24_08

இழப்பதற்கு (தயக்கம்) எதுவும் இல்லை...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

19.08.2024 - திங்கட் கிழமை

"திருச்சட்டத்தை நம்புவோர் கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பர்; ஆண்டவரை நம்புவோர்க்கு இழப்பு என்பதே இல்லை" - சீராக் 32:24

எல்லாம் இருந்தும் எல்லாவற்றையும் அனுபவிக்க முடியாதவராய் இருப்பவர்கள் பலர். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர் போல இருப்பவர்கள் சிலர். எல்லாம் இருந்தும் எல்லாவற்றை பிறருக்காக இழந்து வாழ்பவர்கள் ஒரு சிலர்.

எதை நாம் கொண்டு வந்தோம் கொண்டு செல்வதற்கு? என்ற அடிப்படை கேள்வி நம் உள்ளத்தில் அடிக்கடி எழ வேண்டும்.

சபை உரையாளர் நூல் 5:15 இவ்வாறு சொல்கிறது, "மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை". 

இதுதான் மனிதனின் நிலையாமை. எவ்வளவுதான் சேர்த்து வைத்தாலும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் சேர்த்து வைத்தவற்றிலிருந்து சிலவற்றை பிறருக்காக இழக்கின்ற போது நமக்கான செல்வம் விண்ணகத்தில் சேர்த்து வைக்கப்படும். 

தேவைப்படுபவருக்கு உதவி செய்யக்கூடிய மனநிலை, குறிப்பறிந்து உதவி செய்யும் மனப்பாங்கு நம்மிடம் மேலோங்க வேண்டும். 

(தேவை என்று வரும் எல்லோரையும் நம்பி விட முடியாது, சிலர் உழைக்க மனமில்லாமல், பிறரிடம் பொருளை பெறுவதிலேயே  தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கவனமாய் இருக்க வேண்டும்).

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:16-22) செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். இயேசுவோ, 'கட்டளைகளை கடைப்பிடி' என்கிறார். அவரோ, எவற்றை? என்று கேட்கிறார். இயேசு அதற்கும் பதில் கொடுத்து கட்டளைகளை ஒவ்வொன்றாக சொல்கிறார். அந்த இளைஞரோ நான் எல்லாவற்றையும் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன? என்று கேட்கிறார். 

இயேசு அவரைப் பார்த்து, உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் என்று சொல்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு இளைஞர் வருத்தத்தோடு சென்று விடுகிறார். (அவரிடம் ஏராளமான சொத்து இருந்தது)

இதுதான் இயேசுவை பின்பற்றுவதற்கான முதல் தடை. இருப்பதை இழக்க மனம் வருவதில்லை, இருப்பதை பகிர மனம் இடம் கொடுப்பதில்லை.

ஒருவேளை நாம் நம்மிடம் இருப்பதை மற்றொருவருக்கு கொடுக்க முன்வராமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்குரிய உரிமை, கடமை, ஆற்றல், திறமை, பிறருக்கு செல்ல வேண்டிய பணம் இவற்றையெல்லாம் நாம் தட்டிப் பறிக்கின்ற போது இயல்பாக அவரின் வாழ்வை நாம் அழிக்கிறோம். 

பிறருக்கு நடக்கும் நல்லதை தடை செய்யாமல் இருப்பது நற்காரியமாகும்.

எல்லாம் கொடையாக பெறப்பட்டது. எல்லாவற்றையும் கொடையாக கொடுக்க வேண்டாம், பெற்றதிலிருந்து சிலவற்றை கொடையாக கொடுக்கலாமே!

எல்லாம் இருந்தும் இழப்பதற்கு நாம் எப்போது தயாராகிறோமோ அப்போது நாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறோம். விண்ணகத்தில் செல்வராகிறோம். 

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...