24_08

சமமாக நடத்தப்பட...


பொதுக் காலம் 20ஆம் வாரம்

21.08.2024 - புதன் கிழமை

"நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்" - திருத்தூதர் பணிகள் 2:44

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவைதான் நாட்டின் கண்கள். இவை இல்லை என்றால் நாம் வெறும் இயந்திரம்தான். நம்மை இயக்க வைப்பது தான் சுதந்திர மனப்பான்மை, சகோதரத்துவ அன்பு, சமத்துவ மனநிலை. கோட்பாட்டு அறிக்கை அளவில் மட்டும் இந்த மூன்றும் இருந்தது என்றால் அது பயன் அற்றது. நடைமுறைப்படுத்தப்படாத சட்டங்கள் தேவை அற்றது. 

(சமமாக நடத்தப்படுவதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். மூன்று வகையான உயரத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு ஒரே வகையான நாற்காலியை கொடுத்து நிற்கச் சொல்லி மறைவாய் உள்ள நிகழ்ச்சியை பார்க்கச் சொல்வது சமத்துவம் அல்ல. மறைவையும் தாண்டி பார்க்கக் கூடிய அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ற நாற்காலியை கொடுத்து நிற்க சொல்வது தான் சமத்துவம்).


எனக்குரியதை நான் பெற்றுக் கொள்ளும்போது அடுத்தவர் அவருக்குரியதை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பெறாத உரிமை, எனக்கு இல்லாத பெருமை மற்றவருக்கு இருக்கக் கூடாது என்பது உயர்ந்த எண்ணம் அல்ல. என்னைப் போல மற்றவர்களும் சமூகத்தில் தலை தூக்கி/ தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் உயர்ந்த மனப்பான்மை. 

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டுமே தவிர சாத்தானின் சூழ்ச்சியை அல்ல. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 20:1-16) இயேசு விண்ணரசை திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமைக்கு ஒப்பிடுகிறார். காலையிலே வேலைக்கு வந்த மனிதர்கள், காலை 9 மணி, நண்பர்கள் 12 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 5 மணி என்று பல்வேறு காலச் சூழலில் மனிதர்கள் திராட்சை தோட்ட வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். (முதலில் வந்தவர்களுக்கு ஒரு தெனாரியம் கூலி என ஏற்கனவே கூறப்பட்டது). கடைசியில் வந்தவர்களுக்கு நிலக்கிழார் ஒரு தெனாரியம் கொடுக்கிறார். முதலில் வந்தவர்கள் நினைக்கிறார்கள் நமக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப்படும் என்று. 

ஆனால் அவர்களுக்கும் அதே ஒரு தெனாரியம் கொடுக்கப்பட்ட போது அவர்கள் அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுக்கின்றார்கள். தலைவரோ தன் விருப்பப்படி கடைசியில் வந்தவருக்கும் முதலில் வந்தவருக்கும் ஒரே அளவு கூலியை கொடுக்கிறார். இங்கு நிலக்கிழார் சமத்துவத்தை முன்மொழிகிறார். அதே வேளையில் வேலைக்காக இறுதிவரை காத்திருந்த அந்த மனிதர்களுடைய மாண்பை மதிக்கிறார்.

தோட்ட உரிமையாளர் சொல்லக்கூடிய ஒரு அருமையான கேள்வியும் பதிலும், "எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்க கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்கு பொறாமையா?". 

விண்ணரசின் பந்தியில் எல்லோருக்கும் இடம் உண்டு. கடைசியில் வந்தவர்களுக்கும் முதலில் வந்தவர்களுக்கும் ஒரே உரிமை தான்.

நான் என்னுடைய வாழ்நாளின் தொடக்க முதல் தவறாமல் திருப்பலி பார்க்கிறேன், வழிபாடுகளில் பங்கெடுக்கிறேன், நற்கருணையை சந்திக்கிறேன், ஜெபமாலை சொல்கிறேன். ஆனால் இவை எவற்றையும் கடைப்பிடிக்காத 'பாவிகளாய் வாழ்ந்தவர்களோடு எங்களையும் சேர்த்து விட்டீரே' என்று ஒருபோதும் கடவுளுக்கு எதிராக நாம் முணுமுணுக்க முடியாது. 

கடவுள் பார்வையில் வெளிப்புற ஆடம்பரம் கொண்டாட்டங்களை விட உட்புற மனமாற்றம் பெரிது.

கடவுள் ஒருபோதும் பாவத்தையும் தூய்மையையும் சமத்துவப்படுத்துவதில்லை. மாறாக பாவம் செய்தவர்களையும் நேர்மையாளர்களையும் இணைக்கவே அவர் முற்படுகிறார். இவ்வாறு செய்வதன் வழியாக பாவிகள் மனமாற வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம். 

இறைவனின் அரசுக்கு நாம் தயாராக சமத்துவம் என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம். 

ஒதுக்குவதும் ஓரம் கட்டுவதும் கிறித்தவத்தின் அடையாளம் அல்ல.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...