பொதுக்காலம் 18ஆம் வாரம்
09.08.2024 - வெள்ளிக் கிழமை
"நீங்களோ மனத்திடன் கொள்ளுங்கள்; தளர்ந்துபோக வேண்டாம், ஏனெனில், உங்கள் செயல்களுக்கேற்ற கைம்மாறு கிடைக்கும்" - 2 குறிப்பேடு 15:7
நல்லது விதைத்தால் நல்லது விளையும் போது நல்லது செய்தால் நல்லது தானே விளைய வேண்டும். அது தானே எதார்த்தம்.
நல்லதை விதைக்கும் போது நல்லது வளரும், நல்லதோடு சேர்த்து களைகளும் வளரும் அல்லவா! அதே போல தான் நல்லது செய்கிற போது நல்லது திரும்ப கிடைப்பதற்கு காலம் தாழ்த்தப்படுகிறது, (தீமை என்னும் களை தான் விளைகிறது) காரணம் நல்லதை பெறும் மனம் என்னும் நிலம் பெரும்பாலும் நல்லதாக இருப்பதில்லை. எனவே தீமைகளே நல்லதை பெறுவோரிடமிருந்து திரும்ப பெறப்படுகிறது.
காயினை பார்த்து கடவுள் சொன்ன வார்த்தை, "நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்பது தான் (தொடக்க நூல் 4:7).
நல்லது செய்தால் மனிதர்கள் திரும்ப நல்லது செய்யாமல் போகலாம். ஆனால் செய்த நன்மைக்கு ஏற்ற கைம்மாறு தருபவர் கடவுள்.
என்னதான் தலைகீழாக நின்றாலும், நம் இறப்பை மாற்ற இயலாது. ஆனால் இறப்பிற்கு பிறகு, நமக்கு நடக்க இருக்கும் தீர்ப்பை நாம் வாழும்போதே நன்மை செய்வதன் வழியாக மாற்ற முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 16:24-28) தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து சிலுவையை தூக்கி கொண்டு வர வேண்டும் என்கிறார் இயேசு. (அந்த சிலுவை நன்மை செய்வதனால் ஏற்படும் தீமையாக கூட இருக்கலாம்). உலகம் முழுவதையும் ஆதாயம் ஆக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? என்பது இயேசு முன்வைக்கும் கேள்வி.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ற கைம்மாறு உண்டு என்பதையும் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக தெளிவுபடுத்துகிறார்.
வாழ்வு இருக்கும்போது ஆட்டம் போடும் மனிதர்களாக இருக்கிறோம். கொஞ்சம் தளர்வு ஏற்படும் போது கடவுளைத் தேட ஆரம்பிக்கிறோம்.
சாகும் தருவாயில் கடவுளே! கடவுளே! என்று சொல்வதனால் நமக்கான தீர்ப்பு மாற்றப்பட போவதில்லை. வாழும்போதே நன்மை செய்து வாழ்ந்தால் இறப்பும் மகிழ்வாக மாறும். விண்ணக கைம்மாறும் நமக்கு கிடைக்கும்.
செய்த செயலுக்கான (நன்மையோ/தீமையோ) கைம்மாறை எதிர்நோக்கி காத்திருப்போம்.
No comments:
Post a Comment