24_08

நல்லோரின் பிரதிபலிப்பாக...


பொதுக் காலம் 17ஆம் வாரம்

03.08.2024 - சனிக் கிழமை

"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே" - 2 கொரிந்தியர் 3:18

நல்லது செய்வோர் இவ்வுலகில் நரக வேதனை அனுபவிக்க தான் செய்கிறார்கள். நல்லவர்கள் தீமைக்கு எதிராக எச்சரிக்கை கொடுப்பார்கள். எனவே தீயவர்கள் நல்லவருக்கு கொலை மிரட்டல் என்னும் எச்சரிக்கை கொடுப்பார்கள். 

யார் நல்லவர்கள்? என்பதை யார் தீர்மானிப்பது என்ற கேள்வி எழுகிறது. மனிதர்கள் ஆள் பார்த்து செயல்பட கூடும். ஒருவரின் செயல்களே அவர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு சான்று.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 14:1-12) திருமுழுக்கு யோவானோடு இயேசு ஒப்பிடப்படுகிறார். திருமுழுக்கு யோவான் செய்தவற்றை இயேசுவும் செய்ததால் ஏரோது மன்னன் அவரை திருமுழுக்கு யோவான் என்று கருதுகிறார். 

நீர் உன்னுடைய சகோதரரின் மனைவியை வைத்து இருப்பது முறையல்ல என்று தவறை சுட்டிக் காட்டியவர் திருமுழுக்கு யோவான்.

நல்லவராக இருக்க வேண்டிய அரசர் தவறுகின்ற போது, அரசர் என்றும் பாராமல் சுட்டிக் காட்டியவர் திருமுழுக்கு யோவான்.

நல்லவர்கள் செய்தவற்றை நாமும் திரும்ப செய்கின்றபோது அவர்களின் பிரதிபலிப்பாக நாம் மாறிவிடுகிறோம். 

குழந்தையை பார்த்து, குழந்தை தந்தையை போல இருக்கிறது அல்லது தாயைப் போல் இருக்கிறது என்று சொன்னால் இந்த குழந்தை அந்த  தந்தையினுடைய தாயினுடைய சாயலை பெற்றிருப்பதனால் அவர் சொல்லப்படுகிறது. அதேபோல நாம் நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் போதனையின்படி நாம் வாழ்ந்தோம் என்றால் நாம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவது தகுதியானது. 

நாம் உண்மையின் பிரதிபலிப்பாக நன்மையின் பிரதிபலிப்பாக இருந்து, மற்றவர்களுக்கு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுப்பவர்களாக இருக்க வேண்டும்.

நல்லது சொன்ன, நல்லது செய்த திருமுழுக்கு யோவானை ஏரோதியாள் சூழ்ச்சி செய்து கொலை செய்தார்.

நல்லவர்களை பின்பற்றவும் மனம் வருவதில்லை, நல்லவர்களை வாழ விடவும் மனம் வருவதில்லை. 

மனம் போன போக்கிலே நம்முடைய கால்கள் போவதினால் இன்று நன்மையின் பிரதிபலிப்பாக நாம் மாற தவறிவிடுகிறோம். நம்மை நெறிப்படுத்துபவர்களை சரிப்படுத்துபவர்களை நாம் எதிர்க்க துணிந்து விட்டோம். 

நம்மை சரி செய்பவர்களை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னால் நாம் தடம் புரண்டு போவது உறுதி. 

உண்மையை உண்மை என்று சொல்வோம், அதனால் யார் காயப்பட்டாலும் பரவாயில்லை.

இயேசுவின் சாயலாக, உண்மையின் பிரதிபலிப்பாக நாம் விளங்க நம் செயல்கள் நற்செயல்களாக மாற வேண்டும். இயேசு என்னும் நல்லவரை நாம் பிரதிபலிப்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...