக்காக தான் இங்கு போராட்டமே நடைபெறுகிறது. 

தனி ஒருவருக்கு உணவில்லையேல் இந்த உலகினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இங்கோ ஒரு வயிறை அடித்து மற்றொருவரின் வயிறு நிரப்பப்படுகிறது.

தொடக்க நூல் 6:21இன் படி உணவு வாழ்வாதாரம், (கடவுள் நோவாவிடம்) "உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்.”

தொடக்க நூல் 18:5இன் படி உணவு புத்துணர்வு கொடுக்கும்/விருந்தோம்பலின் அடையாளம், (ஆபிரகாம் 3 மனிதரிடம்/கடவுளிடம்) "கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்".

தொடக்க நூல் 27:4இன் படி உணவு ஆசிரை பெற உதவுகிறது, (ஈசாக்கு ஏசாவிடம் )"நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளை சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகும் முன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார்.

எண்ணிக்கை 21:5இன் படி உணவு இல்லையென்றால் முணுமுணுப்பு, "மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்; “இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது” என்றனர்.

இவ்வாறு உணவின் மகத்துவம் நீண்டுக் கொண்டே போகிறது. எனவே தான் இயேசு தன்னையே உணவாக தருகிறார். மற்ற உணவு எல்லாம் அழிந்து போகக் கூடியது, அப்போதைக்கு பசியை போக்க கூடியது. 

ஆனால் இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் என்றும் அழியா நிலைவாழ்வை தரக்கூடியது. அவரது உடலை உண்போர்க்கு என்றுமே பசி இராது, அவரது இரத்தத்தை குடிப்பதற்கு என்றுமே தாகம் இராது.

இந்த உணவு ஆன்ம பசியை போக்க கூடியது. என்றும் கடவுளை குறித்த, கடவுளின் திட்டத்தை குறித்த ஏக்கத்தோடு நம்மை நிலைத்திருக்க வைப்பது. 

அன்று பாலை நிலத்தில் உணவுக்காக இஸ்ரயேல் மக்கள் முணுமுணுத்தனர். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இவர் தன்னை விண்ணகத்திலிருந்து வந்தவர் என்று எப்படி சொல்ல முடியும் என்று யூதர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தனர். 

இன்றைய முதல் வாசகத்தில் (1அரசர்கள் 19:4-8) எலியாவுக்கு உணவு கொடுக்கப்படுகிறது. கடவுளின் தூதர் எலியாவுக்கு உணவு கொடுத்ததன் வழியாக அவர் வலிமை பெற்றார் அந்த வலிமையின் காரணமாக, 40 பகலும் 40 இரவும் நடந்து சென்று ஒரேபு ஒரு மலையை அடைந்தார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (எபேசியர் 4:30-5:2) தூய ஆவியாருக்கு துயரம் வருவிக்காதீர்கள் என்று திருத்தூதர் பவுல் சொல்கிறார். அன்பு, நன்மை, பரிவு, மன்னிப்பு ஆகியவற்றால் நம்மை நாம் அணி செய்து கொள்ள வேண்டும். இவைதான் நம் ஆன்மாவை சுத்திகரிக்கும் செயல்கள். 

இதயத்தில் இறைவன் உறவு கொள்ள வேண்டும் என்றால் தூய ஆவியாரின் கனிகளால் நாம் நிரப்பப்பட வேண்டும். 

தன்னையே தருகின்ற இறைவனுக்கு நம்மையே நாம் கொடுக்க முன் வருவோம். 

உணவில்லாமல் உறவு இல்லாமல் தவிக்கின்ற உள்ளங்களுக்கு உணவையும் அன்பையும் கொடுத்து விண்ணகத்தில் நமக்கென இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்வோம். 

தனது வீட்டு வாசலில் கிடந்த ஏழை இலாசருக்கு உணவளிக்காத செல்வந்தர் நரகத்திற்கு தள்ளப்பட்டார்.

என் களஞ்சியத்தை இடித்து பெரிதாக கட்டுவேன் என்ற செல்வந்தர் அறிவிலியாக பார்க்கப்பட்டார். 

நமக்கு செல்வம் தேவைதான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அந்த செல்வம் விண்ணகத்தில் சேர்க்கப்படக்கூடிய செல்வமாக இருக்க வேண்டும். 

அயலானைக் கண்டுகொண்டு விண்ணகத்தில் நம் செல்வத்தை சேர்த்து வைப்போம். 

ஆலயத்தில் நாம் பெறும் நற்கருணை வெறும் அப்பமாக பார்க்கப்பட்டால் அது வெறும் அப்பம் தான்.

உண்மையிலே, நற்கருணையில் இறைவன் உறைகிறார் என்று நம்பினால் தான் அது இயேசுவின் உடலாக தெரியும்.

நம் வாழ்வில் இயேசுவின் உடல் ஆற்றலை கொடுக்க வேண்டும் என்றால் நாம் அவரில் உறவுக் கொள்ள வேண்டும். 

அவரில் உறவுக் கொள்ள வேண்டும் என்றால் அடுத்தவருக்கு அன்பைக் காட்ட வேண்டும்.

அன்பில்லா நற்கருணைக் கொண்டாட்டம் கடவுளின் விருந்து அல்ல.


அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...