24_08

அடையாளங்களும் புரிந்து கொள்ளா மனநிலையும்...


பொதுக் காலம் 18ஆம் வாரம்

04.08.2024 - ஞாயிற்றுக் கிழமை

"காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை" - எசாயா 1:3

உலகில் வாழுகின்ற போது, புரிந்து கொள்ள முடியாத மனநிலையோடு வாழ்கின்றவர்கள் மத்தியில் வாழ்வது மிக கடினம். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் புரிந்து கொள்ள தயங்குவதால் அல்லது தெரிந்தே புரிந்து கொள்ளாமல் இருப்பதால் இங்கு சிலரோடு அடிக்கடி போராட வேண்டி இருக்கிறது. 

குடும்ப உறவுகளில், சமூக வாழ்வில், அரசியல் தளங்களில், ஆன்மீக நிகழ்வுகளில் என எதை எடுத்துக் கொண்டாலும், எதிர்வாதம் பேசுகின்ற மனிதர்கள் எதிர்த்து நிற்பதனால் சில நல்ல காரியங்கள் தடைபட்டு போகின்றது. 

ஊருக்கு நல்லது நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு பலர் செயல்படுவதில்லை. நான் அங்கு பெரியவனாக/பெரியவளாக என்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை தான் அங்கு மேலோங்கி இருக்கிறது. 

யார் எதை செய்தாலும், யார் எதை சொன்னாலும் அது நல்லதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் நமக்கு தேவைப்படுகிறது. 

கிறிஸ்துவின் விழுமியங்களைத் தவிர கிறிஸ்துவின் போதனைகளை தவிர எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பாங்கு நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. (கிறிஸ்துவின் போதனையே திரித்துக் கூறும் கயவர் கூட்டம் இங்கு உண்டு)

யார் சொன்னாலும் எதை சொன்னாலும் அதில் இருக்கக்கூடிய நல்ல கருத்துக்களை தூக்கி பிடிக்க கூடிய மனிதர்களாக நாம் இருந்தால், நம் வாழ்வும் நம்மை சார்ந்திருக்க கூடியவர்கள் வாழ்வும் உயரும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:24-35) இயேசு செய்த அரும் அடையாளங்களை கண்டு இயேசுவை தேடாத மக்கள் கூட்டத்தினர், அவர் வயிறார உணவு கொடுத்ததால் அவரைத் தேடி அலைந்தனர். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் உணவுக்காக உழையுங்கள் என்று அவர்களுக்கு இயேசு போதிக்கிறார். 

கடவுள் அனுப்பியவரை ஏற்றுக் கொள்வதே அல்லது நம்புவதே கடவுளுக்கேற்ற செயல் என்கிறார் இயேசு. இவற்றையெல்லாம் சொன்ன போதிலும் கூட, 'எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே! அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது அல்லவா என்று பழைய ஏற்பாட்டு நிகழ்வை அந்த மக்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 

'வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல, வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் தந்தையே' என்று சொல்லி பதில் கொடுக்கிறார் இயேசு. நானே அந்த வாழ்வு தரும் உணவு என்றும் அவர் தெளிவுப் படுத்துகிறார்.

சில இடங்களில் கேள்வி கேட்கின்ற போது பதில் கொடுப்பதன் வழியாக தெளிவு பெறலாம். சில வேளைகளில் கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பதனால் தெளிவு பெற முடியாது.

(பங்கின் பெரும்பாலான இடங்களில் கேள்விகள் மட்டுமே தொடுக்கப்படுகிறது. பதில் உள்வாங்கப்படுவதில்லை)

இயேசு தன்னுடைய பணி வாழ்வில் அத்தனை போதனைகளை கொடுத்தும் கூட அதை புரிந்து கொள்ளாத மந்தபுத்தி உள்ள மக்களாகத்தான் அவர்கள் இருந்தார்கள்.

அடையாளங்களைக் கண்டும் கூட அவர்கள் அவரை மானிட மகன் என்று நம்பவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவுமில்லை.

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் மோசேயிக்கும் ஆரோனுக்கும் எதிராக முணுமுணுத்தனர். "எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்! ஆனால் இந்த சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலை நிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்று அவர்கள் தங்களை அழைத்து வந்த கடவுளுக்கு எதிராகவும் பேசினார்கள். 

அடிமைத்தனத்தில் இருந்த மக்களை மீட்டு வந்த கடவுளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. தங்களை வழிநடத்திய தலைவர்களை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அடிமைத்தனத்தை விட விடுதலை வாழ்வு சிறந்தது என்பதை இஸ்ரயேல் மக்கள் அறிந்தும் உணராதிருந்தார்கள்.

இந்த இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எபேசிய நகர மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். நீங்கள் வீணான எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவை பற்றி கற்றறிந்தது இதுவல்ல. நீங்கள் கடவுளது சாயலாக படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள் என்று எபேசிய திருஅவை மக்களுக்கு திருத்தூதர் பவுல் அழைப்பு விடுக்கிறார்.

போதிக்கப்பட்டது உண்மையாக இருந்தாலும் அதை ஏற்று வாழவில்லை என்றால், அந்த மக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

புரிதல் இல்லாத வாழ்க்கை புதிர் போன்றது. கடைசிவரை புரிதல் இல்லாமலே நம்முடைய வாழ்க்கை முடிந்துவிடுகிறது.



புரிதல் தொடரும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...