24_08

ஏற்றத்தாழ்வுகள் வார்த்தையிலும் வாழ்விலும்...


பொதுக் காலம் 18ஆம் வாரம்

08.08.2024 - வியாழக் கிழமை

ஆசி வழங்கிச் சிலரை அவர் உயர்த்தினார்; சிலரைத் தூயவராக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார். ஆனால் வேறு சிலரைச் சபித்துத் தாழ்த்தினார்; அவர்கள் இடத்திலிருந்தே அவர்களை விரட்டியடித்தார்" - சீராக் 33:12

நம்முடைய வாழ்க்கையில் ஒரே நிலையில் நாம் இருந்துவிடப் போவதில்லை. வாழ்க்கையில் ஏற்றமும் உண்டு தாழ்வும் உண்டு. ஒருமுறை பாராட்டுதலும் மறுமுறை  தூற்றுதலும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. 

நல்லது செய்தால் அதை பாராட்டுவோரும் உண்டு, தீமை செய்தால் அதை எச்சரிப்போரும் உண்டு. இது அப்படியே மாறியும் நடப்பது உண்டு... 

பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்று நாம் ஒன்றை செய்ய ஆரம்பித்தோம் என்றால் பிறரை திருப்திப்படுத்துவதிலே நம்முடைய வாழ்க்கை முடிந்துவிடும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 16:13-23) இயேசுவை யார் என்று பேதுரு கண்டு கொண்டார். (மெசியா வாழும் கடவுளின் மகன் என்று இயேசுவை பார்த்து சொன்னார்). இயேசுவை கண்டு கொண்டதால் பேறுபெற்றவன் என்ற பாராட்டு பெற்றார். 

இயேசு தன்னுடைய பாடுகளை குறித்து சொல்லக் கூடிய வேளையிலே ஆண்டவரே இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது என்று சொல்கிறார். அதற்கு இயேசு "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்"  என்று சொல்லி கடிந்து கொள்ளப்படுகிறார்.

கடவுளால் பேறுபெற்றவன் என்று பாராட்ட பெற்று உச்சத்தில் இருந்த பேதுரு, சாத்தான் என்று சொல்லி தாழ்த்தப்படுகிறார். 

பேதுரு தன்னுடைய வாழ்வில் இயேசுவைப் பற்றிய சரியான புரிதலை கொண்டிருக்கவில்லை. எனவே தான் அவருடைய திருவுளத்தை அறியா நிலையில் பாடுகள் வேண்டாம் என்று சொல்கிறார்.

கடவுளுக்குரியவற்றை எண்ணாமல் மனிதர் உரியவற்றை எண்ணுகிற போது நாமும் தாழ்த்தப்படுகிறோம். (மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்த எண்ணுகிற போது).

கடவுள் நம்மை உச்சத்தில் வைத்து அழகு பார்க்க விரும்புகிறார். ஆனால் நம்முடைய சொற்களால் செயல்களால் நாம் கீழே இறங்கி சென்று கொண்டிருக்கிறோம்.

மனிதர்கள் முன் மனிதர்களுக்கு ஏற்றவர்கள் போல நடந்து கொண்டால் மேலே சென்று விடலாம் என்று எண்ணுவோர் பலர் உண்டு. நாம் நிறம் மாறுவது போல, யார் முன்னிலையில் நாம் நல்லவர்கள் போல காட்டிக் கொள்ள எண்ணுகிறோமோ அவர்களும் நிறம் மாறுவார்கள்.

சரியானதை நம்முடைய சொற்களாலும் செயல்களாலும் எண்பித்துக் காட்டி கடவுளின் பார்வையில் ஏற்றம் பெறுவோம். கடவுளின் பார்வையில் ஏற்றம் கண்டால் வாழ்வில் ஒருபோதும் தாழ்வு இல்லை.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...