24_08

அறியாமையிலிருந்து அறிவிப்பு வரை...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

24.08.2024 - சனிக் கிழமை 

திருத்தூதர் புனித பர்த்தலமேயு (விழா)

திருத்தூதர் பர்த்தலமேயு கலிலேயாவிலுள்ள கானாவை சார்ந்தவர். விவிலியத்தில் நத்தனியேல் என்ற பெயரால் இவர் அழைக்கப்படுகிறார். பிலிப்பு மூலம் ஆண்டவர் இயேசுவை குறித்து அறிந்து கொள்கிறார். 

பிலிப்பு பார்த்தலமேயுவாகிய நத்தனியேலிடம் வந்து, இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம்; நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்' என்று சொல்கிற போது பர்த்தலமேயு அவரை பார்த்து, நாசரேத்திலிருந்து நல்லது ஏதும் வர முடியுமோ என்று கேட்கிறார். காரணம் இவர் இறைவாக்குகளையும் திருச்சட்ட நூலையும் அறிந்தவராக இருந்தார். இவர் மெசியா எங்கு பிறப்பார் என்பதை குறித்தும் அறிந்து வைத்திருந்தார். 

இப்படி இருக்கும் பொழுது திருவிவிலியத்தில் பெரிதும் பேசப்படாத யாராலும் அவ்வளவாக அறியப்படாத பிற இனத்தார் மிகுதியாக வாழும் நாசரேத்தில் இருந்து மெசியா வந்திருக்கிறார் என்று பிலிப்பு சொன்னதால் தான் அவர் இப்படி கேட்கிறார்.

நத்தனியேலைப் பார்க்கின்ற இயேசு, "இவர் உண்மையான இஸ்ரயேலர் கபடற்றவர்" என்கிறார். அதற்கு இவர், "ரபி, நீரே இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

பர்த்தலமேயு அர்மேனியாவில் நற்செய்தி பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவருடைய போதனையால் தொடப்பட்டு அந்நாட்டு அரசன், அரசி, பணியாளர்கள் உட்பட ஏராளமான பேர் கிறித்தவ மதத்தை தழுவினார்கள். அரசன் கிறித்தவ மதத்தை தழுவிய செய்தி காட்டுத்தீ போல எங்கும் பரவியது. 

இச்செய்தி நாட்டில் இருந்த போலி தெய்வங்களை வழிபட்டு வந்த குருக்களின் காதுகளை எட்டியது. இதனால் அவர்கள் கோபமடைந்தார்கள். அது மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஒரு செயலை செய்து வரும் பர்த்தலமேயுவை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று சூழ்ச்சி செய்து அரசனுடைய சகோதரர் அஸ்தியேஜசை அணுகி தந்திரத்தால் பர்த்தலமேயுவின் தோலை உரித்து உயிரோடு கொழுத்திக் கொன்று போட்டார்கள். 

தன்னுடைய போதனையாலும் வாழ்வாலும் இயேசுவுக்கு சான்று பகர்ந்து தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார் நம் புனிதர்.

(நூல் - மகத்தானவர்கள்)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:45-51) நாசரேத்தில் இருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று நத்தனியேல் இயேசுவை பற்றி அறியா நிலையில் பேசுகிறார்.

அதிகம் படித்தவர்கள் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணுவார்கள் என்பது திருத்தூதர் பர்த்தலமேயு வாழ்விலும் உண்மைதான். திருச்சட்ட நூல்களை கற்றுத் தேர்ந்த இவர் நாசரேத்தை குறித்து தவறான கண்ணோட்டம் கொண்டிருக்கிறார்.

தன்னையும் தன்னுடைய பின்புலத்தையும் உயர்வாக எண்ணுபவர்கள் மற்றவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. 

கடவுளின் பார்வையில் தாழ்வு உயர்வு இல்லை. அறியாமை தான் தாழ்வு மனப்பான்மையையும் உயர்வு மனப்பான்மையையும் மனிதனிடம் ஏற்படுத்திவிடுகிறது.

எல்லாம் எனக்கு தெரியும் என்ற மமதை மற்றவர்களிடம் இருக்கும் நல்லதை அறிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

பிலிப்புவின் "வந்து பாரும்* என்ற வார்த்தை தான் பர்த்தலமேயுவிற்கு இயேசுவைப் பற்றிய ஒளியை கொடுத்தது. 

அறியாத நிலையில் இருந்த அவர் இயேசுவை அறிந்து கொள்கிறார். தன்னைக் குறித்து இயேசு அறிந்ததை கேட்டதும் (இவர் உண்மையான இஸ்ரவேலர் கபடற்றவர்) இயேசுவை இறைமகனாக இஸ்ரயேல் மக்களின் அரசராக ஏற்றுக் கொள்கிறார் அங்கு தன்னுடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறார்.

அறிந்த நிலையில் அறியப்பட்ட இயேசுவுக்காக தனது உயிரையும் தியாகம் செய்கிறார். 

ஒருவர் மற்றவரை அறியா நிலையில் இருந்தால் உறவு வலுபெறாது. நம்மோடு இருப்பவரை அறிந்துக் கொள்ள முற்படுவோம். 

மற்றவரை பற்றிய அறிதலும் புரிதலுமே வாழ்வின் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...