24_08

இறைவனோடு உடன்படிக்கையை புதுப்பிக்க...


பொதுக் காலம் 21ஆம் ஞாயிறு 

25.08.2024 - ஞாயிற்றுக் கிழமை

பழைய ஏற்பாட்டில் இறைவன் உடன்படிக்கை வாயிலாக உறவை புதுப்பித்தார். உடன்படிக்கை என்பது என்ன? கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவின் ஒப்பந்தம்.

பழைய ஏற்பாட்டில் ஆதாமோடு, நோவாவோடு, ஆபிரகாமோடு, மோசேயோடு, தாவீதோடு கடவுள் உடன்படிக்கை செய்தார், உறவின் ஒப்பந்தம் செய்தார்.

கடவுள் ஆதாமோடு செய்த ஒப்பந்தம், தொடக்க நூல் 2:16-17இல், "ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார்". கட்டளையை மீறியதால் உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஆண்டவராகிய கடவுள் நோவாவிடம், (தொடக்க நூல் 9:11-13) "உங்களோடு என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப்பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு வரவே வராது... உடன்படிக்கையின் அடையாளமாக என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்" என்றார். 

விடுதலைப் பயணம் 6:7இல், மோசே வழியாக செய்த உடன்படிக்கை. "உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்பது தான். 

அதேபோல இறைவாக்கினார் நாத்தான் வழியாக தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கை 2 சாமுவேல் 2:12-16 இல் கொடுக்கப்பட்டுள்ளது. "...எனது முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாக இருக்கும். உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்" - 2 சாமுவேல் 7:16.

இவ்வாறாக தொடக்க முதல் இறுதி வரை உடன்படிக்கையின் வழியாக உறவை வலுப்படுத்துபவராக கடவுள் விளங்குகிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:60-69) வாழ்வு தரும் வார்த்தை வாயிலாக,, தன்னையே உணவாக தருவதன் வாயிலாக நம்மோடு உடன்படிக்கை செய்துள்ளார் இறைவன். கடந்த வாரத்தினுடைய தொடர்ச்சியாக இந்தவார நற்செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. 

"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று சொல்கிற போது பலர் இயேசுவின் பேச்சை ஏற்றுக்கொள்வது கடினம் என்று சொல்லி அவரை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். 

இயேசு பன்னிரு சீடரிடம் நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா என்று கேட்கிறார். அதற்கு திருத்தூதர் பேதுரு, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்று சொல்லி தனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவை (உடன்படிக்கையை) அவர் வலுப்படுத்துவதை பார்க்கிறோம்.

இயேசுவின் வார்த்தையும் இயேசுவின் உடலும் நம்மில் உறவை வளர்த்தெடுக்கின்றன. 

ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம் நன்றாக பேச ஆரம்பிக்கின்ற போது, உறவு உருபெற ஆரம்பிக்கிறது. ஒருவருடைய வார்த்தை, சொல்வன்மை, பேச்சுத்திறன் இவைதான் உறவு வாழ்வுக்கு அடித்தளம். 

பழைய ஏற்பாட்டில் கடவுள் அடையாளங்கள் வழியாக அதிலும் குறிப்பாக தன் வார்த்தையின் வாயிலாக இஸ்ரயேல் மக்களோடு உடன் இருந்தார்.

அந்த வார்த்தை மனிதராக நம்மிடையே குடிகொண்டார் என்று யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேலின் எல்லா குலங்களையும் யோசுவா செக்கேமில் ஒன்று கூட்டி, "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று சொல்கிறார். ஏனென்றால் மக்கள் தங்கள் மனதிற்கு சரியெனப்பட்டதை செய்தார்கள். கடவுளின் அன்பு உறவிலிருந்து விலகி சென்றார்கள். ஆனால் யோசுவாவின் இந்த வார்த்தைகளை கேட்டபோது, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தில் அறவே நிகழாதிருப்பதாக! என்று சொல்லி கடவுளுக்கும் தங்களுக்குமிடையே இருந்த உறவை புதுப்பித்துக் கொண்டார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், (எபேசியர் 5:21-32) கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் இடையே உள்ள உறவை போல, கணவன் மனைவி இடையே உள்ள உறவு நிலை சரியாக இருக்க வேண்டும் என்பதை திருத்தூதர் பவுல் தெளிவுபடுத்துகிறார். யாரும் தம்முடைய உடலை வெறுப்பதில்லை, அதை பேணி வளர்க்கிறார். கிறிஸ்து திருஅவையை பேணி வளர்த்து வருகிறார். நாம் அவரது உடலின் உறுப்புகள். இதன் வழியாக நாம் ஒருவர் மற்றவரோடு உள்ள உறவு நிலையில் உடன்படிக்கையில் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம். 

இறைவனோடு உறவு நிலையில் ஒன்றித்திருக்க வேண்டும் என்றால் நம்மோடு வாழும் மனிதரில் அந்த உறவு நிலை சரியாக வேண்டும்.

மனிதரை மதிக்காத மனிதத்தை நேசிக்காத எந்த மனிதரும் கடவுளை நெருங்கி செல்ல முடியாது. இன்று மனிதர்கள் பணத்தோடும் புகழோடும் பெருமையோடும் ஆணவத்தோடும் உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள். 

மனிதரின் உறவு நிலை வேண்டாம், உலக இன்பங்கள் போதும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். 

இவ்வுலகம் அழிவுக்குரியது இவ்வுலகில் செல்வங்களும் அழிவுக்குரியது. நாம் விண்ணக செல்வத்தை உரிமையாக்கி கொள்ள வேண்டும் என்றால் உடன் வாழும் சகோதர சகோதரிகளில் உறவுநிலை சரிப்படுத்தப்பட வேண்டும். 

பிறரின் வாழ்வு நிலை உயர உழைக்க முன்வந்தால் நமக்கும் இறைவனுக்குமான உறவுநிலை சீராகும்.

நம் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் இறைவனோடு உள்ள உடன்படிக்கை புதுப்பிக்கப்படட்டும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...