புனித மரியாவின் பெருங்கோயில் நேர்ந்தளிப்பு "பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்" - எசாயா 49:15 உரோமையில் ஐந்து பெருங் கோயில்கள் உள்ளன. இலாத்தரன் பெருங்கோயில், புனித பேதுரு பெருங்கோயில், புனித பவுல் பெருங்கோயில், புனித லாரன்ஸ் பெருங்கோயில், புனித மரியா பெருங்கோயில் என்பவையே அந்த ஐந்து பெருங்கோயில்கள். அன்னையின் புதுமைகளை கொண்டு அன்னைக்கு பல்வேறு சிறப்பு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உரோமையிலுள்ள புனித மரியன்னை பெருங்கோயில் (St. Mary Major Basilica) தான் மரியன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் அனைத்து கோயில்களிலும் மிகவும் பழமையானது. உரோமையிலுள்ள எஸ்களின் குன்றின்மீது அமைந்திருக்கும் இப்பேராலயம் திருத்தந்தை லிபேரியசு (கிபி 352-366) அவர்களின் காலத்தில் கட்டப்பட்டது. |
மிகத் தொன்மையான மரபுப்படி அந்த இடத்தில் தான் ஆகஸ்ட் 5ஆம் நாள் அன்னையின் அற்புத நிகழ்வாக கோடை காலத்தில் பனி பெய்திருந்தது. குழந்தை பேறு இல்லாத ஜான், அவரது மனைவியும் அன்னையிடம் குழந்தைக்காக மன்றாடினர். அன்னையின் பரிந்துரையால் குழந்தைப் பேறு கிடைத்ததால், அன்னை மரியாவுக்கு ஆலயம் கட்ட நேர்ந்துக் கொண்டனர்.
அன்னை மரியா இவருக்கு கனவில் தோன்றி நீ நகருக்கு வெளியே உள்ள பனி உறைந்திருக்கும் எஸ்களின் மலையில் ஒரு கோயில் கட்டு, நான் உனக்கு ஒரு குழந்தை தருகிறேன் என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். மரியா சொன்ன செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த ஜான் அப்போது திருத்தந்தையாக இருந்த லிபேரியசிடம் நடந்ததெல்லாம் எடுத்துச் சொன்னார்.
கோவில் கட்டுவதற்காக அன்னை அற்புதமாக பனி பொழியச் செய்த இடத்தில் தான் இந்தப் பேராலயம் கட்டப்பட்டுள்ளதாக மரபு சொல்கிறது.
கோடை காலத்தில் பனிபெய்ய செய்து, கோவில் கட்ட இடம் காட்டியதால் பனிமய அன்னை என்று அழைக்கப்படுகிறார்.
பனிமய தாய் இரக்கத்தின் தாய். லூக்கா 1:50இல் சொல்லப்பட்டுள்ளது போல, "அவருக்கு அஞ்சி நடப்போருக்கு தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்..." அன்னை மரியா கடவுளிடமிருந்து இரக்கத்தை பெற்றார். அவர் இரக்கம் மிக்கவராக வாழ்ந்து காட்டினார், வாழ்ந்து காட்டுகிறார்.
பாகுபாடற்ற ஒரே மக்களாக இணைந்து வாழ அன்னை நம்மை அழைக்கிறார்.
யாரெல்லாம் உள்ளத்தில் செருக்குடன் சிந்திக்கிறார்களோ, தங்களது வலிமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களை இறைவன் சிதறடிப்பவராக, அரியணையிலிருந்து தூக்கி எரிபவராக இருக்கிறார் என்பதை அன்னை மரியாவின் பாடல் நமக்கு எடுத்துச் சொல்கிறது.
அந்த அன்னையின் பெயரால் பாகுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய மக்களாக நாம் இருந்தோம் என்றால் அதன் அன்னைக்கு நாம் பெருமை சேர்க்கவில்லை மாறாக அந்த அன்னையை நாம் சிறுமைப்படுத்துகிறோம்.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். - குறள் 69
தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.
இது தான் தாய்க்கு சேய் செய்ய வேண்டிய கடமை.
அன்னை சமத்துவத்தை விரும்புபவர், அடிமைக் கூறுகளை அழித்தொழிபவர், எல்லோருக்கும் அடைக்கல தாயாக இருப்பவர்.
அவரின் பெருங்கோயில் நேர்ந்தளிப்பை கொண்டாடும் இந்நாளில் தாயைப் போல இரக்கமிக்கவர்களாக வாழ முயற்சி செய்வோம்.
No comments:
Post a Comment