24_08

பெற்றுக் கொண்ட அருள்கொடையில் நிலைத்து வாழ...


பொதுக் காலம் 19ஆம் வாரம்

16.08.2024 - வெள்ளிக் கிழமை

"நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது" - உரோமையர் 5:2

கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நிலையும் (திருமணம்/துறவறம்/சமூக வாழ்வு) அருள் நிலை தான். இயேசுவின் அருளை பெற்றவர்களில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கிடையாது. பிரிவினை, உயர்நிலை, தாழ்நிலை ஆகியவற்றை உருவாக்கியவர்கள் நாம் தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 19:3-12) இயேசுவை சோதிக்கும் நோக்குடன் 'ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தை யாவது முன்னிட்டு விலகி விடுவது முறையா?' என்று பரிசேயர் கேட்கின்றனர். இயேசு தொடக்க நூலை சுட்டிக் காட்டுகிறார், கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களை படைத்ததையும், இனி அவர்கள் இருவரல்ல, ஒரே உடல் என்ற நோக்கத்தோடு அவர்களின் வாழ்வை புனிதப்படுத்தியதையும் இங்கு எடுத்துச் சொல்கிறார்.

மறுபடியும் பரிசேயர் எழுப்பக்கூடிய கேள்வி, அப்படியானால் மணவிலக்கு சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்? (இணைச் சட்டம்  24: 1-4) என்பது தான்.

இயேசு அதற்கும் தெளிவாக பதில் சொல்கிறார், பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தை முன்னிட்டும் தம் மனைவியை விலக்கிவிட்டு, வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அப்பெண்ணோடு விபசாரம் செய்கிறான் என்று. (பரிசேயர்களின் பார்வையில் விபசாரம் செய்வது ஆணும் பெண்ணுமாக இருந்தாலும் குற்றவாளி பெண் மட்டும் தான்)

திருமணம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட அருள் நிலை. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று சொல்லி இரு மனங்கள் இணையக்கூடிய அருளடையாளம் தான் திருமணம். 

எல்லோரும் இந்த அருள்நிலையை தம் வாழ்வில் பெற்றுக் கொள்வதில்லை. இந்த அருள் நிலையை பெற்றுக் கொண்டவர்களும் அந்த அருள் நிலைக்கு ஏற்ப வாழ்வதில்லை.

தனக்கு கொடுக்கப்பட்ட அருளோடு (கணவனோடு/மனைவியோடு) நல்வாழ்வு வாழ பலர் தவறி விடுகின்றனர். திருமணம் செய்து பல ஆண்டுகள் கழித்து ஏன் திருமணம் செய்தோம்? என்ற கசப்பு உணர்வோடு வாழக்கூடிய குடும்பங்கள் இன்று ஏராளம். 

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல திருமணம் முடித்தவர்கள் திருமணம் முடிக்காதவர்களை பார்த்து பெருமூச்சு விடுவதும், திருமணம் முடிக்காதவர்கள் திருமணம் முடித்தவர்களை பார்த்து பெருமூச்சு விடுவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. 

பரிசேயர் இயேசுவை சோதித்தது போல இன்று பல குடும்பங்களை சந்தேகம் என்ற நோய் சோதித்துக் கொண்டிருக்கிறது. 

திருமணத்தில் இணைக்கப்பட்ட இருமணங்கள் இறுதிவரை இரு மணங்களாகவே இருந்து விடுகின்றன. 

கடின உள்ளம், ஏற்றுக்கொள்ளாமை, புரிந்து கொள்ளாமை, அவசர புத்தி, பழையதை நினைவூட்டி கொண்டே இருத்தல் ஆகியவைத்தான் பெற்றுக்கொண்ட அருள்நிலையில் நீடித்திருக்க நமக்கு தடையாய் இருப்பவை. இறைவன் இணைத்த திருமணத்தில் யாரும் குறுக்கிடாதவாறு இருமணங்கள் ஒருமணமாக வேண்டும்.

ஒருவர் மற்றவரோடு கரம் கோர்க்கும் போது நான்கு கைகள் மூன்று கைகளாக மாறுவது போல, இரண்டு இதயங்கள் ஒரு இதயமாக மாறி அன்பு நீடிப்பது போல, திருமண வாழ்வில் இறைவன் தந்த அருள்நிலை நீடித்து நிலைத்து நிரந்தரமாகட்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...