24_08

தனக்கு ஏற்றார் போல் சட்டதிட்டம்...


பொதுக் காலம் 21ஆம் வாரம்

26.08.2024 - திங்கட் கிழமை 

இந்த உலகில் போடப்பட்டிருக்கும் அனைத்து சட்டதிட்டங்களையும் கணக்கில் எடுத்தால், எதற்கு இத்தனை சட்டங்கள் என்று தோணும்... காலத்திற்கு ஏற்ப ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டங்களை காப்பாற்றுவதற்காக மீண்டும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. 

சட்டங்கள் யாருக்கும் வளைந்து கொடுப்பதில்லை என்பார்கள், ஆனால் சில சட்டங்கள் சிலர் வளைந்து (செய்த தவற்றிலிருந்து நழுவி) செல்வதற்காகவே  போடப்படுகின்றன. 

தனக்கு பிடித்தவர்கள், தன்னை ஆதரிப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுவாழ்வை பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றும் தலைவர்களும் இங்கு உண்டு. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23:13-22) வெளிவேடக்கார மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோருக்கு ஐயோ! கேடு என்கிறார் இயேசு. எதற்காக இயேசு அவர்களைப் பார்த்து இப்படி சொல்கிறார். தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யும் வஞ்சக நெஞ்சத்தினர் இவர்கள். 

தாங்களும் விண்ணகத்தினுள் நுழைவதில்லை. மற்றவர்கள் நுழையாதவாறு வாயிலை அடைத்து நிற்கின்றனர். சமயத்திற்கு ஆள் எடுக்க அங்குமிங்கும் அலைந்து திரிகிறார்கள். ஆனால் சமயத்தில் சேர்த்த பின் அவர்களை நரக தண்டனைக்கு ஆளாக்குகிறார்கள். 

வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் வழி தவறி நடக்கின்றார்கள். ஆகையால், தான் இயேசு அவர்களை கண்டிக்கிறார்.

காணிக்கையை விட பலிபீடம் உயர்ந்தது, பொன்னை விட திருக்கோவில் உயர்ந்தது.

ஆனால் குருட்டு வழிகாட்டிகளின் பார்வையில் பொன்னும் காணிக்கையும் உயர்ந்ததாக இருக்கிறது. 

தங்களுக்கு ஏற்றார் போல் காய் நகர்த்தும் காரியக்காரர்கள் இங்கு அதிகம். இந்த உலகிலே எல்லாவற்றையும் விட்டுச் செல்ல வேண்டும். இந்த நிலையில் இருந்தும் கூட இப்படி நடக்கிறார்கள் என்றால் ஒருவேளை நாம் சேர்த்து வைத்தவற்றை எடுத்துச் செல்ல முடியும் என்ற சூழல் வந்தால் இன்னும் எதையெல்லாம் செய்வார்கள். 

இங்கு பாவப்பட்டவர்கள் யார் என்றால், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் பாமர மக்கள் தான். 

யார் ஆண்டால் எனக்கு என்ன? யார் சொன்னால் எனக்கு என்ன? என்று நடப்பவர்கள் ஒருபோதும் சட்டத்தினால் முடக்கப்படுவதில்லை.

கோயில் பூனை கடவுளுக்கு பயப்படாது என்பார்கள். அது உண்மையிலும் உண்மைதான். கடவுள் சார்பாக தங்களை காட்டிக் கொள்ளும் மனிதர்கள் தாங்கள் செய்வதெல்லாம் சரி என்று மனநிலையில் செய்கிறார். 

மற்றவர்களால் சுமக்க இயலாத சுமைகளை கட்டி அவர்கள் தோளில் வைத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் சமயத் தலைவர்கள். அதைத்தான் இயேசு வன்மையாக கண்டிக்கிறார். 

சரியான போதனை, சரியான வழி நடத்துதல் இல்லாத தலைமைத்துவம் இருந்தும் பயனில்லை.

நமக்கு ஏற்றார் போல அல்ல பொது நன்மைக்கு ஏற்றார் போல் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

நமக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றை பேசுவதை விட, பலருக்கும் ஆதாயம் கிடைக்கும் படியாக நல்லவற்றை பேச வேண்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...